வலிவடக்கில் 500 ஏக்கரை சுவீகரிக்க எடுக்கப்பட்ட முயற்சி மக்கள் போராட்டத்தால் தற்காலிகமாக கைவிடப்பட்டது

யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கில் மக்களின் வாழ்விடங்களில் இருந்து 500 ஏக்கரை சுவீகரிக்க எடுக்கப்பட்ட முயற்சி இன்று(12) அப்பகுதி மக்களால் முறியடிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய அபிவிருத்தி என்னும் பெயரில் மேலும் 500 ஏக்கர் நிலத்தைச் சுவீகரித்துத் தருமாறு விமான போக்குவரத்து அதிகார சபை கோரிக்கை விடுத்தது எனக் கூறியே இந்த முயற்சி இடம்பெற்றது.

இதற்குத் தாம் ஏற்கனவே கடும் எதிர்ப்பை வெளியிட்டு அவசர சந்திப்புக்கு மாவட்ட அரச அதிபருக்கு எழுத்தில் கடிதம் வழங்கியபோதும் அவர் வாய்மூடி மௌனியாக இருக்கின்றார் என்றும் அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர்.

இந்நிலையில், இன்று மீண்டும் குரும்பசிட்டி, வசாவிளான், கட்டுவன், கட்டுவன் மேற்கு, குப்பிளான் வடக்கு ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய வகையில் 500 ஏக்கரை சுவீகரிக்கும் வகையில் இரகசியமாக நிலங்களை அளவிடும் முயற்சி இடம்பெறுகின்றது என அறிந்து அப்பகுதியில் குவிந்த மக்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டு தமது நிலங்களை அளவீடு செய்ய அனுமதிக்க முடியாது எனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மக்களின் போராட்டத்தையடுத்து நில அளவையைக் கைவிட்டு அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.

Posted in Uncategorized

சுழிபுரம் பறாளாய் ஆலய வர்த்தமானி வெளியீட்டுக்கு எதிராக பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்திற்கு அழைப்பு

சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயத்தில் உள்ள அரச மரத்தை சங்கமித்தை  நாட்டிய மரம் என  வெளியிடபட்டட அரச வர்த்தமானி மீளப்பெறப்படவேண்டும் என தெரிவித்து யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நாளை காலை பத்து மணியளவில் சுழிபுரம் சந்தி. பகுதியில் காலை கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

இது குறித்து யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் அழகராசா விஜயகுமார் விடுத்துள்ள ஊடக அறிக்கையில், வரலாற்றினை திரிபுபடுத்தும் சிங்கள அரசு இன்னும் ஒரு படி மேல் சென்று சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலய மேலும் வரலாற்றினை திரிபடைய செய்துள்ளது.

சங்கமித்தா இலங்கைக்கு வருகை தந்ததாக கி.மு 3ஆம் நூற்றாண்டு என வரலாற்று மூலாதாரங்களில் திரிபடைய கூறப்பட்டுள்ளது.  இந்நிலையில் ஆலய தர்மகர்த்தாவினர் குறித்த ஆலயம் 1768 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்படும் பொழுது எதுவித அரச மர எச்சங்கள் குறித்தும் தமது முன்னையவர்களோ அல்லது ஆதாரங்களோ குறிப்பிடவில்லை எனவும் தற்பொழுது ஆலயத்தில் உள்ள மரம் மிக குறைந்தளவான காலப்பகுதிக்கு உரியது எனவும் தெளிவாக குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த ஆலயத்தினரிடம் ஆகக்குறைந்த  கலந்துரையாடலை கூட செய்யாது  எதேச்சதிகாரமான முறையில் இந்த  சிங்கள அரசு திட்டமிட்ட  பெளத்தமயமாக்கல் செயற்றிட்டத்தை முன்னெடுத்துள்ளது.

தொடர்ச்சியாக சிங்கள  அரசின் திட்டமிட்ட பௌத்த மயமாக்கலை மேற்கொள்ளும் அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் இதனை வலியுறுத்தி நாளைய தினம் சனிக்கிழமை காலை 10 மணியளவில் சுழிபுரம் சந்தி பகுதியில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கபடவுள்ளது.

