சதொச வழக்கிலிருந்து ஜோன்ஸ்டன் விடுதலை

லங்கா சதொச ஊழல் வழக்கில் இருந்து முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ விடுவிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் குறித்த வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள மேலும் இருவரையும் விடுதலை செய்து கொழும்பு மேல் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (மே 19) உத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, முன்னாள் கூட்டுறவு மொத்த விற்பனை ஸ்தாபனத்தின் தலைவர் எராஜ் பெர்னாண்டோ மற்றும் முன்னாள் அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் ராஜ் மொஹிதீன் மொஹமட் சக்கீர் ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ 2011 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சராக இருந்த போது சட்டவிரோதமான முறையில் சதொச ஊழியர்களை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தியதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு குற்றம் சுமத்தியிருந்ததை குறிப்பிடத்தக்கது.