இராணுவ வீரர்களுக்கு காத்திருக்கும் சர்வதேச விசாரணை – சரத் வீரசேகர எச்சரிக்கை

சர்வதேச பொறிமுறையின் கீழ் விசாரணைகள் இடம்பெற வேண்டும் என்று ஜெனிவா பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளமை எமது நாட்டு இராணுவ வீரர்களுக்கு பாதகமாக அமையுமென நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர எச்சரித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்வியடம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமது நாட்டின் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக சர்வதேச பொறிமுறையின் கீழ் விசாரணை இடம்பெற வேண்டும் என்று ஜெனிவா பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு அரசாங்கம் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளது.

எனினும் இந்தப் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் ஊடாக எமது இராணுவத்தினருக்கு எதிராக ஆதாரங்களை திரட்டினால், அவர்களை சர்வதேச நீதிமன்றுக்கு கொண்டுசெல்ல முடியுமா என்பதை நாம் ஆராய வேண்டும்.

காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்திற்கும் நாம் அன்று எதிர்ப்பினை இங்கு வெளியிட்டோம்.

ஏனெனில், இதில் எவரேனும் ஒருவர் இராணுவத்தினருக்கு எதிராக பொய் சாட்சி கூறுவாராயின், குறித்த இராணுவ வீரரை கைது செய்து சர்வதேச நீதிமன்றில் முன்னிலைப்படுத்த முடியும்.

ரோம் உடன்படிக்கையில் நாமும் கைச்சாத்திட்டுள்ளமையால், இவ்வாறான செயற்பாடுகள் எதிர்க்காலத்தில் இடம்பெறலாம்.

எனவே, இவை நடக்காமல் இருக்க அரசாங்கம் வழிவகை செய்ய வேண்டும். அத்தோடு, யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த பாதுகாப்புத் தரப்பினர், அரசியல்வாதிகளுக்கு சில நாடுகள் பயணத்தடை விதித்துள்ளன.

இது முற்றாக சட்டவிரோதமான செயற்பாடாகும்” என அவர் மேலும் எச்சரித்துள்ளார்.