ஜனாதிபதியின் கொள்கை விளக்கவுரையை வரவேற்கிறோம் – ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி

ஜனாதிபதியின் அரச கொள்கை விளக்கவுரையில் முன்வைக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்களை செயற்படுத்துவதற்கு அவசியமான விதத்தில் ஒத்துழைப்புகளை வழங்குவோம் எனவும், ஜனாதிபதியின் கொள்கை விளக்கவுரையை ஆதரிப்பதாகவும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.

ஒன்பதாம் பாராளுமன்றத்தின் இரண்டாம் கூட்டத்தொடரை இன்று ஆரம்பித்துவைத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆற்றிய கொள்கை விளக்க உரை தொடர்பில் கருத்து தெரிவித்தபோதே ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் இதனை கூறினர்.

இது குறித்து கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறுகையில், ஜனாதிபதியின் உரையில் கடந்த காலங்களில் அரசாங்கம் முன்னெடுத்த வேலைத்திட்டங்கள் தொடர்பிலும், எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குல் எந்த முரண்பாடுகளும் இல்லை என்றார்.

கட்சியின் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர கருத்து தெரிவிக்கையில்,யதார்த்தமாக தற்போது முகம் கொடுத்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் குறிப்பிடவேண்டிய சகலதையும் ஜனாதிபதி தமது உரையில் குறிப்பிட்டுள்ளார். பாரிய நெருக்கடிகளுக்கு நாம் தீர்வு காண வேண்டியுள்ளது என்ற விடயத்தையும் அவர் குறிப்பிட்டார். நாடு எதிர்கொண்டுள்ள டொலர் பிரச்சினை, எரிபொருள், கல்வித்துறை உள்ளிட்ட விடயங்களையும் அவர் தெளிவுபடுத்தினார்.

எவ்வாறாயினும் பாரிய சவால்களை அவர் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். எதிர்வரும் மூன்று வருடங்கள் நாட்டுக்கு பெரும் சவால்கள் உள்ளன. அதேபோன்று நாடு என்ற ரீதியில் சிந்தித்து செயற்பட வேண்டிய தருணம் இது என நாம் அனைத்து நாட்டு மக்களிடமும் கேட்டுக்கொள்கின்றோம். சவால்களை எதிர்கொள்ளக் கூடிய பலம் எமக்குத் தேவை என்பதை நான் குறிப்பிட விரும்புகின்றேன்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்ற வகையில் ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை தொடர்பில் நாம் மகிழ்ச்சியடைகின்றோம். அதில் எந்தவித பிரச்சனையும் கிடையாது.

அதற்கு நாம் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம். அரசாங்கத்திற்குள் சிக்கல்கள் ஏற்படும்போது நாம் அது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவோம். அது அரசாங்கத்தின் ஆரோக்கியமான நிலைக்கு சிறந்ததாக அமையும். எதையும் பேசாமல் அனைத்துக்கும் கைகளை உயர்த்துவதை விடுத்து சில சில விடயங்களில் எமது கருத்துக்களை தெரிவிப்பது அவசியமாகிறது என்றார்.