கோத்தபாய கொலை முயற்சி வழக்கு: தமிழ் அரசியல் கைதியின் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் நிராகரிப்பு

அரசியல் கைதியான சிவலிங்கம் ஆருரனை பொலிசார் சித்திரவதை செய்து கடும் காயங்களை ஏற்படுத்தியுள்ளனர் என்பதனை சாட்சியங்கள் மூலம் நீதிமன்றிற்கு நிருபிக்கப்பட்டுள்ளது என எதிரி தரப்பில் ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசாவின் வாதத்தையடுத்து அரச தரப்பின் முக்கிய சான்றான முன்வைக்கப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்கு மூலத்தை 14 வருட விசாரணையின் பின்னர் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க நேற்றைய தினம் நிராகரித்தார்.

2006ம் ஆண்டு மார்கழி மாதம் முதலாம் திகதி கொழும்பு கொள்ளுபிட்டி பித்தலை சந்தியில் பாதுகாப்பு செயளாளரான கோத்தபாய ராஜபக்ஸவை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டி விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தற்கொலை குண்டுதாரியால் நடாத்தப்பட்ட தாக்குதலில் மூன்று இராணுவ பாதுகாப்பு அதிகாரிகளுக்கு மரணத்தை விளைவித்ததுடன் பாதுகாப்பு செயளாளரான கோத்தபாய ராஜபக்ஸ, இராணுவ பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு கடும் காயங்களை ஏற்படுத்தியதுடன் அரச சொத்துக்களுக்கு பெரும் சேதம் விளைவித்ததாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் ஜவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் சட்டமா அதிபரினால் 2013ம் ஆண்டு மார்கழி மாதம் நான்காம் திகதி வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் இரண்டாம் எதிரியான பொறியியலாளர் சிவலிங்கம் ஆருரனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சட்டமா அதிபர் சார்பில் ஆஜராகிய பிரதி சொலிசிடர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி ரோகாந்த அபேசூரிய குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் உண்மை விளம்பல் விசாரணை நிறைவடைந்ததையடுத்து தனது சமர்பணத்தில் பயங்கரவாதத் தடைப்பிரிவுப் பொலிசார் இரண்டாம் எதிரியான சிவலிங்கம் ஆருரனை தடுத்து வைத்து விசாரணை செய்த காலத்தில்; கைதியை தாக்கவோ சித்திரவதை செய்யவில்லையெனவும் தனது வாதத்தை முன்வைத்ததுடன் கோத்தபாய கொலை முயற்சி தாக்குதலின் எதிரி சதியில் ஈடுபட்டதையும் கொலை முயற்சிக்கு உதவி ஒத்தாசை வழங்கியதையும்; சொந்த விருப்பத்தில் குற்ற ஒப்புதல் வாக்கு மூலமாக தமிழ் மொழியில் எழுதி உதவிப் பொலிஸ் அத்தியட்சகருக்கு வழங்கியுள்ளார் எனவே எதிரியால் வழங்கப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்கு மூலத்தை அரச தரப்பில் எதிரிக்கு எதிரான சான்றாக நெறிப்படுத்துவதற்கு நீதிமன்றம் கட்டளையிடவேண்டும் என வாதத்தை முன் வைத்தார்.

அரச தரப்பு வாதத்தையடுத்து எதிரியின் சார்பில் ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தனது வாதத்தில்- பயங்கரவாத புலனாய்வு பிரிவுப் பொலிசார் 2009ம் ஆண்டு பொறியியலாளரான சிவலிங்கம் ஆருரனை கைது செய்து தனிமையில் தடுத்து வைத்து சித்திரவதை செய்து குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை பெற்றுள்ளனர்.

அரச சாட்சியான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சில்வாவின் சாட்சியத்தினை குறுக்கு விசாரனை செய்கையில் சாட்சியத்தில் பல முரண்பாடுகள் நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதுடன் அரசியல் கைதியான சிவலிங்கம் ஆருரனின் உடலில் காணப்பட்ட காயங்கள் பொலிசாரின் கட்டுப்பாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த காலத்தில் ஏற்படுத்தப்பட்ட காயங்கள் என சட்ட வைத்திய அதிகாரியின் சாட்சியத்தினை குறுக்கு விசாரனை செய்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே அரச தரப்பால் முக்கிய சான்றாக முன்வைக்கப்பட்ட குற்ற ஒப்பதல் வாக்கு மூலத்தை நிராகரிக்கும்படி முன்வைத்த வாதத்தையடுத்து அரச தரப்பினதும் எதிரி தரப்பினதும் வாத பிரதி வாதங்களை செவிமடுத்த மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க குற்ற ஒப்புதல் வாக்கு மூலத்தை நிராகரிப்பதாக கட்டளை வழங்கியதையடுத்து எதிரி தரப்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா இந்த அரசியல் கைதி 15 வருடங்களாக சிறையில தடுத்து வைக்கப்பட்டிருப்பதை நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு வந்து இந்த கைதிக்கு எதிராக மேலும் வழக்கை தொடர்ந்தும் நடாத்த வேறு சுயாதீன சாட்சியங்கள் உள்ளனவா இல்லையா என்பதனை சட்டமா அதிபருக்கு நீதிமன்றுக்கு அறிவிக்க மிகக் குறுகிய கால தவணை கொடுக்கும்படி வேண்டிக்கொண்டதை அடுத்து வழக்கு 03.04.2023 ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் சட்டமா அதிபர் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி ரோகாந்த அபேசூரியவும் எதிரி சார்பாக சட்டத்தரணி தர்மஜா தர்மராஜாவின் அணுசரனையில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி தவராசாவும் ஆஜராகினார்.