வடக்கு கடலில் கடலுணவுகளின் இனப்பெருக்கத்தினை அதிகரிப்பதற்கு நடவடிக்கை!

வடக்கு கடலில் கடலுணவுகளின் இனப்பெருக்கத்தினை அதிகரிப்பதற்காக கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அறிவுறுத்தலின் அடிப்படையில், இன்று(வெள்ளிக்கிழமை) விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடலுணவுகளின் இனப்பெருக்கத்திற்கு ஏதுவான கடல் பிரதேசங்களை அடையாளங்கண்டு, குறித்த பிரதேசத்தில் கைவிடப்பட்ட இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்துகளை இறக்கி விடுவதன் மூலம் மீன் இனங்களின் இனப்பெருக்கத்திற்கு ஏதுவான சூழலை உருவாக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

கடற்படையின் ஒத்துழைப்புடன் கடற்றொழில் திணைக்களத்தினால் வடக்கு கடலில் மேற்கொள்ளப்படும் குறித்த செயற்திட்டத்தின் முதற் கட்டத்தில் சுமார் 40 பேரூந்துகளை கடலில் இறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், முதலாவது தொகுதி பேரூந்துகளை ஏற்றிய கடற்படைக் கப்பல், அடையாளப்படுத்தப்பட்ட கடல் பகுதியை நோக்கிய தனது பயணத்தினை ஆரம்பித்துள்ளது.

இலங்கையில் பயங்கரவாத தடை சட்டத்தை ரத்து செய்யக்கோரி ஐரோப்பிய ஒன்றியத்தில் தீர்மானம்

இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டுமெனக் கோரி ஐக்கிய ஒன்றிய நாடாளுமன்றில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஸ்பெய்ன்-மொக்ரோ எல்லைப் பகுதி, ரஸ்யா மற்றும் இலங்கை விவகாரங்கள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும் என்ற தீர்மானத்திற்கு ஆதரவாக 628 வாக்குளும், எதிராக 15 வாக்களும் அளிக்கப்பட்டதுடன் 40 உறுப்பினர்கள் வாக்களிப்பில் பிரசன்னமாகவில்லை.

இலங்கையில் மனித உரிமை நிலைமைகள் மோசமடைந்து செல்வதாகவும் அண்மையில் ஐக்கிய நாடுகள் அமைப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் இது சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகவும் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டம் சிவிலியன் சந்தேக நபர்களை கைது செய்யவும் தடுத்து வைக்கவும் கூடிய அதிக அதிகாரங்களை வழங்குவது குறித்து அறிக்கையில் விமர்சிக்கப்பட்டுள்ளது.

இந்த பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் ஊடாக சித்திரவகைள் இடம்பெறுவதாகவும் பாலியல் துன்புறுத்தல்கள் இடம்பெறுவதாகவும், பலவந்த ஒப்புதல் வாக்குமூலங்கள் பெறப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்து தீவிரவாத எதிர்ப்பு சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் எனவும் இது சர்வதேச நியமங்களுக்கு அமைவானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2017ம் ஆண்டு இலங்கைக்கு மீளவும் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டம் வழங்கப்பட்டது.

பயங்கரவாத தடைச் சட்டத்தை பதிலீடு செய்தல், மனித உரிமை விவகாரங்கள் உள்ளிட்ட 27 சர்வதேச பிரகடனங்களை அமுல்படுத்தல் ஆகிய நிபந்தனைகளுக்கு உட்பட்டே இந்த சலுகை வழங்கப்பட்டது.

இலங்கையில் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கு அழுத்தம் கொடுப்பதற்கான ஓர் வழியாக இந்த சலுகைத் திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு தீர்மானம் நிறைவேற்றிய உறுப்பினர்கள் கோரியுள்ளனர்.

இலங்கைக்கு தற்காலிக அடிப்படையில் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் தி;ட்டத்தை இடைநிறுத்தக் கூடிய சாத்தியங்கள் உண்டா என்பதனை உன்னிப்பாக மதிப்பீடு செய்யுமாறும் கோரியுள்ளனர்.

Posted in Uncategorized

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு வைகோ அவசர கடிதம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ அவசர கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது, அன்புள்ள பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு, வணக்கம்.

தெற்கு ஆசியாவில், இந்தியப் பெருங்கடலில், இந்தியாவின் ஆளுமையை நிலை நிறுத்துவதற்கு, தமிழ் ஈழம் அமைந்தாக வேண்டிய தேவை ஏற்பட்டு இருக்கின்றது. அதற்கான சூழ்நிலைகளை, தங்களின் கவனத்திற்குக் கொண்டு வர விழைகின்றேன்.

கடந்த காலங்களில், இந்தியாவின் நம்பிக்கைக்கு உரிய நாடாக இலங்கை இருந்தது இல்லை. அண்டை நாடு என்கின்ற முறையில், இந்தியா இலங்கைக்குக் கூடுதல் முன்னுரிமை வழங்கினாலும் கூட, இக்கட்டான வேளைகளில், அவர்கள் இந்தியாவின் காலை வாரி விடுகின்றார்கள். தாங்கள் ஒரு சீனச் சார்பு நாடு என்பதை, அவர்கள் பலமுறை எடுத்துக் காட்டி இருக்கின்றார்கள்.

மகிந்த ராஜபக்ச, இலங்கைக் குடி அரசின் தலைவராகப் பொறுப்பு ஏற்பதற்கு, இந்தியா மறைமுக ஆதரவு அளித்தது. ஆட்சிப் பொறுப்பு ஏற்ற அவர், அம்பாந்தோட்டை துறைமுகத்தில், சீன நீர் மூழ்கிக் கப்பல் நுழைய ஒப்புதல் வழங்கினார். இந்தியப் பெருங்கடலில், முதன்முறையாக, சீன நீர் மூழ்கிக் கப்பல் நுழைந்தது. அவருக்கு அடுத்து ஆட்சிப் பொறுப்பு ஏற்ற மைத்திரிபால சிறிசேனா, மற்றொரு சீன நீர் மூழ்கிக் கப்பலை, அம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் நுழைய விட்டார்.

இலங்கைக்கு அளவுக்கு அதிகமான கடன் கொடுத்து, 99 ஆண்டுகள் குத்தகை என்ற பெயரில், அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா கைப்பற்றி விட்டது. இப்போது, ராஜபக்ச சகோதரர்களின் ஆட்சியில், இந்தியப் பெருங்கடலில் சீனமயமாக்கல் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

இலங்கை தலைநகர் கொழும்பில் ஒரு நிலப்பரப்பை, சீனாவுக்குக் கொடுத்து விட்டனர். இலங்கை நாடு முழுமையும், சீன உதவியுடன் நடைபெறுகின்ற கட்டுமானப் பணிகளில், ஐந்து இலட்சம் சீனத் தொழிலாளர்கள் பணிபுரிகின்றார்கள். அவர்களுள் ஒரு பகுதியினர், சீன உளவுத்துறையினர் என்பதில் ஐயம் இல்லை. அவர்களுக்காக, சீன மொழிப் பள்ளிகள், சீனக் கலை அமைப்புகள், சீனப் பயிற்சியாளர்களின் கராத்தே வகுப்புகள், இலங்கையில் தொடங்கப்பட்டுள்ளன.

