மோசமான ஆட்சியாளர்களால் நாட்டு மக்கள் பட்டினி கிடக்க நேரிட்டுள்ளது – கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை

நாட்டு மக்கள் பட்டினி கிடக்கும்போது இந்த வருடம் நத்தார் பண்டிகையை கொண்டாட முடியாது என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

களுத்துறை சிறி குருச வித்தியாலயத்தில் நேற்று புதன்கிழமை (டிச 21) இரவு இடம்பெற்ற ‘நம்பிக்கையின் பிறப்பு’ எனும் நத்தார் கரோல் இசை நிகழ்ச்சியின் பின்னர் அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், இலங்கையில் 6.1 மில்லியன் மக்கள் ஒருவேளை உணவு உண்ணாமல் பட்டினி கிடப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இதன் காரணமாகவே இந்த ஆண்டு கிறிஸ்மஸ் பண்டிகையை நாட்டில் இவ்வளவு அழிவுகளுடன் கொண்டாட முடியாதுள்ளது.

ஆட்சியாளர்களின் மோசமான செயல்களால் நாட்டுக்கு இப்படி நேர்ந்துள்ளது. பிச்சைக்காரர்கள்போல் உணவும் பானமும் கேட்டு உலகம் முழுவதும் செல்கிறார்கள்.

இவ்வளவு அழகான, பசுமையான எமது நாடு உணவு மற்றும் பானங்களுக்காக பிச்சை எடுப்பதற்காக நாம் வெட்கப்பட வேண்டும். மோசமான ஆட்சியாளர்களின் செயலால்தான் நாட்டுக்கு இந்த நிலையை நேர்ந்துள்ளது என்றார்.