உள்ளூராட்சி அதிகாரசபைகளில் இளைஞர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க தீர்மானம்

தீர்மானமெடுக்கின்ற செயன்முறையில் இளைஞர் பிரதிநிதித்துவத்திற்கு வாய்ப்புக்களை வழங்குவதற்காக விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.

தற்போது கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிறேம்நாத் ஸ்ரீ தொலவத்தவினால் தனிப்பட்ட உறுப்பினர் சட்டமூலமொன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த சட்டமூலத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கும், ஒட்டுமொத்த இளைஞர் சமூகத்தின் நலன்களுக்காகவும், அவர்களுடைய விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ளக்கூடிய வகையிலான சூழலை உருவாக்கும் நோக்கில் உள்ளுராட்சி சபைகளில் இளைஞர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது பொருத்தமானதெனக் கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமைய, உள்ளுராட்சி அதிகாரசபை தேர்தல் கட்டளைச் சட்டத்தில் தற்போது காணப்படுகின்ற ஏற்பாடுகளுக்கமைய பெண்களுடைய பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்படுகின்ற வகையில் முதலாவது நியமனப் பத்திரத்திற்கமைய தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 25% வீதத்திற்கு குறையாததும், மற்றும் இரண்டாவது நியமனப் பத்திரத்திற்கமைய தேர்வு செய்து அனுப்ப வேண்டிய உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 25% வீதத்திற்குக் குறையாததுமான இளைஞர் பிரதிநிதிகளை நியமிப்பதற்கான ஏற்பாடுகளை உட்சேர்த்து உள்ளுராட்சி அதிகாரசபை தேர்தல் கட்டளைச் சட்டத்தைத் திருத்தம் செய்வதற்காக விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை கொள்கை ரீதியாக அங்கீகரித்துள்ளது.