யாழில் இம்முறை பெரியளவில் சுதந்திரதினம் கொண்டாட ஏற்பாடு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பங்குபற்றுதலோடு தேசிய ரீதியிலான 75வது சுதந்திர தின கொண்டாட்டம் யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் இளங்கோவன் யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று புதன்கிழமை (டிச. 28) இடம்பெற்ற ஆரம்பகட்ட கலந்துரையாடலின் பின்பு கருத்து தெரிவிக்கும்போது இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் மூன்று முக்கியமான நிகழ்வுகள் இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

குறிப்பாக, பெப்ரவரி 4ஆம் திகதி கொழும்பில் இடம்பெறுவதை அடுத்து, பெப்ரவரி 17ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள கலாசார மத்திய நிலையத்தில், அதன் முழுமையான செயல்பாட்டு நிகழ்வோடு சுதந்திர தின விழா ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்படுகின்றன.

குறிப்பாக, கலாசார மத்திய நிலையத்தின் ஓர் இணைப்பு முகாமைத்துவ குழுவில் அங்கம் வகிக்கும் ஆளுநர், இந்திய துணை தூதரகத்தின் அதிகாரிகள், யாழ். மாநகர சபையின் அதிகாரிகள், மத்திய கலாசார அமைச்சுடன் இணைந்து கலாசார மத்திய நிலையத்தில் நிகழ்வுகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

அத்தோடு சுதந்திர தின நிகழ்வு மாகாண மட்டத்தோடு இணைந்த ஒரு விழாவாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வில் ஜனாதிபதி கலந்துகொள்வதற்கு ஏற்றவாறு நிகழ்வுகள் ஒருங்கமைக்கப்படுகின்றன. இதில் ஜனாதிபதி கலந்துகொள்ளவுள்ளதால் பெரியளவில் நிகழ்வுகள் நடந்தேறும் என தெரிவித்தார்.