பொது வேட்பாளர் விடயத்தை குழப்ப பலர் சதி – ரெலோ யாழ்.பொறுப்பாளர் சபா.குகதாஸ் குற்றச்சாட்டு

எதிர்வரும் அரச தலைவர் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளரை களம் இறக்குவது தொடர்பில் தாயக புலம்பெயர் தமிழர்களிடையே ஆதரவு பெருகி வரும் நிலையில் அதனை குழப்புவதற்கு பல தரப்பின் நிகழ்ச்சி நிரல்களில் தமிழ்த் தரப்பில் சிலர் சதி முயற்சியில் இறங்கியுள்ளனர் என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட பொறுப்பாளருமான சபா குகதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

நேற்றையதினம் அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

அரசுடன் இணைந்துள்ள தமிழ் முகவர்கள் வழமை போன்று அரசுக்கு சார்பாக பொது வேட்பாளர் விவகாரத்தை விமர்சிப்பதை தாண்டி தமிழ்த் தேசியக் கட்சிகளில் இருப்பவர்களும் வேறு சிலரும் மறைமுக அரசின் மற்றும் வெளிச் சக்திகளின் முகவர்களாக மாறி எதிரான கருத்துக்களை ஊடகப் பரப்பில் முன்வைத்து வருகின்றனர்.

அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் கருத்து பொது வேட்பாளர் விடயத்தில் ராஜபக்சக்கள் பின்னணியில் இருப்பதாக சந்தேகம் வெளியிட்டார். இவரைப் போன்று ஒரு சிலர் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்களிடையே ஒருமித்த நிலைப்பாட்டை ஏற்படுத்துவதற்கு முன்பாக உரியவர்களின் அனுமதி இன்றி வேட்பாளர்களின் பெயர்களை அறிவிப்பது போன்ற சதிகளில் குதித்துள்ளனர்.

தமிழர் தரப்பு எவ்வகையான தீர்மானங்களையும் எடுத்தாலும் அதனை தென்னிலங்கையில் சிங்கள பேரினவாதம் இனவாதமாக மற்றும் பிரிவினைவாதமாக பார்க்கும் என்பதற்காக ஒற்றுமையாக வெளிப்படுத்தும் ஐனநாயக முடிவை அதற்கான சந்தர்ப்பத்தை தவற விட முடியாது. விமர்சனங்கள், சதிகளை கடந்து அனைவரும் ஒன்றினைவது காலத்தின் கட்டாயம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

வடக்கு கிழக்கில் பெரும்பான்மை பெறக்கூடியவரை ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக களமிறக்க வேண்டும் – ஸ்ரீநேசன்

வடக்கு கிழக்கிலும் அதற்கு வெளியிலும் தமிழ் பேசுகின்ற மக்களின் விருப்புக்களைப் பெற்ற 50 வீத்திற்கு மேல் வாக்குகளைப் பெறக்கூடிய ஒருவரை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்க வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் (Gnanamuthu Sreenesan) தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு (Batticaloa) செட்டிபாளையத்தில் உள்ள இல்லத்தில் நேற்று (16.04.2024) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், “எதிர்வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் சரியாகவும் நிதானமாகவும் முடிவெடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. சிவில் சமூகமும், புத்திஜீவிகளும், இந்த தேர்தலை எவ்வாறு கையாளப்பட வேண்டும் என்பது தொடர்பில் சிந்திக்கின்றார்கள்.

இலங்கை சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் கடந்துள்ளன. ஜனாதிபதித்துவ ஆட்சிமுறை கொண்டுவரப்பட்டு 46 ஆண்டுகள் கடந்திருக்கின்றன, யுத்தம் முடிவடைந்து 15 ஆண்டுகள் கடக்கும் நிலமை காணப்படுகின்றது.

30 வருடகாலமாக ஆயுதரீதியாகப் போராடினார்கள். பலநாடுகளின் யுக்திகளின் மூலமாக அந்த போராட்டமும் மௌனிக்கப்பட்டுள்ளது. அதன்மூலம் தமிழர்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப்படவில்லை.

இராஜதந்திர ரீதியாக பேச்சுவார்த்தை மூலமாக பிரச்சனைக்கு தீர்வு காணலாம் என்றால் அதுவும் நிறைவேற்றப்படவில்லை.

இந்தியாவின் (India) நிர்ப்பந்தத்தின் மூலம் 1987ஆம் ஆண்டு மாகாணசபை முறை கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த மாகாணசபையிலும் கூட இலங்கை இனப்பிரச்சினைக்கு முழுமையான தீர்வு இல்லை.

மாகாணசபை தேர்தல் நிறுத்தப்பட்டு 6 வருடங்களாகின்றன. மயிலத்தமடு மேய்ச்சல்தரைப் பிரச்சினையைக்கூட மாகாணசபை முறையால் தீர்க்கப்படாமலுள்ளன.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை முழுமையாக்கப்படல் வேண்டும் என்பதற்காக அப்பகுதி மக்கள் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். இதற்குக்கூட 13ஆவது திருத்ததின் மூலம் கிடைத்த அதிகாரத்தைக் கொண்டு தீர்க்க முடியவில்லை. 1987ஆம் ஆண்டிலிருந்து கொண்டுவரப்பட்ட மாகாணசபை முறைமை எமக்குத் தீர்வாக அமையவில்லை.

