உலங்கு வானூர்திகளை கொள்வனவு செய்யவதை கை விட்டு கொரோனாவை பாருங்கள்: சஜித்

நாட்டில் கொரோனா பரவல் மீண்டும் தீவிரமடைந்து, பல இடங்களில் சிகிச்சை பெறுவது கடினமாக இருக்கின்ற சூழ்நிலையில் அரசாங்கம் ரஷ்யாவிடம் உலங்கு வானூர்திகளை கொள்வனவு செய்ய எடுக்கும் முயற்சி தொடர்பில் விசனம் வெளியிட்டுள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச.

மக்களுக்கு சிகிச்சையளிப்பதற்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் எனவும் ஹெலிகப்டர் கொள்வனவு தற்போது அவசியமற்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது போன்ற சூழ்நிலையில் அரசாங்கம் பணத்தை விரயப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

துறைமுக நகர சட்டமூலம் தொடர்பான விவாதம் ஒத்திவைப்பு

கொழும்பு துறைமுக நகர விசேட வர்த்தக ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு பாராளுமன்றத்திற்கு கிடைக்காமையால், நாளை (05) நடைபெறவிருந்த விவாதம் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த விடயத்தை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன உறுதிப்படுத்தினார்.

O/L, A/L பரீட்சைகளில் மாற்றம் தொடர்பான விஷேட அறிவிப்பு

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஆகிய இரண்டு பரீட்சைகளையும் நடத்தும் மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட மாற்றம் இவ்வாண்டு அமுல்படுத்தப்படமாட்டாது என கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

ஓகஸ்ட் மாதம் சாதாரண தர பரீட்சையையும், டிசம்பரில் உயர்தர பரீட்சையும் நடத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது.

இருப்பினும் இந்த மாற்றம் 2022 ஆண்டு அல்லது 2023 ஆம் ஆண்டே அமுல்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை 10 மற்றும் 11 ஆம் தரங்களுக்கான பாடத்திட்டத்தை ஒரு வருடமும் 09 மாதங்களுக்கு மட்டுப்படுத்தி மறுசீரமைக்க கல்வி அமைச்சர் முன்மொழிந்த யோசனைக்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது.

அதன்படி, அரச பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு எடுக்கும் காலத்தை குறைப்பதன் மூலம் குறுகிய காலத்தில் மாணவர்கள் முதல் பட்டப்படிப்பைப் பெறுவதற்கான வாய்ப்பு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழர் இதயபூமியை மகாவலி எல் வலயம் சிங்கள குடியேற்றங்களுக்கு உட்படுத்தி அபகரிக்க முயற்சி – ரெலோ இளைஞர் அணித் தலைவர் சபா குகதாஸ்

தமிழர் இதயபூமியை மகாவலி எல் வலயம் அபகரிக்க முயற்சி என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் இளைஞர் அணித் தலைவரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மகாவலி எல் வலயத்தின் மூலம் கபளீகரம் செய்ய முயற்சிக்கும் மத்திய அரசாங்கத்தின் முயற்சிக்கு வடக்கு மாகாண ஆளுநர் நிர்வாகம் உடன்படக் கூடாது அதனை தடுத்து நிறுத்த வேண்டும்.

தமிழர்கள் பூர்வீகமாக வாழ்ந்த பிரதேசங்களை சிங்கள குடியேற்றங்களுக்கு உட்படுத்தி தமிழர் தாயக கோட்பாட்டை உடைக்கும் பேரினவாத அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலை தடுத்து நிறுத்த தொடர்ந்து தமிழ் மக்கள் போராடி வரும் நிலையில் வடக்கு கிழக்கு இணைப்பை நிலத் தொடர்பு ரீதியாக இல்லாது ஒழிக்கும் இந்த மகாவலி எல் வலயம் திட்டமிட்ட ஒரு இனவழிப்பு என்பதை தெட்டத் தெளிவாக காட்டுகின்றது.

