13 இலிருந்து கீழிறங்கும் ரணில்-அகிலன்

அரசியலமைப்பில் உள்ள 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தப்போவதாக ஜனாதிபதி ரணில் அறிவித்திருக்கும் பின்னணியில் தென்னிலங்கை மீண்டும் போராட்ட களமாகியிருக்கின்றது. பிரதான அரசியல் கட்சிகள் எதுவும் இப்போது இந்தப் போராட்டத்தில் இறங்கவில்லை. பிக்குகளின் அமைப்புக்களே இப்போது வீதிக்கு இறங்கியிருக்கின்றன. பின்னணியில் பிரதான கட்சிகள், குறிப்பாக அரசாங்கத்தில் உள்ள கட்சிகள் இருக்கலாம்.

கடந்த வருடத்தில் முழுமையாக நாட்டை முடக்கிவைத்த பொருளாதார நெருக்கடிக்கு அடிப்படையான காரணிகளில் ஒன்று இனநெருக்கடி. இது உணா்த்தப்பட்டிருக்கும் நிலையில்தான் அதற்கு நிரந்தரமான ஒரு தீா்வு காணப்பட வேண்டும் என சா்வதேசம் அழுத்தம் கொடுத்தது. இந்தியாவையும் இவ்விடயத்தில் திருப்திப்படுத்த வேண்டிய தேவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு இருந்தது.

இந்தப் பின்னணியில்தான் ஏற்கனவே அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டிருக்கின்ற 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது என்ற முடிவை ரணில் எடுத்திருந்தாா். ஏற்கனவே அரசியலமைப்பில் உள்ள ஒரு விடயத்தை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதுதான் தவறு. ஆனால் இங்கு நடைமுறைப்படுத்த முற்படுவதற்கு எதிரான போராட்டங்களை காணமுடிகின்றது.

சுதந்திர தினத்துக்கு முன்னதாக தீா்வு காணப்படும் என டிசெம்பா் மாதத்தில் ஜனாதிபதி அறிவித்திருந்தாா். பின்னா் சுதந்திரதினத்துக்கு முன்னதாக தீா்வு குறித்து அறிவிப்பதாகத் தெரிவித்தாா். இப்போது, புதன்கிழமை பாராளுமன்றத்தில் அவா் நிகழ்த்திய உரையில் தன்னுடைய பாதை எவ்வாறானதாக இருக்கப்போகின்றது என்பதை வெளிப்படுத்தியிருக்கின்றாா். ஒற்றையாட்சிக்குள் அதிகபட்ச அதிகாரப்பகிர்வை வழங்கி இனப்பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என்று இதன்போது தெரிவித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பொலிஸ் அதிகாரம் பகிரப்படாது என்றும் கூறியுள்ளார்.

ஆக, பிக்குகளும், இனவாதிகளும் கொடுத்த மிரட்டலுக்கு அஞ்சி தன்னுடைய நிலைப்பாட்டிலிருந்து ரணில் கீழிறங்குவதற்குத் தயாராகிவிட்டாா் என்பதன் அறிகுறிதான் பொலிஸ் அதிகாரம் குறித்த அவரது அறிவிப்பு. பிக்குகளின் போராட்டம் தொடா்ந்தால் ஏனையவற்றிலிருந்தும் அவா் கீழிறங்கலாம்!

தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் பொலிஸ், காணி அதிகாரங்கள்தான் முக்கியமானவை. திட்டமிட்ட வகையிலான காணி அபகரிப்புத்தான் தமிழ் மக்கள் எதிா்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கின்றது. தமிழ் மக்களுடைய பாரம்பரிய பிரதேசங்கள் இதனால் பறிபோவதுடன், இவை சிங்கள மயமாவதற்கும் காணி அதிகாரங்கள் எம்மிடம் இல்லாமலிருப்பதுதான் காரணம். அதனால்தான், காணி அதிகாரம் மாகாண சபைகளுக்குத் தேவை என்பதற்கு அதிகளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது.

அதேபோல, தமிழ்ப் பகுதிகளில் பணிபுரியும் பொலிஸ் அதிகாரிகள் அனைவருமே சிங்களத்தில்தான் கதைப்பாா்க்கள். போக்குவரத்துப் பொலிஸாா்கூட, தமிழ் மக்களுடன் சிங்களத்தில் பேசுவதையும், தமிழ் மக்களை இரண்டாம்தரப் பிரஜைகள் போல நடத்துவதையும் காணக்கூடியதாக இருக்கின்றது. இதனைவிட, வடக்கு கிழக்கில் இடம்பெற்ற பல்வேறு குழப்பங்களுக்கும் சிங்களப் பொலிஸாரின் அத்துமீறல்கள்தான் காரணமாக இருந்திருக்கின்றது. பொலிஸ் அதிகாரம் எம்மிடம் இருக்க வேண்டும் என தமிழ்த் தரப்பினா் வலியுறுத்துவதற்கு இவைதான் காரணம்.