ஆகவே இதனை வலுச்சேர்க்கும் முகமாக பொதுமக்கள், சமூக மட்ட அமைப்புக்கள், தமிழ் தேசியத்தின்பால் செயற்படும் இளைஞர் யுவதிகள்,சிவில் சமூக பிரதிநிதிகள் தமிழ் தேசிய கட்சிகள் என அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மாதவனை மயிலத்தமடுவில் மீளவும் முளைத்த ஆக்கிரமிப்பு புத்தர்

இலங்கையின் கிழக்கே பண்ணையாளர்களுக்கு என ஒதுக்கப்பட்ட மாதவனை மயிலத்தமடு விடயம் பலராலும் அறியப்பட்டது.

மாதவனை மயிலத்தமடு பகுதியில் அதிகமான பண்ணையாளர்கள் கால்நடைகளை மேய்ப்பதற்காகவும் தங்களது வாழ்வாதாரத்தை மேற்கொள்வதற்காகவும் அப்பகுதி ஒதுக்கப்பட்டிருந்தமை வரலாறாகும்.

ஆனால் கடந்த சில வருடங்களாக மாதவனை மயிலத்தமடு பகுதியில் மகாவலியின் தலையீடு காரணமாக பண்ணையாளர்களும் கால்நடைகளும் பாதிப்புக்கு உள்ளானதுடன் பல கால்நடைகளும் சுடப்பட்டும் கத்திகளால் வெட்டப்பட்டும் உயிரிழந்த சம்பவங்கள் அரங்கேறி இருந்தது.

அதே வேளையில், அங்கு சென்று வருகின்ற பண்ணையாளர்களின் உயிர்களும் உத்தரவாதம் இல்லாதா நிலையும் என்ன நடக்கும் என்று தெரியாத ஒரு நிலைமையும் உருவாகி இருந்தது.

முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா ஜகம்பத் விவசாயம் செய்வதற்காகவும் பயிர் செய்வதற்காவும் கால்நடைகளின் இடமாக கருதப்படும் மாதவனை மயிலத்தமடு பகுதியில் அத்துமீறிய சிங்கள குடியேற்றங்களை உருவாக்கி அவர்களை பயிர்செய்கை மற்றும் விவசாயம் போன்ற தொழில்களில் ஈடுபடுத்தி பண்ணையாளர்களுக்கும் மகாவலிக்கும் பெரும்பான்மை இன மக்களுடனும் முரண்பாடு ஏற்படுத்தும் விதத்தில் பல முன்னெடுப்புகளை முன்னெடுத்திருந்தார்.

மயிலத்தமடு மாதவணையில் மகாவலியால் 2019 இல் அகற்றப்பட்ட விகாரை இருந்த இடத்தில் 2023.07.30 ஆம் திகதி மீண்டும் துப்பரவு பணியில் ஈடுபட்டுவருவதாகவும் மாறாக பண்ணையாளர்களை மகாவலி அதிகாரிகள் கைது செய்வதற்கு முயற்சிக்கின்றனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக வடக்கு கிழக்கில் தொல்பொருள் எனும் போர்வையில் தமிழர்களின் பாரம்பரிய காணிகளை சுவீகரிக்கும் நடவடிக்கையில் சிறிலங்கா அரசாங்கம் மற்றும் பௌத்த மத இனவாத அமைப்புகள் ஈடுபட்டு வருகின்றன.

தற்போது கிழக்கு மாகாணத்திலும் அவர்கள் தங்களது கைவரிசையை காட்ட ஆரம்பித்துள்ளமை பண்ணையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த காலங்களில் இருந்த கிழக்கு மாகாண ஆளுநர் கடும்போக்கு சிங்கள வாத சிந்தனையுடன் சிங்கள குடியேற்றம் இடம்பெற வேண்டும் என்றும் பண்ணையாளர்களை அடித்து துரத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பாக கள விஜயம் செய்த மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் கலாமதி பத்மராஜா இடமாற்றப்பட்டு சென்றிருந்தார்.

ஆனால் இன்று கிழக்கு மாகாணத்தில் ஒரு புதிய ஒரு ஆளுநர் வந்திருக்கின்ற போதிலும் மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகளும் ஒன்று சேர்ந்து இந்த கிழக்கு மாகாண பண்ணையாளர்களின் முதுகெலும்பாக இருக்கும் இந்த மாதவனை மயிலத்த மடு மேச்சல் தரை பகுதியை உடனடியாக பண்ணையாளர்களுக்கு வழங்கி அவர்களது வாழ்வாதாரத்தையும் கிழக்கு மாகாண மக்களுடைய பிரச்சனைக்கு உடனடியாக தீர்வையும் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு காணி அபகரிப்புக்கு எதிராக பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்

முல்லைத்தீவு – அக்கரைவெளி காணி சுவீகரிப்புக்கு எதிராக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக இன்று மாலை 4 மணியளவில் ஒன்று கூடிய பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் இடம்பெற்றது.