முல்லைத்தீவு மாவட்டம் தமிழர்களின் இதய பூமி அதனை அபகரிக்கும் பாரிய திட்டம் முதற்கட்டமாக மணலாறு பிரதேசம் வெலிஓயா என்ற பெயர்மாற்று சிங்கள குடியேற்றத்துடன் ஆரம்பமாகி தென்னமரவடி,கொக்குளாய்,கொக்குத் தொடுவாய்,கருநாட்டுக்கேணி,செம்மலை தண்ணீர் ஊற்று என பெரும் நிலப் பிரதேசங்களை உள்ளடக்கி 16 அதிகமான கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை கொண்ட ஒரு சிங்கள பிரதேச செயலகப் பிரிவை குறிவைத்து நகர்த்தப்படுகின்றது.

இப்பகுதியில் வாழ்ந்த தமிழர்கள் 1984 ஆண்டின் பின்னர் யுத்தத்தினால் இடம்பெயர ஆரம்பித்து 2010 வரை அகதிகளாக அவலங்களை அனுபவித்து மிகுந்த வறுமையில் தற்போது குடியேறி வாழும் போது போதிய உதவிகள் இன்றி துன்படுகின்றனர்.

வடக்கு மாகாணத்தில் 75000 இளைஞர் யுவதிகள் வேலைவாய்ப்பு இல்லாமல் பெரும் துயரங்களை அனுபவிக்கின்றனர்.

அவர்களுக்கான சுய தொழில் முயற்சிக்கு காணிகள் வழங்குவதன் மூலம் தொழில் வாய்ப்பு பிரச்சினைக்கு தீர்வு வழங்கலாம் அத்துடன் தற்சார்புப் பொருளாதாரத்தை மேம்படுத்தலாம்.

இதற்கு வடக்கு மாகாண ஆளுநர் நிர்வாகம் அரசாங்கத்திடம் திட்டங்களை முன் மொழிந்து இளைய தலைமுறையின் நல்வாழ்விற்கு உதவி புரிய வேண்டும்.

ஏற்கனவே புதிய தொழில் முயற்சியாளர்களுக்கு காணி வழங்க விண்ணப்பங்கள் கோரப்பட்டு விண்ணப்பித்தோர் எதிர்பார்த்து காத்திருக்கும் போது அவர்களுக்கான தீர்வையாவது இதன் ஊடாக தீர்க்க நடவடிக்கை எடுங்கள்.

வடக்கு மாகாண ஆளுநர் நிர்வாகம் நியாயமற்ற குடியேற்ற திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்காது தமிழர்களின் இருப்பை பாதுகாக்க நீதியாக நடந்து கொள்ள வேண்டும்.

Posted in Uncategorized

ஊடகவியலாளர்கள் மீதான வன்முறைகளை விசாரித்து குற்றவாளிகளை சட்டத்தின் முன்நிறுத்துங்கள் – சர்வதேச மன்னிப்புச்சபை

ஊடகங்களின் கருத்துச்சுதந்திரத்தை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது. ஊடகவியலாளர்கள் மீதான வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் முழுமையான விசாரணைகளை நடத்தி, குற்றவாளிகளை சட்டத்தின் முன்நிறுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச்சபை வலியுறுத்தியுள்ளது.

சர்வதேச பத்திரிகை சுதந்திர தினத்தை முன்னிட்டு, இலங்கை தொடர்பில் சர்வதேச மன்னிப்புச்சபை அதன் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது.

மக்களின் கருத்துச்சுதந்திரத்தை, குறிப்பாக ஊடகங்களின் கருத்துச்சுதந்திரத்தை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என்று அப்பதிவில் சுட்டிக்காட்டியிருக்கும் மன்னிப்புச்சபை, ஊடகத்துறையில் பணியாற்றுவோருக்கான பாதுகாப்பான சூழலை உறுதிசெய்வதன் மூலம் அவர்கள் எவ்வித அச்சமும் இழப்புமின்றி உண்மையான செய்திகளை அல்லது தகவல்களை வெளியிடுவதற்கு அல்லது பேசுவதற்கு இடமளிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும் அண்மைய வருடங்களில் தொடர்ச்சியாக அவதானிக்கப்பட்டுவரும் ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறைகள் மிகவும் கவலைக்குரியவையாகும் என்றும் சர்வதேச மன்னிப்புச்சபை குறிப்பிட்டுள்ளது.

ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறைகள் பற்றிய குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அரசாங்கம் எவ்வித பக்கச்சார்புமின்றி முழுமையாக விசாரணை மேற்கொள்வதுடன், அவற்றுடன் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை சட்டத்தின்முன் நிறுத்த வேண்டும் என்றும் மன்னிப்புச்சபை வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

இலங்கையில் சட்டத்தின் ஆட்சியும் நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மையும் வலுவிழக்கக்கூடும் எச்சரிக்கிறது மனித உரிமைகள் கண்காணிப்பகம்

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ள விடயங்களை நடைமுறைப்படுத்துவதால் சட்டத்தின் ஆட்சியும் நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மையும் மேலும் வலுவிழக்கக்கூடும்.

அதேவேளை மனித உரிமை மீறல் குற்றச்செயல்களுடன் தொடர்புபட்ட அதிகாரிகளை விடுவிப்பதற்கு ஏதுவான வகையில் செயற்படுவதை அரசாங்கம் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியிருக்கிறது.

இதுகுறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,

மனித உரிமை மீறல் சம்பவங்களில் தொடர்புபட்ட அதிகாரிகளை விடுவிப்பதற்கும் அவை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் பொலிஸ் அதிகாரிகளைத் தண்டிப்பதற்கும் ஏற்புடைய வகையிலான தீர்மானத்தை பாராளுமன்ற உறுப்பினர்கள் நிராகரிக்க வேண்டும்.

கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்படுவதென்பது ஏற்கனவே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சியின் கீழ் வலுவிழந்துள்ள நீதிமன்றத்தின் சுதந்திரம் மற்றும் சட்டத்தின் ஆட்சி என்பவற்றை மேலும் தொய்வடைச்செய்யும்.

இந்தத் தீர்மானமானது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நிறுவப்பட்ட அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது.

இது மனித உரிமை மீறல்கள், படுகொலைகள் உள்ளிட்ட குற்றச்செயல்கள் தொடர்பான விசாரணைகளை முடக்குவதுடன் ஊழல்மோசடிகள் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதிலிருந்து ராஜபக்ஷ குடும்பத்தையும் ஏனையோரையும் பாதுகாக்கின்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் செயற்பாடுகள் அவரது குடும்பத்தினருக்கு உதவும் வகையிலேயே அமைந்துள்ளன. ராஜபக்ஷ, தான் தொடர்புபட்டிருப்பது உள்ளடங்கலாக பல்வேறு மோசமான குற்றங்களை மறைப்பதற்காக முன்னெடுக்கக்கூடிய எந்தவொரு முயற்சியையும் அவர் விட்டுவைக்கவில்லை.

குற்ற விசாரணைப்பிரிவின் அதிகாரிகளான ஷானி அபேசேகர, நிஷாந்த சில்வா உள்ளடங்கலாக மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணை அதிகாரிகளுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேற்படி ஆணைக்குழு அச்சுறுத்தியுள்ளது.

அதுமாத்திரமன்றி ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த அறிக்கையின் விளைவாக நாட்டில் சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதிமன்றத்தின் சுயாதீனத்துவம் ஆகியவை வலுவிழக்கலாம் என்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் வினைத்திறனான செயற்பாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

2008 – 2009 வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற வலிந்து காணாமலாக்கல் சம்பவங்கள், கடற்படையின் சில உறுப்பினர்கள் தொடர்புபட்டிருப்பதாக சந்தேகிக்கப்படும் 11 மாணவர்கள் கொலைச்சம்பவம் ஆகியவை குறித்து இடம்பெறும் சட்டவிசாரணைகளை முடக்குவதற்கு ராஜபக்ஷ அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டது.

