மக்கள் ஆணையின்படி பேசுவதற்கு தமிழர் தரப்பு தயார்: ரெலோ

இனப்பிரச்சினைக்கான தீர்வுக்காக மக்கள் ஆணையின் படி பேசுவதற்கு தமிழர் தரப்பு தயார் என ரெலோ இளைஞர் அணித் தலைவர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் (03.05.2023) ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது, இனப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக இந்த ஆண்டின் இறுதியில் ஒரு முடிவை புதிய அரசியலமைப்பு மூலம் காண இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மே தின உரையில் குறிப்பிட்டுள்ளார்.

சந்தர்ப்ப வாதம்

இனப்பிரச்சினைக்கான தீர்வை எதன் அடிப்படையில் பேசுவதாக ரணில் விக்ரமசிங்க வெளிப்படையாக இதுவரை பொது வெளியில் கூறவில்லை.

அத்துடன் நம்பிக்கை தரும் வகையில் அவரது ஏனைய நடவடிக்கைகள் அமையவில்லை. அத்துடன் ஜனாதிபதியின் உரைகள் பதவி ஏற்பில் இருந்து மாறி மாறி சந்தர்ப்ப வாதமாகவே அமைந்துள்ளது.

வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து இலங்கை ஆட்சியாளர்கள் தொடர்ச்சியாக நடாத்திய சனநாயக தேர்தல்களில் மக்கள் ஆணையாக அறுதிப் பெரும்பான்மையான மக்கள் சமஷ்டித் தீர்வு வேண்டும் என்றே ஆதரவு கோரியுள்ளனர்.

இனப்பிரச்சினை

இதற்கு ஒவ்வொரு தேர்தல் முடிவுகளும் மிகப் பெரும் ஆதாரம் அதன் பிரகாரம் இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கான பேச்சுவார்த்தைக்கு அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வான சமஷ்டி அடிப்படையில் பேச வருமாறு வெளிப்படையாக அரசாங்கம் அறிவித்தால் தமிழர் தரப்பு எப்போதும் தயாராகவுள்ளனர்.

இந்த நாட்டின் மீள முடியாத பின்னடைவுக்கு இனப்பிரச்சினைக்கான தீர்வு கொடுக்கப்படாமை என்ற உண்மையை உணர்ந்தும் சிங்கள ஆட்சியாளர்கள் கபடத்தனமாக மறைக்காது வெளிப்படையாக இன நல்லிணக்கத்துடன் மேசையில் உக்கார தயார் என்றால் அது தான் தீர்வுக்கான ஆரம்பம் எனத் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

ஜனாதிபதி தமிழ் மக்களை ஏமாற்றாமல் இனப்பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத் தர வேண்டும்: கோவிந்தன் கருணாகரம்

‘மக்களை ஏமாற்றாமல் உண்மையாக சிந்தித்து இனப்பிரச்சினைக்கான தீர்வினை வைத்துவிட்டு எங்களுடன் பேச வாருங்கள் நாங்கள் பூரண ஒத்துழைப்பினை தருகின்றோம்‘‘ என நாடாளுமன்ற உறுப்பினரும், நாயகம் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) செயலாளருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அரசு தமிழ் தரப்புகளை ஏமாற்றி அரசாங்கத்தில் இணைய வைத்து பொருளாதாரத்தினை நிலை நிறுவுவதற்காக முயற்சி செய்வதாகவும் அவர் குற்றஞ்சுமத்தியுள்ளார்.

ஜனாதிபதி நேற்றைய தினம் (01.05.2023) தமிழ் கட்சிகளுக்கு விடுத்த அழைப்பு தொடர்பில் (02.05.2023) மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இனப்பிரச்சினை

இது தொடர்பில் மேலும் கூறுகையில், ‘‘நேற்றை மேதின உரையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முக்கியமான கருத்தினை வெளியிட்டிருந்தார்.

இந்த வருட இறுதிக்குள் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வினை காணுவதற்கு உத்தேசித்துள்ளதாக கூறியிருக்கின்றார்.