இதன்போது மகாவலி அபிவிருத்தித் அதிகார சபையே நிலங்களை அபகரிக்காதே, எமது நிலம் எமக்கு வேண்டும் என பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன.

அக்கரைவெளியில் 1500 ஏக்கர் காணியை சிங்களவர்களுக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நில அபகரிப்புகளுக்கு தீர்வு காண வேண்டியது அவசியம் – பிரித்தானியா

இலங்கையில் தமிழர்கள் எதிர்நோக்கும் நில அபகரிப்புகளுக்கு தீர்வு காண வேண்டியதன் அவசியத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவின் தெற்காசிய இராஜாங்க அமைச்சர் அஹ்மட் பிரபு இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக பிரித்தானிய அரசாங்கம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் என்ன விடயங்களை முன்வைத்துள்ளது என்ற கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

பேரவையில், 51-1 தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கான சர்வதேச முயற்சிகளை ஐக்கிய இராச்சியம் வழிநடத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது, இலங்கை தொடர்பாக அறிக்கையிடுவதற்கும் கடந்தகால மனித உரிமை மீறல்களின் ஆதாரங்களை பாதுகாப்பதற்கும், எதிர்கால பொறுப்புக்கூறல் செயல்முறைகளில் பயன்படுத்துவதற்கும், மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு உதவியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பெப்ரவரியில் இலங்கையின் உலகளாவிய காலமுறை மீளாய்வின் போது வடக்கு மற்றும் கிழக்கில் காணி அபகரிப்பு தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டியதன் அவசியம் உள்ளிட்ட வலியுறுத்தல்களை பிரித்தானியா வழங்கியது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குருந்தூர்மலை காணி அளவீடு மக்கள் எதிர்ப்பால் இடைநிறுத்தம்!

கடந்த 1984ஆம் ஆண்டு இடம்பெயர்ந்த முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு தமிழ்மக்கள் இதுவரையில் மீளக்குடியமர்த்தப்படவில்லை.

எனவே முதலில் தம்மை மீளக்குடியமர்த்துமாறு தண்ணிமுறிப்பு தமிழ் மக்கள் கரைதுறைப்பற்று பிரதேசசெயலர் திருமதி. உமாமகள் மணிவண்ணனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குருந்தூர்மலைப்பகுதியில் இன்று (23) தொல்லியல் திணைக்களத்திற்கு காணி அளவீடு செய்வதற்கென கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர், காணி உத்தியோகத்தர்கள், நிலஅளவைத்திணைக்களம் ஆகியோர் வருகைதந்திருந்தனர்.

இதன்போதே தண்ணிமுறிப்புப் பகுதியைச் சேர்ந்த தமிழ் மக்கள் இக் கோரிக்கையினை முன்வைத்துள்ளனர்.

அதேவேளை தொல்லியல் திணைக்களத்திற்கான நிலஅளவீட்டு முயற்சி, அப்பகுதித் தமிழ் மக்கள் மற்றும், மக்கள் பிரதிநிதிகளின் எதிர்ப்பால் கைவிடப்பட்டிருந்தது.

இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில்,

1933ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானித் தகவலின்படி குருந்தூர்மலைக்குரிய தொல்லியல் பிரதேசமாக சுமார் 78ஏக்கர் காணி காணப்படுவதாக தொல்லியல் திணைக்களம் சுட்டிக்காட்டுகின்றது.

அதேவேளை வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தொல்லியல் திணைக்களம் சுட்டிக்காட்டும் குறித்த 78ஏக்கர் காணிகளுக்கு மேலதிகமாக, பலநூற்றுக்கணக்கான தமிழ் மக்களின் விவசாய நிலங்களை கடந்த 2022ஆம் ஆண்டு எவ்வித முன்னறிவிப்புமின்றி தொல்லியல் திணைக்களம் அபகரித்ததுடன், அத்துமீறி எல்லைக் கற்களும் நாட்டியிருந்தது.