மேலும் 2008 ஆம் ஆண்டு ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்டமை, 2009 ஆம் ஆண்டு சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டமை, 2010 ஆம் ஆண்டில் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமலாக்கப்பட்டமை, 2012 ஆம் ஆண்டில் இடம்பெற்ற வெலிக்கடை சிறைச்சாலை படுகொலைகள் ஆகியவை பற்றிய விசாரணைகளும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளன.

இந்த வழக்குகள் குறித்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆதாரங்கள், அச்சம்பவங்கள் நடைபெற்றபோது தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்புச்செயலாளராகப் பதவி வகித்தமை தொடர்பில் சுட்டிக்காட்டுகின்றன.

இந்த வழக்குகளில் காணப்பட்ட அரசியல் தலையீடுகள், ஏற்கனவே இவற்றுக்கான நீதிவழங்கல் பொறிமுறைகளைத் தாமதப்படுத்திவிட்டது. பாரிய குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டவர்கள் தண்டனைகளிலிருந்து தப்பிப்பதற்கு அனுமதிப்பதற்குப் பதிலாக, இலங்கை அரசாங்கம் சர்வதேச சட்டங்களுக்கு அமைவாக அதன் கடப்பாடுகளைப் பேணவேண்டும்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புர்கா தடை உத்தரவை நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிராகரிக்க வேண்டும்- சர்வதேச யூரர்கள் ஆணைக்குழு

புர்கா மற்றும் நிகாப் உள்ளடங்களாக முகத்தை முழுமையாக மூடும் வகையிலான ஆடைகளை அணிவதற்குத் தடைவிதிப்பதென்பது ஒருவர் விரும்பிய மதம் அல்லது நம்பிக்கைகளைப் பின்பற்றுவதற்கு அனுமதியளிக்கின்ற சர்வதேச சட்டக்கட்டுப்பாடுகளுக்கு முரணானதாகவே அமையும் என சர்வதேச யூரர்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும் பொது மக்களின் உரிமையை மறுக்கும் வகையிலான இந்த மோசமான யோசனையை இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிராகரிக்க வேண்டும் எனவும் சர்வதேச யூரர்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு இலங்கையில் நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக் குதலில் 250க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டு, 500க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதல் தொடர்பாக ஆராய ஜனாதிபதி ஆணைக்குழு அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதைத்தொடர்ந்து 11 இஸ்லாமிய அமைப்புகளை தடைசெய்வதாக தெரிவித்து, வர்த்தமானி அறிவித்தல் ஒன்றினை கடந்த 13ம் திகதி இலங்கை அரசு வெளியிட்டது.

மேற்குறிதத தாக்குதலில் தற்கொலை குண்டுத்தாரிகளுக்கு ஆதரவு வழங்கியதாக குற்றம் சுமத்தி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியூதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியூதீன் ஆகியோர் கடந்த 24ம் திகதி அதிகாலை கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

தற்போது நிகாப், புர்கா மற்றும் முகத்தை மறைக்கும் ஆடைகளுக்குத் தடைவிதிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சர்வதேச யூரர்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், பொது மக்களின் உரிமையை மறுக்கும் வகையிலான புர்கா மற்றும் நிகாப் உள்ளடங்களாக முகத்தை முழுமையாக மூடும் வகையிலான ஆடைகளை அணிவதற்குத் தடைவிதிப்பு போன்ற மோசமான யோசனையை இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிராகரிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

சீன வழியில் இலங்கை: OIC கண்டனம்!

சீனாவில் முஸ்லிம்களை அநீதியாகக் கைது செய்யப்படும் முஸ்லிம்களை அடைத்து வைக்கும் ‘புனர்வாழ்வு மையங்கள்’ போன்று இலங்கையிலும் தீவிரவாத சிந்தனைக்குள்ளானவர்களை புனர்வாழ்வு மையங்களை உருவாக்கும் இலங்கை அரசின் திட்டத்துக்கு அரபு நாடுகளின் கூட்டுறவுக்கான அமைப்பு கண்டனம் வெளியிட்டுள்ளது.