தெருக்கள், தொடர் வண்டி நிலையங்கள், விடுதிகளின் பெயர்ப் பலகைகளில், சீன மொழி எழுத்துகள் எழுதப்பட்டு வருகின்றன. தமிழ் ஈழப் பகுதிகளில், அனலைத் தீவு, நெடுந்தீவு, நயினா தீவு ஆகிய பகுதிகளில் அமைய இருக்கின்ற சூரிய மின்விசைத் திட்டமும், சீனாவுக்குத் தரப்பட இருக்கின்றது.

வத்தலான் என்னும் சிற்றூரில், சிறுவர்களுக்கான பூங்காவை சீன முதலீட்டாளர்கள் வடிவமைத்து இருக்கின்றார்கள். பூங்காவின் நுழைவாயிலில், சீனர்களின் நெடும்பாம்பு (டிராகன்) சின்னத்தை வரைந்து இருக்கின்றார்கள்.

எனவே, இலங்கை நாடு சீனாவின் தளமாக மாறி வருகின்றது. இந்த நிலையில், இந்திய எல்லையை ஒட்டி இருக்கின்ற, தமிழ் ஈழம் மட்டுமே, இந்தியாவின் தளமாக இருக்க முடியும். கடந்த காலங்களில், இலங்கை சீனாவின் பக்கம் சாய்ந்த வேளைகளில், இலங்கையின் ஆட்சித்தலைமையை மாற்றும் அணுகுமுறையை இந்தியா கடைப்பிடித்தது.

ஆனால், இனி அந்த அணுகுமுறை வெற்றி பெறாது. லண்டன் கிங்ஸ் கல்லூரியில், அனைத்து நாடுகள் உறவு மற்றும் பாதுகாப்பு ஆய்வுத்துறைப் பேராசிரியராகப் பணிபுரிகின்ற, ஆற்றல்மிக்க எழுத்தாளர் ஹர்ஷ் வி. பந்த் (Harsh V. Pant), 29.01.2015 ஆம் நாள், இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏட்டில் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதியை இங்கே தருகின்றேன்.

Indian policymakers will be mistaken if they think a change of regime in Colombo, will lead to a dampening of Sino-Sri Lanka ties. China’s role is now firmly embedded in Sri Lanka-economically as well as geopolitically.

India will have to up it’s game, if it wants to retain it’s leverage in Colombo. -Harsh V. Pant, Professor in International Relations, Department of Defence Studies, King’s college, London.

இந்திய கொள்கை வகுப்பாளர்கள், இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த நினைத்தால், தவறாக முடியும்; அது சீன இலங்கை உறவுகளைச் சீர்குலைக்கும்; பொருளாதாரம் மற்றும் புவிசார் அடிப்படையில், இலங்கையில் இப்போது சீனாவின் பங்கு உறுதியாகி இருக்கின்றது.

கொழும்பில் தன் செல்வாக்கை நிலைநிறுத்த இந்தியா விரும்பினால், ஒரு விளையாட்டு ஆடித்தான் ஆக வேண்டும். எனவே, தமிழ் ஈழத்தைக் காக்கவும், ஈழத்தமிழர்களின் இறையாண்மையை நிலைநாட்டவும் இந்தியா தவறினால், இந்தியப் பெருங்கடலில் ஆளுமையை இழக்க நேரிடும்.

சீனாவுக்கு இடம் தருவதாக ஆகி விடும். அவ்வாறு, தமிழ் ஈழத்திற்குத் துணையாக நின்றால், சிங்கள இலங்கை அரசு, சீனாவின் முழு ஆதரவு நாடு ஆகி விடும் என்பது தவறான கணிப்பு ஆகும். தமிழ் ஈழம் அமைந்தால், இலங்கை வலு இழந்து விடும்.

இந்தியாவைப் பகைத்துக் கொள்ள மாட்டார்கள். இலங்கை சீன ஆதரவு நாடு ஆகிவிடும் என்று, நமது அயல் உறவுக் கொள்கை வகுப்பாளர்கள் சிலர் கருதுவது, கால விரயம் ஆகும்.இப்போதும் கூட, இலங்கை, சீன ஆதரவு நாடு தான்.

இலங்கையில் சீனாவின் பிடி மேலும்மேலும் இறுக வாய்ப்பு அளிப்பது இந்தியாவுக்குக் கேடாகவே முடியும். எனவே, இந்தியப் பெருங்கடலில்,இந்தியாவின் உறுதிமிக்க ஆளுமை, அரசியல், பாதுகாப்பு, பொருளாதாரத் தளமாக, இறையாண்மை உள்ள தமிழ் ஈழம் தான் இருக்க முடியும். 2021 மே 18 ஆம் நாள், அமெரிக்க நாடாளுமன்றத்தின் (House of Representatives) 117 ஆவது கூட்டத்தொடரின் முதலாவது அமர்வில், நிறைவேற்றப்பட்ட 413 ஆவது தீர்மானம், ஈழத்தமிழர்களின் பிரச்சினைகளை விரிவாகப் பட்டியல் இட்டு, உலக நாடுகள் அவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்து இருக்கின்றது.

அந்த தீர்மானத்தின் சில பகுதிகளை, இங்கே மேற்கோள் காட்ட விழைகின்றேன். இலங்கையில் வாழ்கின்ற தமிழ் மக்கள் பல்லாயிரக்கணக்கில் இறந்தனர். காணாமல் போயினர்,புலம் பெயர்ந்து சென்றனர்,ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்குப் பிறகு, 2019 ஆம் ஆண்டு, ராஜபக்ச அரசு பொறுப்பு ஏற்றதை அடுத்து, மனித உரிமைகள் மன்றத்தின் 30-1 தீர்மானத்தில் இருந்து இலங்கை விலகிக் கொண்டது.

தமிழர்களின் மரபுவழித் தாயகமான, அந்த நாட்டின் வடகிழக்கு நிலப்பரப்பில், போரில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட இடங்களில், படைகள் குவிக்கப்பட்டு, இரண்டு பொதுமக்களுக்கு ஒரு படை வீரர் என்ற வகையில் நிற்கின்றனர்.

இலங்கையின் வடக்கு மாகாண சபை நிறைவேற்றிய தீர்மானத்தில், ஆயுதப் போராட்டத்தின்போது இழைக்கப்பட்ட போர்க் குற்றங்கள் குறித்து பன்னாட்டு விசாரணை கோரியும், வடக்கு-கிழக்கு நிலப்பரப்பில், ஐ.நா.மன்றத்தின் மேற்பார்வையில், பொது வாக்குப்பதிவு நடத்தி நிலையான தீர்வு காணக் கோருகின்றது.

