வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு , சுகாதார வசதிகளை வழங்குங்கள் – சபா குகதாஸ் கோரிக்கை

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு , சுகாதார வசதிகளை வழங்குமாறு தமிழ் ஈழ விடுதலை இயக்க யாழ் மாவட்ட அமைப்பாளர் சபா குகதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இயற்கை அன்னையின் சீற்றத்தால் பாரிய வெள்ளப் பெருக்கு காரணமாக வடக்கு மாகாணத்தில் முல்லைத்தீவு , மன்னார் வவுனியா, கிளிநொச்சி போன்ற மாவட்டங்களில் பெருமளவு மக்கள் வீடுகளை விட்டு இடம் பெயர்ந்து தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அனர்த்த முகாமைத்துவ உதவிகள் முழுமையாக போதாமையால் தன்னார்வு அமைப்புக்கள் , அறக்கட்டளைகள் , கொடையாளர்கள் முகாம்களில் தங்கியுள்ள மக்களை சந்தித்து தேவைகளை பூர்த்தி செய்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலாக இருக்கும்.

குழந்தைகளுக்கு தேவையான உணவுகள் எல்லோருக்குமான சுகாதாரத்தை ஒரளவு உறுதி செய்வதுடன் நுளம்புத் தொல்லையில் இருந்து பாதுகாப்பதற்கான உதவிகள் தொற்றா நேயாளர்களுக்கான உதவிகள் மிக முக்கியமானவை.

டெங்கு , வாந்திபேதி., வயிற்றோட்டம் போன்ற நோய்கள் விரைவாக பரவும் அபாயம் உள்ளதால் தூய குடிநீர் வசதிகள் உறுதி செய்யப்பட வேண்டும் ஆகவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய முறையில் உதவி செய்ய உதவும் கரங்கள் கைகொடுங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.