சுகாதார அமைச்சர் மன்னார் பொது வைத்தியசாலைக்கு சென்று அங்கு காணப்படும் குறைப்பாடுகளை ஆராய வேண்டும். வைத்தியசாலையில் காணப்படும் வசதி குறைபாட்டால் மன்னார் மாவட்ட மக்கள் பல அசௌகரியங்களை எதிர்கொள்கிறார்கள். ஆகவே நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்குமாறு சுகாதார அமைச்சிடம் வலியுறுத்துகிறேன் என்று ரெலோவின் தலைவரும், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (6) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத் திட்டத்தின் சுகாதாரத்துறை மற்றும் ஊடகத்துறை அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
மன்னார் மாவட்டத்தின் பொது வைத்தியசாலையில் பல குறைபாடுகள் காணப்படுகின்றன. சுகாதார அமைச்சர் அல்லது பிரதி அமைச்சரை அந்த வைத்தியசாலைக்கு சென்று கள ஆய்வினை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கின்றேன்.
அங்கே ஆளணி பற்றாக்குறையுடனும், தளபாட பற்றாக்குறையும் காணப்படுகின்றன. வளங்களை கொண்ட வைத்தியசாலையாக இது இல்லை என்பதனையும் கூறுகின்றேன். அங்கே அனுமதிக்கப்பட்ட ஆளணி வைத்தியர்களின் எண்ணிக்கை 24 ஆக இருந்தாலும் ஒரு நிரந்தர வைத்திய நிபுணர்களும் இல்லை. தற்காலிக வைத்திய நிபுணர்களே உள்ளன. இதனால் தொடர்ச்சியாக தரமான சிகிச்சையை வழங்க முடியாமல் உள்ளது.
அத்துடன் ‘சீடி ஸ்கேன்’ இயந்திரம் மன்னார் மாவட்டத்தில் இல்லை. வவுனியா, யாழ்ப்பாணம், கிளிநொச்சி வைத்தியசாலைக்கு நோயாளர்கள் அனுப்பப்படுகின்றனர். அதற்கான கட்டிடங்கள் இருந்தாலும் அந்த இயந்திரம் இல்லை. இதனால் அதை மன்னாருக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை அமைச்சரிடம் முன்வைக்கின்றேன்.
இதேவேளை விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவும் அங்கு இல்லை. அத்துடன் அங்கு குழந்தைகள் வைத்திய நிபுணர் ஒரு மாதமாக இல்லை. வவுனியா அல்லது யாழ்ப்பாணத்திற்கு குழந்தைகள் அனுப்பப்படுகின்றனர். பிறந்த குழந்தைகள் மற்றும் தாய்மாரின் துன்பங்கள் வேதனைக்குரியதே. இது தொடர்பில் அமைச்சர் கவனம் செலுத்த வேண்டும். ஆளணி பற்றாக்குறை அங்கே இருப்பதால் அந்த வைத்தியசாலை மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாமல் இருக்கின்றது என்றார்.