இலங்கை அரசு, பல ஆண்டுகளாக, மாகாண சபைத் தேர்தல்களை நடத்தவில்லை; அதனால், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மட்டும் அன்றி, ஒட்டுமொத்தமாக இலங்கை நாடு முழுமையும், ஊர் ஆட்சி மன்றங்களைத் தேர்ந்து எடுக்கின்ற உரிமை, மக்களுக்கு மறுக்கப்பட்டு இருக்கின்றது.

2021 ஆம் ஆண்டு, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் வெளியிட்ட ஆய்வு அறிக்கையின்படி, கடந்த ஆண்டுகளில்,இலங்கை அரசு, (1) போர்க்குற்றங்கள் புரிந்தவர்களை உயர் பதவிகளில் அமர்த்தி இருக்கின்றது. (2) போர்க்குற்றம் இழைத்தவர் என அறிவிக்கப்பட்ட ஒருவருக்கு, பொது மன்னிப்பு வழங்கி இருக்கின்றது. (3) மக்கள் ஆட்சியை வலுப்படுத்துகின்ற சீர்திருத்த நடவடிக்கைகளை நிறுத்திக் கொண்டு, அனைத்து அதிகாரங்களையும், குடிஅரசின் தலைவரிடம் குவித்து இருக்கின்றது. (7) ஆட்சியாளர்களை எதிர்ப்பவர்களைக் கடத்துவதற்கும், துன்புறுத்துவதற்கும் பாதுகாப்புப் படையினரைப் பயன்படுத்துகின்றது.

மேலும், போர்க்குற்றம் இழைத்தவர்கள் எனக் குற்றம் சாட்டப்படுவோரை, நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கும், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களைச் செய்தவர்களுக்கு எதிரான சான்றுகளைத் திரட்டுகின்ற முயற்சிகளுக்கும், அரசு தடைகளை ஏற்படுத்துகின்றது.

சட்டத்தைப் புறந்தள்ளி, கைது செய்கின்றது. மேலும், வழக்கு ஒழிந்துபோன, மிகக் கடுமையான, வன்முறையாளர்களை அடக்குகின்ற சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, பன்னாட்டு நடைமுறைகளுக்கு எதிரான, திரும்பப் பெறுவதாக அரசே பலமுறை உறுதிமொழி அளித்தபடி திரும்பப் பெறாத, அடக்குமுறைச் சட்டங்களைப் பயன்படுத்துகின்றனர்.

மேலும், 2021 ஜனவரி மாதம், ஐ.நா. மன்றத்தின் மனித உரிமைகள் ஆணையர் மிச்சேல் பேச்சலெட் குறிப்பிட்டபடி, தேசிய மட்டத்தில், பொறுப்பு உணர்வை முன்னெடுத்துச் செல்ல, அரசாங்கத்தின் இயலாமை மற்றும் விருப்பம் இன்மையைக் கருத்தில் கொண்டு, பன்னாட்டுக் குற்றங்களுக்கான நீதி கிடைப்பதை உறுதி செய்வதற்காக, பன்னாட்டு அளவில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய வேளை இது.

ஆயுதப் போரின் போதும், அதைத் தொடர்ந்தும், காணாமல் போனவர்களின் குடும்பத்தினருக்கு, தங்களது அன்புக்கு உரியவர்கள் இருக்கின்ற இடம் குறித்து, இதுவரை எந்தத் தகவலும் இல்லை; போரின் முடிவில், அரசாங்கத்திடம் சரண் அடைந்தவர்கள் குறித்தும், இதுவரை எந்தப் பட்டியலும் வெளியிடப்படவில்லை.

எனவே, இந்த அவை (House of Representatives) நிறைவேற்றும் தீர்மானம்: 1. இலங்கையில் ஆயுதப் போர் முடிந்த 12 ஆம் ஆண்டு நினைவு நாளில், போரினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றது.

2. இறந்தவர்களின் நினைவை மதித்துப் போற்றுகின்றது; நல்லிணக்கம், மறுவாழ்வு, இழப்பு ஈடு மற்றும் சீர்திருத்தங்களுக்கான தேடலில், இலங்கையில் உள்ள அனைத்து சமூக மக்களுக்கும் உறுதுணையாக இருக்க உறுதி பூணுகின்றது.

3. மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஆதாரங்களைச் சேகரிப்பதற்கும், பாதுகாப்பதற்கும் முன்னுரிமை அளித்த, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மன்றத்தைப் பாராட்டுகின்றது; இந்த நடவடிக்கைகளில், இலங்கை அரசு தலையிடக் கூடாது.

4. இலங்கையில் உள்ள அனைத்து சமூகங்களிலும் நீதிக்காகப் போராடுகின்ற வழக்குஉரைஞர்கள், அரசாங்க பாதுகாப்புப் படையினரால் அச்சுறுத்தப்பட்டு வருகின்ற, காணாமல் போன தமிழர்களின் குடும்பத்தினரின் துணிச்சலைப் பாராட்டுகின்றது.

5. இலங்கையில் வரலாற்றுக் காலந்தொட்டு ஒடுக்கப்பட்டு வருகின்ற, வடக்கு, கிழக்கு நிலப்பரப்பில் வாழ்கின் மக்களின் அரசியல் உரிமைகள் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாக்கும்படி, பன்னாட்டு சமூகத்தை வலியுறுத்துகின்றது.

இன மோதல்களுக்கு வழிவகுத்த அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முழுமையான அரசியல் தீர்வை நோக்கி செயல்பட வேண்டும்.

7. இலங்கையில் போரின்போது நிகழ்ந்த கடுமையான குற்றங்களுக்குப் பொறுப்புக் கூறலுக்கான, நம்பகமான மற்றும் பயனுள்ள, பன்னாட்டுப் பொறிமுறையை நிறுவ, ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை, பாதுகாப்பு சபை, மனித உரிமைகள் மன்றம் ஆகியவற்றுடன் இணைந்து பணியாற்றுமாறு, அமெரிக்காவை வலியுறுத்துகின்றது.

இவ்வாறு, அமெரிக்க நாடாளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றி இருக்கின்றது. எனவே, உலக வரைபடத்தில், இஸ்ரேல் என்ற நாட்டை யூதர்கள் ஆக்கியது போல், வங்கதேசம் என்ற நாட்டை இந்தியா ஆக்கியது போல், தமிழ் ஈழம் என்ற நாட்டை அமைப்பதற்கு, ஐ.நா. மன்றத்தின் மேற்பார்வையில், உலகம் முழுமையும் பல நாடுகளில் பரவி வாழ்கின்ற ஈழத்தமிழர்களிடம் பொது வாக்குப்பதிவு நடத்துவதற்கான முயற்சிகளை, இந்திய ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன் என, வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.

