வலிவடக்கில் 500 ஏக்கரை சுவீகரிக்க எடுக்கப்பட்ட முயற்சி மக்கள் போராட்டத்தால் தற்காலிகமாக கைவிடப்பட்டது

யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கில் மக்களின் வாழ்விடங்களில் இருந்து 500 ஏக்கரை சுவீகரிக்க எடுக்கப்பட்ட முயற்சி இன்று(12) அப்பகுதி மக்களால் முறியடிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய அபிவிருத்தி என்னும் பெயரில் மேலும் 500 ஏக்கர் நிலத்தைச் சுவீகரித்துத் தருமாறு விமான போக்குவரத்து அதிகார சபை கோரிக்கை விடுத்தது எனக் கூறியே இந்த முயற்சி இடம்பெற்றது.

இதற்குத் தாம் ஏற்கனவே கடும் எதிர்ப்பை வெளியிட்டு அவசர சந்திப்புக்கு மாவட்ட அரச அதிபருக்கு எழுத்தில் கடிதம் வழங்கியபோதும் அவர் வாய்மூடி மௌனியாக இருக்கின்றார் என்றும் அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர்.

இந்நிலையில், இன்று மீண்டும் குரும்பசிட்டி, வசாவிளான், கட்டுவன், கட்டுவன் மேற்கு, குப்பிளான் வடக்கு ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய வகையில் 500 ஏக்கரை சுவீகரிக்கும் வகையில் இரகசியமாக நிலங்களை அளவிடும் முயற்சி இடம்பெறுகின்றது என அறிந்து அப்பகுதியில் குவிந்த மக்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டு தமது நிலங்களை அளவீடு செய்ய அனுமதிக்க முடியாது எனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மக்களின் போராட்டத்தையடுத்து நில அளவையைக் கைவிட்டு அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.