யாழ்தேவி புகையிரதம் 100 kmph வேகத்தில் பரீட்சார்த்த பயணம்

அனுராதபுரம் புகையிரத நிலையத்திலிருந்து வவுனியா – ஓமந்தை புகையிரத நிலையம் வரையில் இன்று காலை பரிட்சார்த்தமாக யாழ் தேவி புகையிரதம் மணிக்கு  100kmph  வேகத்தில் பயணித்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியக் கடனுதவி திட்டத்தின் கீழ் இந்திய நிறுவனத்தினால் மஹவ முதல் ஓமந்தை வரையான புகையிரத பாதையின் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டன. அந்தவகையில் வவுனியா – .அனுராதபுரம் வரையில் 48 கிலோமீற்றர் புகையிரத பாதையும், வவுனியா ஓமந்தை வரையான 13 கிலோமீற்றர் புகையிரத பாதையும் புனரமைக்கப்பட்டன.

இந்த அபிவிருத்தி செயற்திட்டத்திற்கு 91.27 மில்லியன் டொலர் முதலீடு செய்யப்பட்டிருந்தது .இந்த அபிவிருத்தி செயற்திட்டம் நிறைவுப் பெற்றதைத்  தொடர்ந்து ஒரு மணித்தியாலத்தில் 100 கிலோமீற்றர் வேகத்தில் புகையிரத்தை இயக்க முடியும் தெரிவிக்கப்பட்ட நிலையிலேயே இன்று பரிட்சார்த்தமாக யாழ்தேவி புகையிரதம் பயணித்திருந்தது.

அனுராதபுரம் புகையிரத நிலையத்திலிருந்து இன்று காலை 10.23 மணியளவில் தனது பயணத்தினை ஆரம்பித்த யாழ்தேவி  80 kmph தொடக்கம் 100 kmph வேகத்தில் ஓமந்தை புகையிரத நிலையத்தினை நோக்கி பயணித்து மீண்டும் ஓமந்தை புகையிரத நிலையத்திலிருந்து அனுராதபுரம் புகையிரத நிலையம் வரை பயணித்திருந்தது

குறித்த புகையிரதம் பயணத்தினை ஆரம்பித்ததிலிருந்து மதவாச்சி , வவுனியா ஆகிய இரு புகையிரத நிலையங்களில் மாத்திரம் தரித்து நின்றது.

இந்நிலையில் புகையிர பாதை புனரமைப்பு பணிக்காக   கடந்த 6மாத காலத்திற்கு மேலாக நிறுத்தப்பட்ட கங்கேசன்துறை – கொழும்புக்கான புகையிரத சேவைகளை இம்மாதம் 15ம் திகதி தொடக்கம் மீண்டும் ஆரம்பிக்க உத்தேசித்துள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.