பயணக்கட்டுப்பாடு 14ஆம் திகதி தளர்த்தப்படுவதாக அறிவிப்பு!

தற்போது நடைமுறையில் உள்ள பயணக்கட்டு ஜூன் 14 ஆம் திகதியின் பின்னர் தொடர்வதற்கு எந்த தீர்மானமும் இல்லை என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் பரவிவரும் பொய்யான செய்தி தொடர்பில் பதில் அளித்து அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தற்போது அமுலில் இருக்கும் பயணத் தடை எதிர்வரும் 14 ஆம் திகதி அதிகாலை 04.00 மணிக்கு தளர்த்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

‘சஜித் தான் எனது தலைவன்: ஆனால், நான்தான் சூழ்ச்சிக்காரன்’

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரான சஜித் பிரேமதாஸவை, எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அப்பதவிக்கு நியமிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன எனவும், அதில், ஐக்கிய மக்கள் மக்கள் சக்தியைச் சேர்ந்த பலரும் அங்கம் வகிக்கவுள்ளனர் எனவும் தகவல்கள் கசிந்திருந்தன. இது அரசியல் அரங்கில் பெரிதும் பேசப்படும் கருப்பொருளாக மாறிவிட்டது.

இந்நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தர்களில் ஒருவரான ஹரின் பெர்ணான்டோ எம்.பி, திடீரென ஊடகங்களிடம் சிக்கிக்கொண்டார். அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு கீழ் கண்டவாறு பதிலளித்தார்.

கேள்வி: எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ பங்கேற்காத கூட்டத்தில், எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாஸவே நியமிக்கப்படுவார் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது ஏன்?

பதில்: “அத்தீர்மானத்தை நிறைவேற்றியவர்களிடம்தான் கேட்கவேண்டும். உண்மையிலே​யே அது முட்டாள்தனமான செயற்பாடாகும்” என்றார்.

“எனது தலைவர் சஜித் பிரேமதாஸ, அவர்தான் எதிர்க்கட்சித் தலைவர் என்பதை மீண்டுமொரு தடவை உறுதிப்படுத்துவதற்கான விசேடமான காரணம் என்ன? என்பதை அதனை செய்தவர்களிடம்தான் கேட்கவேண்டும். நான் இருந்திருந்தால் கேட்டிருப்பேன். நான், இரண்டு மாதங்கள் விடுமுறையில் இருக்கின்றேன்” என்றார்.

“தேவையில்லாத பயத்தை தோற்றுவிப்பதற்கு யாருக்கு பைத்தியம் பிடித்திருந்தது என்பதை பார்க்கவேண்டும்” என்றார்.

கேள்வி: ரணிலுக்கு இன்னும் பயமிருக்கிறதா? ​ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து பலர் விலகிச்சென்றுவிடுவர் என நீங்கள் நினைக்கின்றீர்களா?

பதில்: அரசியல் நீண்ட அனுபவம் கொண்டவர், மூளைச்சாலியான ரணில் விக்கிரமசிங்கவை, எவ்விடத்தில் கண்டாலும் அவருடன் உரையாடுவேன். ஐ.ம.சத்தியை உருவாக்கியுள்ளோம். ஆனால், அங்கிங்குமிங்கும் பாயும் பைத்தியங்கள் ஐ.ம.சக்திக்குள்ளும் இருக்கக்கூடும் என்றார்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் ​ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஏனைய எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும். அதனூடாகவே ஆட்சியை கவிழ்க்கமுடியும். அவ்வாறில்லாது, அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது.

ஐக்கிய தேசியக் கட்சி தேவையில்லையென ஐக்கிய மக்கள் சக்தி நினைக்குமாயின் அது முட்டாள்தனமானது. அதேபோல, ஐக்கிய மக்கள் சக்தி தேவையில்லையென ஐக்கிய தேசியக் கட்சியும் நினைத்தால் அதுவும் முட்டாள் தனமானது.

இந்த அரசாங்கம் தோல்வியடைந்துவிட்டது. அதனை உறுதிசெய்யவேண்டுமாயின் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரளவேண்டும். மக்களுக்கு ஏதாவது செய்வேண்டுமாயின் புது நோக்கம் இருக்கவேண்டும் என்றார்.

கேள்வி: எதிர்க்கட்சி ஒன்றுமே செய்யவில்லை என மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

பதில்: “ஒன்றரை மாதங்கள் நான் இருக்கவில்லைதானே அதுதான்” என்றார்.

கேள்வி: நீங்கள் உட்பட, 15 பேர் ரணிலுடன் செல்லவிருப்பதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளாரே?

பதில்: இல்லை, அது முற்றிலும் பொய்யானது. ரணிலை நான் மதிப்பவன், அரசியலுக்கு அழைத்தார், எம்.பியாக்கினார். மாகாண சபை முதலமைச்சராக்கினார். அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக்கினார். அவருடைய காலத்தில்தான் இவையெல்லாம் நடந்தன. அவருடன் எந்தவொரு பிரச்சினையும் எனக்கில்லை என்றார்.

அவரை காணும் போதெல்லாம் கதைப்பேன், அவரை மதிப்பேன். அப்படியாக இருக்கும்போது, அரசியல் என்றவகையில், சஜித் பிரேமதாஸவுக்கு நான், எதிரானவன் அல்லன் என்றார்.

கேள்வி: உங்கள் கட்சிக்குள் சூழ்ச்சிகள் இடம்பெறுகின்றனவா?

பதில்: “சூழ்ச்சிகளை செய்வதாக இருந்தால், அதனை நான்தான் செய்வேன், அவ்வாறான சூழ்ச்சிகள் எவையும் இடம்பெறாது” என்றார்.

Posted in Uncategorized

முடக்கத்தால் வட-கிழக்கில் வருமானம் இழப்பு: முகவர்களின் மிரட்டல்களால் பலர் பாதிப்பு! ரெலோ மதுசுதன்

முடக்க காலங்களில் வருமானத்தை இழந்திருக்கும் நிலையில் லீசிங் கம்பனிகள் கட்டுப் பணத்தினைச் செலுத்த நிர்ப்பந்திப்பதாகவும், நுண்நிதி நிறுவனங்கள், வங்கிகள் கடன் தவணைப் பணத்தைச் செலுத்த நிர்ப்பந்திப்பதாகவும் பலர் முறைப்பாடளிக்கின்றனர். வடக்கு- கிழக்கில் பெரும் பிரச்சினையாக இது உருவெடுத்துள்ளது என நல்லூர் பிரதேச சபை உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் நல்லூர் தொகுதி அமைப்பாளருமான குமாரசாமி மதுசுதன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் இன்று வியாழக்கிழமை(10) அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வாகனங்களையும், சுயதொழில்களுக்காக கடன்,நுண்கடன் பெற்றவர்களுக்கும் அவர்களின் வருமானம் இல்லாத நிலையில் இந் நிறுவன முகவர்களின் மிரட்டல்களால் பலரும் தற்கொலை செய்து வருகின்றனர்.