தற்போதைய நிலையில 3 ஜனாதிபதி வேட்பாளர்கள் முகம் காட்டுகின்றார்கள். நான் 13ஆவது திருத்தத்தையோ, சமஸ்ட்டியைத் தருவேன் என்றோ கூறமாட்டேன் என அனுரகுமார திசாநாயக்க (Anurakumara Dissanayaka) தெரிவிக்கின்றார். 13ஆவது திருத்தச் சட்டத்தை தரலாம் என சஜித் பிரேமதாஸ (Sajith Premadasa) தெரிவிக்கின்றார் ஆனாலும் சிங்கள பேரினவாதம் குறுக்கிடுகின்றபோது பொலிஸ் அதிகாரத்தை அவரும் தரக்கூடிய வாய்ப்பு இல்லை.

தமிழர் ஒருவரை பொதுவேட்பாளரை நிறுத்தக்கூடாது என்று கூறுகின்றவர்கள், ஏனைய ஜனாதிபதி வேட்பாளர்கள் ஊடாக என்ன தீர்வைத் தருவார்கள்? அவ்வாறு தரக்கூடியவர்கள் யார்? என்பதை தெரிவிக்க வேண்டும்.

மகாணசபை, உள்ளுராட்சிமன்றம் போன்ற தேர்தல்கள் இன்னும் நடாத்தப்படவில்லை. எனவே மக்கள் தங்களது பிரதிநிதிகளைக்கூட தெரிவு செய்ய முடியாத ஜனநாயக முறை இங்கு காணப்படுகின்றது. தேர்தல் தொடர்பில் சுயவிருப்பு வெறுப்புக்களைப் பார்த்துக் கொண்டிருக்கினார்கள்.

மேலும், நாடு வங்குறோத்து நிலையில் உள்ள இக்காலகட்டத்தில் உலக நாடுகளிலிருந்து கடன்பெற்று ஆங்காங்கே சில அபிவிருத்திகள் இடம்பெறுகின்றன.

கச்சதீவை இந்தியா மீள பெறவேண்டும் என எழுந்துள்ள சர்சையானது இலங்கையின் இறைமைக்கு ஓர் சவால் விடுகின்ற விடயமாகவும் கடற்அறாழிலாளர்களுக்கும் அச்சுறுத்தல் விடுகின்றதாகவும் அமைந்துள்ளது.

இது இந்திய தேர்தலுக்காக கொள்ளப்படுகின்ற உத்தியாகவே பார்க்கப்படுகின்றது. அந்நாட்டில் தேர்தல் முடிவுற்றதும் இவ்விடயம் பாரதூரமான தாக்கத்தை ஏற்படுத்தாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு விஜயதாச ராஜபக்ஷவிடம் கோரிக்கை

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு தமக்கு பல தரப்பினரிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளதாக நீதியமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் பெரும்பான்மையான உறுப்பினர்கள் இது தொடர்பில் கோரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

இதன்படி ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து அடுத்த சில வாரங்களில் தீர்மானம் எடுப்பதாக ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போது விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

Posted in Uncategorized

தமிழ்ப் பொதுவேட்பாளரை தெரிவு செய்வது தொடர்பான கலந்துரையாடல் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது – சுரேஷ் பிரேமச்சந்திரன்

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பான கலந்துரையாடல் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற(09) ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தென்னிலங்கை கட்சிகள் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் பரப்புரைகளை ஆரம்பித்துவிட்டன. சிறிலங்கா பொது ஜன பெரமுன சார்பிலும் ஜனாதிபதி வேட்பாளர் களமிறங்கவுள்ள நிலையில், பிரதான போட்டியாளர்களின் எண்ணிக்கை 4 ஆக மாறியுள்ளது.

இவர்கள் யாரும் தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் பேசக்கூடியவர்கள் இல்லை. அதைத்தொடுவதற்கும் அவர்கள் தயாராக இல்லை. போர் முடிவடைந்து 14ஆண்டுகளாக நாம் ஏமாற்றப்பட்டுக் கொண்டேயிருக்கின்றோம். இதனை மாற்றியமைக்கவேண்டும்.

தமிழ் மக்களுடைய தேசிய இனப்பிரச்சினை தீர்க்கப்படவேண்டும் என்பதை சிங்களச் சமூகத்துக்கு வலியுறுத்தும் நோக்கமாக, அதேபோன்று இங்குள்ள இராஜதந்திரிகளுக்கு வலியுறுத்தும் வகையிலும் தமிழ் மக்களுக்கு ஒரு நியா யமான தீர்வு எட்டப்பட வேண்டும் என்பதை வெளிக்கொணரும் முகமாக நாங்கள் ஒரு பொது தமிழ்த் தேசியப் பரப்பில் இருக்கக்கூடிய எல்லாக் கட்சிக ளும் இணைந்து பொது வேட்பாளரை ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்தவேண்டும் என்ற பேச்சுகள் கடந்த 6 மாத காலமாகப் பேசப்பட்டு வருகின்றன.

