உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்த பாகிஸ்தான்

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் இலங்கைக்கு முன்கூட்டியே பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்திருந்தமை தெரியவந்துள்ளது.

பாகிஸ்தானிய உளவுப் பிரிவினர் இந்த தாக்குதல் முயற்சி தொடர்பில் முன்கூட்டியே இலங்கைக்கு தகவல் வழங்கியிருந்தது என தெரிவிக்கப்படுகின்றது.

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் தொலைத்தொடர்பு வலையமைப்பினை ஒட்டுக் கேட்டதன் மூலம் திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில் பாகிஸ்தான் இவ்வாறு எச்சரிக்கை விடுத்திருந்தது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை தொடாபில் ஐ.எஸ். தீவிரவாதிகள் பேசிக் கொள்வதாக இலங்கை அதகாரிகளுக்கு பாகிஸ்தான் உளவுப் பிரிவு எச்சரிக்கை விடுத்திருந்தது என கூறப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இந்தியா தகவல்களை வழங்கியிருந்தது என முன்னதாக அறிவிக்கப்பட்ட நிலையில் பாகிஸ்தானும் தாக்குதல் குறித்து எச்சரித்திருந்தது என தற்போது செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

எரிபொருள் விலையேற்றம்: அமைச்சர் இராஜினாமா செய்ய வேண்டுமென SLPP வலியுறுத்தல்

எரிபொருள் விலையேற்றத்திற்கான பொறுப்பை ஏற்று விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் இராஜினாமா செய்ய வேண்டுமென ஆளுங்கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் வலியுறுத்தியுள்ளார்.

இத்தகைய நிலைமை ஏற்படக்கூடுமென்பதை அறிந்து, உரிய தருணத்தில் தேவையான தீர்மானங்களை எடுக்க விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் தவறியதன் காரணமாக அரசாங்கம் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பொருட்களை களஞ்சியப்படுத்தி வைத்து உள்ளவர்களுக்கான இணையத்தளம்!

சீனி, பால்மா, சோளம் நெல் மற்றும் அரிசி போன்றவற்றை களஞ்சியப்படுத்தி வைத்துள்ள இறக்குமதியாளர்கள், உற்பத்தியாளர்கள், களஞ்சிய உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் நுகர்வோர் விவகார அதிகார சபையின் www.caa.gov.lk என்ற இணையத்தளத்தில் பதிவு செய்துக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண இதனை தெரிவித்தார்.

மேலும், தமது கையிருப்புக்களின் விபரங்களை குறித்த இணையத்தளத்தில் புதுப்பித்துக் கொள்ள முடியும் எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

சீனி, பால்மா, சோளம், நெல் மற்றும் அரிசி போன்றவற்றை வைத்துள்ள நபர்கள் 7 நாட்களுக்குள் நுகர்வோர் விவகார அதிகார சபையில் பதிவு செய்துக் கொள்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சீனி, பால்மா, நெல் மற்றும் அரிசி போன்றவற்றை வைத்துள்ள நபர்கள் 7 நாட்களுக்குள் நுகர்வோர் விவகார அதிகார சபையில் பதிவு செய்துக் கொள்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் நேற்று (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்திருந்தார்.

மறைத்து வைக்கப்பட்டுள்ள அரசி மற்றும் நெல்லை வௌியில் கொண்டு வருவதற்காக இந்த விசேட வர்த்தமானி அறிவித்தல் விசேடமாக வௌியிடப்படவுள்ளதாக அமைச்சர் நேற்று தெரிவித்தார்.

மேலும், தமது அறுவடைகளை சேமித்து வைத்துள்ள விவசாயிகளுக்கு இந்த வர்த்தமானி அறிவித்தலின் விதிகள் பொருந்தாது என அமைச்சர் தெரிவித்தார்.

ஜீ.எஸ்.பி. யை இலங்கை இழந்தமைக்கான காரணத்தை வெளிப்படுத்தினார் ஹர்ஷ டி சில்வா

அரசாங்கத்தின் ஜனநாயகத்திற்குப் புறம்பான செயற்பாடுகள், நாட்டு மக்களின் உரிமைகளைப் புறக்கணித்தமை, தொடர்ச்சியான இராணுவமயமாக்கம் உள்ளிட்ட மோசமான பல செயற்பாடுகளின் விளைவாகவே இப்போது ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்பட்டுவந்த ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை இல்லாதுபோயுள்ளது.

இதன் விளைவாக எமது பொருளாதாரம் மேலும் நெருடிக்கடிகளுக்கு முகங்கொடுக்கவேண்டிய நிலையேற்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

இலங்கை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கும் தீர்மானத்தினால் நாட்டிற்கு எத்தகைய பாதிப்புக்கள் ஏற்படும் என்று வினவியபோதே அவர் இவ்வாறு பதிலளித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது,

ஏற்கனவே பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருந்த எமது நாடு, நேற்று முன்தினம் ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தினால் மேலும் பாரிய சிக்கல்களை எதிர்கொள்ளவுள்ளது. இலங்கைக்கான ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையைத் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கான அந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக 628 வாக்குகள் கிடைக்கப்பெற்றிருக்கும் அதேவேளை எதிராக வெறுமனே 15 வாக்குகள் மாத்திரமே கிடைத்திருக்கின்றன. ஏற்கனவே கடந்த 2010 – 2016 வரையான காலப்பகுதியில் எமது நாட்டிற்கு அந்த வரிச்சலுகை கிடைக்கப்பெறவில்லை. தரவுகளின் அடிப்படையில் நோக்குகையில் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்கப்பட்டிருக்காத 2011 – 2016 வரையான காலப்பகுதியில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கான ஏற்றுமதியானது, வெறுமனே 6 சதவீதமாகவே காணப்பட்டது. எனினும் அவ்வரிச்சலுகை வழங்கப்பட்டதன் பின்னர் 2016 – 2019 வரையான காலப்பகுதியில் ஏற்றுமதிகள் 28 சதவீதமாக வளர்ச்சிபெற்றது.

எமது நாட்டிற்கு வழங்கப்படாமல் இருந்த ஜி.எஸ்.பி வரிச்சலுகையை மீளப்பெற்றுக்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகளுக்கு நானே புருசேல்ஸிற்கு சென்றிருந்தேன். ஏனெனில் அப்போதைய காலக்கட்டத்தில் பொருளாதார ரீதியான இராஜதந்திரப்பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும் பொறுப்பை மங்கள சமரவீர என்னிடம் கையளித்திருந்தார். அங்குசென்று பேச்சுவார்த்தைகளை நடத்தியதன் பின்னர், இலங்கைக்கு ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை வழங்குவது தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

அதன்போது எமக்கு ஆதரவாக 636 வாக்குகளும் எதிராக 119 வாக்குகளும் பதிவாகின. மக்களின் நலனை முன்னிறுத்தி செயற்படுவோம் என்றே அப்போது நாம் வாக்களித்தோம். அதன்படி அக்காலத்தில் ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் நிலைநாட்டுவதற்கான நல்லாட்சி அரசாங்கம் என்ற அடிப்படையில் நாம் புதிய சட்டங்களையும் கட்டமைப்புக்களையும் உருவாக்கினோம். காணாமல்போனோர் பற்றிய அலுவலக சட்டத்தையும் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தையும் உருவாக்கினோம்.

ஆனால் 2019 ஆம் ஆண்டின் பின்னர் என்ன நடந்தது? தற்போதைய அரசாங்கம் 20 ஆவது திருத்தத்தை நிறைவேற்றி ஜனநாயகத்தை முழுமையாகப் புறக்கணித்தது. நாடு படிப்படியாக இராணுவமயமாக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. இவ்வனைத்து விடயங்கள் தொடர்பிலும் ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றத்தில் பேசப்பட்டிருக்கிறது. பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் ஊடாக அரசாங்கம் தமது எதிர்ப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக அவர்கள் கரிசனை வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையைப் பெற்றுக்கொள்ள வேண்டுமெனின், மக்களின் உரிமைகளைப் புறக்கணிப்பதை அரசாங்கம் நிறுத்திக்கொள்ள வேண்டும். பிரஜைகளின் சுதந்திரத்தில் தலையீடு செய்வதை நிறுத்தவேண்டும். அதிகாரங்களை ஓரிடத்தில் குவித்து, படிப்படியாக இராணுவமயமாக்குவதைத் தவிர்க்க வேண்டும். ஆனால் எந்தவொரு சலுகைகளும் வாய்ப்புக்களும் இல்லாமல்போனாலும் பிரச்சினையில்லை. எனினும் எமது கைகளிலேயே அதிகாரம் இருக்கவேண்டும் என்ற எண்ணத்திலேயே அரசாங்கம் செயற்பட்டுக்கொண்டிருக்கிறது. மக்களின் உரிமைகளை நிறைவேற்றும் பட்சத்தில் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை தானாகவே எமக்குக் கிடைக்கும். அந்தச் சலுகை இருப்பதென்பது தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து நாடு மீட்சிபெறுவதற்குப் பெரிதும் உதவும் என்றார்.

Posted in Uncategorized

வங்கியல்லா நிதியியல் நிறுவனங்களிடம் மத்திய வங்கி கோரிக்கை!

கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றின் மூன்றாம் அலை காரணமாக உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகளின் மற்றும் சிறப்பியல்பு வாய்ந்த குத்தகைக்கு விடும் கம்பனிகளின் கடன்பெறுநர்கள் எதிர்கொண்டுள்ள இன்னல்களைப் பரிசீலனையில் கொண்டு, இலங்கை மத்திய வங்கியானது கொவிட்-19 இனால் பாதிக்கப்பட்ட வியாபாரங்களுக்கும் தனிப்பட்டவர்களுக்குமான சலுகைகளைப் பற்றிய 2021ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க சுற்றறிக்கையை வெளியிடுவதன் மூலம் பாதிக்கப்பட்ட கடன்பெறுநர்களுக்கு பின்வருமாறு சலுகைகளை வழங்குமாறு வங்கியல்லா நிதியியல் நிறுவனங்களைக் கோரியுள்ளது.

1. செயற்படுகின்ற கொடுகடன் வசதிகளுக்காக வழங்கப்பட்டுள்ள சலுகைகள்

(அ) 2021 மே 15 திகதி அன்று செயற்படுகின்ற வகையினுள் காணப்படுகின்ற கொடுகடன் வசதிகள் தொடர்பில், தகைமையுடைய கடன்பெறுநர்களின் நிதிசார்ந்த இன்னல்களைக் கருத்திற்கொண்டு (தொழில் இழப்பு, வருமானம்/ சம்பளங்கள் அல்லது விற்பனைகள் இழப்பு அல்லது குறைவு, வியாபாரத்தினை மூடுதல் போன்ற) 2021 ஆகஸ்ட் 31 வரையான காலப்பகுதின் போது விடயத்திற்கு விடயம் என்ற அடிப்படையில் மூலதனம், வட்டி அல்லது இரண்டினதும் அறவீட்டினைப் பிற்போடுதல்.

(ஆ) வங்கியல்லா நிதியியல் நிறுவனங்கள், பிற்போடப்பட்ட தொகை மீது மாத்திரம் அத்துடன் பிற்போடப்பட்ட காலப்பகுதிக்காக 2021 மே 19ஆம் திகதி அன்று உள்ளவாறான 364 நாட்கள் திறைசேரி உண்டியல்கள் ஏல வீதத்துடன் ஆண்டிற்கு 5.5 சதவீதத்தினைக் கூட்டிய வீதத்தினை (அதாவது ஆண்டிற்கு 10.68 சதவீதம்) விஞ்சாத வட்டி வீதத்தினை அறவிடலாம்.

(இ) மாற்றுவழியாக, வங்கியல்லா நிதியியல் நிறுவனங்கள், கடன் பெறுநரின் மீள்கொடுப்பனவு இயலளவினையும் அத்தகைய கடன் பெறுநர்களால் சமர்ப்பிக்கப்பட்ட ஏற்றுக்கொள்ளத்தக்க மீளெழுச்சித் திட்டத்தினையும் கருத்திற் கொண்டு ஏற்கனவே காணப்படுகின்ற கொடுகடன் வசதிகளை நீண்ட காலப்பகுதி ஒன்றுக்காக மறுசீரமைக்கலாம்.

2. செயற்படாக் கொடுகடன் வசதிகளுக்காக வழங்கப ;பட்டுள்ள சலுகைகள்

(அ) 2021 மே 15 திகதி அன்று செயற்படா வகையிலுள்ள கொடுகடன் வசதிகளை கடன்பெறுநரின் மீள்கொடுப்பனவு இயலளவினையும் ஏற்றுக்கொள்ளத்தக்க மீளெழுச்சித் திட்டத்தினையும் கருத்திற்கொண்டு நீண்ட காலப்பகுதி ஒன்றுக்காக மீள் அட்டவணைப்படுத்தல். (ஆ) வங்கியல்லா நிதியியல் நிறுவனங்கள், 2020 ஏப்ரல் 01ஆம் திகதி அன்று அல்லது அதற்குப் பின்னர் செயற்பாடற்றவையாக வகைப்படுத்தப்பட்டுள்ள கொடுகடன் வசதிகளுக்கு எதிரான அனைத்து அறவீட்டு நடவடிக்கைகளையும் இடைநிறுத்தல் வேண்டும்.

3. ஏனைய சலுகைகள் (அ) வங்கியல்லா நிதியியல் நிறுவனங்கள், வெளிப்படையாகப் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்காக 2021 ஜூன் 30 வரையான காலப்பகுதியின் போது கடன் அட்டைகள் அத்துடன் வேறு கொடுகடன் வசதிகள் மீதான தாமதக் கொடுப்பனவுக் கட்டணத்தினை நிறுத்தல் வேண்டும்.

