வேட்பாளர்கள் தேர்தலில் செலவு செய்யக் கூடிய பணத்தின் அளவை தீர்மானிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவிடம்

தேர்தல்களின் போட்டியிடும் வேட்பாளர்கள் செலவு செய்யக் கூடிய பணத்தின் அளவை தீர்மானிக்கும் அதிகாரத்தை தேர்தல் ஆணைக்குழுவிற்கு வழங்கும் சட்டமூலத்திற்கு சட்டமா அதிபர் திணைக்களம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதற்கமைய ஆணைக்குழுவின் பரிந்துரைக்கும் அதிக பணத்தை செலவிடும் வேட்பாளர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்று நீதித்துறை அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

செவ்வாய்க்கிழமை (நவ. 22) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ இது தொடர்பில் மேலும் தெளிவுபடுத்துகையில்,

அமைச்சரவையின் அங்கீகாரத்தின் பிரகாரம் தேர்தல் பிரசார செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்காக சட்ட வரைஞரால் சட்ட மூலமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது. அதற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது. குறித்த சட்ட மூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் , பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதிக பணத்தை செலவிடுபவர்களுக்கு தற்போதுள்ள தேர்தல் முறைமையின் கீழ் அதிக பயன் கிடைக்கிறது. சில சந்தர்ப்பங்களில் ஊடகங்களைப் பயன்படுத்தியும் இவ்வாறானவர்கள் பிரசாரங்களை முன்னெடுக்கின்றனர். தற்போது அறிமுக்கப்படுத்தப்பட்டுள்ள சட்ட மூலத்திற்கமைய ஜனாதிபதி, பாராளுமன்ற, மாகாணசபை மற்றும் உள்ளுராட்சி மன்றம் என சகல தேர்தல்களையும் உள்ளிடக்கியே இந்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய எந்தவொரு தேர்தலிலும் வேட்பாளர் ஒருவர் செலவு செய்யக் கூடிய பணத்தின் அளவை தீர்மானிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவிற்கு உரித்தாக்கப்பட்டுள்ளது. எனவே ஆணைக்குழுவினால் பரிந்துரைக்கப்படும் அளவை விட கூடுதல் பணத்தை செலவிடுபவர்களுக்கு அவர்களின் பாராளுமன்ற அல்லது உள்ளுராட்சி மன்ற உறுப்புரிமையை இழக்க நேரிடும். அத்தோடு தண்டப்பணத்தை அறவிட்டு தண்டனைக்கு உட்படுத்தக் கூடிய அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது.

அதே போன்று அரச சொத்துக்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்களை தேர்தல் பிரசாரங்களுக்காக பயன்படுத்துவதற்கும் , வெளிநாடுகளிலுள்ளவர்கள் மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களிடமிருந்து பணத்தைப் பெற்றுக் கொள்ளல் என்பவற்றுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் நிறைவடைந்து 3 வாரங்களுக்குள் , தோல்வியடைந்தாலும் வெற்றி பெற்றாலும் வேட்பாளர் ஒருவர் செலவு செய்த பணத்தொகை தொடர்பில் உறுதிமொழியளிக்க வேண்டும்.

செலவிட்ட பணத்தொகை எவ்வாறு கிடைக்கப் பெற்றது , யாரேனும் அதனை வழங்கியிருந்தால் யார் அந்த நபர் உள்ளிட்ட முழுமையான தகவல்களை உறுதி மொழியூடாக வழங்க வேண்டும். உறுதிமொழியில் பொய் கூறப்பட்டமை இனங்காணப்பட்டால் , அது குற்றமாக கருதப்பட்டு தண்டனை வழங்கப்படும். அது மாத்திரமின்றி பொய்யான உறுதி மொழி வழங்கியமை தொடர்பில் தண்டனை சட்டக்கோவையின் கீழ் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு தண்டனை வழங்குவதற்கான அதிகாரமும் இந்த சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளது என்றார்.