புலனாய்வு தகவல்கள் அனைத்தையும் பகிர்ந்துக் கொள்ள இலங்கைக்கு அமெரிக்கா அழுத்தம்: கம்மன்பில

இலங்கைக்கு கிடைக்கப் பெறும் சகல புலனாய்வு தகவல்களையும், அமெரிக்காவுடன் பகிர்ந்துக் கொள்ளும் வகையில் ‘புலனாய்வு தகவல் பரிமாற்றல் மத்திய நிலையம்’ ஒன்றை ஸ்தாபிக்க அமெரிக்கா அழுத்தம் கொடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள சுதந்திர மக்கள் கூட்டணி காரியாலயத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இலங்கை வந்த அமெரிக்காவின் சி.ஐ.ஏ.பிரதானி வில்லியம் பேர்ன் உள்ளிட்ட 22 பேர் அடங்கிய குழுவினர் இலங்கையின் தேசிய பாதுகாப்பை பாரிய அச்சுறுத்தலுக்குள்ளாக்கும் நான்கு பிரதான நிபந்தனைகளை அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளதாக அவர் கூறினார்.

அதில், இலங்கைக்கு கிடைக்கப் பெறும் சகல புலனாய்வு தகவல்களையும், அமெரிக்காவுடன் பகிர்ந்துக் கொள்ளும் வகையில் ‘புலனாய்வு தகவல் பரிமாற்றல் மத்திய நிலையம் ‘ஒன்றை ஸ்தாபித்தல், இரண்டாவது விஞ்ஞான பூர்வ குடியகழ்வு கட்டுப்பாட்டு முறைமையை இலங்கை விமான நிலையங்களில் ஸ்தாபித்தல், மூன்றாவது இலங்கையுடன் தொடர்புகளை மேற்கொள்ளும் வெளிநாட்டு தொலைபேசி வலையமைப்பு தொடர்பான தகவல்களை அமெரிக்காவுடன் பகிர்ந்துகொள்ளல் மற்றும் சோபா ஒப்பந்தத்தை விரைவாக கைச்சாத்திடல் உள்ளிட்ட நான்கு பிரதான நிபந்தனைகளை அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளதாக கம்மன்பில தெரிவித்தார்.

முன்வைக்கப்பட்ட இந்த நிபந்தனைகளை மீள்பரிசீலனை செய்வதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அரச தலைவர்களுக்கு வழங்காத உயர்பட்ச பாதுகாப்புடன் கடந்த மாதம் 14ஆம் திகதி, அமெரிக்காவின் 22 முதனிலை பாதுகாப்பு அதிகாரிகள் இலங்கைக்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.