கூட்டமைப்பின் மன்னார் மாவட்ட வேட்பாளர் அறிமுகக் கூட்டம்; முக்கிய தலைவர்கள் பங்கேற்பு!

ஐந்து கட்சிகளை உள்ளடக்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் மன்னார் மாவட்டத்திற்கான உள்ளூராட்சி மன்ற தேர்தலின் வேட்பாளர் அறிமுக கூட்டம் புதன்கிழமை(25) காலை 11 மணியளவில் மன்னார் நகர மண்டபத்தில் இடம்பெற்றது.

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் தலைமையில் இடம்பெற்ற குறித்த அறிமுக கூட்டத்தில் ஐந்து கட்சிகளை உள்ளடக்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளான ரெலோ,புளொட்,ஈ.பி.ஆர்.எல்.எப்,ஜனநாயக போராளிகள் கட்சி,தமிழ் தேசிய கட்சி ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன்,கோவிந்தன் கருணாகரம்(ஜனா) சித்தார்த்தன்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன்,எம்.கே .சிவாஜிலிங்கம் ,தமிழ் தேசிய கட்சி சார்பாக சிரேஷ்ட சட்டத்தரணி சிறிகாந்தா,ஜனநாயக போராளிகள் கட்சி சார்பாக வேந்தன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது குறித்த 5 கட்சிகளும் எதற்காக ஒன்றிணைந்து இம்முறை உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுகிறார்கள் என்பது குறித்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் சின்னமாக குத்து விளக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறித்தும் வேட்பாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

குறித்த அறிமுகக் கூட்டத்தில் குறித்த 5 கட்சிகளையும் உள்ளடக்கி மன்னார் மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.