(ஆ) தற்போது முன்னெடுக்கப்படுகின்ற பயணத் தடைகள் காரணமாகப் பாதிக்கப்பட்ட கடன்பெறுநர்களிடம் இருந்து கடன் மீள்கொடுப்பனவுகளை ஒரு சில நாட்களினால் (உயர்ந்தபட்சம் 10 வேலை நாட்கள்) தாமதிக்குமாறு விடுக்கப்படும் கோரிக்கைகளை அத்தகைய தாமதத்திற்கு ஏதேனும் மேலதிக வட்டியை அல்லது வேறு கட்டணங்களை அறவிடாது பரிசீலனையிற் கொள்ளுதல்.

(இ) தற்போது காணப்படும் கொடுகடன் வதியினைப்/ வசதிகளைப் பிற்போடுவதற்கான அல்லது மறுசீரமைப்பதற் கான தெரிவிற்குப் பதிலாக 2021 ஆகஸ்ட் 31 அன்று அல்லது அதற்கு முன்னா் அவர்களது தற்போதைய கொடுகடன் வசதிகளைத் தீர்ப்பனவு செய்வதற்கு கடன் பெறுனர் ஒருவர் அவரது விருப்பத்தினை வெளிப்படுத்துகின்ற விடத்து வங்கியல்லா நிதியியல் நிறுவனங்கள், தகைமையுடைய கடன் பெறுநர்களிடம் இருந்து ஏதேனும் முன்கூட்டிய தீர்ப்பனவுக் கட்டணத்தை அறிவிடலாகாது.

(ஈ) வங்கியல்லா நிதியியல் நிறுவனங்கள் கொடுகடன் தகவல் பணியகத்தின் பாதகமானப் பதிவினை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு இத்திட்டத்தின் கீழ் தகைமையுடைய கடன் பெறுநர்களிடமிருந்து கிடைக்கும் கடன் விண்ணப்பங்களை நிராகரித்தலாகாது.

4. கோரிக்கையினைச் சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி

சலுகைத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்புகின்ற தகைமையுடைய கடன்பெறுநர்கள், 2021 ஜூலை 15 அன்று அல்லது அதற்கு முன்னர் வங்கியல்லா நிதியியல் நிறுவனங்களின் தொடர்புடைய கிளைக்கு எழுத்தில் அல்லது இலத்திரனியல் வாயிலாக கோரிக்கை ஒன்றினை முன்வைப்பதற்கு வேண்டப்படுகின்றனர்.

இது தொடர்பில் வங்கியல்லா நிதியியல் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட 2021ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க விரிவான சுற்றறிக்கை இலங்கை மத்திய வங்கியின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. https://www.cbsl.gov.lk/en/laws/directions-circulars-guidelines-for-non-banks. பொதுமக்கள், சுற்றறிக்கை தொடர்பான மேலதிகத் தகவல்களை 011-2477000, 011-2477966 என்ற தொலைபேசி இலக்கங்கள் ஊடாக இலங்கை மத்திய வங்கியில் தாபிக்கப்பட்டுள்ள அழைப்பு நிலையத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும். .

Posted in Uncategorized

கிழக்கில் உர உற்பத்திக்கு விரைவான திட்டம்

உரங்களை உற்பத்தி செய்வதற்கான விரைவான திட்டத்தைத் தயாரிக்குமாறு, கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களுக்கும் மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் அறிவுறுத்தினார்.

ஏற்கெனவே உரங்களை உற்பத்தி செய்து வரும் உள்ளூராட்சி மன்றங்களிடம் இந்தச் செயல்முறையை மேம்படுத்தத் தேவையான திட்டங்களை சமர்ப்பிக்குமாறும் ஆளுநர் கேட்டுக்கொண்டார்.

இதற்கிடையில், குப்பை சேகரிப்பு குறைவாக உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் உரங்களை உற்பத்தி செய்ய மாற்று முறைகள் பயன்படுத்தப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

மேலும், மாகாண விவசாய சேவைகள் பணிப்பாளர், மாகாணத்தில் உள்ள ஒவ்வொரு விவசாய சமுதாயத்துக்கும் தங்களுக்குத் தேவையான உரங்களை உற்பத்தி செய்வதற்கான சிறப்புத் திட்டங்களைத் தயாரிக்குமாறு பணிக்கப்பட்டனர்.