பல முன்னாள் போராளிகளுக்கும் இதே நிலை தான். ஆகவே, அரசும்,சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் பயணக் கட்டுப்பாட்டுக் காலத்தில் இவ்வாறான நிதி மீள் அறவீடுகளுக்கு விலக்களிப்புச் செய்தலை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு லீசிங், கடன் பெற்றோர் எழுத்து மூலம் உங்கள் நிலைமையை வெளிப்படுத்தி உங்கள் நிறுவனம் அல்லது வங்கியிடம் அறிவியுங்கள் .அது ஆவணமாகும். அதையும் மீறித் தொந்தரவு புரிந்தால் நீங்கள் நேரடியாக முறைப்பாடளிக்கலாம். எமது சட்டத்தரணிகள் இவ் விடயத்தில் அதிக கரிசனை கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார் .

Posted in Uncategorized

அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படுவதை உறுதி செய்யவேண்டியது இலங்கை அரசாங்கத்தின் கடப்பாடு: சர்வதேச மன்னிப்புச்சபை

கொவிட் – 19 வைரஸ் பரவலின் மூன்றாவது அலையை எதிர்கொள்வதில் இலங்கை திணறிக்கொண்டிருக்கிறது. தடுப்பூசி வழங்கலின்போது உரிய செயற்திட்டமொன்று பின்பற்றப்படவில்லை என தெரிவித்திருக்கும் சர்வதேச மன்னிப்புச்சபை சுட்டிக்காட்டியிருக்கின்றது.

மேலும், சர்வதேச சட்டங்களின் பிரகாரம், நாட்டுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படுவதை உறுதிசெய்யவேண்டிய கடப்பாடு இலங்கை அரசாங்கத்திற்கு இருக்கிறது என்றும் மன்னிப்புச்சபை வலியுறுத்தியுள்ளது.

‘கொரோனா வைரஸ் பரவலின் மூன்றாவது அலைக்கு முகங்கொடுப்பதில் திணறும் இலங்கை’ என்ற தலைப்பில் சர்வதேச மன்னிப்புச்சபையால் இன்று வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

அண்மைக்காலத்தில் உலகளாவிய ரீதியில் அநேகமான நாடுகளில் முடக்கம் தளர்த்தப்பட்டு, தடுப்பூசி வழங்கப்படுவதுடன் இந்த நோய்த்தொற்றிலிருந்து அவை மீள்வதற்கான அறிகுறிகளும் தென்படுகின்றன. இருப்பினும் இந்த கொவிட் – 19 வைரஸ் பரவலால் இன்னமும் தெற்காசிய நாடுகள் பாரிய சவாலுக்கு முகங்கொடுத்து வருகின்றன. அந்த சவாலில் இருந்து விலகிச்செல்ல முடியாது என்பதை இலங்கை நிரூபித்திருக்கிறது. இலங்கையில் தடுப்பூசி வழங்கல் தொடர்பில் பின்பற்றப்படும் செயற்திட்டம், தேவையானளவு தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்வதில் காணப்படும் சவால் மற்றும் தடுப்பூசி வழங்கலின்போது தொற்றினால் உயர் அச்சுறுத்தல் காணப்படும் தரப்பினருக்கு முன்னுரிமை வழங்குவதில் காணப்படும் குறைபாடுகள் உள்ளடங்கலாகப் பல்வேறு விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தியிருக்கின்றோம்.

வெறுமனே 21 மில்லியன் சனத்தொகையைக் கொண்ட இலங்கையில் நாளொன்றுக்கு 2,500 இற்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்படும் தற்போதைய சூழ்நிலையில் இலங்கை அரசாங்கமும் சர்வதேச சமூகமும் பாரிய நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன. 23 மில்லியன் சனத்தொகையைக் கொண்ட தாய்வானில் நாளொன்றுக்கு சுமார் 218 தொற்றாளர்களே இனங்காணப்பட்டுவருவதுடன், 21 மில்லியன் சனத்தொகையைக் கொண்ட புர்கினா பாஸோவில் தற்போது நாளாந்தம் பதவாகும் நோயாளர்களின் எண்ணிக்கை பூச்சியம் என்ற நிலையை அடைந்துள்ளது.

சர்வதேச சட்டங்களின் பிரகாரம், எவ்வித வேறுபாடுகளுமின்றி நாட்டுமக்கள் அனைவரும் தரமான தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளும் இயலுமையைக் கொண்டிருப்பதை உறுதி செய்யவேண்டிய கடப்பாட்டை இலங்கை அரசாங்கம் கொண்டிருக்கிறது. கடந்த வருடத்தொடக்கத்தில் ஆரம்பமான இந்த வைரஸ் பரவலால் தற்போதுவரை (இன்றைய தினம் வரை) இலங்கையில் 213,396 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருப்பதுடன் 1,843 பேர் அதனால் உயிரிழந்திருக்கின்றார்கள். தமிழ், சிங்களப்புது வருடத்தின் பின்னர் கடந்த ஏப்ரல் மாதத்தில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் அலையொன்று உருவாகலாம் என்று இலங்கையின் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரித்திருந்தது. இந்நிலையில் இலங்கையின் தடுப்பூசி வழங்கல் நடவடிக்கை முறையான திட்டமிடலின்றி முன்னெடுக்கப்படுவதுடன் தடுப்பூசி அனைவருக்கும் கிடைப்பதை உறுதி செய்வதிலும் அரசாங்கம் சவால்களை எதிர்கொண்டுள்ளது.

‘அயல்நாட்டிற்கு முதலிடம்’ கொள்கையின்கீழ் இந்தியாவினால் 500,000 அஸ்ரா செனேகா தடுப்பூசிகள் வழங்கப்பட்டதன் பின்னர், கடந்த ஜனவரி 29 ஆம் திகதியிலிருந்தே இலங்கை அதன் தடுப்பூசி வழங்கல் செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்த ஆரம்பித்தது. அந்தத் தடுப்பூசிகள் கொவிட் – 19 தடுப்பு நடவடிக்கைகளில் பணியாற்றும் சுகாதாரத்துறை ஊழியர்கள், பொலிஸார் மற்றும் முப்படையினருக்கு வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து பெப்ரவரிமாத இறுதியில் இரண்டாவது தொகுதி தடுப்பூசிகள் இந்தியாவிலிருந்து இலங்கையை வந்தடைந்தன. மேலும் 52.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியில் 10 மில்லியன் அஸ்ரா செனேகா தடுப்பூசிகளை சீரம் நிறுவனத்திடமிருந்து பெறுவதற்காக இலங்கை மருந்தாக்கக்கூட்டுத்தாபனம் பதிவுசெய்திருந்தபோதிலும், அது கிடைக்கப்பெறுவதில் தாமதமேற்பட்டது.