குறித்த திட்டத்தின் ஊடாக, முஸ்லிம்களை வகை தொகையின்றி கைது செய்து அடைக்கக் கூடிய அபாயம் நிலவுவதாக அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

புர்கா தடை தொடர்பிலும் அவதானம் வெளியிட்டுள்ள குறித்த அமைப்பு, இலங்கை, பன்முகத்தன்மையிலிருந்து விலகிச் செல்வதற்கான அறிகுறிகளே காணப்படுவதாகவும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆர்மேனிய இனப்படுகொலை தீர்மானம் ஈழத் தமிழர்களுக்கு காட்டிய பாதை – ரெலோ பேச்சாளர் சுரேந்திரன்

“இனப்படுகொலைக்கான ஆதாரங்கள் இல்லை என்றும் அதற்கான காலம் கடந்து விட்டது என்றும் கூறிவரும் எமது பிரதிநிதிகளில் சிலருக்கு பாடமாக ஆர்மேனியாவில் நிகழ்ந்த இனப்படுகொலையை 31 நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளமையை குறிப்பிடலாம்” என ரெலோ அமைப்பின் பேச்சாளர் குருசுவாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவித்திருப்பதாவது:

“ஈழத் தமிழர்கள் தம்மீது நிகழ்த்தப்பட்ட இனப் படுகொலை உட்பட அட்டூழிய குற்றங்களுக்கு நீதிகோரி சர்வதேச சமூகத்திடம் கோரிக்கை விடுத்ததோடு மனித உரிமை பேரவையில் கொண்டுவரப்படும் தீர்மானங்களில் அது வலியுறுத்தப்பட வேண்டும் என்று அங்கத்துவ நாடுகளிடம் கோரி வருகின்றனர். முன்னைய மனித உரிமை ஆணையாளர்கள் அதற்கான ஆதாரங்கள் தமக்குக் கிடைக்கப் பெறவில்லை என்று தெரிவித்திருக்கின்றனர். அதற்கு மேலாக ஈழத்தமிழ் மக்களின் பிரதிநிதிகளில் என்று தம்மை கூறும் சிலரும் இனப்படுகொலைக்கான ஆதாரம் இல்லை என்று கூறி வருகின்றனர்.

ஒரு சுயாதீன சர்வதேச விசாரணை பொறிமுறையை ஏற்படுத்துவதன் மூலம் திரட்டப்படும் சாட்சியங்களின் ஊடாக எம் மக்களிடம் இருக்கும் இனப்படுகொலைக்கான ஆதாரங்களை ஆவணப்படுத்தி சர்வதேச நீதி பொறிமுறையின் ஊடாக குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று தமிழ் மக்கள் வலியுறுத்தி போராடி வருகிறார்கள்.

இனப்படுகொலைக்கான ஆதாரங்கள் இல்லை என்றும் அதற்கான காலம் கடந்து விட்டது என்றும் கூறிவரும் எமது பிரதிநிதிகளில் சிலருக்கு பாடமாக ஆர்மேனியாவில் நிகழ்ந்த இனப்படுகொலையை 31 நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளமையை குறிப்பிடலாம்.

1916ஆம் ஆண்டுகளில் துருக்கிய பேரரசை புரட்சி மூலம் கைப்பற்றிய புரட்சிப் படையினர் தங்கள் ராணுவத்தில் இருந்த ஆர்மேனியர்களையும், விடுதலை கோரிய ஆர்மேனிய மக்களையும் படுகொலை செய்ததோடு அவர்களில் பெரும்பகுதியினரை சிரிய நாட்டிற்கு துரத்தி விட்டார்கள். அந்த மக்களை நாடுகடத்துவதற்கு உதவிய குர்திஷ் துணை ராணுவப்படையினர் ஆர்மேனிய மக்களை கற்பழித்தும், கொள்ளையடித்தும், கொலை செய்தனர். இயற்கை அனர்த்தங்கள், நோய், பட்டினியாலும் பலர் இறந்தனர். கிட்டத்தட்ட 8 லட்சம் பேர் வரை உயிரிழந்தனர். பலர் துருக்கியில் தப்பியும் உள்ளனர். பலர் வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்தார்கள். அவர்கள் வழித்தோன்றல்கள் இன்று புலம்பெயர் மக்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