பயணக் கட்டுப்பாட்டிற்கு மத்தியிலும் சந்நிதியான் ஆச்சிரமத்தில் ஓயாமல் தொடரும் அன்னதானப் பணி

அன்னதானக் கந்தன் எனப் போற்றிச் சிறப்பிக்கப்படும் வரலாற்றுச் சிறப்பு மிக்க தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச் சந்நிதி ஆலயச் சூழலில் நீண்டகாலமாகப் பல்வேறு சமய, சமூகப் பணிகளை மேற்கொண்டு வரும் சந்நிதியான் ஆச்சிரம நிர்வாகம் கொரோனாத் தொற்றுப் பரவல் காரணமாக அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாட்டிற்கு மத்தியிலும் அன்னதானப் பணியை ஓயாமல் தொடர்ந்து வருகிறது.

தற்போதைய நிலையிலும் பராமரிக்க யாருமின்றி, உற்றவர்களின் அன்பு இன்றி சந்நிதியான் ஆலயச் சூழலில் தங்கியுள்ள 50 இற்கும் மேற்பட்ட வயது முதிர்ந்தவர்கள் தினமும் சந்நிதியான் ஆச்சிரமத்திற்குச் சென்று தங்கள் பசிப் பிணியைப் போக்கி வருகின்றனர். அத்துடன் அயற் பகுதிகளிலிருந்தும் வறியநிலையிலுள்ள பலரும் தினமும் ஆச்சிரமத்தை நாடிச் சென்று தமது பசிப் பிணியைப் போக்கிவரும் நிலையில் அவர்களின் நன்மை கருதி இந்த இக்கட்டான சூழலிலும் சந்நிதியான் ஆச்சிரம நிர்வாகம் அன்னதானப் பணியைத் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகிறது.

அதுமாத்திரமல்லாமல் தற்போதைய அசாதாரண நிலையைக் கருத்திற் கொண்டு கொரோனாத் தொற்றால் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்கள், பயணக் கட்டுப்பாட்டால் வாழ்வாதாரத்தை இழந்த பல குடும்பங்களுக்கும் தொடர்ச்சியான உதவிகள் சந்நிதியான் ஆச்சிரம நிர்வாகத்தால் மேற்படி ஆச்சிரமத்தில் வைத்தும், வீடுகள் தேடிச் சென்றும் வழங்கப்பட்டு வருகிறது. அதுமாத்திரமன்றித் தற்போதைய சூழலில் ஆச்சிரமத்தை தேடிவரும் உதவிக் கோரிக்கைகளும் பரிசீலிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

சந்நிதி முருகப் பெருமானின் திருவருளுடன் எளிமையின் உருவமாக விளங்கும் சந்நிதியான் ஆச்சிரம நிர்வாகி மேற்படி பணிகளையெல்லாம் முன்னின்று நெறிப்படுத்தி வழிநடாத்தி வருகிறார்.

கொடிதிலும் கொடிது பசிப் பிணி. அந்தக் கொடிய பசிப் பிணியைப் போக்கும் வகையில் சந்நிதியான் ஆச்சிரம நிர்வாகம் தொடர்ச்சியாக அன்னதானப் பணியை மேற்கொண்டு வருவதுடன் காலத்தின் தேவையறிந்து சமூகப் பணிகளையும் மேற்கொண்டு வருவது பாராட்டுதற்குரியது.

அந்தவகையில் தற்போதைய பயணக் கட்டுப்பாட்டிற்கு மத்தியிலும் மேற்படி ஆச்சிரமத்தின் அன்னதானப் பணி மூலம் தினமும் பயன்பெற்று வரும் மூத்தோர்கள் தமது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டதுடன், சந்நிதியான் ஆச்சிரம நிர்வாகத்துக்குத் தமது நன்றிகளையும் வெளிப்படுத்தினர்.

Posted in Uncategorized

பயணத் தடை காலம் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை நீடிப்பு

தற்போது நாட்டில் அமுலில் உள்ள பயணத் தடை எதிர்வரும் 14 ஆம் திகதி காலை 4 மணிக்கு தளர்த்தப்படாது என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, எதிர்வரும் 21 ஆம் திகதி அதிகாலை 4.00 மணி வரையில் பயணத் தடை காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், பயணத் தடை காலப்பகுதியினுள் அத்தியாவசிய சேவைகள் உள்ளிட்ட மேலும் சில சேவைகளுக்கு அனுமதியளிக்க தீர்மானித்துள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்தார்.

அதன்படி, ஆடைத் தொலிற்சாலைகள், முக்கிய கட்டுமான தளங்கள், வாரத் சந்தை, கரிம உர உற்பத்தி நடவடிக்கை மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்கு சுகாதார வழிகாட்டுதலின் கீழ் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், வங்கி நடவடிக்கைகள் மற்றும் பொருளாதார மத்திய நிலையங்களை திறக்கும் திகதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா மேலும் தெரிவித்தார்.

X-PRESS PEARL பேரழிவு: கோழிப் பண்ணையை நரியிடம் ஒப்படைக்கும் இலங்கை

X-PRESS PEARL கப்பலில் பாரிய எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளமையை செய்மதி படங்களில் காணக்கூடியதாக உள்ளதென பிரித்தானியாவின் Sky News செய்தி சேவை தெரிவித்துள்ளது.

எனினும் கப்பலில் எண்ணெய் கசிவு ஏற்படவில்லை என இலங்கை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

X-PRESS PEARL கப்பலில் தீ பற்றிய நாள் முதல் எண்ணெய் கசிவு அல்லது கழிவுகள் கலப்பதால் இலங்கை கடலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து நியூஸ்ஃபெஸ்ட் தொடர்ந்தும் கேள்வி எழுப்பி வருகின்றது.

இந்த கேள்விக்கு சமுத்திர பாதுகாப்பு அதிகார சபை உள்ளிட்ட அதிகாரிகளிடமிருந்து உரிய பதில் கிடைக்கவில்லை.

பிரித்தானியாவின் Sky News செய்திச் சேவை Planet Labs எனும் செய்மதி நிழற்பட சேவையிலிருந்து அண்மையில் பெற்றுக்கொண்ட சில நிழற்படங்களை பிரசுரித்து கப்பலில் பாரியளவில் எண்ணெய் கசிந்துள்ளதாக இன்று செய்தி வெளியிட்டது.

வௌ்ளி நிறத்தில் செய்மதி நிழற்படத்தில் காணப்படுகின்ற இந்த படலம் 100 மீட்டருக்கு மேல் பரவியுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது இலங்கையின் சமுத்திர சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய அழிவு என Sky News தெரிவித்துள்ளது.

இந்நிலையில், எண்ணெய் கசிவு ஏற்படவில்லை. நிறம் மாறிய நீர் மற்றும் நீரில் ஏற்பட்டுள்ள சிறு மாற்றங்களே செய்மதி மூலம் அடையாளம் காணப்படுகின்றது. இலங்கை விமானப் படை பதிவு செய்துள்ள நிழற்படங்களை நோக்குமிடத்து, கப்பலை சூழ நீரின் நிறம் மாறியுள்ளதை அவதானிக்க முடிகிறது. கொள்கலன் கழுவிச் செல்லப்படுவதாலேயே நீரின் நிறம் மாறியுள்ளது என மேற்கு அவுஸ்திரேலிய பல்கலைக்கழகத்தின் சமுத்திரவியல் விஞ்ஞானி பேராசிரியர் சரித்த பட்டியாரச்சி தெரிவித்தார்.

இந்நிலையில், கப்பல் மூழ்குவதற்கு காரணமான விடயங்கள் தொடர்பிலும் கவனம் திரும்பியுள்ளது.

சிங்கப்பூரில் தயாரிக்கப்பட்ட X-PRESS PEARL கொள்கலன் போக்குவரத்து கப்பலை 2021 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் சிங்கப்பூரின் X-Press Feeders நிறுவனம் சேவையில் இணைத்தது.

சிங்கப்பூர் கொடியுடன் கப்பல் சிங்கபூர், கொழும்பு, இந்தியா, கட்டார் மற்றும் துபாய் ஆகிய துறைமுகங்களுக்கு இடையே கொள்கலன் போக்குவரத்திற்காக பயன்படுத்தப்பட்டிருந்தது.

கப்பலில் நைட்ரிக் அமிலக் கசிவு ஏற்பட்டுள்ளதை கப்பல் பணியாளர்கள் மே மாதம் 11 ஆம் திகதி முதற்தடவையாக அறிந்தனர்.

அந்த சந்தர்ப்பத்தில் கப்பல் துபாயின் ஜபெல் அலியில் இருந்து கட்டாரின் ஹமாத் துறைமுகம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்தது.

கசிவு ஏற்பட்ட கொள்கலனை இறக்கி மீள ஏற்றுவது தொடர்பில் கப்பல் பணியாளர்கள் ஹமாத் துறைமுகத்திடம் கோரிக்கை முன்வைத்தாலும் நோன்புப் பெருநாள் காரணமாக துறைமுகத்தில் மட்டுப்படுத்தப்பட்டளவு ஊழியர்கள் கடமையாற்றியதால் அந்த கோரிக்கையை நிறைவேற்ற முடியாது என துறைமுக அதிகாரிகள் கப்பலுக்கு அறிவித்துள்ளனர்.

இந்தியாவின் ஹசீரா துறைமுகத்தில் அந்த கொள்கலனை இறக்குமாறு ஹமாட் துறைமுக பிரதிநிதிகள் கப்பலுக்கு அறிவித்திருந்ததாகவும் தெரியவருகிறது.