அதன் தாமதத்தைத் தொடர்ந்து சினோபாம் மற்றும் ஸ்புட்னிக் தடுப்பூசிகளைப் பெறுவதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் ஆரம்பித்தது. அதேவேளை கொவெக்ஸ் திட்டத்தின் கீழ் 264,000 அஸ்ரா செனேகா தடுப்பூசிகள் கடந்த மார்ச் மாதம் 7 ஆம் திகதி இலங்கையிடம் கையளிக்கப்பட்டன. இந்நிலையில் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள தரவுகளின்படி மொத்தமாக 925,242 பேர் அஸ்ரா செனேகா முதலாம்கட்டத் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். அதேவேளை தற்போதுவரை அவர்களில் 353,789 பேர் மாத்திரமே இரண்டாம்கட்டத் தடுப்பூசியையும் பெற்றிருக்கிறார்கள். மேலும் 1,033,028 பேர் சினோபாம் முதலாம்கட்டத் தடுப்பூசியைப் பெற்றிருப்பதுடன் அவர்களில் 166 பேர் இரண்டாம்கட்டத் தடுப்பூசியையும் பெற்றிருக்கிறார்கள்.

அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்யக்கூடியவாறான கொள்கைகளின் அடிப்படையில் இலங்கையானது தேசிய ரீதியான தடுப்பூசி வழங்கல் செயற்திட்டமொன்றைத் தயாரிக்கவேண்டும். இந்த நடைமுறை தொடர்பான தகவல்கள் உரியவாறு பொதுமக்களைச் சென்றடைவது அவசியம் என்பதுடன், இதில் முழுமையான வெளிப்படைத்தன்மை பேணப்பட வேண்டும். இந்தத் திட்டமானது எவ்விதத்திலும் பாரபட்சமானதாகவோ அல்லது எந்தவொரு தரப்பினரையேனும் ஒதுக்கும் வகையிலோ அமையக்ககூடாது. மேலும் நாட்டுமக்கள் அனைவருக்கும் தேவையான தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் .

Posted in Uncategorized

ஐ.நா பொதுச்சபையின் தலைவராக அப்துல்லா ஷாஹிட் தெரிவு

மாலைதீவுகளின் வௌியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா ஷாஹிட், 76 ஆவது ஐ.நா பொதுச்சபையின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

193 உறுப்பினர்களை கொண்ட ஐ.நா பொதுச்சபையில் தலைவர் தெரிவுக்காக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 143 வாக்குகளை பெற்று அவர் வெற்றி பெற்றுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆப்கானிஸ்தானின் முன்னாள் வௌியுறவுத்துறை அமைச்சர், டொக்டர் ட்சல்மாலி ரசோல் 48 வாக்குகளை மாத்திரம் பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்தநிலையில், மாலைதீவுகளின் வௌியுறவுத்துறை அமைச்சரின் புதிய நியமனத்திற்கு இந்திய அரசாங்கம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.

இலங்கை மீது மீள அழுத்தம் கொடுக்கத் தொடங்கியதா அமெரிக்கா? – பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்!

அமெரிக்க இலங்கை உறவில் மீண்டுமொரு நெருக்கடி ஆரம்பித்திருக்கின்றதென ஊடகங்களின் தகவல்கள் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. அமெரிக்க காங்கிரஸ் பிரதிநிதிகள் சபையில் இலங்கை தமிழர் தொடர்பாக முன்வைக்கப்பட்ட தீர்மானமே அத்தகைய பதட்டத்துக்கும் குழப்பத்துக்கும் காரணமாக தெரிகிறது. இலங்கையின் அமெரிக்காவுக்கான தூதுவர் ரவிநாத் ஆரியசிங்க முன்னெடுக்கும் நகர்வுகள் இலங்கை வெளிவிவகார அமைச்சு பதட்டத்தை எதிர்நோக்குகின்றது என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது. இத்தகைய குழப்பம் ஏன் ஏற்பட்டுள்ளது என்பதை தேடுவது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

முதலில் அமெரிக்க காங்கிரஸில் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானத்தின் சாரம்சத்தை நோக்குவோம். அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட பிரேரணையின் பிரகாரம் 2009 மே 18 போர் முடிவடைந்து 12 வருடங்கள் பூர்த்தியாகி உள்ள நிலையில் இறந்த உறவுகளை கௌரவித்தலும் மரியாதை செலுத்தலும் மற்றும் நீடித்த இலங்கை மக்களின் செழிப்பான எதிர்காலத்தை உறுதிப்படுத்துவதற்கான நியாயமான அரசியல் தீர்வை முன்வைப்பதற்கான நீதி பொறுப்புக்கூறல் நல்லிணக்கம், புனரமைப்பு, இழப்பீடு, மறுசீரமைப்புக்கான ஆதவை வெளிப்படுத்தல் என்பதை வலியுறுத்திய விடயமாக அமைந்துள்ளது. அதில் மிகப்பிரதானமாக விடுதலைப்புலிகளினை தமிழ் மக்களின் சுதந்திரத்திற்காக போராடிய ஓர் அமைப்பாக குறிப்பிட்டதோடு, வடக்கு – கிழக்கு தமிழரின் தாயகம் என்பதை அங்கீகரிக்கும் விதத்தில் முன்மொழிகளின் உளளடக்கம் அமைந்திருந்தது. இத்தகைய பிரேரணை அமெரிக்க வெளியுறவுக்குழுவின் அனுமதியை பெறும்பட்சத்தில் அமெரிக்க செனட்சபை ஏற்றுக்கொள்ளப்படும். அத்தகைய அங்கீகாரம் சாத்தியப்படுமாயின் அமெரிக்க வெளியுறவுக் கொள்கை வகுப்பில் இலங்கை தமிழ் விடயம் பிராந்திய ரீதியிலும் சர்வதேச மட்டத்திலும் பிரதான இடம்பெறும் அம்சமாக விளங்கும்.

