2048 இல் அபிவிருத்தியடைந்த நாடாக இலங்கையை உருவாக்கும் திட்ட வரைபடத்தை முன்வைத்தார் ஜனாதிபதி

ஒரு வருடத்துக்கு முன்னர் இருந்த நிலைக்கு நாட்டை மீண்டும் இட்டுச்செல்ல யாரையும் அனுமதிக்கமாட்டோம் என்று கூறிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 2048ஆம் ஆண்டு அபிவிருத்தி அடைந்த நாட்டை உருவாக்குவதே எனது போராட்டம் என்றும் தெரிவித்துள்ளார்.

நான்கு முக்கிய தூண்களில் நாட்டை கட்டியெழுப்புவோம். அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரத்தை முழுமையாக ஸ்திரப்படுத்தி, அடுத்த 25 ஆண்டுகளில் உயர் வருமானம் ஈட்டும் அபிவிருத்தி அடைந்த நாடாக இலங்கையை மாற்றுவோம். நாட்டை கட்டியெழுப்பும் பணியில் இளைஞர் சமூகம் மீது பெரும்நம்பிக்கை வைத்திருக்கிறோம். துரித பொருளாதார மறுசீரமைப்பு செயல்பாட்டில் அரச – தனியார் துறை ஒத்துழைப்பை அதிகரிக்க கூட்டாய்வு முறையை அமுல்படுத்துவோம். மோசடியை ஒழிக்க விசேட செயலணி உருவாக்கப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

‘தேசிய நிலைமாற்றத்துக்கான திட்ட வரைபடம்’ என்ற திட்டத்தை முன்னிறுத்தி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இந்த உரையின் முக்கிய அம்சங்கள் மட்டும் வருமாறு, நவீன உலகுக்கும், நவீன தொழில் நுட்பத்துக்கும் ஏற்றவாறு நாட்டின் பொருளாதாரத்தை மாற்றியமைக்காவிட்டால் நாடு பின்நோக்கி செல்லும். அதன் முடிவாக நாடு பொருளாதார காலனித்துவமாக மாறிவிடும். எனவே, நாம் புதிதாக சிந்தித்து புதிய பயணத்தை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதோடு, அதற்கு அவசியமான துரித பொருளாதார மறுசீரமைப்புக்களை செயல்படுத்த வேண்டும். ஒழுங்குபடுத்தல், கொள்முதல் மற்றும் அரசியல் ஆகிய அனைத்து அம்சங்களிலும் ஊழலை முற்றிலுமாக நிறுத்துவதற்கும், டிஜிற்றல் மயமாக்கல் மற்றும் பொறுப்புணர்வை அடிப்படையாகக் கொண்ட அரசாங்க பொறிமுறையின் மூலம் ஊழலுக்கு எதிரான நடைமுறைகளை செயல்படுத்தவும் ஒரு விசேட செயலணி நிறுவப்படும். மறுசீரமைப்பு வேலைத்திட்டம், இலகுவான பணி இல்லை. என்றாலும், நாட்டுக்கு சிறந்த விடயங்களை மேற்கொள்ள அரசாங்கம் எப்போதும் அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது. நாம் எடுக்கும் தீர்மானங்கள் எவ்வளவு கடினமான மற்றும் வேதனையானதாக இருந்தாலும், எதிர்கால சந்ததியினருக்காக அந்தக் கடினமான பாதையில் சரியான கொள்கைகளின்படி முன்னேறுவதன் மூலம் மாத்திரமே நாட்டை மீண்டும் உயர்வடையச் செய்ய முடியும்.

கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் ஓர் இலக்குடன் சரியான பாதையில் செல்வதன் விளைவுகளை இன்று நாம் அனைவரும் அனுபவிக்கிறோம். 70வீதம் வரை உயர்ந்திருந்த பணவீக்கத்தை தற்போது 25.2 வீதம் வரை குறைக்க முடிந்துள்ளது. இதனால் வாழ்க்கைச் சுமை படிப்படியாகக் குறைந்து வருவதோடு, ஒட்டுமொத்த சமூகமும் இந்த பயனை உணர ஆரம்பித்துள்ளனர் என்று தெரிவித்த ஜனாதிபதி, நாட்டை முன்னேற்ற முன்னெடுக்கும் சந்தர்ப்பங்களில் நாட்டை விற்கிறார்கள் என்று கோஷமிட்டு இதனை சிலர் குழப்ப முயல்கின்றனர். முன்னரும் இவ்வாறு தான் நடந்தது. இனி, இது போன்ற கோஷங்களுக்கு நீங்கள் ஏமாறமாட்டீர்கள் என்று எங்களுக்கு தெரியும். நாட்டை முன்னேற்ற நாம் அனைவரும் கடுமையாக உழைத்து, நம்மை அர்ப்பணிக்க வேண்டியுள்ளது. 2048 ஆம் ஆண்டுக்குள் உலகில் வளர்ச்சியடைந்த நாடாக மாற வேண்டும் என்ற நமது இலக்கை அடைய வேண்டும் என்றார். மேலும், நவீன உலகத்துக்கும், நவீன தொழில்நுட்பத்துக்கும் ஏற்றவாறு நமது பொருளாதாரத்தை வடிவமைக்காவிட்டால், பின்னோக்கிச் செல்ல வேண்டி ஏற்படும். இத்தகைய விலகலின் விளைவு, நாடு பொருளாதார காலனித்துவமாக மாறுவதுதான்.

தவறான கொள்கைகள், பலவீனமான நிகழ்ச்சிகள், தோல்வியடைந்த வேலைத் திட்டங்கள் ஆகியவற்றை ஓர் ஒழுங்கான பாதையில் முன்னெடுப்பதையே பொருளாதார மறுசீரமைப்புகள் மூலம் நாம் மேற்கொள்கிறோம். பழைய பாரம்பரிய முறைகள் மூலம் வங்குரோத்து நிலையை அடைந்த நாட்டை மீண்டும் கட்டியெ ழுப்ப முடியாது. நாம் புதிதாக சிந்தித்து புதிய பயணத்தை ஆரம்பிக்க வேண்டும் – என்றும் சொன்னார். மேலும் நாட்டின் அபிவிருத்தி- அரச நிதி மற்றும் மறுசீரமைப்பு, முதலீட்டு ஊக்குவிப்பு, சமூகப் பாதுகாப்பு வலையமைப்பு, அரச தொழில்முயற்சி மறுசீரமைப்பு என்ற நான்கு தூண்களில் கட்டி யெழுப்பப்படும் என்று தெரிவித்ததுடன், அவை குறித்து விளக்கமும் அளித்தார்