ஆர்மேனியா சுதந்திர நாடாக பிரகடனப்படுத்தப்பட்டது. இருந்தாலும் தமக்கு நடந்த கொடுமைகளை இனப்படுகொலையாக கருதி ஆர்மேனியர்கள் நீதிகோரி போராடினார்கள். இனப்படுகொலைக்கான ஆதாரமில்லை என்று துருக்கி தொடர்ந்தும் மறுத்து வந்தது. துருக்கியின் ஆதரவு நாடுகளும் அதை தவிர்த்து வந்தனர். ஆனால் அவர்களுடைய போராட்டம் இன்று ஒரு நூற்றாண்டைக் கடந்தாலும் வெற்றி அடைந்து உலக நாடுகள் துருக்கியில் ஆர்மேனியர்களுக்கு நிகழ்ந்தது இனப்படுகொலை என்று ஏற்றுக் கொண்டுள்ளன. அதன் முக்கிய அம்சமாக குர்திஷ் துணைப் படையினர் ஆர்மேனிய மக்களுக்கு இளைத்த அட்டூளியங்களை துருக்கி அரசாங்கம் கண்டும் காணாமல் இருந்ததே, துருக்கி செய்த கொலைகளுக்கு சமமான மிகப்பெரிய குற்றமாக கருதப்படுகிறது. அன்று துருக்கிக்கு ஆதரவாக இருந்த ஜெர்மனி கூட இந்த குற்றங்கள் நடப்பதை தெரிந்தும் அதை தடுக்காமல் இருந்தது குற்றமாக கருதப்படுகிறது.

ஆகவே ஈழத் தமிழர்களுக்கு நடந்த அட்டூழிய குற்றங்களில் இனப்படுகொலைக்கு ஆதாரங்கள் இல்லை என்று கூறி வருபவர்களும் இனப்படுகொலை நடைபெறவில்லை என்று கூறுபவர்களும் கூட குற்றவாளிகள் என்று கருதப் படுவதற்கு இடம் உண்டு.

இன்று சர்வதேச மனித உரிமை சட்டங்களின் அடிப்படையில் இனப்படுகொலை என்பது விரிவுபடுத்தப் பட்ட அர்த்தங்களை கொண்டிருப்பதனால் ஈழத் தமிழர்களுடைய இனப்படுகொலை விவகாரத்தையும் நீதிப் பொறிமுறை முன் நிறுத்த முடியும் என்பதை ஆர்மேனியா தீர்மானத்தின் முலம் உணர்ந்து கொள்ள வேண்டும். அதேபோன்று இங்கு நடந்த இனப்படுகொலையை மறுப்பவர்கள் மட்டுமல்ல கண்டும் காணாமல் இருந்தவர்கள் கூட இதற்கு பொறுப்புக்கூற வேண்டிய காலம் வரும் என்பதையும் ஆர்மேனியர்களுக்கான நீதி எடுத்துக் காட்டுகிறது.

ஈழத்தமிழர்களின் கோரிக்கை ஒருமித்த குரலில் தொடர்ச்சியாக ஒலிக்குமிடத்து பூகோள அரசியல் நலன்களை தாண்டி வெற்றி பெறும் என்பதற்கும் சிறந்த எடுத்துக் காட்டு” என சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

சுரேந்திரன்
ஊடக பேச்சாளர்/ தேசிய அமைப்பாளர்
தமிழ் ஈழ விடுதலை இயக்கம்

மாகாணசபை தேர்தல் தொடர்பில் முஸ்லிம் காங்கிரசுடனோ வேறு எந்த முஸ்லிம் கட்சியுடனோ எந்தவித பேச்சுவார்த்தைகளையும் முன்னெடுக்கவில்லை – ரெலோ செயலாளர் நாயகம் கருணாகரம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுடனோ வேறு எந்த முஸ்லிம் கட்சியுடனோ எந்தவித பேச்சுவார்த்தைகளையும் மாகாணசபை தேர்தல் தொடர்பில் முன்னெடுக்கவில்லையெனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.

ஒன்றிரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கருத்தாக அவர்களின் தீர்மானங்களைக் கூறுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நேற்று(2-5-21) மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

நேற்றைய தினம் ஊடகங்களில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைப் பற்றியும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலைப் பற்றியும் வந்த செய்திகள் மக்கள் மத்தியில் குழப்பமான நிலைமையை ஏற்படுத்தியிருக்கின்றது. குறிப்பாகக் கிழக்கு மாகாணத்திலே மட்டக்களப்பு மாவட்டத்திலே அந்த செய்திக்குப் பின்பு ஒரு அதிர்வலை ஏற்பட்டது. எனக்கும் பல தொலைபேசி அழைப்புக்கள் வந்திருந்தன.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ் பேசும் மக்களாக அதாவது முஸ்லிம்களுடன் சேர்ந்து ஆட்சியமைப்பதற்காக நாங்கள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருக்கின்றோம் என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் பத்திரிகையாளர் மாநாட்டிலே குறிப்பிட்டிருந்தார்கள்.

அந்தச் செய்தியை உறுதிப்படுத்தும் விதமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நிசாம் காரியப்பர் கூட அப்படி நடந்ததாகக் கூறியிருந்தார்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தமட்டில் மூன்று கட்சிகள் அதில் அங்கம் வகிக்கின்றன. அதன் ஒரு கட்சியான தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமாகக் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த நான் பதவி வகித்துக்கொண்டிருக்கின்றேன்.

இந்த வேளையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அலுவலக ரீதியாக எந்தவொரு கட்சிகளுடனோ குறிப்பாக முஸ்லிம் கட்சிகளுடனோ முஸ்லிம் காங்கிரஸுடனோ எந்தவிதமான பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடவில்லை.

சிலவேளைகளில் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் , சாணக்கியன் பேசியிருக்கலாம். அது அவர்களுடைய தனிப்பட்ட பேச்சுவார்த்தையோ விருப்பமோ தவிர தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உத்தியோக பூர்வ பேச்சுவார்த்தையாகக் கருத முடியாது.

அதற்கும் மேலாக முஸ்லிம் காங்கிரஸின் செயலாளராக நிசாம் காரியப்பர் இருந்து கொண்டு அந்தச் செய்தியை உறுதிப்படுத்துவதாகக் கூறியிருப்பது எந்தளவிற்கு அவர் அதனைப் புரிந்துகொண்டிருக்கின்றார் என்பது எனக்குத் தெரியவில்லை.

முஸ்லிம் காங்கிரஸின் செயலாளராக இருக்கின்ற நிசாம் காரியப்பர் முதலிலே அவருடைய கட்சியின் ஒருசில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் மக்களுக்கு எதிராகச் செயற்படுவதை நிறுத்துவதற்கு முயற்சிக்க வேண்டும்.

கடந்த காலங்களில் இந்த நாட்டில் மாறிமாறி ஆட்சி செய்த ஆட்சியாளர்களினால் முஸ்லிம் மக்கள் தாக்கப்பட்டபோதும் அவர்களுக்கு எதிராக அநியாயங்கள் நடைபெற்றபோதும் அவர்களது அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டபோதும் தமிழ் பிரதிநிதிகள் அனைவருமே அதற்கு எதிராகக் குரல்கொடுத்து வந்துள்ளனர்.

முஸ்லிம் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து உறுப்பினர்களும் முதலில் தங்கள் நல்லெண்ணங்களை வெளிப்படுத்துவதற்குத் தமிழ் பிரதிநிதிகள் செயற்படுவதைப்போன்று அவர்களது மனநிலையை மாற்றிக்கொண்டு செயற்பட வேண்டும்.

முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள்கூட கடந்த காலங்களிலே 20ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு அவர்களைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பவர்களாக இருக்கக்கூடாது. கட்சியின் முடிவுகளுக்கு மாறாக அவர்களது உறுப்பினர்கள் செயற்பட்டால் அதற்கு உரிய நடவடிக்கைகளை எடுத்து அவர்களைக் கட்டுப்படுத்த வேண்டும்.