ஆனால், பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கித் தவிக்கும் இலங்கையை மீட்பதற்கு முற்பட்டிருக்கும் ரணில் விக்கிரமசிங்க, சிங்களவா்களின் சீற்றத்துக்கு உள்ளாகாமல், தமிழ் மக்களையும் சமாளிப்பதற்கு முற்பட்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது. அதனால்தான், 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவேன் என தமிழ்த் தரப்புக்கும், இந்திய வெளிவிவகார அமைச்சா் எஸ்.ஜெய்சங்கருக்கும் வாக்களித்த ஜனாதிபதி இப்போது பொலிஸ் அதிகாரத்தை வழங்குவதற்கு பின்னடிக்கின்றாா்.

13 குறித்து ஜனாதிபதி அறிவித்தமைக்கு சில காரணங்கள் இருந்தன. தமிழ்த் தேசியக் கட்சிகள் ஆறு இணைந்து இந்தியப் பிரதமருக்கு கடந்த வருடத்தில் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தன. அதில் முக்கியமாக 13 முழுமையாக நடைமுறைப்படுததப்பட வேண்டும் எனவும், அதற்கான அழுத்தங்களை இந்தியா கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டிருந்தது. இந்தியாவும் இது தொடா்பான அழுத்தங்களை ரணிலுக்குக் கொடுத்திருந்தது. பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்குத் தேவையான உதவிகளை வழங்கிய இந்தியாவிடமிருந்து தொடா்ந்தும் உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்கு, இந்தியாவைத் திருப்திப்படுத்த வேண்டிய தேவை ரணிலுக்கு இருந்தது. 13 தொடா்பாக ரணில் வெளியிட்ட அறிவிப்புக்களுக்கு இவைதான் காரணம்.

கோட்டா கோ ஹோம் போராட்டத்துக்குப் பின்னா் வீடுகளுக்குள் தலைமறைவாக இருந்த விமல் வீரவன்ச, உதய கம்பன்பில, சரத் வீரசேகர போன்ற சிங்கள மக்களின் மீட்பா்களாக தம்மைக் காட்டிக்கொள்பவா்கள் மீண்டும் களத்தில் இறங்குவதற்கு ரணிலின் 13 குறித்த அறிவிப்பை பயன்படுத்திக்கொள்கின்றாா்கள். அறிக்கைகளை வெளியிடுவதற்கு மேலாக வீதிகளில் இறங்குவதற்கு இன்னும் அவா்கள் துணியவில்லை என்பதையும் அவதானிக்க முடிகின்றது.

அதேவேளையில் பிரதான அரசியல் கட்சிகள் எதுவும் ரணிலின் இந்த 13 குறித்த நகா்வுக்கு எதிராக போா்க்கொடி துாக்குவதற்குத் தயாராகவில்லை. சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி 13 க்கு உட்பட்டதாக தீா்வொன்றைக் கொண்டுவருவதற்கு தாம் தயாராகவில்லை என்ற நிலைப்பாட்டைத்தான் வெளிப்படுத்தியிருந்தாா்கள். அதேபோல பாராளுமன்றத்தில் பலம்வாய்ந்த கட்சியாக இருக்கும் பொதுஜன பெரமுன இதற்கு எதிராகச் செயற்படப்போவதில்லை என ஏற்கனவே உறுதியளித்திருக்கின்றது. அதன் தலைவா் மகிந்த ராஜபக்ஷ இதனை ஏற்கனவே உறுதிப்படுத்தியிருந்தாா்.

இதனைவிட மற்றொரு திருப்பமாக, இவ்வளவு காலமும் மாகாண சபை முறையையும், 13 ஆவது திருத்தத்தையும் எதிா்த்துவந்த ஜே.வி.பி. மாகாண சபைகளுக்கான அதிகாரப் பரவலாக்கலை தாம் எதிா்க்கப்போவதில்லை என்பதை பகிரங்கமாகவே அறிவித்திருக்கின்றது. தமிழ் மக்கள் இதன்மூலமாக தமது பிரச்சினைகளுக்குத் தீா்வு கிடைக்கும் எனக் கருதுவதால் அதனை தாம் எதிா்க்கப்போவதில்லை என அதன் தலைவா் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்திருக்கின்றாா்.

ஆக, 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு பாராளுமன்றத்தில் எதிா்ப்புக்கள் இருக்கப்போவதில்லை என்பதை கட்சிகளின் இந்த நிலைப்பாடு உணா்த்துகின்றது.

உதிரிகளாகவுள்ள சிங்கள அரசியல்வாதிகள் சிலரும், பிக்குகளும்தான் இப்போது 13 க்கு எதிராக போா்க்கொடி துாக்கியிருக்கின்றாா்கள். ஆனால், இவ்விடயத்திலும் பிக்குகள் மத்தியில் பிளவுகள் காணப்படுகின்றது. கடந்த வாரம் யாழ்ப்பாணம் வந்திருந்த பிக்குகளின் குழு ஒன்று, அங்கு சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளையும், சா்வ மதங்களின் தலைவா்களையும் சந்தித்தாா்கள். இதன்போதும் 13 குறித்துதான் முக்கியமாகப் பேசப்பட்டது. அதிகபட்சமான அதிகாரப்பரவலாக்கல் மூலமாக இனநெருக்கடிக்குத் தீா்வு காணப்பட வேண்டும் என்ற கருத்தை அவா்கள் இந்த சந்திப்புக்களின் பின்னா் ஊடகங்களுக்குத் தெரிவித்தாா்கள்.

இதில் உள்ள பிரச்சினை என்னவென்றால், குறிப்பிட்ட பிக்குகள் 13 பிளஸ் என்பதை யாழ்ப்பாணத்தில் வந்து சொல்கின்றாா்களே தவிர, அதனை கண்டிக்குச் சென்று மகாநாயக்கா்களிடம் சொல்வதற்குத் துணிவதாகத் தெரியவில்லை. அதேபோல தென்னிலங்கையிலும் இதற்கான போராட்டம் ஒன்றை நடத்துவதற்கும் அஞ்சும் நிலையில்தான் அவா்கள் இருக்கின்றாா்கள். யாழ்ப்பாணத்தில் அவா்கள் மேற்கொண்ட சந்திப்புக்கள், அதன்பின்னா் அவா்கள் தெரிவித்த கருத்துக்களுக்கு தமிழ்ப் பத்திரிகைகள்தான் முக்கியத்துவம் கொடுத்துள்ளனவே தவிர, சிங்கள ஆங்கில ஊடகங்கள் அவை தொடா்பாக அலட்டிக்கொள்ளவே இல்லை.

பிரதான அரசியல் கட்சிகள் மௌனமாக இருந்தாலும் பிக்குகள் மூலமாக 13 க்கு எதிரான உணா்வுகள் சிங்களவா்கள் மத்தியில் பரப்பப்படுவதை உணர முடிகின்றது. 1987 இல் இலங்கை – இந்திய உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டபோதும், இது போன்ற போராட்டங்கள் பிக்குகளால் முன்னெடுக்கப்பட்டது. ஜே.ஆா்.ஜெயவா்த்தன அதனை இராணுவத்தைப் பயன்படுத்தி அடக்கினாா். அதன்மூலமாகவே பின்னா் 13 ஆவது திருத்தச் சட்டம் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது.

பண்டா – செல்வா உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டபோதுகூட இதேபோன்ற போராட்டங்கள் பிக்குகளால் முன்னெடுக்கப்பட்டது. பிக்குகள் அரசியலில் செல்வாக்குச் செலுத்தக்கூடியவா்களாக மாற்றமடைந்தது அதன்போதுதான். இந்த எதிா்ப்புக்களுக்கு முகங்கொடுக்க முடியாத பண்டாரநாயக்க பின்னா் அந்த உடன்படிக்கையை கிளித்தெறிந்தாா் என்பது வரலாறு. ஆனால், அதேகாரணத்துக்காக பின்னா் பண்டாரநாயக்க, பௌத்த பிக்கு ஒருவரால் பின்னா் சுட்டுக்கொல்லப்பட்டாா்.

பண்டா – செல்வா உடன்படிக்கை நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் இனநெருக்கடிக்கான தீா்வு அப்போதே காணப்பட்டிருக்கும். பாரிய உயிரிழப்புக்களுக்கும், பொருளாதாரச் சீரழிவுகளுக்கும் காரணமாக இருந்த போரும் இடம்பெற்றிருக்காது. சிங்களத் தலைவா்கள் பிக்குகளின் இனவாதப்போராட்டங்களுக்கு அடிபணிந்ததன் விளைகளை நாடு அனுபவித்துவிட்டது. இதே வரலாறு மீண்டும் திரும்பப்போகின்றதா? என்பதுதான் தற்போது நடைபெறும் நிகழ்வுகளைப் பாா்க்கும் போது எமக்கு எழும்கேள்வி!