மக்கள் தொல்பொருள் மரபுரிமைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்காத போதும் வட,கிழக்கு அரசியல்வாதிகளே மக்களை தவறாக வழி நடத்துகிறார்கள் – பொதுஜன பெரமுன

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள தொல்பொருள் மரபுரிமைகளுக்கு பாதிப்பு ஏற்படாத சிறந்த தீர்மானத்தை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளோம். அரசியல் இலாபத்தைக் கருத்தில் கொண்டு தொல்பொருள் விவகாரத்தில் தீர்மானம் எடுக்க இடமளிக்க முடியாது என்று பொதுஜன பெரமுனவின் பொது செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

குருந்தூர்மலை விகாரைக்காக காணிகள் ஆக்கிரமிக்கப்படுவது தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அறிவிப்பு தொடர்பில் அண்மைநாட்களாக பலத்த விமர்சனங்கள் தென்னிலங்கையில் முன்வைக்கப்படுகின்றன. இந்த நிலையில், கடந்த புதன்கிழமை பெரமுன கடசியினர் ஜனாதிபதியை சந்தித்தனர்.

இதன்போது ஜனாதிபதிக்கு தாம் கூறியவை என்று சாகர காரியவசம் கூறிய விடயங்கள் வருமாறு, பௌத்த மதத்தை பாதுகாக்கும் பொறுப்பு அரசியலமைப்பால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே அந்த பொறுப்பில் இருந்து எவரும் விலக முடியாது. வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள தொல்பொருள் சின்னங்களை முன்னிலைப்படுத்தி ஒரு தரப்பினர் அரசியல் செய்கிறார்கள்.

சாதாரண மக்கள் தொல்பொருள் மரபுரிமைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்காத போதும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண அரசியல்வாதிகள் மக்களை தவறாக வழி நடத்துகிறார்கள். குறுகிய அரசியல் இலாபத்தை முன்னிலைப்படுத்தி தொல்பொருள் விவகாரத்தில் தீர்மானம் எடுக்க இடமளிக்க முடியாது.

குருந்தூர் மலை விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என்பதை வடக்கு மற்றும் கிழக்கு மாகாண அரசியல் கட்சிகளிடம் வலியுறுத்துகிறோம். குருந்தூர் மலை விவகாரத்தில் மகாநாயக்க தேரர்களின் ஆலோசனைகளுக்கு அமைய செயல்படுவது அத்தியாவசியமானது – என்றார்.