மத்திய வங்கியின் சம்பள அதிகரிப்பு விவகாரத்தில் தலையிட முடியாது – நிதி இராஜாங்க அமைச்சர்

மத்திய வங்கியின் அதிகாரிகள் சம்பள அதிகரிப்பை நிதி அமைச்சால் கட்டுப்படுத்த முடியாது, தலையிடவும் முடியாது. ஒப்பந்தத்துக்கு அமைய மூன்று வருடத்துக்கு ஒருமுறை சம்பளம் அதிகரிக்கப்படுகிறது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (20) இடம்பெற்ற அமர்வில் உரையாற்றிய எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் ‘நாடு வங்குரோத்து நிலையடைந்தமைக்கு மத்திய வங்கி பொறுப்புக் கூற வேண்டும் .நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மத்திய வங்கியின் அதிகாரிகளின் சம்பளத்தை மாத்திரம் இலட்சக்கணத்தில் அதிகரித்துள்ளமை நியாயமானதா’ என கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளிக்கையில் இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

மத்திய வங்கி சுயாதீனமாக செயற்படுகிறது.ஒப்பந்தத்துக்கு அமைய மத்திய வங்கியின் அதிகாரிகள் மற்றும் சேவையாளர்களின் சம்பளம் மூன்று வருடத்துக்கு ஒருமுறை அதிகரிக்கப்படுகிறது. ஆகவே இந்த சம்பள அதிகரிப்பை நிதி அமைச்சால் கட்டுப்படுத்தவும் முடியாது, தலையிடவும் முடியாது. சம்பள அதிகரிப்பு தொடர்பான தீர்மானத்தை மத்திய வங்கியின் பரிபாலன சபையே எடுக்கும்.

மத்திய வங்கியில் பொருளாதார நிபுணர்கள் உயர் பதவிகளில் உள்ளதால் நடைமுறைக்கு சாத்தியமான வகையில் சம்பளம் அதிகரிக்கப்படுகிறது. கூட்டு நிதியத்தின் ஊடாக சம்பளம் வழங்கப்படுவதில்லை. மத்திய வங்கியின் கணக்குகள் ஊடாகவே சம்பளம் வழங்கப்படுகிறது என்றார்.