அவ்வாறு தொல்லியல் திணைக்களத்தால் அத்துமீறி அபகரிக்கப்பட்ட பகுதிகளுக்குள், தண்ணிமுறிப்பு தமிழ் மக்களுக்குரிய குடியிருப்புக்காணிகள், பயிர்ச்செய்கைக்காணிகள், பாடசாலைக் காணி, தபால்நிலையக்காணி, நெற்களஞ்சியசாலைக்குரிய காணிகள் என்பன அடங்குகின்றன.

இந் நிலையில் தொல்லியல் திணைக்களத்தின் இத்தகைய அடாவடிச் செயற்பாட்டுக்கு எதிர்ப்புத்தெரிவித்து தண்ணிமுறிப்புத் தமிழ் மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர்.

இவ்வாறான சூழலில் அண்மையில் வவுனியாவிற்கு விஜயமொன்றினை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குருந்தூர்மலை தொல்லியல் பிரதேசத்திற்கென, வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தொல்லியல் திணைக்களம் சுட்டிக்காட்டும் 78ஏக்கர் காணிகளுக்கு மேலதிகமாக ஐந்து ஏக்கர் காணிகள் மாத்திரமே எடுத்துக்கொள்ளப்படும் எனத் தெரிவித்திருந்தார்.

அதன்படி தொல்லியல் திணைக்களம் கோருகின்ற 78ஏக்கர் காணிகளுக்கு மேலதிகமாக, மேலும் ஐந்து ஏக்கர் காணிகளை அளவீடுசெய்து எடுத்துக்கொள்வதற்கு கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர், காணி உத்தியோகத்தர், மற்றும் நில அளவைத் திணைக்கள உத்தியோகத்தர்கள் ஆகியோர் குருந்தூர் மலைப்பகுதிக்கு வருகைதந்திருந்தனர்.

குறித்த நில அளவீட்டுக்கு தண்ணிமுறிப்பு பகுதி தமிள் மக்கள் தமது கடுமையான எதிர்ப்புக்களை வெளியிட்டிருந்தனர்.

குறிப்பாக கடந்த 1984ஆம் ஆண்டு காலப்பகுதியில் அசாதாரண நிலமை காரணமாக தாம் அப்பகுதியில் இருந்து வெளியேறியபோதும் இதுவரையில் தமது பகுதியில் மீள்குடியேற்றம் இடம்பெறவில்லை எனக் குற்றஞ்சாட்டினர்.

எனவே தொல்லியல் திணைக்களம் அபகரித்துள்ள தமது குடியிருப்பு மற்றும், விவசாயக்காணிகளை விடுவித்து, முதலில் அக்காணிகளில் தம்மை மீளக்குடியமர்த்துமாறு அங்கு வருகைதந்த கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் திருமதி. உமாமகள் மணிவண்ணனிடம் வலியுறுத்தியிருந்தனர்.

ஆனால் அதற்கு மறுப்புத் தெரிவித்த பாரதேசசெயலாளர், முதலில் ஐந்து ஏக்கர் காணிகள் தொல்லியல் திணைக்களத்திற்கு அளவீடு செய்து வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து தொல்லியல் திணைக்களம் அபகரித்து வைத்துள்ள தமிழ் மக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டு, வனவளத் திணைக்களத்திடம் வழங்கப்பட்ட பிற்பாடு, வனவளத் திணைக்களத்திடமிருந்து காணிகள் பெற்றுக்கொள்ளப்பட்டு மக்களுக்கு வழங்கப்படுமெனவும் பிரதேசசெலாளர் தெரிவித்தார்.

எனினும் பிரதேசசெயலரின் இக்கருத்தினை ஏற்கமறுத்த தமிழ் மக்கள், யுத்தம் மௌனிக்கப்பட்டு சுமார் 13வருடங்களுக்கு மேலாகின்றபோதும் தாம் தமது பகுதிகளில் இதுவரை மீள்குடியேற்றப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டியதுடன், இனியும் தாம் யாரையும் நம்பத் தயாரில்லை எனவும், முதலில் தமது காணிகளால் தம்மை மீளக்குடியிருத்துமாறும் வலியுறுத்தினர்.

இந்நிலையில் மக்களின் எதிர்ப்பநிலைமையாலும், தொல்லியல் திணைக்களம் அங்கு வருகைதராமையாலும் அளவீடு செய்வது தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாகத் தெரிவித்து பிரதேசசெயலாளர், காணி உத்தியோகத்தர்கள், நிலஅளவைத் திணைக்கள உத்தியோகத்தர்கள் ஆகியோர் அங்கிருந்து வெளியேறியிருந்தனர்.

