தமிழ் ஈழ விடுதலை இயக்கம் 12 வது தேசிய மாநாட்டுப் பிரகடனம் 14 06 2026

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் 12 வது தேசிய மாநாடு இன்று வவுனியாவில் நடைபெற்று இருக்கும் வேளையில் கட்சியின் மாநாட்டுப் பிரகடனம் பின்வருமாறு

ஈழத் தமிழ் மக்களின் தாயக பூமியான வடக்கு கிழக்கு பிரதேசத்தை உள்ளடக்கிய எமது சுயநிர்ணய உரிமையை அனுபவிக்க கூடிய மீளப் பெறப்பட முடியாத பூரண அதிகாரம் உடைய சமஸ்டி முறையிலான சுயாட்சி அலகொன்றை அரசியல் தீர்வாக பெற்றுக் கொள்வதற்காக தொடர்ந்து அரசியல் ரீதியாக சகல நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவும்

எமது மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட யுத்த குற்றங்கள் மனித உரிமை மீறல்கள் மற்றும் இனப்படுகொலை ஆகியவற்றுக்கான சர்வதேச நீதிப் பொறிமுறையை பெற்றுக் கொள்ளும் வரை உள்நாட்டு மற்றும் சர்வதேச சக்திகளோடு ஒன்றிணைந்து செயல்படவும்

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதிப் பொறிமுறையை பெற்றுக் கொள்வதற்கான சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவும்
எமது தாயக மண்ணில் அரச இயந்திரங்களினால் தொடர்ந்தும் திட்டமிட்டு ஆக்கிரமிக்கப்பட்ட மற்றும் ஆக்கிரமிக்கப்பட்டு வரும் காணிகளை மீட்கவும் மேலதிகமான அபகரிப்புகளை தடுக்கவும் தொடர்ந்து உரிய அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவும்

நிரந்தரமான அரசியல் தீர்வை பெற்றுக் கொள்ளும் வரையில் ஏற்கனவே அரசியல் யாப்பில் உள்ள மாகாண சபை முறைமையை முற்று முழுதாக நடைமுறைப்படுத்தவும் மாகாண சபை தேர்தல்களை விரைந்து நடத்த தொடர்ந்து அரசுக்கு அழுத்தம் கொடுக்கவும்

எமது மக்களின் நலிந்து போன பொருளாதாரத்தை மீளக் கட்டியமைக்கும் முகமாக, பலதரப்பட்ட முதலீடுகளின் ஊடாக எமது மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தக்கூடிய இனக்குடிப் பரம்பலை பேணக்கூடிய தற்சார்பு பொருளாதார கட்டமைப்பை உருவாக்குவதற்கான அனைத்து வேலை திட்டங்களையும் அர்ப்பணிப்புடன் செயல்படுத்தவும்

எமது சமுதாயத்தின் உள்ள அனைத்து தரத்தினரதும் வாழ்க்கை தரத்தினையும் சமூக மேம்பாட்டையும் பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில் நமது அரசியல் நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுக்கவும்

அனைத்து வேலை திட்டங்களையும் நடைமுறைச் சாத்தியமான வகையில் முன்னெடுப்பதற்கு பிராந்திய வல்லரசு நாடான இந்தியாவுடனான நமது உறவை தொடர்ந்து பேணிப் பாதுகாக்கவும மற்றைய சர்வதேச நேச சக்திகளை ஒருங்கிணைக்கவும் உரிய வேலைத்திட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுக்கவும்
தமிழ் தேசிய பரப்பில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும் சமூக அமைப்புகளையும் எமது பிரதான பலமாக விளங்குகின்ற புலம்பெயர் உறவுகளையும் ஒருங்கிணைத்து தமிழ் மக்களை ஒரு தேசமாக கட்டி எழுப்பும் அனைத்து வேலை திட்டங்களையும் அயராத முன்னெடுக்கவும்

இப் பிரகடனம் விதந்துரைக்கிறது.