கடந்த 7ஆம் திகதி வவுனியாவில் நடந்த ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி யில் அங்கம் வகிக்கும் 4 கட்சிகளும் அதற்கான முன் முயற்சிகளில் அனைத்தையும் நாங்கள் கூட்டாக எடுப்பது என்று தீர்மானித்துள்ளோம்.

ஒரு பொது வேட்பாளருடைய தேவையை இந்த ஐந்து கட்சிகளும் வலியுறுத்தும் வகையில் திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம்.

மேலும், ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் போட்டியிடுவது தொடர்பிலான கலந்துரையாடல் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது.

இதுவரை யார் பொது வேட்பாளர் என்பது பிரேரிக்கப்பட வில்லை. ஆனாலும், மதங்களைக் கடந்து வடக்கு – கிழக்கைப் பிரதிநிதித் துவப்படுத்தும் ஒருவரே போட்டியிடுவார். மலையகம் மற்றும் முஸ்லிம்களின் ஆதரவை நாம் எதிர்பார்த்து நிற்கின்றோம்.

அவர்களுடனும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் சம்மதித்தால் அவர்களுடனும் பேச நாம் தயார். நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ் வரன் ஏற்கனவே தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்திவிட்டார். தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவர் ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்தப்படவேண்டும் என்பதில் அவர் உடன்பட்டுள்ளார்.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியைப் பொறுத்தவரை முக்கியமான தலைவர்கள் எமது நிலைப்பாட்டுக்கு ஆதரவாக உள்ளனர்.

அந்தக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மாத்திரமே இதற்கு எதிராக உள்ளார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராகக் களமிறங்கத் தயார் – சம்பிக்க

பரந்துபட்ட அரசியல் கூட்டணியொன்று எதிர்காலத்தில் மலரவுள்ளதாகவும், அதன்மூலம் ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளராகக் களமிறங்குமாறு கோரிக்கை விடுத்தால் அதனை ஏற்பதற்கு நான் தயார்” என்றும், ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

“ஜனாதிபதித் தேர்தல்தான் தற்போது நடத்தப்பட வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலை முதலில் நடத்துவதற்கு எவராவது முற்பட்டால் அது வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு விவகாரத்தால் தாக்கம் செலுத்தும்.

வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பை எதிர்வரும் ஜூலை மாதத்துக்குள் செய்தாக வேண்டும். ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் நாடாளுமன்றத் தேர்தலை நடத்தலாம்.

ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளராகக் களமிறங்குமாறு எனக்கு இன்னும் கோரிக்கை விடுக்கப்படவில்லை.

எதிர்காலத்தில் பரந்துபட்ட அரசியல் கூட்டணி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அந்தக் கூட்டணி கோரிக்கை விடுத்தால் பொதுவேட்பாளராகக் களமிறங்கத் தயார்” என தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் யார்? தமிழ் கட்சிகளுடன் ஆலோசித்து முடிவு – ரெலோ பேச்சாளர் சுரேந்திரன்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் கட்சிகள் ஒன்று சேர்ந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதா அல்லது தென்னிலங்கை வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவு வழங்குவதா என்பது தொடர்பில் ஒரே நிலைப்பாட்டில் செயற்படுகின்ற தமிழ் தேசிய கட்சிகளுடன் இணைந்து பேசி முடிவெடுக்கப்படும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) அமைப்பின் ஊடகப் பேச்சாளர் குருசுவாமி சுரேந்திரன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,,

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் அரசியல் அமைப்பின் பிரகாரம் இவ்வருடம் பழைய முறையிலோ அல்லது புதிய ப முறையிலோ தேர்தலை நடத்தியே ஆக வேண்டும்.

இவ்வாறான நிலையில் தென் இலங்கையில் போட்டியிடுகின்ற ஜனாதிபதி வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவு வழங்குவதா அல்லது தமிழ் தேசியக் கட்சிகள் சார்ந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதா என்பது தொடர்பில் பல்வேறு தரப்பினர்களும் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.

தமிழ் கட்சிகளைச் சேர்ந்த சிலர் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக தமிழர் ஒருவரை நிறுத்தி தமிழ் மக்களிடம் வாக்குகள் வழங்குமாறு கோருவது என கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு கோருவதால் தென் இலங்கையில் செயல்படுகின்ற இனவாத சக்திகளுக்கு சிங்கள மக்களின் வாக்குகளை பெறுவதற்கு சாதகமாக அமைந்து விடும் என சில தமிழ் தரப்பினர்கள் கருத்துக்களை முன் வைக்கிறார்கள்.

இவ்வாறு இரு பக்கவாதங்கள் முன்வைக்கப்படுகின்ற நிலையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஒரே நிலைப் பாட்டில் செயற்படுகின்ற தமிழ் கட்சிகள் மக்களின் எதிர்கால அரசியல் நலன் கருதி முடிவுகளை எடுக்க வேண்டும்.

ஆகவே ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் இருக்கின்ற நிலையில் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட பின்னர் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் சக தமிழ் கட்சிகளுடன் கலந்துரையாடி முடிவுகளை எடுப்போம் என அவர் மேலும் தெரிவித்தார்.

நாட்டின் பாரம்பரிய அரசியலுக்கு முற்றுப்புள்ளி – திலித் ஜயவீர

இலங்கையில் பாரிய அரசியல், சமூக மற்றும் பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளதாக மவ்பிம ஜனதா கட்சியின் தலைவரும், தொழிலதிபருமான திலித் ஜயவீர ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் முன்னிலையில் உறுதியளித்துள்ளார்.

மகிழ்ச்சியான உலகை உருவாக்கும் தொழில் முனைவோர் அரசாங்கத்தை கட்டியெழுப்பும் இந்த மாநாடு கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் சனிக்கிழமை (17) நடைபெற்றது. கடந்த சில மாதங்களில் பல மாவட்ட மாநாடுகள் நடைபெற்ற போதிலும் , இந்த மாநாட்டுக்கு அதிக சனத்திரள் காணப்பட்டது.

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,

“நான் அரசியலுக்கு வர எதிர்பார்த்தவன் அல்ல . தயக்கத்துடன் ஆனால் விருப்பத்துடன், காலகாலமாக அரசியல் ஓட்டத்தைப் பொறுத்து நாங்கள் வெவ்வேறு நபர்களை ஆதரித்தோம். ஆனால் இப்போது உங்களுக்காக, நாட்டிற்காக, இந்த நாட்டின் எதிர்கால சந்ததியினருக்காக இந்தப் பயணத்தை மேற்கொள்கிறேன். நம்பிக்கையின் அடிப்படையில் நாங்கள் முன்பு பல தரப்புகளை ஆதரித்தோம். அது வேறொன்றுமில்லை. என்றாவது ஒரு நாள் இந்த அன்பான இலங்கையை கட்டியெழுப்பலாம், வளர்ந்த நாடாக மாற்றலாம் என்ற ஆசைதான் அது .

ஆனால் இலங்கையில் தீர்க்கமான அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் தற்போது மவ்பிம ஜனதா கட்சி மற்றும் அந்த அமைப்பின் இளையோர் மூத்த தலைவர்களுடன் இணைந்து செயற்படுகின்றோம். இந்த நாடு இப்போது மிகவும் சோர்வாக இருப்பதாக உணர்கிறோம். மிகவும் கடினம். 75 வருடங்களாக இந்த நாடு கொள்கை இல்லாத அரசியல் செய்து வருகிறது என்பது உங்களுக்கு மிகத் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது. உங்கள் அனைவரின் வாழ்விலும் உடனடி மாற்றத்தை ஏற்படுத்தும் புரட்சிகரமான மாற்றம் இந்த நாட்டிற்கு தேவை. நாங்கள் செய்த முக்கிய தவறு என்னவென்றால், நாங்கள் எப்போதும் மற்றொரு அரசாங்கத்தை கவிழ்க்க புதிய அரசாங்கங்களை கொண்டு வந்தோம். அல்லது வேறொரு அரசாங்கத்தின் தவறுகளை சுட்டிக்காட்டுவது எமது பணியாக இருந்தது. ஆனால் உலகில் உள்ள அனைத்து வளர்ந்த நாடுகளும் பயன்படுத்தும் தொழில்முனைவோர் ஊக்குவிப்பு திட்டத்துடன் நாங்கள் வருகிறோம்.அது நாட்டையும் உங்களையும் முன்னோக்கி நகர்த்தும் வாழ்க்கையை உருவாக்குகிறது என்ற கருத்துடன் நாங்கள் வருகிறோம். இந்த நாடு பின்னடைந்து நிற்கும் நாடு அல்ல. இது ஒரு விஞ்ஞான மற்றும் நடைமுறை திட்டமாகும், இது உங்கள் வாழ்க்கையின் முன்னேற்ற நிலையை இது விரைவாக மேம்படுத்தும்.

இந்த நாட்டின் அனைத்து படைப்பாற்றல் மிக்கவர்களும் ஒன்றிணைந்து முன்னேற வேண்டும். எங்களிடம் எப்போதும் இருந்த தன்னம்பிக்கை, தைரியம் மற்றும் படைப்பாற்றலுடன் முன்னேற்றத்திற்கான பயணத்தை இலங்கையர்களாகிய நாங்கள் மேற்கொள்ள வேண்டும். துக்கம் அனுசரிக்க புலம்புவதற்காக நாங்கள் மக்களை ஒன்று சேர்க்கவில்லை. புலம்பல்களை கேட்கவோ அல்லது சோற்றை சுவைக்கவோ மக்கள் நம்மைச் சுற்றி கூடுவதில்லை. இது உங்கள் வாழ்க்கையை மாற்றும் திகதிகளுடன் திட்டமிடப்பட்ட அட்டவணை. அந்த நடைமுறையில் நீங்கள் அனைவரும் ஒன்றுபட்டிருக்கிறீர்கள். கொழும்பில் உள்ளவர்களைப் போன்று, நிற, கட்சி, மத, இன வேறுபாடின்றி அனைத்து இலங்கையர்களும் இத்திட்டத்தில் இணைவார்கள் என நம்புகிறோம். மறுக்க முடியாத வெற்றியுடன் இந்த நாட்டை கட்டியெழுப்பக்கூடிய ஒரே வகையான மற்றும் கெளரவமான தீர்வு இதுதான் என்பதை இன்றைய இந்த நிகழ்ச்சி நிரூபிக்கிறது. சரியான நேரத்தில் அதை உங்களுக்கு வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

இது முன்னேறக் கூடிய நாடு, எழுச்சி பெறவும், முன்னின்று நடத்தவும் காத்திருக்கும் இளம் தலைமுறையைக் கொண்ட நாடு. இவர்கள் அனைவருக்கும் தலைமை தாங்கி நாட்டை கட்டியெழுப்பும் பணிக்கு நாம் தயாராக உள்ளோம். சிவப்பு, இளஞ்சிவப்பு அல்லது எந்த நிறத்தில் யார் வந்தாலும், வெறுப்பை விதைத்தால், இந்த நாடு பின்னோக்கிச் செல்லும். வெறுப்பை விதைக்கும் அனைவரையும் நேசிக்கும் கட்சி நாங்கள் என்று கூறிக்கொள்ள விரும்புகிறோம். நாங்கள் தூய்மையான இதயம் கொண்ட கட்சி. வெறுப்பு அரசியல் செய்து இந்த நாட்டை அழிப்பதை நிறுத்துங்கள். உங்கள் வெறுப்புக்கு அன்புடன் பதிலளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். இந்த நாட்டின் மவ்பிம ஜனதா கட்சியை தவிர மற்ற அனைத்து கட்சிகளும் இந்த நாட்டின் அப்பாவி மக்களை ஏமாற்றிய கட்சிகள், உங்கள் கண்ணீரை ஒரு சதத்திற்கு கூட கணக்கில் எண்ணாத கட்சிகள், அதனால் தான் உங்களுக்காக சரியான நிலையில் அவர்கள் நிற்கவில்லை. இந்த நாட்டின் எதிர்காலத்திற்கான சரியான பாதையை அவர்கள் ஏற்படுத்தவில்லை.

எங்கள் அணுகுமுறையைப் பாருங்கள். நாங்கள் இந்த பாரம்பரிய அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதன் அர்த்தம் இந்த இருநூற்றி இருபத்தைந்தும் வேண்டாம் என்பதல்ல. அவர்கள் சேரக்கூடிய இடம் இருந்தால், எங்கள் கொள்கையுடன் உடன்பட்டால் அவர்கள் எங்களது வரிசையில் சேரலாம் என்று நினைக்கிறேன். நாங்கள் எப்படி ஒன்றாக பயணிக்கலாம் என்று பார்ப்போம். நாம் மற்ற பாரம்பரிய அரசியல் கட்சிகளை ஆதரிக்கிறோம் என்பதல்ல நண்பர்களே. எங்களுக்கு அத்தகைய நம்பிக்கை இல்லை. இத்திட்டம் நமது தாய்நாட்டை மாற்றும் திட்டமாகும். பின்னர் யார் வேண்டுமானாலும் சேரலாம். ஆனால் நேர்மையான இதயத்துடன் மட்டுமே அவர்கள் எங்களுடன் சேர வேண்டும்.

அரகலய போராட்டத்தின் போது எங்களுடன் இருக்கும் இளைஞர்கள், வலிமையான, படைப்பாற்றல் மிக்க, துணிச்சலான பலரை நான் அறிந்துகொண்டேன். நான் நேர்மையாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பற்றி பேசுகிறேன், அரசியல் காரணங்களுக்காக அங்கு வந்தவர்களை அல்ல. சிகப்பு, இளஞ்சிவப்பு கட்சிகளின் அரசியல் தேவைகளுக்காக மக்கள் நலமற்ற சமூக ஊடக கலாச்சாரத்தில் இருந்து வெளியே வந்து, மகிழ்ச்சியான தேசத்தை உருவாக்கவும், மக்கள் மகிழ்ச்சியாக இருக்கும் நாட்டை உருவாக்கவும் பிரார்த்தனை செய்வோம்.இல்லையெனில் எதிர்மறை சிந்தனை மூலமும் மக்களின் மரணத்தை விரும்பி கருத்துகளை வெளியிடுவதன் மூலமும் இந்த இளைஞர்களுக்கு கொண்டு செல்லப்படுவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. அது இந்த நாடு முன்னேறுவதற்கான வழி அல்ல.

Posted in Uncategorized

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதே சிறந்தது – மஹிந்த ராஜபக்ச

நிறைவேற்று அதிகாரமுறையை நீக்குவது சரியான நடவடிக்கை என தெரிவித்துள்ள முன்னாள்  ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தான் ஏற்கனவே நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமுறையை அனுபவித்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

நாட்டின் அரசியல் நிலைமை எவ்வாறு உள்ளது என்ற செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு நாட்டின் அரசியல் நிலைசிறப்பானதாக உள்ளது நிறைவேற்று அதிகார முறையை நீக்குவது நல்லது  என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

முழுநாடும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமுறையை நீக்கவேண்டும் என வேண்டுகோள் விடுப்பதால் அதனை நீக்கவேண்டும் என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலை பிற்போட முயல்வது எதிர்கட்சியினருக்கான பொறியாக அமையலாம் எங்களிற்கு ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க குறித்து நன்கு தெரியும் என மகிந்தராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எந்ததேர்தல் என்றாலும் எங்கள் வேட்பாளர்கள் வெற்றிபெறுவார்கள் சரியான தருணத்தில் அவர்கள் மேடைக்கு வருவார்கள் அதுவரை பொறுத்திருங்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

ஜேவிபி தலைவரின் இந்திய விஜயம் குறித்து கருத்து தெரிவித்துள்ள மகிந்த ராஜபக்ச  இந்தியா போன்ற நாடுகளுடன் உறவை ஏற்படுத்திக்கொள்ளவேண்டியதன் அவசியத்தை ஜேவிபி இறுதியாக உணரதலைப்பட்டுள்ளமை மகிழ்;ச்சியளிக்கின்றது என தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

ஜனாதிபதி தேர்தலை ஒரு வருட காலத்துக்கு பிற்போட அரசாங்கம் முயற்சி – கிரியெல்ல

ஜனாதிபதியின் கொள்கை பிரகடனத்தில் ஜனாதிபதி தேர்தல் பற்றி குறிப்பிடப்படவில்லை. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இரத்து செய்யும் யோசனையை முன்வைத்து, ஜனாதிபதி தேர்தலை ஒருவருட காலத்துக்கு பிற்போட அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது.

ஜனநாயகத்துக்கு எதிராக செயற்பட்டு விட்டு, பாராளுமன்றத்துக்குள் வந்து எதிர்க்கட்சிகளிடம் ஒத்துழைப்பு கோருவதற்கு வெட்கமில்லையா என எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (08) இடம்பெற்ற ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரையின் மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த காலங்களில் பாராளுமன்றத்தில் ஆற்றிய சிம்மாசன பிரசங்கத்தை செவிமெடுத்து, வாத பிரதிவாதங்களை முன்வைத்தோம்.ஆனால் நேற்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற கொள்கை பிரகடனத்தை நாங்கள் புறக்கணித்தோம்.ஜனநாயகத்துக்கு எதிரான ஜனாதிபதியின் செயற்பாடுகள் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மாதம் 30 ஆம் திகதி கொழும்பில் அமைதி வழி போராட்டத்தில் ஈடுபட்டோம்.

இந்த போராட்டத்தின் மீது அரசாங்கம் வன்மையான முறையில் தாக்குதல்களை மேற்கொண்டது. எதிர்க்கட்சித் தலைவர் மீதும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.வரலாற்றில் இவ்வாறான நிலை ஒருபோதும் இடம்பெறவில்லை.

ஜனநாயக போராட்டத்தின் மீது தாக்குதல்கள் மேற்கொண்டு விட்டு,பாராளுமன்றத்துக்குள் வந்து ‘எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு அவசியம் ‘ என ஜனாதிபதி உரை நிகழ்த்துவதற்கு வெட்கமில்லையா ?

நாட்டு மக்களை வஞ்சிக்கும் வகையில் 40 இற்கும் அதிகமான வரிகள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. காலனித்துவ ஆட்சியின் போது அமுல்படுத்தப்பட்ட சரீர வரிகள் ஊடாக எதிர்வரும் காலங்களில் அமுல்படுத்தப்படலாம்.தொழில் இல்லாத இளைஞர்கள் கூட வருமான வரி இலக்கத்தை பதிவு செய்ய வேண்டும் என்று குறிப்பிடுவது நகைப்புக்குரியது.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கண்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிடுகிறார். ஆனால் 2022.04.12 ஆம் திகதிக்கு பின்னர் ஒரு சதம் கூட வெளிநாட்டு கடன்கள் செலுத்தப்படவில்லை. ஜனாதிபதியின் கொள்கை உரையில் ஜனாதிபதி தேர்தல் பற்றி பேசப்படவில்லை.அரசியலமைப்புக்கு அமைய இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டும்.

ஜனாதிபதி தேர்தலுக்கு அச்சமடைந்துள்ளார்.ஜனாதிபதி தேர்தலை ஒரு வருட காலத்துக்கு பிற்போடுவதற்கு ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இரத்து செய்யும் யோசனையை முன்வைத்து ஜனாதிபதி தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளது.அரசாங்கத்தின் இந்த செயற்பாட்டை நிச்சயம் தோற்கடிப்போம்.

எதிர்க்கட்சிகளின் ஆதரவை ஜனாதிபதி கோருகிறார். இவர்களுக்கு ஆதரவு வழங்கினால் எமக்கும் மக்கள் மத்தியில் செல்ல முடியாத நிலை ஏற்படும்.

நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளியவர்களுக்கு சர்வதேசம் ஆதரவு வழங்காது. ஆகவே அட்டை பூச்சிப் போல் ஒட்டிக் கொண்டு இருக்காமல் தேர்தலை நடத்துங்கள்.தமக்கான அரசாங்கத்தை மக்கள் தெரிவு செய்துக் கொள்வார்கள் என்றார்.

பெரமுனவில் ஜனாதிபதி வேட்பாளராக தகுதியானவர் இல்லையெனில் ரணிலை ஆதரிப்போம் – பிரசன்ன ரணதுங்க

தற்போதைய ஜனாதிபதியை விட ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதற்கு தகுதியான ஒருவர் தமது கட்சியில் இருந்தால் அவருக்கு வழங்குவதே பொருத்தமானது எனவும் தகுதியானவர் இல்லை என்றால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கே அந்த வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் ஆளுங் கட்சியின் பிரதம கொறடாவும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க வலியுறுத்தினார்.

இத்தருணத்தில் கட்சியை விட நாட்டைப் பற்றி சிந்திக்கக்கூடிய எதிர்காலத் தலைவர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டுமென அமைச்சர் கூறினார். அதற்கான அதிக தகுதிகள் தற்போதைய ஜனாதிபதியிடம் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கனேஹிமுல்ல பிரதேச சபைக் கூட்டத்தில் நேற்று (4) கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பொருளாதார சீர்திருத்தங்கள் பற்றியோ அல்லது நாட்டை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டம் பற்றியோ அனுரகுமார திஸாநாயக்க ஒருபோதும் பேசமாட்டார் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

இப்படிப்பட்ட தற்பெருமைக்காரர்களிடம் இருந்து ஒரு நாட்டின் அபிவிருத்தியை எதிர்பார்க்க முடியாது என்றும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டார்.

“ரணில் விக்கிரமசிங்க அவர்கள் நாட்டுக்கான அரசியல் மாற்றத்தை உருவாக்கினார். அரசியல் மற்றும் பொருளாதார சீர்திருத்தங்கள் பற்றி பேசினார். அனைவரும் ஒரே இடத்தில் அமர்ந்து நாட்டுக்காக உழைக்கச் சொல்லி அரசியலைத் தொடங்கினார். பொருளாதார சீர்திருத்தங்களில் நாட்டுக்கு நல்லது செய்வதே தவிர, மக்கள் கேட்பதை அல்ல என்றார்.

நாங்கள் எடுத்த முடிவுகள் மக்கள் முடிவு அல்ல. ரணில் விக்கிரமசிங்க அவர்கள் செய்தது, நாட்டு மக்களுக்கு இந்த அமைப்பைப் பழக்கப்படுத்தியதுதான். விலை அதிகரிக்கும் போது அதிகரிக்கவும், குறையும் போது குறையவும் விலை சூத்திரம் வழங்கப்பட்டது. ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாக எரிபொருள் விலை அதிகரித்து வருகிறது.

அநுரகுமார திஸாநாயக்க அரசாங்கங்களில் இல்லாதது போன்று இன்று பேசுகின்றார். திருமதி சந்திரிகா குமாரதுங்க வந்தபோது விகாரமஹாதேவி என்று கூறி அழைத்து வந்தவர். அவரை வெற்றியடைய வைத்து நான்கு அமைச்சர் பதவிகளையும் பெற்றார். அந்தத் தேர்தலில் ரெஜி அவர்கள் தோல்வியடைந்தார். அவர்கள் அரசாங்கத்தின் அங்கம் ஆனார்கள்.

மகிந்த ராஜபக்ச அழைத்து வரப்பட்ட போது தெற்கிலிருந்து துட்டுகெமுனுவாகவே அழைத்து வரப்பட்டார். மஹிந்த சிந்தனையே நாட்டுக்கு சிறந்தது என தமது தலைவர்கள் கூறுவதை பார்க்கின்றனர். எம்முடன் இணைந்த பின்னர் சரத் பொன்சேகாவுடன் இணைந்தார். அங்கிருந்து ரணில் விக்கிரமசிங்க, மைத்திரிபால உருவாக்கிய நல்லாட்சி அரசாங்கத்திற்கு சென்றார்.

அதன் பின்னர் அனுரகுமாரவின் செயலாளர் ஊழல் குழுவின் தலைவராக செயற்பட்டார். அனுரகுமார அவரை இயக்கினார். அவரும் அந்த அரசாங்கத்தில் இருந்தார். நாங்கள் 225 பேரும் இருக்கவில்லை, ஆட்சி செய்யவில்லை என்று அவர்களால் கூற முடியாது. இன்று ஒரு புதிய சித்தாந்தத்தை உருவாக்க முயற்சிக்கிறார்கள். 88/89 இல் என்ன நடந்தது என்று 2000க்குப் பின் வந்த தலைமுறைக்குத் தெரியாது.

அவர்கள் தங்கள் அரசியல் சித்தாந்தத்தை மதிக்கவில்லை என்றால், அல்லது துண்டுப் பிரசுரம் மூலமாக கடையை மூடவில்லை என்றால், அந்த மனிதனை சுட்டுக் கொன்று விடுகிறார்கள்.

இரவில் வீடுகளுக்குச் சென்று மக்களைக் கொன்றனர். எமது கட்சிகள் ஒருபோதும் அரச சொத்துக்களை கொன்று, எரித்து, அழித்ததில்லை.

அந்தக் குற்றங்களையெல்லாம் செய்த குழு ஜனதா விமுக்தி பெரமுன, இன்று அவர்களால் அந்தப் பாவத்திலிருந்து தப்ப முடியாது. அதனால்தான் அந்த வரலாறு தெரிந்தவர்கள் எப்போதும் ஜே.வி.பி.யை 3% என்று போடுகிறார்கள். நேற்று முன்தினம் மாபெரும் மகளிர் மாநாடு நடந்தது. சுமார் 300 பெண்கள் சைக்கிளில் சென்றனர்.

இந்தக் கூட்டத்திற்கு முன்பு அந்த கிராமத்துக்குச் சென்றிருந்தேன். நான் போய் அந்த கிராமத்தில் எத்தனை குடும்பங்கள் உள்ளன என்று கேட்டேன். வாக்காளர் பட்டியலில் 170 பெண்கள் மட்டுமே உள்ளனர். இந்த ஊர் ஆண்களுக்கு இரண்டு இரண்டு மனைவிகளா என்று கேட்டேன்.

ராஜபக்சர்கள் திருடியதாக கூறும் ஜனதா விமுக்தி பெரமுன அவர்கள் செய்ததை மறந்து விட்டது. 88/89 இல் சொத்துக்களுக்கு தீ வைத்தனர். அதன் காரணமாக இந்த பொருளாதார நெருக்கடிக்கு ஜனதா விமுக்தி பெரமுனவும் காரணம். பொருளாதாரப் பிரச்சினை கோட்டாபயவின் காலத்தில் ஏற்பட்ட ஒன்றல்ல. 30 வருட யுத்தம் நடந்தது. போர்தான் அதற்குச் சிறந்த வழி. 2005 இல் மஹிந்த வெற்றி பெற்று 2009 இல் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தோம். அன்று சஜித் பிரேமதாசவின் தந்தை புலிகளுக்கு ஆயுதங்களையும் பணத்தையும் வழங்கினார்.

600க்கும் மேற்பட்ட நமது காவல்துறை அதிகாரிகள் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட ஆயுதங்களால் கொல்லப்பட்டது உங்களுக்கு நினைவிருக்கலாம். அப்படியொரு வரலாறு நமக்கு இருந்தது. உலக நாடுகள் எமக்கு ஆதரவளித்த போது, யுத்தம் செய்ய எம்மை ஆதரிக்கவில்லை. நமது நாட்டின் வருமானம் போருக்கே செலவிடப்பட்டது. போர், இயற்கை சீற்றங்கள், 83 கறுப்பு ஜூலை போன்ற காரணங்களால் நமது பொருளாதாரம் பின்னோக்கி சென்றது.

88/89 இல் செய்ததை மே 9ம் திகதி ஜனதா விமுக்தி பெரமுன செய்தது. பெரும்பாலான செயற்பாட்டாளர்கள் கம்பஹாவில் உள்ள வீடுகளுக்கு தீ வைத்தனர்.

மினுவாங்கொடை தொகுதியில் 13 வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. எங்களை மக்களிடம் இருந்து விலக்கி வைப்பதற்காகவே அத்தனையும் செய்தார்கள். அடிபட்டு நாம் கூர்மைப்படுத்தப்படுகிறோம் என்பது அவர்களுக்குப் புரியவில்லை. தற்போது இலங்கைக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகின்றனர்.

தற்போது ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. கிராம அபிவிருத்தித் திட்டம் செயல்படுத்தப்படும்போது, அதையும் நாசப்படுத்த முயற்சிக்கின்றனர். ஜனதா விமுக்தி பெரமுன அவர்களை கிராமத்தில் எந்த வேலையும் செய்ய விடவில்லை. அவர்களும் செய்யவில்லை. சமூக விரோதிகளாக செயல்படுகிறார்கள். கேவலமான அரசியல் செய்யாதீர்கள். நாட்டைப் பற்றி சிந்தித்து வேலை செய்யுமாறு நான் அனுரகுமாரவிடம் கேட்டுக் கொள்கிறேன்.

எனது அரசியல் கருத்துப்படி ரணில் விக்கிரமசிங்க அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் கட்சி சார்பற்றவராக வரவேண்டும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து அதை முடிவுக்கு கொண்டுவர உதவ வேண்டும்.

யுத்தத்தின் பின்னர் இந்த நாட்டில் அச்சமோ சந்தேகமோ இன்றி நிம்மதியாக வாழ்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காகவே அன்று நாம் மஹிந்தவை வெற்றியடையச் செய்தோம்.

நாங்கள் தேசியத் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் போது, தேசியப் பிரச்சினையின் அடிப்படையில் அவர்களைத் தேர்ந்தெடுத்தோம்.

யுத்தம் முடிவடைந்த போது, உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி நாட்டை அபிவிருத்தி செய்வதற்காக மக்கள் மஹிந்தவை தெரிவு செய்தனர். நாட்டை ஒரு முறைமைக்கு கொண்டு வர நல்லாட்சியை உருவாக்க மக்கள் மைத்திரிபால சிறிசேனவை தேர்ந்தெடுத்தனர்.

அப்போது நான் அவருக்கு எதிராக இருந்தவன். அவர் பணியாற்றுகிறாரா இல்லையா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும். ஈஸ்டர் தாக்குதலுடன், தேசிய பாதுகாப்பு வீழ்ந்த போது கோத்தபாய கொண்டுவரப்பட்டார்.

ஈஸ்டர் தாக்குதலை நடத்தியதாக இன்று நாங்கள் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறோம். ஜே.வி.பி.யின் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த இப்ராஹிம் என்ற நபரும் அவரது மூன்று மகன்களும் சேர்ந்து குண்டுகளை வைத்தனர். மூன்று மகன்களும் ஜே.வி.பி கூட்டமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள். கோட்டாபய வெற்றி பெறுவதற்காக ஜே.வி.பி கத்தோலிக்க மக்களை கொன்றதா என்று மக்கள் விடுதலை முன்னணியிடம் கேட்கிறேன்.