மேலும் இவ்வார்ப்பாட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தமிழ் ஈழ விடுதலை  இயக்கத்தை(ரெலோ) சேர்ந்த  பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், கந்தையா சிவநேசன் உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

2019ஆம் ஆண்டு இணக்கம் தெரிவிக்கப்பட்ட காணிகளையே விடுவிக்க நடவடிக்கை

கடந்த 2019ஆம் ஆண்டு விடுவிப்பதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்ட 110ஏக்கர் காணியினையே தற்போது விடுவிக்க பாதுகாப்பு தரப்பு இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அக்காலப் பகுதியில் காணிகளை விடுவிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட நிலையில் , ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, காணி விடுவிப்பு கைவிடப்பட்டது.

அதன் பின்னர் ஜனாதிபதியாக கோட்டாபய பதவியேற்றதை தொடர்ந்து காணி விடுவிப்புக்கள் நடவடிக்கைகள் அனைத்தும் முற்றாக கைவிடப்பட்டது.

இந்நிலையில், நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை தேசிய தைப்பொங்கல் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி தலைமையில், பாதுகாப்பு அமைச்சின் செயலர், முப்படைகளின்தளபதிகள், படைகளின் பிரதானி பங்குபற்றுதலுடன் யாழ் மாவட்ட செயலகத்தில் காணிவிடுவிப்பு தொடர்பில் விசேட கூட்டம் இடம்பெற்றிருந்த நிலையில், கீரிமலை, காங்கேசன் துறை , மயிலிட்டி , பலாலி வடக்கு ஆகிய பகுதிகளில் முப்படையினரின் வசம் இருக்கும் பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக படைத்தரப்பு ஜனாதிபதியின் முன் உறுதி அளித்தது.

குறித்த காணிகளில் 30 ஏக்கர் கடற்படையினரின் கட்டுப்பாட்டிலும் மிகுதி ராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலும் உள்ளது.

இக்காணிகள் கடந்த 2019 ஆம் ஆண்டு காலப் பகுதியில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட காணிகளே எனவும், புதிதாக காணிகள் எதனையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என தெரிவிக்கப்படுகிறது.

வடக்கில் மூன்று இடங்களில் நிலவிடுவிப்புக்கு ஜனாதிபதி பணிப்புரை

வலி. வடக்கில் 110 ஏக்கரும்,வடமராட்சி கிழக்கில் 4,360 ஏக்கரும், குறுந்தூர்மலையில் 354 ஏக்கரும் நிலத்தை உடன் விடுவிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்றைய தினம் யாழ். மாவட்டச் செயலகத்தில் இடம் பெற்ற வடக்கு மாகாணத்தில் உள்ள நிலம் தொடர்பான பிரச்சினைகள் பற்றிய கலந் துரையாடலின்போதே இவற்றை தெரிவித்தார். யாழ்ப்பாணம் வலி. வடக்கில் பலாலி வீதிக்கு கிழக்கேயும், மயிலிட்டி நிலம் தொடர்பிலும், வலி.வடக்கில் படையினர் நிலை கொண்டுள்ள நிலத்தில் விடுவிக்க சாத்தியமானவை என இனங்கண்ட இடங்களை விடுவிக்க வேண்டும் என கோரியபோது, 5 இடங்களில் 110 ஏக்கரை இந்த மாத இறுதிக்குள் விடுவிப்பார்கள் என படையினர் உத்தரவாதம் தெரிவித்தனர்.

அதில் பலாலி வடக்கில் 13 ஏக்கர், மயிலிட்டி வடக்கில் 18 ஏக்கர், கே.கே.எஸ. பிரிவில் 28 ஏக்கர், கீரிமலையில் 30 ஏக்கர், காங்கேசன்துறையில் 21 ஏக்கர் என 5 இடங்களிலுமாக 110 ஏக்கரை இம் மாத இறுதியில் விடுவிக்க இணக்கம் தெரி விக்கப்பட்டது. இதேநேரம் பலாலி வீதிக்கு கிழக்கே உள்ள 641 ஏக்கரையும் விடுவித்தால் அங்கே கட்டடங்கள் எழுந்தால் விமானங் கள் தரை இறக்க முடியாத நிலை ஏற்படும் என மறுப்புத் தெரிவித்தபோது, அவ்வாறானால் அங்கே உள்ள தோட்ட நிலங்களை உடன் விடுவியுங்கள், மக்கள் பொருளாதார நெருக்கடியில் தோட்டச் செய்கையை மேற்கொள்வர் என கோரினார். இதற்கான ஏற்பாட்டை மேற்கொள்வதாகப் பதிலளிக்கப்பட்டது.

வடமராட்சி கிழக்கு

இதேநேரம் வடமராட்சி கிழக்கில், நாகர் கோவில் கிழக்கில் வன ஜீவராசிகள் திணைக்களம் பிடித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்ட 19 ஆயிரத்து 368 ஏக்கரில், 4 ஆயிரத்து 360 ஏக்கருக்கு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெற நடவடிக்கை வேண்டும், அது மக்களின் உறுதிக் காணிகள், யுத்த காலத்தில் அப் பகுதியில் படையினருக்கும் புலிகளிற்கும் இடையில் நீண்ட காலம் போர் இடம் பெற்றபோது மக்கள் அங்கே செல்லாத காரணத்தால் பற்றைகள் வளர, அதனைக் காடு எனக் கருதி, வன ஜீவராசிகள் திணைக்களம் தனக்குரியது என வர்த்தமானி அறிவித்தல் பிரசுரித்துள்ளது என சுட்டிக் காட்டப்பட்டது. இதற்கு பதிலளித்த வன ஜீவராசிகள் அமைச்சின் செயலாளர் அவ்வாறானால் அதனைப் பரிசீலிக்கலாம் எனக் கூறிய போது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலையிட்டு, அந்த இடம் எனக்குத் தெரியும், அப் பகுதியில் எந்தக் காடும் இருக்கவில்லை, அதனால் அப் பகுதியை உடன் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பணிப்புரை விடுத்தார்.

முல்லைத்தீவு

முல்லைத்தீவு மாவட்டத்தில் குறூந்தூர்மலை பகுதியில் உள்ள 341 ஏக்கரில் 6 ஏக்கர் தவிர்ந்த ஏனைய வற்றை மக்களிடம் வழங்க (ஜனாதிபதி ) நீங்கள் கூறியும் அதிகாரிகள் இதுவரை வழங்கவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டது. அந்த நிலங்களில் தொல்லியல் திணைக்களம் நாட்டிய எல்லைக் கல்லை அகற்றி விட்டுத்தரவில்லை என மாவட்ட அரச அதிபர் பதிலளித்தபோது, அந்த இடத்தை மாவட்ட அரச அதிபரே உடன் விடுவிக்க வேண்டும், தொல்லியல்த் திணைக்களத்திற்கு ஏதும் பிரச்சினை என்றால் என்னுடன் பேசுமாறு தொல்லியல் திணைக்களத்திற்குப் பதிலளியுங்கள் என ஜனாதிபதி உத்தரவிட்டார் என அறிய வந்தது.

பெளத்தத்தின் பெயரில் தமிழ் மக்களின் காணிகள் அபகரிக்கப்படுவதை உறுதிப்படுத்திய கடற்றொழில் அமைச்சர்

பௌத்த மதத்தின் பெயரால் காணிகள் அபகரிக்கப்படுவதை தமிழ் மக்கள் விரும்பவில்லை என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழ் மக்கள் மத்தியிலும் சிங்கள மக்கள் மத்தியிலும் இருக்கின்ற இனவாதிகள், பிரச்சினைகளை தீராப் பிரச்சினைகளாக வைத்திருக்கின்ற முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நாடாளுமன்றில் இடம்பெற்ற, சுகாதார அமைச்சு மற்றும் பௌத்த சாசன, கலாசார மற்றும் மத விவகாரங்களுக்கான அமைச்சு தொடர்பிலான வரவு – செலவுத் திட்டத்தின் குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உiராயற்றிய கடற்றொழில் அமைச்சர், ‘ஒரு காலத்தில் தென்னிலங்கை அரசாங்கங்கள் தமிழ் மக்களை மாற்றாந்தாய் மனப்பான்மையில் கையாண்டனர்.

அதேபோல் தொடர்ச்சியான இனக் கலவரங்கள் போன்றவற்றினால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பதற்காகவும் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும் ஒரு காலத்தில் நாம் உரிமைப் போராட்டத்தில் ஈடுபட்டோம்.

எமது அந்த போராட்டத்தின் விளைவாக ஏற்படுத்தப்பட்ட இலங்கை – இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதன் பின்னர், ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களில் ஏற்பட்ட குணாம்ச ரீதியான மாற்றங்கள் காரணமாக, பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்ப்பதற்கு அவை முன்வந்திருந்தன. எனினும் அதற்கு இடம்கொடுக்காமல் – உரிமைப் போராட்டத்தின் விளைவாக கிடைத்ததை மழுங்கடிக்கக்கூடிய வகையில், ஓரு வன்முறை போராட்டம் தொடர்ந்து, யுத்;தமாக மாற்றமடைந்து, அந்த யுத்தம் தமிழ் மக்கள் என்ற அடிப்படையிலும் இலங்கையர் என்ற அடிப்படையிலும் பலரைக் காவு கொண்டது.

இருந்தாலும் 2009 ஆம் ஆண்டு அந்த யுத்தம் முடிவிற்கு கொண்டு வரப்பட்டது. அதனைத் தொடர்ந்து பேச்சுவார்த்கைளுக்கு ஊடாக தமிழ் மக்கள் எதிர்கொள்ளுகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம் என்ற நிலை உருவாக்கப்பட்டது. எனினும் துரதிஸ்டவசமாக, தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்வதாக சொல்லிக் கொள்கின்றவர்கள் அந்தச் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தாமல், தங்களுடைய சுயலாப அரசியலுக்காக அந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

இந்த விடயத்;தில் நான் தமிழ் தரப்பினரை மட்டும் சொல்லவில்லை, சிங்கள மக்கள் மத்தியிலும் இனவாதிகள் இருக்கின்றனர். ஆக இரண்டு தரப்பிலும் இருக்கின்ற இனவாதிகள் இநதப் பிரச்சினைகளை தீராப் பிரச்சினைகாக வைத்திருக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றார்கள். எனவே இந்த நாட்டு மக்கள் அனைவரும் இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கு முன்வரவேண்டும் என்ற கோரிக்கையை இந்;த சந்தர்ப்பத்தில் முன்வைக்கின்றேன்.

அடுத்ததாக, யுத்தத்தில் இறந்தவர்களை அவர்களின் உறவினர்கள், நண்பர்கள் யாரும் நினைவு கூரமுடியும். அதில் பிரச்சினையே இல்லை. எனினும் அவ்வாறான நினைவுகூரல்களை அரசியல் ஆதாயத்திற்காக சிலர் பயன்படுத்துவதுதான் பிரச்சினையான விடயமாக இருக்கின்றது என்பதை சம்மந்தப்பட்ட மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தனிப்பட்ட முறையிலும், இந்த சமூகத்தின் பிரஜை என்ற வகையிலும் நான் பலரை இழந்திருக்கின்றேன். எனவே, உறவுகளை இழந்தவர்களின் வலி எந்தளவிற்கு கொடுமையானது என்பதை நான் நன்கு அறிவேன். அதனால்தான் இந்தப் பிரச்சினைகளை பேச்சுவார்த்தைகளை மூலமே தீர்த்துக் கொள்வற்கான முயற்சிகளில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றேன்.

என்னைக்கூட கொலை செய்வதற்கு பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 15 வருடங்களுக்கு முன்னர், இன்றைய நாளில்கூட என்னைக் கொலை செய்யும் முயற்சியில் ஒரு தற்கொலை குண்டுதாரி உயிரிழந்திருந்தார். அவ்வாறு உயிரிழந்த தற்கொலை குண்டுதாரியை நினைத்து நான் பரிதாபப்படுகின்றேன் – அனுதாபத்தினை தெரிவித்துக் கொள்கின்றேன்.

இந்நிலையில், இன்றைய விவாதத்துடன் சம்மந்தப்பட்ட அமைச்சு தொடர்பான எனது கருத்துக்களையும் தெரிவிக்க விரும்புகின்றேன். குறிப்பாக திருகோணமலை திருக்கோணேஸ்வரம், வவுனியா வெடுக்கநாரி விவகாரம் மற்றும் முல்லைத்தீவு குருந்தூர் மலை விவகாரம் போன்ற சில விவகாரங்கள் தீர்க்கப்பட வேண்டியிருக்கின்றன. இதுதொடர்;பாக துறைசார் அமைச்சர் விதுர விக்கிரநாயக்கவுடன் கலந்துரையாடியுள்ளேன். நீண்டகால நண்பரான கௌரவ அமைச்சர் அவர்கள், நியாயமாகவும் யாதார்த்தமாகவும் பிரச்சினைகளை கையாண்டு வருகின்றார். நாம் இருவரும் திருகோணேஸ்வரர் ஆலயத்திற்கு சென்று நிலைமைகளை நேரடியாக ஆராய்ந்து கொள்கை ரீதியான முடிவுகளை மேற்கொண்டிருக்கின்றோம். அந்தப் பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும்; என்று நம்புகின்றேன்.

அதேபோன்று வெடுக்குநாரி மற்றும் குருந்தூர் விவகாரங்கள் நீதிமன்றத்துடன் சம்மந்தப்பட்டிருப்பதனால், குறித்த விடயம் தொடர்பாக நேரடியாக சென்று ஆராய்வதுடன் நீதிமன்றத்தின் ஊடக அந்த விடயங்களை தீர்க்க முடியும் என்று நம்புகின்றேன.

இந்த இடத்தில் இன்னொரு விடயத்தினையும் தெரிவிக்க விரும்புகின்றேன். இந்து சமயத்தவர்களோ தமிழ் மக்களோ என்றைக்குமே பௌத்த மதத்திற்கு எதிரானவர்கள் இல்லை. கடந்த காலங்களில் தமிழ் மக்களும் பௌத்த மதத்தினை பின்பற்றி இந்த நாட்டிலே வாழ்ந்திருக்கின்றார்கள். ஆனால், பௌத்தத்தின் பெயரால் காணிகள் அபகரிக்கப்படுவதையும் அல்லது பலாத்கார குடியேற்றங்களையுமே தமிழ் மக்கள் விரும்பவில்லை. இதனை கௌரவ துறைசார் அமைச்சர் புரிந்துகொண்டிருப்பார் என்று நம்புகின்றேன்.

அதேபோன்று எமது ஜனாதிபதி அவர்களும் குறித்த விடயங்களில் நல்ல புரிதலுடன் செயற்பட்டு வருவதுடன், பதவியேற்று குறுகிய காலத்திலேயே பல்வேறு விடயங்களை தீர்ப்பது தொடர்பாக கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார். எனவே அவருடைய முயற்சிகளுக்கு பூரணமான ஒத்துழைப்புக்களை வழங்கி எமது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்’ என்று தெரிவித்தார்.

சிறுபான்மை தலைமைகள் ஒன்றிணைந்து தமிழ், முஸ்லிம்களின் பூர்வீக நிலங்கள் பறி போகின்றமைக்கு குரல்கொடுக்க வேண்டும் – கவிஞர் கால்தீன்

கிழக்கில் தமிழ் முஸ்லிம் மக்களின் விவசாய நிலங்களை அரசாங்கம் அபகரித்து, அம்மக்களை விவசாயம் செய்யாமல் தடை செய்து, இனவாத அதிகாரிகளால் விரட்டியடிக்கும் நிகழ்வு அம்பாறை மாவட்டத்தில் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது.

இது தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் மேலான கவனத்திற்குக் கொண்டு வந்தும் எந்தத் தீர்வும் கிடைக்க வில்லை என எழுத்தாளரும், பன்நூல் ஆசிரியருமான கவிஞர் கால்தீன் குற்றம் சாட்டுகின்றார்.

அக்கரைப்பற்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர். அங்கு தொடர்ந்தும் உரையாற்றும் போது, நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருக்கும் இத் தருணத்தில், ஜனாதிபதி இதைக் கவனத்தில் எடுத்துக் கொள்ளாதது மிகுந்த வேதனையளிக்கின்றது.

மூன்று தசாப்தங்களாக விவசாயம் செய்து வந்த காணிகளை இழந்து தவித்துக் கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு நீதி இல்லாமல் நடு வீதியில் நிற்கிறார்கள்.

இதற்கான தீர்வொன்றினைப் பெற்றுக் கொள்ள தமிழ் முஸ்லிம் தலைமைகள் ஒன்றிணைந்து வடக்குக் கிழக்கில் அதிகாரப் பகிர்வொன்றினைப் பெற்றுக் கொண்டு நமது மக்களின் துன்பங்களைப் போக்க முயற்சிக்க வேண்டும் என்றும் வேண்டுகோளொன்றையும் இதன்போது முன்வைத்தார்.