பேரரசுகள் தேடிவரும் ஒரு நாட்டைவிட்டு, மூளைசாலிகளின் வெளியேறம் தொடர்கிறது! நிலாந்தன்!

இலங்கை மின்சார சபையில் பொறியியலாளர்கள் பற்றாக்குறை நிலவுவதால் எதிர்வரும் காலங்களில் தொடர்ச்சியாக மின்சார விநியோகத்தை வழங்க முடியாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.மேலும்,நுரைச்சோலை அனல்மின் நிலையத்தை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக மின்சார சபையின் பொறியியலாளர் சங்கத்தின் இணைச் செயலாளர் இசுரு கஸ்தூரிரத்ன கூறியுள்ளார்.

கடந்த ஒரு வருடத்தில் மின்சார சபையின் 72 பொறியியலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும் அவர்களில் 22 பேர் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் பணிபுரிவதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தை வழமையாக நடத்துவதற்கு 123 பொறியியலாளர்கள் பணியாற்ற வேண்டும், ஆனால் இன்று 100 பேரே பணிபுரிவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.மேலும், இந்த பொறியியலாளர்கள் பற்றாக்குறையால், வருங்காலத்தில் ஆலையை நிறுத்த வேண்டிய நிலைகூட ஏற்படலாம் என்றும், அப்படி நடந்தால், மின் நெருக்கடி கடுமையாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் சமில் விஜேசிங்க பின்வருமாறு கூறியுள்ளார்…..“இந்த மாதத்தில் மாத்திரம் 50 முதல் 60 வரையிலான அரச வைத்தியர்கள் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர். குறிப்பாக, சில வைத்தியர்கள் விடுமுறை பெறாமல் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இருப்பினும், நாட்டை விட்டு வெளியேறியுள்ள மருத்துவ நிபுணர்களின் பெயர் விபரங்களும் எண்ணிக்கையும் சுகாதார அமைச்சினால் இதுவரையில் வெளியிடப்படவில்லை.எமக்கு கிடைக்கப்பெற்றுள்ள தகவலுக்கு அமைவாக மொத்தமாக 1,000க்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன”…

“அதேவேளை, கிராம மட்ட அரச வைத்தியசாலைகள் மற்றும் நகர்ப்புற வைத்தியசாலைகளில் வைத்தியர்களின் வெளியேற்றத்தால் வைத்தியசாலை நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.எனினும்,கொழும்பு தேசிய வைத்தியசாலை, லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை மற்றும் மஹரகம புற்றுநோய் வைத்தியசாலை போன்றன இதுவரை மருத்துவ நிபுணர்களின் பற்றாக்குறையால் பாதிக்கப்படவில்லை….மேலும், அங்கு விசேட வைத்திய நிபுணர்கள் வைத்தியசாலையில் காணப்பட்ட போதிலும், தாதியர்கள் மற்றும் ஏனைய சுகாதார ஊழியர்கள் வைத்தியசாலைகளை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் தொழில் நிமித்தம் சென்றுள்ளனர்.அதேவேளை,அதிகளவிலான வைத்திய ஆலோசகர்களும் வைத்தியசாலைகளை விட்டு வெளியேறியுள்ளனர்” என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் சமில் விஜேசிங்க கூறுகிறார்.

மேற்கண்ட இரண்டு செய்திகளும் நமக்கு எதை உணர்த்துகின்றன? படித்தவர்கள்,மூளைசாலிகள்,உள்நாட்டில் நன்றாக உழைக்கக் கூடியவர்கள் நாட்டை விட்டு வெளியேறத்தொடங்கி விட்டார்கள்.ஏனென்றால் முன்னரைப் போல அவர்களுக்கு உழைப்பு இல்லை. இது ஒரு காரணம்.பொருளாதார நெருக்கடியின் விளைவு இது.அதைவிட மேலதிகமான ஒரு காரணம், அதிகரித்த வரி.அரசாங்கம் ஒரு குறிப்பிட்ட தொகைக்குமேல் உழைப்பவர்களிடம் அதிகரித்த வரியை அளவிடத் தொடங்கியுள்ளது.

அதனால் நாட்டை விட்டு மூளைசாலிகள் வெளியேறத் தொடங்கி விட்டார்கள். ஏற்கனவே தமிழர்கள் புலம்பெயர்ந்து வருகிறார்கள்.முதலில் போர் ஒரு காரணம். இப்பொழுது பொருளாதார நெருக்கடி ஒரு காரணம். அதோடு சேர்த்து ஏற்கனவே புலம்பெயர்ந்தவர்கள் பொருளாதார ரீதியாக வெற்றி பெற்று விட்டார்கள் என்ற ஒரு முன்னுதாரணம் அவர்கள் முன் நிற்கிறது.அதுவும் 2009க்கு பின்னரான புலப்பெயர்ச்சிக்கு ஒரு காரணம்.

அரசுத் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அவ்வாறு நாட்டை விட்டு வெளியேறுபவர்களை வெளியேற வேண்டாம் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.ஆனால் பொருளாதாரத்தை நிமிர்த்துவதற்கான அவருடைய நடவடிக்கைகள், வெளியேறும் சிங்கள மக்களைத் தடுக்குமளவுக்கு இல்லை. மாறாக வெளியேற்றத்தை அது ஊக்குவிக்கிறது என்றும் சொல்லலாம்.

ஒற்றை யானையாக ராஜபக்சக்களின் நாடாளுமன்றத்துக்குள் வந்தபோது, தனது முதலாவது உரையிலேயே அவர் சொன்னார், பன்னாட்டு நாணய நிதியத்திடம் போங்கள் என்று.அன்றிலிருந்து இன்று வரையிலும் அதைத்தான் சொல்கிறார்.ஐ.எம்.எப்பின் உதவி கிடைத்தால் எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்து விடும் என்ற ஒரு மாயையை அவர் கட்டியெழுப்புகின்றார்.அவர் மேற்கத்திய பாரம்பரியத்தில் வந்த ஒரு தலைவர். எனவே பன்நாட்டு நாணய நிதியத்திடம் போனால் அது ஒரு சர்வரோக நிவாரணமாக அமையும் என்று அவர் நம்புகிறாரோ இல்லையோ மக்களை நம்ப வைக்க முற்படுகிறார். அண்மையில் கண்டியில் அவர் ஆற்றிய உரையில் அதைக் காணலாம். பன்னாட்டு நாணய நிதியத்தின் 15 நிபந்தனைகளை நிறைவேற்றியது பற்றி அந்த உரையில் அவர் கூறுகிறார்.

பன்னாட்டு நாணய நிதியத்தின் நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டால் அரசாங்கம் வரிகளை அதிகரித்தல் ,மானியங்களை வெட்டுதல்,அல்லது இல்லாமல் செய்தல்,,தனியார் மயப்படுத்தல் ,அதாவது,.நட்டத்தில் இயங்கும் அரசு நிறுவனங்களை தனியாருக்கு விற்றல்,அரசுத்துறையில் ஆட்குறைப்புச் செய்தல்….போன்ற நிபந்தனைகளுக்கு உடன்படவேண்டும். கடந்த சில மாதங்களாக ரணில் விக்கிரமசிங்க அதைத்தான் செய்து வருகிறார்

அதன் விளைவாக படித்த நடுத்தர வர்க்கம் நாட்டை விட்டுக் கிளம்பத் தொடங்கிவிட்டது.ஓர் ஓய்வு பெற்ற ஆசிரியை என்னிடம் கேட்டார்… “இந்த மருத்துவர்களும் பொறியியலாளர்களும் சற் ஸ்கோரில் முன்னிலையில் நின்றபடியால் பல்கலைக்கழக அனுமதியைப் பெற்றார்கள். அதாவது இலவசக் கல்வியின் வரப்பிரசாதங்களை அனுபவித்து அதில் வெற்றி பெற்ற பின் இப்பொழுது நாட்டை விட்டு செல்கிறார்கள்.ஆனால் இவர்களோடு போட்டியிட்டு நிராகரிக்கப்பட்டவர்கள் நாட்டிலேயே நிற்கிறார்கள்” என்று. நான் அவரிடம் சொன்னேன் அதற்கு அவர்கள் முழுப் பொறுப்பு அல்ல. நமது கல்வி முறைதான் பொறுப்பு. இலவசக் கல்வி என்று சொல்லிக் கொள்கிறோம். ஆனால் நடைமுறையில் தேசியமட்டப் பரீட்சைகளை பொறுத்தவரை, அது முதலாவதாக போட்டிக்கல்வியாகவே காணப்படுகிறது.போட்டிப் பரீட்சைகளில் சித்தி பெறுவதற்காக பிள்ளைகள் தனியார் கல்வி நிறுவனங்களை நோக்கி செல்கிறார்கள்.போட்டிக்கல்வியானது இலவசக் கல்வியின் மகத்துவங்களை பெருமளவுக்கு தோற்கடித்து விட்டது.

பரிட்சையில்,போட்டியில் வெல்ல வேண்டும்,அதிகளவு சற் ஸ்கோரைப் பெற வேண்டுமென்றால், இலவசக் கல்வியில் மட்டும் தங்கியிருக்க முடியாது. எனவே போட்டிப் பரீட்சையானது மாணவர்களை பந்தயக்குதிரைகளாக மாற்றுகிறது. பந்தயத்தில் முந்தியோடும் குதிரை சித்தி பெறுகின்றது.எனவே பந்தயக் குதிரையின் மனோநிலையை பாடசாலை பிள்ளைகள் மத்தியில் உருவாக்கி விட்டு,இலவசக் கல்வியின் மகத்துவங்களை பற்றி பேசிக்கொண்டிருக்க முடியாது.பந்தயத்தில் முந்திய பிள்ளை மருத்துவராகவும் பொறியாளராகவும் வருகிறது.

போட்டி மனப்பான்மையானது உழைப்பையும் போட்டி ஆக்குகின்றது. போட்டி போட்டுக் கொண்டு உழைப்பவர்கள் அதிக வரி கட்ட வேண்டி வரும் போது நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள்.அல்லது நாடு பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கும் பொழுது அதிக வருமானத்தை வேண்டி நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள்.அவர்கள் பெற்ற கல்வியும் அவர்களுடைய சமூக அந்தஸ்தும் அவர்கள் இலகுவாக புலம்பெயர்வதற்குரிய தகமைகளாகக் காணப்படுகின்றன.எனவே இங்கு பிரச்சனை போட்டிக்கல்வி உருவாக்கிய பந்திய குதிரை மனோநிலை தான்.

இவ்வாறு படித்தவர்கள் பட்டம் பெற்றவர்கள் ஒருபுறம் நாட்டை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.ஏற்கனவே தமிழ்மக்கள் மத்தியில் ஏறக்குறைய மூன்றில் ஒரு பகுதியினர் வெளியேறிவிட்டார்கள்.இப்பொழுது சிங்கள மக்கள் மத்தியில் வெளியேற்றம் அதிகரித்திருக்கிறது.

ஆனால் இவ்வாறு படித்த நடுத்தர வர்க்கம் வெளியேறிக் கொண்டிருக்கும் ஒரு காலகட்டத்தில்தான் நாட்டை நோக்கி அமெரிக்க போர் விமானங்கள் வருகை தந்தன.அதில் வந்தது யார்? ஏன் வந்தார்கள் போன்ற விவரங்கள் பெருமளவுக்கு ரகசியங்களாக பேணப்படுகின்றன.அமெரிக்கர்கள் மட்டும் வரவில்லை, சில மாதங்களுக்கு முன்பு இந்திய உளவுத்துறை பொறுப்பாளரும் இந்தியாவின் பாதுகாப்புத் துறை ஆலோசகரும் ரகசியமாக வந்து போனதாக செய்திகள் வெளி வந்தன. படித்த நடுத்தர வர்க்கம் வெளியேறிக் கொண்டிருக்கும் ஒரு நாட்டை நோக்கி பேரரசுகள் வருகின்றன.ஏற்கனவே சீனா வந்துவிட்டது. அம்பாந்தோட்டையில் இருந்து சீனாவை அகற்ற 90 ஆண்டுகளுக்கு குறையாமல் காத்திருக்க வேண்டும். கொழும்பு துறைமுகத்துக்கு அருகே சீனா கட்டிய பட்டணமும் நிரந்தரமானது.

அதாவது பேரரசுகள் இந்த நாட்டின் கேந்திர முக்கியத்துவம் கருதி இச்சிறிய நாட்டில் எங்கோ ஓரிடத்தில் தமது கால்களை ஊன்றிக்கொள்ள விளைகின்றன.ஆனால் பரிதாபத்துக்குரிய இந்த நாட்டிலிருந்து படித்தவர்களும் மூளை உழைப்பாளிகளுக்கு எப்படி வெளியேறுவது என்று சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்;கடவுச்சீட்டு அலுவலகத்தின் முன் வரிசைகளில் காத்து நிற்கிறார்கள்.