இவ்வாறு இக்காலப்பகுதியில் அமெரிக்கா நடந்து கொண்டதுக்கு காரணங்களை புரிதல் அவசியமாகும். அதேநேரத்தில் கோவிட் தடுப்பூசி மற்றும் அதற்கான மருத்துவ உதவிகளை வழங்கும் விதத்தில் ஆசிய ஆபிரிக்க நாடுகளுக்கான மேற்கொண்டுவரும் அமெரிக்கா இலங்கையை அதில் இணைத்து கொண்டிருப்பதோடு இலங்கைக்கான மருத்தவ அவசர உதவிகளோடு விமானமொன்று இலங்கையை வந்தடைந்தது. USAID நிறுவனத்தினூடாக அத்தகைய உதவியை வழங்குவதாகவும் அமெரிக்க அறிவித்தது. அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்திக்கான நிறுவனமாகிய USAID இலங்கைக்கு அனுப்பியுள்ள அவசர உதவியுடன் 880 000 தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களையும் 1200 துடிப்பு ஒப்சி மீற்றர்களும் மற்றும் 200 செயற்கை சுவாசக்கருவிகளும், மற்றும் படுக்கைகளும் உள்ளடங்களாக பல மில்லியனுக்கான பெறுமானமுடைய உதவிகளை வழங்கியுள்ளது.

மேற்குறித்த இரு விடயங்களும் ஒன்றுக்கொன்று முரணானதாக அமைந்திருந்தாலும் USAID இனுடைய உதவிகள் தென்னாசிய நாடுகளையே அதிகம் இலக்கு வைத்ததாக அவதானிக்க முடிகிறது. USAID உதவியும் பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஸ் என்பனவற்றிற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டிருப்பதுடன் இவை அனைத்தும் சீனா சார்பு நாடுகள் என்ற அடிப்படையிலும் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி உலகளாவியரீதியில் தடுப்பூசி இராஜதந்திரத்தை (Vaccine Diplomacy) உருவாக்கியது என்றும் கருதுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. இதற்கு வலுவான இன்னொரு காரணி ஜூன்-06, 2021 அமெரிக்க உதவிகள் இலங்கைக்கு வந்த அன்றய தினத்தில் ஒரு மில்லியன் சினோபார்ம் தடுப்பூசியும் இலங்கையை வந்தடைந்துள்ளன. இத்தகைய இராஜதந்திர நகர்வை முதலில் தொடக்கிய நாடு இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது. எதுவாயினும் இலங்கை விடயத்தில் அமெரிக்காவின் நகர்வு தீவிரம் பெற ஆரம்பித்துள்ளது. இதற்கான காரணங்களை விளங்கி கொள்ளுதல் அவசியமாகிறது.

முதலாவது, வெளிப்படையாக பார்த்தால் சீன – இலங்கை உறவின் மீதான பதில் நடவடிக்கையாகவே தெரிகிறது. குறிப்பாக கொழுப்பு நகர சட்டமூலம் அதிக ஆபத்தை பிராந்திய மற்றும் சர்வதேச மட்டங்களில் அமெரிக்க , இந்திய நலக்களுக்கு பாதிப்பை ஏற்படத்தக் கூடியதென்பது மதிப்பீடாக உள்ளது. சீனாவின் இலங்கை மீதான நிரந்தரமான செல்வாக்கிகை தடுக்கும் விதத்தில் இத்தகைய நகர்வுகள் முன்னெடுக்கப்படுகிறது என்பது தெளிவாக தெரிகிறது.தற்போதைய அரசாங்கத்தின் வெளியுறவு சீனா சார்பானதாக அமைந்திருப்பதனால் அமெரிக்கா இந்தியா என்பன அதிருப்தி அடைந்துள்ளன.

இரண்டாவது, இலங்கை – சீன உறவு சீனாவின் பொருளாதார செழிப்பையும் அவ்வாறே ஒரே சுற்று ஒரே பாதை என்ற சீனாவின் வியூகத்தையும் வெற்றிகரமாக நகர்த்த உதவும் என்பது அவதானிக்க் கூடியதாக உள்ளது. இந்து சமுத்திரத்தின் மையத்தில் விளங்கும் இலங்கையுடனான உறவை, சீனாவின் வர்த்தக மார்க்கங்களுக்கு பெரும் உந்துதலான அமையும் என்றும் கருதப்படுகிறது. கொழும்பை மையப்படுத்தியே பிரித்தானியரும் பின்னர் அமெரிக்காவும் இந்து சமுத்திர பிராந்தியம் மீது பொருளாதார அரசியல் மற்றும் இராணுவ நலன்களை அடைந்திருந்தன. இலங்கையை இழத்தல் என்பது இந்துசமுத்திர இழப்பதற்கு சமனானது என்ற வாதம் பிரித்தானிய காலத்திலேயே உரையாடப்பட்டு வந்துள்ளது. தொழில்நுட்பங்கள் பாரிய அளவில் வளர்ந்த பின்பும் இலங்கையின் முக்கியத்தவம் அற்றுப்போகவில்லை. எனவே தான் இலங்கை – சீனா உறவு அமெரிக்க மற்றும் மேற்கு நலன்களை பாதகமான சூழலுக்கு கொண்டுசெல்லும் என அமெரிக்கர்கள் அச்சமடைகிறார்கள்.

மூன்றாவது, இலங்கை – சீனா உறவென்பது இந்தோ – பசுபிக் மூலோபாய திட்டமிடல்களை அதற்கான நகர்வுகளை நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது. காரணம் இந்தோ – பசுபிக் உபாயத்தின் முக்கிய நாடுகளில் ஒள்றான இந்தியா, இலங்கை – சீனா உறவினால் இரு கடலுக்குமான இணைப்பினை சாத்தியமற்றதாக்குவதோடு அத்தகைய உபாயம் முடிவுக்கு வரும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளது. அதாவது இந்தோ – பசுபிக் கடலை இணைக்கும் பிரதான நாடுகள் அனைத்தும் சீனாவின் ஒரே சுற்று ஒரே பாதைக்குள் இணங்கி செயற்படுகின்றது. அதனால் கொழும்பு துறைமுகம் அமெரிக்கா செல்வாக்கை இழக்கும் நிலை ஏற்படுமாயின் அதற்கு பதிலீடான நகர்வுகளை அமெரிக்கா முன்னெடுக்கும் என்பதையும் காங்கிரஸில் முன்வைக்கப்பட்ட தீர்மானம் உணர்த்துகின்றது.

நான்காவது, அமெரிக்க காங்கிரஸில் முன்வைக்கப்பட்ட உள்ளடக்கங்கள் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களாலோ அல்லது தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு பதிலீடாகவோ அமைந்திருக்கின்றது என்பதற்கு அப்பால் அமெரிக்க நலன்களை அடைவதற்கான உத்திகளாக அதன் உள்ளடக்கங்கள் காணப்படுகின்றது. விடுதலைப்புலிகளை தடைசெய்துள்ள அமெரிக்க மற்றும் அத்தகைய தடையை மீள மீள தொடரும் இந்தியாவுடன் நெருக்கமான உறவை பேணும் அமெரிக்கா இத்தகைய தீர்மானத்தை முன்வைத்தள்ளது என்பது அதன் அரசியல் பொருளாதார இராணுவ நலனுக்கானதேயாகும். அத்தகைய நலனை அமெரிக்க எட்டவதற்கு மேற்குறித்த இரு விடயங்களை வெறும் அரசியல் சுலோகமாக அன்றி நிரந்தரமான கோட்பாடாக ஆக்குவதற்கும் அமெரிக்கா தயாராகவே இருக்கும். இங்கு முக்கியம் அமெரிக்க நலன்களேயாகும்.

