வாகனங்கள் தவிர்ந்த ஏனைய பொருட்களுக்கான இறக்குமதித் தடை விரைவில் நீக்கம்

வாகனங்கள் தவிர மற்ற அனைத்து இறக்குமதி கட்டுப்பாடுகளையும் செப்டம்பர் முதல் வாரத்தில் அரசாங்கம் நீக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நிதியமைச்சு அதிகாரிகள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற பேச்சின் போதே ஜனாதிபதியின் தலைமை அதிகாரி சாகல ரத்நாயக்க இதனை கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுவரை 286 பொருட்களுக்கான இறக்குமதித் தடை நீக்கப்பட்டுள்ளதுடன் வாகனங்கள் உட்பட மேலும் 930 பொருட்களின் இறக்குமதித் தடை தொடர்ந்தும் அமுலில் உள்ளது.

இதேநேரம் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உட்பட 500 பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் அவற்றில் 250 பொருட்களுக்கான இறக்குமதி தடையை நீக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.

ஏற்கனவே தடை செய்யப்பட்ட பொருட்களை இரண்டு கட்டங்களாக செப்டம்பர் முதல் வாரத்திற்குள் அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.