அந்த கப்பல் மே மாதம் 15 ஆம் திகதி ஹசீரா துறைமுகத்தை நெருங்கியது. இதன்போது அமிலக் கசிவு ஏற்பட்டுள்ள கொள்கலனை இறக்குவதற்கான அனுமதி கோரப்பட்டுள்ளது. நிழற்படங்களுடன் கூடிய விரிவான அறிக்கையுடன் ஹசீரா துறைமுக பிரதிநிதி அமிலக் கசிவு தொடர்பான தகவல்களை பெற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவல்களை ஆராய்ந்ததன் பின்னர் கொள்கலன் ஹசீரா துறைமுகத்தில் இறக்கப்பட்டால் துறைமுகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம் என துறைமுக பிரதிநிதி கப்பலுக்கும் கப்பல் நிறுவனத்திற்கும் அறிவித்ததாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கமைய, மே மாதம் 15 ஆம் திகதி கப்பல் ஹசீரா துறைமுகத்தில் இருந்து புறப்பட்டுள்ளதுடன், கொள்கலனில் இருந்து கசியும் இரசாயனத்தின் அளவு தொடர்பாக அவ்வப்போது கெப்டன் கப்பல் நிறுவனத்தை தெளிவுபடுத்தியுள்ளார்.

மே மாதம் 15 ஆம் திகதி ஹசீரா துறைமுகத்தில் இருந்து புறப்பட்டதன் பின்னர் கெப்டன் அனுப்பிய அறிவிப்பில், மணித்தியாலத்திற்கு 500 மில்லி லிட்டருக்கும் ஒரு லிட்டருக்கும் இடையிலான நைட்ரிக் அமிலம் கொள்கலனில் இருந்து கசிவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனிடையே, இந்து சமுத்திர பிராந்தியத்தில் ஏற்பட்ட சூறாவளி காரணமாக, பாதையை விட்டு விலகி கப்பல் ஆபிரிக்காவின் திசைக்கு செலுத்தப்பட்டு பின்னர் கொழும்பு துறைமுகத்தை நோக்கி செலுத்தப்பட்டுள்ளது.

இதன்போது, கெப்டன் துறைமுக நிறுவனத்திற்கு வழங்கிய அறிவிப்பில் மணித்தியாலத்திற்கு 0.5 லிட்டர் அமிலம் கசிவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

கப்பல் இலங்கையை அண்மித்த சந்தர்ப்பத்தில் கப்பலின் தாய் நிறுவன பிரதிநிதி இலங்கையிலுள்ள பிரதிநிதிக்கு கசிவு ஏற்பட்டுள்ள கொள்கலன் தொடர்பாக மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளார்.

மே மாதம் 19 ஆம் திகதி காலை 10.37-க்கு கப்பலின் கெப்டன் இலங்கையிலுள்ள பிரதிநிதிக்கு பிரதியிட்டு தாய் நிறுவனத்திற்கு அனுப்பிய மின்னஞ்சலில், பிரச்சினைக்குரிய கொள்கலனை கொழும்பு துறைமுகத்தில் அப்புறப்படுத்த வேண்டும் என அறிவித்திருந்தமை தெரியவந்துள்ளது.

அதே நாள் மாலை 4.45-க்கு கப்பலின் கெப்டன், அமிலக் கசிவு ஏற்பட்டுள்ள கொள்கலன் தொடர்பிலான பிரச்சினை குறித்து பரிமாறிய மின்னஞ்சல் தகவல்கள் அடங்கிய வலையமைப்பில் உள்நாட்டு முகவரையும் இணைத்துள்ளமை தெரியவந்துள்ளது.

ஹார்பர் மாஸ்டர் அலுவலகம் மூடப்பட்டுள்ளதால், மறுநாள் காலை வேளையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை தொடர்பில் அறிவிப்பதாக 19 ஆம் திகதி மாலை 4.57-க்கு கப்பலின் உள்நாட்டு பிரதிநிதி அதற்கு பதிலளித்துள்ளார்.

அன்றைய தினம் நள்ளிரவு வேளையில் கப்பல் கொழும்பு வெளிப்புற துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டதை அடுத்து சில மணித்தியாலங்களில், அதாவது 20 ஆம் திகதி அதிகாலை 2 மணியளவில் கப்பலிருந்து புகை வெளியேறுவதாக கெப்டன் துறைமுகத்திற்கு ரேடியோ செய்தியை அனுப்பியுள்ளார்.

எவ்வாறாயினும், இலங்கை அதிகாரிகள் கூறும் வகையில் கப்பலின் பிரச்சினை தொடர்பபாக கொழும்பு துறைமுக ஹார்பர் மாஸ்டர், 20 ஆம் திகதி முற்பகல் 10.19-க்கே மின்னஞ்சல் ஊடாக அறிந்துள்ளார்.