எனவே அமெரிக்காவின் நகர்வு அமெரிக்க நலனுக்கு உட்பட்டதென்பது உலகம் முழுவதும் கண்டுகொள்ளக்கூடிய ஒர் அம்சமாகும். எனினும் அத்தகைய நலன்களுக்குள் தமிழர்களுடைய அபிலாசைகளும் நலன்களும் பூர்த்திசெய்யக்கூடிய ஒரு வாய்ப்பினை ஏற்படுத்தி இருக்கிறது. அத்தகைய வாய்ப்பு சரியாக அடையாளம் காண்பதுவும் அதனை நோக்கி நகருவதும் இன்றைய தமிழரசியல் பரப்பில் அவசியமான பொறிமுறையாகும். மீளவும் அறிக்கைகளையும், வாதங்களையும் முன்வைப்பதை விடுத்து அமெரிக்காவின் தளர்ச்சியான போக்கினை அடையாளம் கண்டு தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வொன்றினை கண்டறிதல் அதற்கன நகர்வினை மேற்கொள்ளல் அவசியமானதொன்றாக உள்ளது.

பொதுஜன பெரமுனாவின் ஸ்தாபகரும், முன்னாள் பொருளாதார அமைச்சரும், தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை வகுப்பாளருமாகிய பசில் ராஜபக்ஷ அமெரிக்காவில் இருக்கும் போது இத்தகைய நகர்வுகள் மேற்கொள்ளப்படுவதென்பதும் கவனத்திற்கொள்ள வேண்டிய விடயமாகும். அவருடைய மருத்துவ தேவை மாத்திரமின்றி இலங்கையர்களின் மருத்துவ தேவையும், இலங்கை – சீனா உறவின் பிரதிபலிப்பும் காங்கிரஸ் தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதென்பது கவனிக்க வேண்டிய விடயமகும். இதேநேரம் இலங்கை, அமெரிக்காவிற்கான தூதரினூடாக அமெரிக்காவிற்கு முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கையில் இரு விடயங்கள் முதன்மை பெறுகிறது. ஒன்று, அமெரிக்க காங்கிரஸில் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானத்தினை நிறைவேற்றக்கூடாதென விண்ணப்பித்துள்ளது. இரண்டு, இலங்கை அரசாங்கம் ஜெனீவா தீரமானத்தை அடுத்து கடந்த 2021ஜனவரி மாதத்திலிருந்து அதற்கான செயலணிகளை உருவாக்கி செயற்பட்டுவருவதாகவும் அத்தகைய பணிகள் கோவிட் தொற்றினால் நெருக்கடிக்கு உள்ளாகி இருப்பதாக தெரிவத்துள்ளதுடன், பெரியளவில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சரும், அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவரும் இராஜதந்திர நடவடிக்கைகளை முன்னெடுத்திருப்பது சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயமாகும்.

எனவே இதனை அவதானிக்கும் போது, இலங்கை விடயத்தில் அமெரிக்கா மீளவும் அழுத்தம் கொடுக்க ஆரம்பித்துள்ளதாகவே தெரிகிறது. இதன்மூலம் தமிழ் மக்களின் நலன்களை அமெரிக்கா தனக்கு ஏற்ற வகையில் கையாள முயன்றிருப்பதையும் அதனை எதிர்கொள்வதற்கு தமிழ் தலைமைகள் தயாராக வேண்டுமெனவும் தற்போதைய அரசியலாக உள்ளது.

அருவி இணையத்துக்காக பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்

22ஆம் திகதி ரணில் நாடாளுமன்ற பிரவேசம்: 21ஆம் திகதி சஜித் தலைமையில் அவசர கலந்துரையாடல்!

எதிர்வரும் 22ஆம் திகதி ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமிசிங்க நாடாளுமன்ற பிரவேசம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் 21ஆம் திகதி சஜித் பிரேமதாஸ தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற குழு கூட்டம் அவசரமாக கூட்டப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி சார்பில் கிடைத்த ஒரே ஒரு தேசிய பட்டியல் ஆசனத்தினூடாக அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள தகவல் உறுதி செய்யப்பட்ட நாளில் இருந்து கொழும்பு அரசியல் பரபரப்பாகியுள்ளது.

ஆளும் கட்சி சந்தித்து வரும் உள்ளக – வெளியக நெருக்குவாரங்கள், அதனால் பௌத்த பேரினவாதிகள் தரப்பு மற்றும் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அரசு தொடர்பான அதிருப்தி அத்துடன் எதிர்க்கட்டிசிக்குள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் கருத்து முரண்பாடுகள் என்பவற்றை அடிப்படையாக கொண்டு ரணிலின் மீள் பிரவேசம் முக்கியம் பெறத்தொடங்கியுள்ளது.

ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றம் வரும் போது அவர்தான் எதிர்க்கட்சி தலைவர் என்ற கருத்தை ஆளும் கட்சியின் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்த கருத்து அரசியல் அரங்கை மேலும் சூடாக்கியுள்ளது.

இந்த பின்னணியில் தான் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ கொரோனா சிகிச்சை நிறைவு செய்யும் அதே நாளில் எதிர்வரும் ஜூன்-21 அன்று ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற குழு கூட்டத்தை அவசரமாக கூட்ட ஏற்பாடு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்போது நாட்டின் தற்போதைய நிலைமை மற்றும் எதிர்கால அரசியல் நடவடிக்கைககள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படவுள்ளதாக அந்த தகவல்கள் குறிப்பிடுகின்றன.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த திங்கட்கிழமை அந்த கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தலைமையில் கூடினர். இக்கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச காணொளி தொழில்நுட்பம் ஊடாக கலந்து கொண்டிருந்தார்.

இதன்போது எதிர்க்கட்சி தலைவருக்கு ஆதரவு வழங்கி நாடாளுமன்ற உறுப்பினர்கள் யோசனை ஒன்றை நிறைவேற்றியிருந்தனர்.

இதனையடுத்து அந்த விடயம் அரசியலில் பேசும் பொருளாக மாறியது.

கட்சியினுள் காணப்படும் நெருக்கடி நிலையால் இவ்வாறு யோசனை ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இவ்வாறான பின்னணியில் எதிர்வரும் 22ஆம் திகதி ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, அந்த கட்சிக்கு கிடைத்துள்ள தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளதாக கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதற்கு முன்னர் ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டம் ஒன்றும் இடம்பெறவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

இவ்வாறு ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் மீள் பிரவேசம் கொழும்பு அரசியலை பெரும் பரபரப்பாக மாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized