சிங்கராஜ வனத்தை பாதுகாக்க ஐ.நாவின் உதவியை நாடும் ஐ.தே.க

சிங்கராஜ வனத்தை பாதுகாக்கும் விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் தலையீட்டை கோரியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் அன்டனியோ குட்டரஸிற்கு இது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி அதிகாரபூர்வமாக கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது.

இந்தக் கடிதம் இன்றைய தினம் ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதியிடம், கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தனவினால் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக் கிளைக்கு எதிரில் இன்றைய தினம் ஐக்கிய தேசியக் கட்சி கவனயீர்ப்பு போராட்டமொன்றை நடாத்தியிருந்தது.

இலங்கையின் இயற்கை சூழலை பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சிங்கராஜ வனம் பாதுகாக்கப்பட்ட வலயமாக சட்டத்தின் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த வனப் பகுதியில் எவ்விதமான அழிவினை ஏற்படுத்தும் செயற்பாடுகளையும் செய்வதற்கு அனுமதிக்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை சட்டங்களின் ஊடாக மட்டுமன்றி சர்வதேச உடன்படிக்கைகளின் மூலமும் சிங்கராஜ வனம் பாதுகாக்கப்பட்ட வலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது என கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த வனப் பகுதியில் எந்தவொரு அபிவிருத்தித் திட்டத்தையும் முன்னெடுக்க அனுமதிக்கக் கூடாது எனவும், இது குறித்து ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

மாகாண சபை தேர்தல் தொடர்பில் கட்சித் தலைவர்கள் கூட்டம்

மாகாண சபை தேர்தலை நடத்துவது குறித்து இறுதித் தீர்மானத்தை எடுக்க எதிர்வரும் 19 ஆம் திகதி கட்சித் தலைவர்கள் கூட்டத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இந்த கூட்டம் நடைபெறும் என அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்துள்ளார்.

தேர்தல் சட்டங்கள், தேர்தல் முறைமையில் காணப்படும் குறைபாடுகளை இனங்காண விசேட குழு

தற்பொழுது காணப்படும் தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமையில் காணப்படும் குறைபாடுகளை இனங்காண்பதற்கு பாராளுமன்ற விசேட குழுவொன்றை நியமிப்பதற்காக பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷ்வின் பிரேரணையை அமைச்சர் தினேஷ் குணவர்த்தன சபைக்கு சமர்ப்பித்தார்.

பாராளுமன்றம் நேற்று திங்கட்கிழமை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடியது. இதன்போது சபை ஒத்திவைப்பு வேளையின்போது, சபை முதல்வரும அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன பிரேரணையை சமர்ப்பித்தார்.

குறித்த பிரேரணையின் பிரகாரம், தற்பொழுது காணப்படும் தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமையில் காணப்படும் குறைபாடுகளை அடையாளம் காண்பதும் எதிர்பார்க்கப்படும் சீர்திருத்தங்களை செயற்படுத்த அவசியமான திருத்தங்களை முன்மொழிவதும் இந்த குழுவின் கடைமையாகும்.

அத்துடன் இந்த குழுவின் தவிசாளரும் 15 பேர்களைக் கொண்ட குழு உறுப்பினர்களும் சபாநாயகரினால் நியமிக்கப்படுதல் வேண்டும். குறித்த குழு அதன் முதலாவது அறிக்கையை முதலாவது அமர்விற்கு பின்னர் ஆறுமாத காலங்களினுள் அல்லது பாராளுமன்றத்தினால் நீடிக்கப்படும் காலப்பகுதியினுள் சமர்ப்பித்தல் வேண்டும்.

மேலும் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டாலும் காலத்துக்கு காலம் இடைக்கால அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்கும் கூடுவதற்கும் இந்த குழுவுக்கு அதிகாரம் இருத்தல் வேண்டும் என பிரேரணையில் தெரிவிக்கப்படுள்ளது.

யாழ்ப்பாணம் – சென்னைக்கு இடையில் விரைவில் விமான சேவைகள் ஆரம்பம்: அரசாங்கம்!

யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்துக்கும் இந்தியாவின் சென்னைக்கும் இடையில் அடுத்த சில மாதங்களுக்குள் பயணிகள் விமான சேவைகளை மீண்டும் தொடங்கவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

மாலைத்தீவை தென்னிந்திய இடங்களுடன் இணைக்கும் விமான நடவடிக்கைகள் இலங்கை வழியாக தொடங்கப்படும் எனவும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரனதுங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பல விமான நிறுவனங்கள் ஏற்கனவே இலங்கை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் யாழ்ப்பாண விமான நிலையம் மூன்று கட்டங்களில் அபிவிருத்தி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

1000 பயணிகளைக் கையாளும் அளவிற்கு முனையம் உருவாக்கப்படும் என்றும் பெரிய விமானங்களும் தரையிறங்கும் வகையில் ஓடுபாதை மேலும் விரிவுபடுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தில் யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் சர்வதேச விமான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன.

இருப்பினும் கொரோனா தொற்றுநோய் காரணமாக அதைத் தொடர முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நிலாவெளி கைலேஸ்வராக் கல்லூரி மாணவிகளுக்கு கலாச்சாரச் சீருடைகள் ரெலோ அமைப்பினரால் வழங்கிவைக்கப்பட்டது

இன்று பிற்பகல் (05-04-2021) திருகோணமலை நிலாவெளி கைலேஸ்வராக் கல்லூரியில் தெரிவு செய்யப்பட்ட பயனாளி மாணவிகளுக்கு வெள்ளிக் கிழமைகளில் அணிந்து வருவதற்காக கலாச்சாரச் சீருடைகள்
திருகோணமலை மாவட்ட தமிழ் ஈழ விடுதலை இயக்க (ரெலோ) அமைப்பினரால் வழங்கிவைக்கப்பட்டது.

இதற்கான நிதி உதவி 22 000 ரூபாய் தமிழ் ஈழ விடுதலை இயக்க பிரித்தானிய கிளையின் உறுப்பினர்,ரெலோ ஆரம்பகால உறுப்பினர் கந்தளாயைச் சேர்ந்த குட்டி அண்ணன் அவர்களின் பிள்ளைகளால் அன்பளிப்புச் செய்யப்பட்டது.

இதற்காக திருகோணமலை மாவட்ட தமிழ் ஈழ விடுதலை இயக்கம் அவர்களிடத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

இதில் ரெலோ நிர்வாக செயலாளர் நித்தி மாஸ்டர், மற்றும் தமிழ் ஈழ விடுதலை இயக்க மாவட்ட உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் பங்பேற்றிருந்தனர்.

Posted in Uncategorized

யாழ். கல்வி வலய பாடசாலைகளுக்கான விசேட விடுமுறை நீடிப்பு

யாழ். கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கான விசேட விடுமுறை மேலும் ஒரு வாரத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.

யாழ். கல்வி வலய பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் இன்றைய தினம் (05) மீள ஆரம்பிக்கப்படவிருந்த போதிலும், எதிர்வரும் 09 ஆம் திகதி முதலாம் தவணை விடுமுறை வழங்கப்படவுள்ளதை கருத்திற்கொண்டு விடுமுறை நீடிக்கப்பட்டதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் கூறினார்.

கொரோனா வைரஸ் தொற்று நிலைமை காரணமாக யாழ். கல்வி வலய பாடசலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இதனிடையே, யாழ். மாவட்டத்தில் நேற்றைய தினம் (03) 07 பேருக்கு COVID – 19 தொற்று உறுதி செய்யப்பட்டதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.

Posted in Uncategorized

மன்னாரில் துக்க தினம் அனுஸ்ரிப்பு

மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் பூத உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் முகமாக இன்றைய தினம் (5) மன்னார் மாவட்டத்தில் பூரண கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு துக்க தினம் அனுஸ்ரிக்கப்பட்டு வருகிறது.

வீதிகள் வீடுகள் எங்கும் கருப்பு மற்றும் வெள்ளை நிற கொடிகள் பறக்க விடப்பட்டு கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இன்றைய தினம் இறந்த ஆயருக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றது.

வடக்கு கிழக்கு மாத்திரமன்றி இலங்கை முழுவதும் உள்ள பொதுமக்கள் அரச அதிகாரிகள் அரசியல் பிரமுகர்கள் மதத் தலைவர்கள் என இலட்சக்கணக்கான மக்கள் இணைந்து இன்றைய தினம் புனித செபஸ்தியார் ஆலயத்தில் உள்ள ஆயரின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் கலாநிதி இராயப்பு ஜோசப் ஆண்டகையின் பூதவுடல் நேற்று (4) மாலை 3 மணியளவில் மன்னார் தூய செபஸ்தியார் போராலயத்திற்கு அஞ்சலிக்காக கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் இன்று திங்கட்கிழமை மாலை 3 மணியளவில் இறுதி நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

ஆயரின் பூதவுடல் கடந்த வெள்ளிக்கிழமை மாலை முதல் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 2.30 மணி வரை மன்னார் ஆயர் இல்லத்தின் சிற்றாலயத்தில் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணியளவில் மன்னார் ஆயர் இல்லத்தில் இருந்து மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்திற்கு ஊர்தி பவனியூடாக கொண்டு செல்லப்பட்டது.

நேற்று மாலை 5 மணி முதல் பல ஆயிரக்கணக்கானோர் சென்று அஞ்சலி செலுத்தினர்.

தடைப் பட்டியலில் உள்ளவர்களுடன் தொடர்புகளைப் பேணுவோர் சிறையில் அடைக்கப்படுவர் – சரத் வீரசேகர எச்சரிக்கை

அரசு வெளியிட்ட தடைப் பட்டியலில் உள்ளவர்களுடன் தொடர்புகளைப் பேணுவோர் சிறையில் அடைக்கப்படுவார்கள்” என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கையிலுள்ள பலரது பெயர்களும் கறுப்புப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளன. அவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்படுவார்கள். அத்துடன் அவர்களுடன் தொடர்புகளைப் பேணுபவர்களும் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசு அண்மையில் தடை செய்யப்பட்ட தனிநபர்கள் மற்றும் அமைப்புக்களின் பட்டியலை வெளியிட்டது. இந்தப் பட்டியலில் தடை செய்யப்பட்ட நபர்களாக அறிவிக்கப்பட்ட சிலர் இலங்கையில் வசித்து வருவதாக கூறப்படுகின்றது.

இவ்வாறானதொரு நிலையில் அவர்களை இலங்கை அரசு நாடு கடத்துமா என்று அமைச்சர் சரத் வீரசேகரவிடம் ஊடகங்கள் கேட்டபோது,

“அரசு வெளியிட்ட தடைப் பட்டியலில் உள்ளவர்கள் இலங்கையில் இருந்தால் அவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள். அவர்களுடன் தொடர்புகளைப் பேணுவோரும் சிறையில் அடைக்கப்படுவார்கள்” என்று பதிலளித்துள்ளார்.

வலி கிழக்கில் கறுப்புக்கொடிகளை பறக்கவிட்டது பிரதேசசபை

மறைந்த ஆயர் இராஜப்பு ஜோசப் ஆண்டகையின் தமிழ்த் தேசிய மனித நேயப்பணியை நினைவுகூர்ந்து வலிகாமம் கிழக்கு பிரதேச சபை ஆலுவலகங்களிலும் பொது இடங்களிலும் கறுப்புக்கொடிகள் பிரதேச சபையினால் பறக்கவிடப்பட்டுள்ளன.

ஆயரின் இறுதி வணக்க நிகழ்வுகள் நடைபெறவுள்ள இன்றைய தினத்தினை (திங்கட்கிழமை) துக்க தினமாக அனுஷ்டிக்குமாறு பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், வலிகாமம் கிழக்குப் பிரதேசத்தின் முக்கிய இடங்களில் கறுப்புக் கொடிகளை பறக்க விட்டு சமயங்களுக்கு அப்பால் தமிழ் மக்களின் விடுதலைக்காகக் குரல் கொடுத்த மறைந்த ஆயரை அஞ்சலிக்கின்றோம் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட அமைப்பாளரும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளரும் ஆன தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

Posted in Uncategorized

பெருந் தலைமைகள் வியூகம் ! நாட்டில் இடம்பெறவுள்ள பெரிய மாற்றம் ?

அரசாங்கதத்திற்கு எதிராக மாற்று அணியொன்றை உருவாக்குவது குறித்து தேசிய அரசியலில் திரைக்கு பின்னால் பல்வேறு வியூகங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன.

சிரேஷ்ட அரசியல்தலைவர்களை பின்னணியாக கொண்ட ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கிய உறுப்பினர்கள் உட்பட இளம் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று மாற்று அரசியல் அணியொன்றை உருவாக்குவது குறித்து பல தரப்புகளுடன் பேச்சு வார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றது.

அந்த வகையில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணிக் விக்கிரமசிங்க, முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர உட்பட பல முக்கிய அரசியல் பிரதிநிதிகளுடன் சந்திப்புக்களை கடந்த பல வாரங்களாக முன்னெடுத்திருந்ததுடன் கடந்த திங்கட்கிழமை மற்றும் புதன் ஆகிய நாட்களில் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இந்த சந்திப்பிற்கான ஒழுங்குகளை ஐ.தே.க தவிசாளர் வஜிர அபேவர்தண முன்னெடுத்திருந்தார்.

