போதிய சமையல் கலைஞர்கள் நாட்டில் இல்லை; ஜனாதிபதி கவலை

நாட்டின் அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு சுற்றுலாத்துறையின் ஒத்துழைப்புகளை முழுமையாக பெற்றுக்கொள்ள அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் சமையல் கலையானது சர்வதேச சுற்றுலா பயணிகள் இடையே பிரசித்தி பெற்றுள்ளதாகவும் அதன் வளச்சிக்கு அரசாங்கம் ஒத்துழைப்புகளை வழங்குமெனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

2023 சமையல் கலை உணவுக் கண்காட்சியை பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

சமையல் கலை தொடர்பான பாடசாலை ஒன்றினை ஆரம்பிக்கவும், துறைசார் சமையல் கலைஞர்களை உருவாக்குவதற்குத் தேவையான முறைமையை அறிமுகப்படுத்துதல் உள்ளிட்ட புதிய வேலைத்திட்டங்களை ஆரம்பிப்பது தொடர்பிலும் ஜனாதிபதி இதன்போது கருத்து வௌியிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களில், நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குவதே முதற்கட்ட நோக்கம் என குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி, நாட்டிலிருந்து பெருமளவிலான மனித வளங்கள் வெளியேறுவதாகவும் போதிய சமையல் கலைஞர்கள் இல்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.