மின்னஞ்சல் ஊடாக இலங்கை பிரதிநிதிக்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலும், ரேடியோ தகவல் ஊடாக துறைமுகம் அறிந்திருந்தும் கப்பலின் அழிவை குறைத்துக்கொள்வதற்கு அல்லது கட்டுப்படுத்துவதற்கு சந்தர்ப்பம் இருக்கவில்லையா?

இது தொடர்பாக CID-யினர் விசாரணை நடத்துவதுடன் அவர்கள் அவ்வப்போது நீதிமன்றத்திற்கும் அறிக்கையிடுகின்றனர்.

கப்பலில் ஏற்பட்ட தீயினால் சமுத்திர சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பிற்காக நட்டஈடு பெறுவதற்கு இலங்கை எடுத்துள்ள நடவடிக்கை இன்னமும் சிக்கலானது.

கப்பலின் உரிமையாளர்களான X-Press Feeders நிறுவனம், சர்வதேச எரிபொருள் போக்குவரத்து கப்பல் உரிமையாளர்களின் சங்கம் மற்றும் OSR லிமிட்டட் ஆகிய நிறுவனங்களையும் இலங்கை அதிகாரிகளுடன் இணைத்து பாதிப்புகளை மதிப்பீடு செய்வதற்காக நியமித்துள்ளது.

இந்த நியமனத்தை இலங்கை அதிகாரிகளின்றி சிங்கப்பூர் நிறுவனமே மேற்கொண்டுள்ளது.

இலங்கையின் சமூத்திர சுற்றுச்சூழலை நிர்வகிப்பதற்கான சட்ட அதிகாரம் MEPA என்றழைக்கப்படுகின்ற சமுத்திர சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபைக்கே உள்ளது.

அவ்வாறெனில், கப்பலினால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்பை மதிப்பீடு செய்வதற்காக சர்வதேச நிறுவனங்களை நியமிக்கும் உரிமையும் MEPA நிறுவனத்திற்கேயுள்ளது.

எனினும், இலங்கை சார்பாக இந்த நடவடிக்கைகள் தொடர்பிலான பொறுப்பு வேறு நிறுவனத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதை காண முடியவில்லை.

X-PRESS PEARL கப்பலின் உரிமையாளர்கள் இந்த விபத்து தொடர்பில் தமது பிரதிநிதிகளையே நியமிக்க சந்தர்ப்பம் வழங்கியதன் மூலம் இலங்கை கோழிப் பண்ணையை நரியிடம் ஒப்படைப்பதற்கு நிகரான செயலை புரிகின்றது அல்லவா?

எரிபொருள் போக்குவரத்து கப்பல் உரிமையாளர்கள் சங்கம் மற்றும் OSR லிமிட்டட் ஆகியன கப்பல் உரிமையாளர்கள் மற்றும் எரிபொருள் நிறுவனங்களின் தேவைகளுக்காகவே ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

அவ்வாறெனில், இலங்கை கடலின் பாதுகாப்பு தொடர்பில் அவர்களுக்கு பொறுப்புள்ளதா என்ற சிக்கலும் எழுகிறது.

இந்த நிறுவனங்களின் பணிப்பாளர் சபைகளில் கப்பல் நிறுவன உரிமையாளர்கள், காப்புறுதி நிறுனங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஏனைய நிறுவன உரிமையாளர்களே அங்கம் வகிக்கின்றனர்.

இதற்கமைய, X-PRESS PEARL கப்பலின் உரிமையாளர்களே இவர்களை நியமித்துள்ளமை கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டிய விடயமல்லவா?

இதனிடையே, சமூத்திர சுற்றுச்சூழல் தொடர்ந்தும் அழிவை சந்தித்து வருகிறது. இன்றும் சில பகுதிகளில் கப்பலில் இருந்து கடலில் கலந்த பொருட்கள் கரையொதுங்கின.

யார் எவ்வாறு பொறுப்புக் கூற வேண்டியிருந்தாலும், யார் எவ்வாறு அனுகூலங்களைப் பெற்றாலும் எமது பெறுமதி மிக்க இயற்கை வளமே அழிவடைகின்றது.

நாட்டில் மேலும் 101 கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 2,011 ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்துள்ளது.

அதன் அடிப்படையில் மேலும் 101 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார்.

இலங்கையில் ஒரே நாளில் உறுதி செய்யப்பட்ட அதிகளவான மரணங்களின் எண்ணிக்கை இதுவாகும்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,011 ஆக அதிகரித்துள்ளது.