மாற்று அரசியல் சக்தியை உருவாக்கும் செயற்பாட்டில் பல சிரேஸ்ட அரசியல் தலைவர்களும் செயற்பட்டு வருகின்றனர்.

இந்த கூட்டணியானது ரணில் விக்கிரமசிங்கவையும் உள்வாங்கும் வகையில் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளது.

அதனொரு முக்கிய மைல் கல்லாகவே கடந்த திங்கட்கிழமை (மார்ச் மாதம் 29ஆம் திகதி) ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தண தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு காலை 5.30 மணியளவில்தொலைப்பேசியில் தொடர்புக்கொண்டு ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கிய உறுப்பினர்கள் மற்றும் மேலும் சில சிரேஸ்ட அரசியல் தலைவர்களுடனான சந்திப்பு குறித்து அறிவித்தார்.

ஏற்கனவே குறித்த சந்திப்பு திட்டமிடப்பட்டிருந்த போதிலும் பல காரணிகளின் அடிப்படையில் ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் அன்றைய தினம் கட்டாயமாக சந்திப்பை நடத்துவதற்கு ஏற்பாடுகளை செய்வதற்கான அனுமதிக்காகவே வஜிர அபேவர்தன் தொடர்புக்கொண்டிருந்தார்.

இதன் பிரகாரம் அன்றைய தினம் மாலை திட்டமிடப்பட்டப்படி சந்திப்பு இடம்பெற்றது. ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கிய உறுப்பினர்கள்சிலரும் சிரேஸ்ட அரசியல் தலைவர்களும் ரணில் விக்கிரமசிங்கவுடனான அந்த சந்திப்பில் கலந்துக்கொண்டிருந்தனர்.

அராங்கத்தின் தன்னிச்சையான செயற்பாடுகளும் போக்குகளும் நாட்டை விரைவில் பாதாளத்தில் தள்ளிவிடும் .

பொது மக்கள் விரக்தி நிலை மற்றும் நாட்டின் பல்துறைசார் பின்னடைவுகள் குறித்தும் இதன் போது கலந்துரையாடப்பட்டுள்ளது. பிரிந்து செயற்படுவதால் எவ்வித பலனும் ஏற்பட போவதில்லை. மாறாக மீண்டும் ஒன்றிணைந்து செயற்படுவதனால் மாத்திரமே மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என ஐக்கிய மக்கள் சார்பில் கலந்துக் கொண்டவர்கள் குறிப்பிட்டனர்.

பொதுத்தேர்தலுக்கு முன்னதாகவே இந்த விடயத்தை நான் குறிப்பிட்டேன். ஆனால் நான் அன்று கூறியதை யாரும் ஏற்றுக்கொள்ளவும் இல்லை. நம்பவும் இல்லை. நெல் குருவியின் கதையே நினைவுக்கு வருகின்றது.

நெல்லை உண்ண சென்ற குருவிகள் வேடன் விரித்த வலையில் சிக்கிக்கொண்டன. வலையிலிருந்து தப்பிக்க தனித்தனியாக போராடிய குருவிகளால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. பின்னர் அனைத்து குருவிகளும் ஒன்றிணைந்து முயற்சித்தன. இதன் போது குருவிகளால் வலையை தூக்கிக்கொண்டே தப்பித்து பரந்து செல்ல முடிந்தது.

அதுபோல தான் நாம் இன்று வேடனின் வலையில் சிறைப்பட்டுள்ளோம். தப்பிப்பதாயின் அனைவரும் ஒன்றிணைந்து முயற்சிக்க வேண்டும்.

எனவே அனைவரும் மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே தான் உள்ளேன்.

இரு தரப்பும் ஒன்றிணைந்து இளையவர்களை முன்னணியாக கொண்டு வலிமையாக செயற்பட்டால் மாற்றத்தை உருவாக்க முடியும் என இதன் போது ரணில் விக்கிரமசிங்க சந்திப்பில் கலந்துக்கொண்டிருந்த மற்றைய தரப்பினர்களிடம் தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கத்திற்கு எதிரானதொரு அணியை உருவாக்க வேண்டுமாயின் நிச்சயம் ரணில் விக்கிரமசிங்கவின் வழிக்காட்டல் அவசியம் என்பதை வலியுறுத்திய அந்த தரப்பினர் அடுத்த கட்ட ஏற்பாடுகளுக்கான அனுமதியுடன் அங்கிருந்து சென்றனர்.