வெளிநாட்டு தூதுவர்கள் மலையகத்துக்குச் சுற்றுலா

இலங்கையின் வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் தமது நற்சான்றிதழ்களைக் கையளித்த புதுடில்லியில் இருந்து கடமையாற்றும் 9 வெளிநாட்டுத் தூதுவர்களுக்கென ‘எல்ல ஒடிஸி’ விசேட நட்புறவு சுற்றுப்பயணமொன்று, வெளிவிவகார அமைச்சு, ஜனாதிபதி செயலகம் மற்றும் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் என்பவற்றால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இலங்கையின் சுதந்திரம் மற்றும் இராஜதந்திர உறவுகளின் 75 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், இந்த எல்ல ஒடிஸி சுற்றுலா ஒழுங்கு செய்யப்பட்டது.

சர்வதேச சமூகத்துடனான இலங்கையின் நீடித்த உறவை இது மேலும் பிரதிபலிக்கின்றது.

அழகிய மலைநாட்டைக் கண்டுகளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் பயணம், ஜூலை 01 முதல் 03 ஆம் திகதி வரை மேற்கொள்ளப்பட்டது என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு, இன்று (06) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா ஜனாதிபதி இல்லத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பேராசிரியர் மைத்திரி விக்கிரமசிங்க ஆகியோரைச் சந்திக்கும் வாய்ப்பும் தூதுவர்களுக்குக் கிடைத்தது.

இந்த விசேட சுற்றுப் பயணத்துக்கு, வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் இலங்கை சுற்றுலா மேம்பாட்டுப் பணியகம் என்பன அனுசரணை வழங்கியிருந்தன.