நாணய நெருக்கடி ஆபத்தில் இலங்கை ஜப்பானிய வங்கி எச்சரிக்கை

நாணய நெருக்கடியில் இலங்கை உட்பட 7 நாடுகள் ஆபத்தில் இருப்பதாக ஜப்பானிய வங்கி ஒன்று எச்சரித்துள்ளது.நொமுரா ஹோல்டிங்ஸ் என்ற ஜப்பானிய உயர்முகவரக வங்கி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. இதன்படி, இலங்கை,எகிப்து, ருமேனியா, துருக்கி, செக் மக்கள் குடியரசு, பாகிஸ்தான் மற்றும் ஹங்கேரி ஆகியனவே நாணயப் பிரச்னையில் ஆபத்தில் இருப்பதாக குறித்த வங்கி குறிப்பிட்டுள்ளது. ஜப்பானிய வங்கி வழங்கியுள்ள மதிப்பெண்களின் அடிப்படையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி, நாட்டின் வெளிநாட்டு நாணய கையிருப்பு, நாணய மாற்றுவிகிதம், நிதி உறுதிப்பாடு மற்றும் வரி விகிதங்கள் என்பன இதன்போது கருத்தில் எடுக்கப்படுகின்றன.

நொமுரா வங்கியின் மதிப்பெண்களின் அடிப்படையில், எகிப்துக்கு மோசமான மதிப்பெண்ணாக 165 வழங்கப்பட்டுள்ளது. ருமேனியாவுக்கு 145 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன. இலங்கை, துருக்கி ஆகியவற்றுக்கு 138 மதிப்பெண்கள்வழங்கப்பட்டுள்ளன. அத்துடன், செக் மக்கள் குடியரசு, பாகிஸ்தான், மற்றும் ஹங்கேரி ஆகிய நாடுகளுக்கு முறையே 126, 120 மற்றும் 100 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன.