குருந்தூர்மலை காணி அளவீடு மக்கள் எதிர்ப்பால் இடைநிறுத்தம்!

கடந்த 1984ஆம் ஆண்டு இடம்பெயர்ந்த முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு தமிழ்மக்கள் இதுவரையில் மீளக்குடியமர்த்தப்படவில்லை.

எனவே முதலில் தம்மை மீளக்குடியமர்த்துமாறு தண்ணிமுறிப்பு தமிழ் மக்கள் கரைதுறைப்பற்று பிரதேசசெயலர் திருமதி. உமாமகள் மணிவண்ணனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குருந்தூர்மலைப்பகுதியில் இன்று (23) தொல்லியல் திணைக்களத்திற்கு காணி அளவீடு செய்வதற்கென கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர், காணி உத்தியோகத்தர்கள், நிலஅளவைத்திணைக்களம் ஆகியோர் வருகைதந்திருந்தனர்.

இதன்போதே தண்ணிமுறிப்புப் பகுதியைச் சேர்ந்த தமிழ் மக்கள் இக் கோரிக்கையினை முன்வைத்துள்ளனர்.

அதேவேளை தொல்லியல் திணைக்களத்திற்கான நிலஅளவீட்டு முயற்சி, அப்பகுதித் தமிழ் மக்கள் மற்றும், மக்கள் பிரதிநிதிகளின் எதிர்ப்பால் கைவிடப்பட்டிருந்தது.

இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில்,

1933ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானித் தகவலின்படி குருந்தூர்மலைக்குரிய தொல்லியல் பிரதேசமாக சுமார் 78ஏக்கர் காணி காணப்படுவதாக தொல்லியல் திணைக்களம் சுட்டிக்காட்டுகின்றது.

அதேவேளை வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தொல்லியல் திணைக்களம் சுட்டிக்காட்டும் குறித்த 78ஏக்கர் காணிகளுக்கு மேலதிகமாக, பலநூற்றுக்கணக்கான தமிழ் மக்களின் விவசாய நிலங்களை கடந்த 2022ஆம் ஆண்டு எவ்வித முன்னறிவிப்புமின்றி தொல்லியல் திணைக்களம் அபகரித்ததுடன், அத்துமீறி எல்லைக் கற்களும் நாட்டியிருந்தது.

அவ்வாறு தொல்லியல் திணைக்களத்தால் அத்துமீறி அபகரிக்கப்பட்ட பகுதிகளுக்குள், தண்ணிமுறிப்பு தமிழ் மக்களுக்குரிய குடியிருப்புக்காணிகள், பயிர்ச்செய்கைக்காணிகள், பாடசாலைக் காணி, தபால்நிலையக்காணி, நெற்களஞ்சியசாலைக்குரிய காணிகள் என்பன அடங்குகின்றன.

இந் நிலையில் தொல்லியல் திணைக்களத்தின் இத்தகைய அடாவடிச் செயற்பாட்டுக்கு எதிர்ப்புத்தெரிவித்து தண்ணிமுறிப்புத் தமிழ் மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர்.

இவ்வாறான சூழலில் அண்மையில் வவுனியாவிற்கு விஜயமொன்றினை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குருந்தூர்மலை தொல்லியல் பிரதேசத்திற்கென, வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தொல்லியல் திணைக்களம் சுட்டிக்காட்டும் 78ஏக்கர் காணிகளுக்கு மேலதிகமாக ஐந்து ஏக்கர் காணிகள் மாத்திரமே எடுத்துக்கொள்ளப்படும் எனத் தெரிவித்திருந்தார்.

அதன்படி தொல்லியல் திணைக்களம் கோருகின்ற 78ஏக்கர் காணிகளுக்கு மேலதிகமாக, மேலும் ஐந்து ஏக்கர் காணிகளை அளவீடுசெய்து எடுத்துக்கொள்வதற்கு கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர், காணி உத்தியோகத்தர், மற்றும் நில அளவைத் திணைக்கள உத்தியோகத்தர்கள் ஆகியோர் குருந்தூர் மலைப்பகுதிக்கு வருகைதந்திருந்தனர்.

குறித்த நில அளவீட்டுக்கு தண்ணிமுறிப்பு பகுதி தமிள் மக்கள் தமது கடுமையான எதிர்ப்புக்களை வெளியிட்டிருந்தனர்.

குறிப்பாக கடந்த 1984ஆம் ஆண்டு காலப்பகுதியில் அசாதாரண நிலமை காரணமாக தாம் அப்பகுதியில் இருந்து வெளியேறியபோதும் இதுவரையில் தமது பகுதியில் மீள்குடியேற்றம் இடம்பெறவில்லை எனக் குற்றஞ்சாட்டினர்.

எனவே தொல்லியல் திணைக்களம் அபகரித்துள்ள தமது குடியிருப்பு மற்றும், விவசாயக்காணிகளை விடுவித்து, முதலில் அக்காணிகளில் தம்மை மீளக்குடியமர்த்துமாறு அங்கு வருகைதந்த கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் திருமதி. உமாமகள் மணிவண்ணனிடம் வலியுறுத்தியிருந்தனர்.

ஆனால் அதற்கு மறுப்புத் தெரிவித்த பாரதேசசெயலாளர், முதலில் ஐந்து ஏக்கர் காணிகள் தொல்லியல் திணைக்களத்திற்கு அளவீடு செய்து வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து தொல்லியல் திணைக்களம் அபகரித்து வைத்துள்ள தமிழ் மக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டு, வனவளத் திணைக்களத்திடம் வழங்கப்பட்ட பிற்பாடு, வனவளத் திணைக்களத்திடமிருந்து காணிகள் பெற்றுக்கொள்ளப்பட்டு மக்களுக்கு வழங்கப்படுமெனவும் பிரதேசசெலாளர் தெரிவித்தார்.

எனினும் பிரதேசசெயலரின் இக்கருத்தினை ஏற்கமறுத்த தமிழ் மக்கள், யுத்தம் மௌனிக்கப்பட்டு சுமார் 13வருடங்களுக்கு மேலாகின்றபோதும் தாம் தமது பகுதிகளில் இதுவரை மீள்குடியேற்றப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டியதுடன், இனியும் தாம் யாரையும் நம்பத் தயாரில்லை எனவும், முதலில் தமது காணிகளால் தம்மை மீளக்குடியிருத்துமாறும் வலியுறுத்தினர்.

இந்நிலையில் மக்களின் எதிர்ப்பநிலைமையாலும், தொல்லியல் திணைக்களம் அங்கு வருகைதராமையாலும் அளவீடு செய்வது தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாகத் தெரிவித்து பிரதேசசெயலாளர், காணி உத்தியோகத்தர்கள், நிலஅளவைத் திணைக்கள உத்தியோகத்தர்கள் ஆகியோர் அங்கிருந்து வெளியேறியிருந்தனர்.

மேலும் இவ்வார்ப்பாட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தமிழ் ஈழ விடுதலை  இயக்கத்தை(ரெலோ) சேர்ந்த  பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், கந்தையா சிவநேசன் உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.