தமிழ் மக்கள் குறிப்பாகக் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் மக்களுடன் இணைந்து வாழ்வதற்குத்தான் விரும்புகின்றோம். அதற்கேற்றாற்போல் இந்த நாட்டின் ஆட்சியாளர்கள்கூட தமிழ் பேசும் சமூகத்தினரை பிரித்தாண்டு ஒரு பிரிவினையை ஏற்படுத்தி எங்களிடையே ஒரு முறுகல் நிலையை, மோதலை உருவாக்குவதற்கு முயற்சி செய்துகொண்டிருக்கின்றார்கள்.

நாங்கள் அதற்குள் அகப்படாமல் முஸ்லிம்களுடன் இணைந்து வாழ்வதற்குத்தான் விரும்புகின்றோம். மாகாணசபைத் தேர்தல் ஒன்று வந்தால் அதில் தமிழ் பேசும் மக்களாக இணைந்து ஆட்சியமைப்பதை நாங்கள் விரும்புகின்றோம்.

ஆனால், மாகாணசபைத் தேர்தலில் கிழக்கு மாகாணத்திலே தமிழ் பேசும் மக்கள் இணைந்து ஒரு அட்சியை ஏற்படுத்தக்கூடிய நிலை வருமானால் அதன் முதலமைச்சராகத் தமிழர் ஒருவர் வரவேண்டும் என்பதுதான் எங்களுடைய விருப்பமும் எண்ணமுமாகும்.

ஏனென்றால் 2015ல் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரஸூம் இணைந்து ஆட்சியை ஏற்படுத்தியபோது ஒரு நல்லெண்ண அடிப்படையில் எதிர்காலத்தில் நாங்கள் இணைந்து செயற்படவேண்டும் என்ற தேவைப்பாட்டினை உணர்ந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த ஒருவருக்கு முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுத்திருந்தோம்.

அந்த நல்லெண்ண அடிப்படையில் எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் தமிழர் ஒருவர் முதலமைச்சராக வருவதற்கு முஸ்லிம்கள் விட்டுக்கொடுக்க வேண்டும். அதுதான் எதிர்காலத்திலே எங்களது உறவைப் பலப்படுத்தும்.

குறிப்பாக முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்காலத்திலே நாங்கள் இணைந்து செயற்படவேண்டுமானால் தமிழர்களுக்கு எதிராகச் செயற்படுவதனை நிறுத்துவதற்கு தங்களது நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒரு கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க வேண்டும்.

இன்று கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் ஒரு பேசுபொருளாக இருக்கின்றது. கல்முனை வடக்கில் வாழும் தமிழர்கள் மிகவேதனையுடன் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் ஒன்று உருவாகும்போது அதனால் முஸ்லிம்களுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. இன்னொரு இனத்திற்குக் கிடைக்கவேண்டிய உரிமையைத் தடுப்பதற்கு அல்லது அரசாங்கத்திடம் அவர்களுக்குரிய உரிமையைக் கொடுக்க வேண்டாமென்று சொல்வதற்கு எந்தவொரு இனத்தினை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கும் உரிமை கிடையாது.

அதனை கல்முனை தொகுதி முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் செய்கின்றார். இந்த விடயங்களை அவர்கள் முதலில் நிறுத்த வேண்டும். தமிழர்களுடன் அன்னியோன்னியமாகப் பழகுவதற்கு அவர்கள் முயற்சிக்க வேண்டும்.

அந்தவேளையிலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனித்து மாகாணசபைத் தேர்தலிலே போட்டியிடும். முஸ்லிம்கள் அவர்களது சார்பிலே போட்டியிட்டு ஆட்சியமைக்கும்போது கூட்டமைப்பாக நாங்கள் பேசி ஒரு முடிவிற்கு வரலாமே தவிர ஓரிரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவாக அவர்களது கருத்துக்களைக் கூறுவதை எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார்.