இதேபோன்று தான் கடந்த ஆண்டும் சென்ற சுதந்திரதினத்திற்கு முன்னர் தீர்வினை காண வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த ஆண்டுக்குள் தீர்வினை காணுவதற்கு எதிர்பார்ப்பதாகவும் தமிழ் தரப்புகள் இந்த தீர்வு காணும் விடயத்தில் பின்னடிப்பதாகவும் விலகி தூர நிற்பதாகவும் கூறியிருந்தார்.

பேச்சுவார்த்தை

ஆனால் போராட்டம் நடைபெற்ற காலம் தொடக்கம் ஒரு பக்கம் ஆயுதப் போராட்டம் நடைபெற்றாலும் மாறிமாறி வந்த ஆட்சியாளர்களுடன் தமிழ் தரப்புகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டே வந்தார்கள்.

இலங்கையில் ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்ட தன் பின்னர் மகிந்த ராஜபக்சவுடன் 18 சுற்று பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டன.

மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தில் ஜனாதிபதியை விட அதிகாரம் கூடியவராக இன்றைய ஜனாதிபதி பிரதமராகயிருந்தார்.

அப்போது நாடாளுமன்றத்தினை இனப்பிரச்சினைக்கான தீர்வினை வழங்கும் ஒரு சபையாக மாற்றி பல கூட்டங்களை நடத்திய போதும் அது ஏமாற்றப்பட்டதாகவே சென்றுவிட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர்

அந்தவகையில் இலங்கையிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தன்னுடன் இணைந்து இனப்பிரச்சினைக்கான தீர்வினை காணுவதற்கு முன்வர வேண்டும்.

இந்த நாட்டின் பொருளாதாரம் இந்த நிலைமைக்கு மாறியதற்கு இலங்கையின் இனப்பிரச்சினை தான் காரணம் என்பதை சிங்கள மக்களுக்கும் பேரினவாதிகளுக்கும் அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கூறி அவர்களை தங்களுடன் இணைத்து இந்த இனப்பிரச்சினைக்கு தீர்வினை காண்பதற்கு முயற்சிக்க வேண்டும்.

அதன் ஊடாக கொண்டு வரப்படும் தீர்வுத் திட்டத்தினை நாடாளுமன்றத்திலும் மக்கள் மத்தியிலும் வைத்துவிட்டு தமிழர்தரப்புடன் பேசவேண்டும்.

நாங்கள் என்றும் பேச்சுவார்த்தைக்கு பின்னடிப்பவர்களோ விலகி நிற்பவர்களோ அல்ல என்பதை நாங்கள் உறுதியாக தெரியப்படுத்துவோம்.

அதனைவிடுத்து தற்போதைய பொருளாதார நிலைமையினை சீர்செய்வதற்காக மீண்டும் மீண்டும் தமிழ் தரப்புகளை ஏமாற்றி அரசாங்கத்தில் இணைய வைத்து இலங்கையின் பொருளாதாரத்தினை நிலை நிறுத்துவதற்காக மக்களை ஏமாற்றாமல் உண்மையாக சிந்தித்து இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டத்தினை முன்வைத்துவிட்டு எங்களுடன் பேசவாருங்கள்.

நாங்கள் பூரண ஒத்துழைப்பு தருவதுமட்டுமல்லாமல் புலம்பெயர்ந்துள்ள மக்கள் இந்த நாட்டின் பொருளாதாரத்தினை கூட நிலை நிறுத்த உதவிசெய்வார்கள் என்பதை உறுதியாக கூறிக்கொள்கின்றோம்‘‘ என தெரிவித்துள்ளார்.

எந்த உண்மையை கண்டறியப் போகிறார்கள்? எம்.எஸ்.எம் ஐயூப்

தென்ஆபிரிக்காவில் அமைக்கப்பட்டதைப் போன்ற உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு ஒன்றை அமைக்கும் நோக்கில், தென்ஆபிரிக்க அனுபவங்களை அறிந்து கொள்வதற்காக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்‌ஷவும் வெளிநாட்டமைச்சர் அலி சப்ரியும் கடந்த மாதம் 21ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை தென்ஆபிரிக்காவுக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தனர்.

அப்போது அவர்கள் அந்நாட்டின் ஜனாதிபதி சிறில் ரமபோஸா மற்றும் சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகளையும் அதிகாரிகளையும் சந்தித்தனர். உண்மையை கண்டறியும் பொறிமுறையொன்றை நிறுவுதல் பற்றி, இவ்வருடம் ஜனவரி மாதம் அமைச்சரவை எடுத்த முடிவொன்றின் பிரகாரமே, இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டதாக இதுகுறித்து அரசாங்கம் தெரிவித்திருந்தது.

‘உண்மையயைக் கண்டறியும் பொறிமுறை’ என்று பொதுவாக இதை அழைத்தாலும் இது இனப்பிரச்சினை தொடர்பானது. அதேவேளை, இதில் வெளிநாட்டமைச்சர் சம்பந்தப்படுவதன் மூலம், இது இனப்பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்களை கருத்தில் கொள்வதைப்பார்க்கிலும் வெளிநாட்டு அரங்குகளை நோக்கமாகக் கொண்ட காரியம் என்பதும் தெளிவாகிறது.

இந்த விஜயம் தொடர்பான செய்தி வெளியான போதும், அமைச்சர்கள் நாடு திரும்பிய பின்னர் ஊடகங்களில் அதைப் பற்றி பெரிதாக எதுவும் வெளியிடவில்லை. அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்று அரசாங்கம் அறிவிக்கவும் இல்லை. போரால் பாதிக்கப்பட்டவர்களாவது அதைப் பற்றி எந்தவோர் அக்கறையை செலுத்தவும் இல்லை. ஆணைக்குழுக்கள் பற்றி, இலங்கை மக்களுக்கு இருக்கும் கசப்பான அனுபவமே அதற்குக் காரணமாகும்.

2010ஆம் ஆண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை நியமித்த போது, சர்வதேச மனித உரிமை அமைப்பு அதைப் பற்றி ஓர் ஊடக அறிக்கையை வெளியிட்டது. ‘பொறுப்புக் கூறலைப் பற்றிய பிரச்சினையை சர்வதேச சமூகம் எழுப்பும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், இலங்கை அரசாங்கம் ஓர் ஆணைக்குழுவை நியமிக்கும். அக்குழு நீண்ட காலத்தை இழுத்தடித்துவிட்டு, எவ்வித பயனையும் காணாமல் முடிவடைந்துவிடும்’ என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

உண்மைதான்! 1983ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிரான தாக்குதல்களை அடுத்து 1984ஆம் ஆண்டு ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தன, இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக வட்ட மேசை மாநாட்டை கூட்டினார். அதில் ஒரு பயனும் கிடைக்கவில்லை.

1985ஆம் ஆண்டு திம்பு பேச்சுவார்த்தைகளை அடுத்து ஜே.ஆர்., 1986ஆம் ஆண்டு அரசியல் கட்சி மாநாட்டைக் கூட்டினார். அதில் ஓரளவுக்கு அதிகார பரவலாக்கல் ஆராயப்பட்டது.

இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை புலிகள் நிராகரித்து மீண்டும் போரை ஆரம்பித்த போது, ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ 1989ஆம் ஆண்டு சர்வகட்சி மாநாட்டை ஆரம்பித்தார். அத்தோடு அவர் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காகவென மங்கள முனசிங்க தெரிவுக்குழுவை நியமித்தார். அவர் காணாமற்போனவர்களைப் பற்றிய ஆணைக்குழுவையும் நியமித்தார்.

ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் 1995ஆம் ஆண்டு பாராளுமன்ற தெரிவுக்குழுவை நியமித்தார். அது நூற்றுக்கு மேற்பட்ட அமர்வுகளை நடத்திய பின்னர் கைவிடப்பட்டது. காணாமற்போனவர்களைப் பற்றி அறிய, பிராந்திய ரீதியில் மூன்று ஆணைக்குழுக்களை சந்திரிகா நியமித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கென 2006ஆம் ஆண்டு சர்வகட்சி மாநாட்டைக் கூட்டி, அதன்மூலம் சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவை நியமித்தார். அது பலமுறை கூடி, 2010ஆம் ஆண்டு, அதன் அறிக்கையை மஹிந்தவிடம் கையளித்தது. அறிக்கை காணாமல் போய்விட்டது.

போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதற்கென, 2006ஆம் ஆண்டு இந்தியாவின் முன்னாள் பிரதம நீதியரசர் பகவதியின் தலைமையில் வெளிநாட்டு நிபுணர் குழுவை மஹிந்த நியமித்தார். அக்குழு, அரசாங்கத்திடம் இருந்து போதிய உதவி கிடைக்கவில்லை என்று இடைநடுவில் கலைந்துவிட்டது. அதையடுத்து வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற முக்கிய சில மனித உரிமை மீறல் சம்பவங்களைப் பற்றி ஆராய, உதலாகம ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. மஹிந்தவின் காலத்திலேயே காணாமற்போனவர்களைப் பற்றிய பரணகம ஆணைக்குழுவும் நியமிக்கப்பட்டது.

இந்த ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை ஆராய்ந்து, போரில் பாதிக்கப்பட்டோருக்கு நீதி வழங்குவதற்காகவென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் அரசாங்கம், புதியதோர் ஆணைக்குழுவை நியமிப்பதாக 2020 ஆம் ஆண்டு ஐ.நா மனித உரிமைகள் பேரவையிடம் கூறியது. ஒரு வருடம் கடந்து அடுத்த மனித உரிமைகள் பேரவை கூட்டம் நெருங்கிய போது, உயர்நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம்.டி நவாஸின் தலைமையில் அந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.

அக்குழு கடந்த பெப்ரவரி மாதம் ஆறாம் திகதி, தனது இறுதி அறிக்கை நகலிலுள்ள பரிந்துரைகளின் ஒரு சாராம்சத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளித்தது. அதிலும் உண்மையைக் கண்டறியும் பொறிமுறையின் அவசியம் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான், அவ்வாறானதொரு பொறிமுறையை அமைக்கவென அமைச்சர்கள் தென்ஆபிரிக்காவுக்குச் சென்றிருந்தனர்.

உண்மையைக் கண்டறியும் பொறிமுறையைப் பற்றிய கருத்து ஆராயப்படுவது முதல் முறைல்ல! இது அரச படைகளுக்கும் புலிகளுக்கும் இடையிலான போர் முடிவடைந்தது முதல் ஐ.நா மனித உரிமைகள் பேரவையும் ஏனைய சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளும் வலியுறுத்தி வரும் ஒரு விடயமாகும்.

கடந்த ‘நல்லாட்சி’ அரசாங்கத்தின் காலத்தில் இதுவும் காணாமற்போனோருக்கான அலுவலகம் உள்ளிட்ட வேறு சில காரணங்களும் முக்கிய விடயங்களாக மேலெழுந்து வந்தன. ஆயினும் போர் முடிவடைந்து 14 ஆண்டுகள் கடந்த நிலையில், அவ்வாறானதொரு பொறிமுறையை உருவாக்க இப்போது தான் படிக்கப் போகிறார்கள்.

இவ்வருடம் நடைபெற்ற 75ஆவது சுதந்திர தினத்துக்கு முன்னர், இனப்பிரச்சினையைத் தீர்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கடந்த நவம்பர் மாதம் கூறினார். அதற்காகவென பேச்சுவார்த்தைகளையும் ஆரம்பித்தார். பின்னர், இரண்டு வருடங்களில் பிரச்சினையை தீர்ப்பதாக கூறினார். இந்தப் பின்னணியில், இந்த உண்மையைக் கண்டறியும் பொறிமுறை பற்றிய விடயமும், களத்தில் குதித்துள்ளமை முக்கியமாகும்.

இங்கு எழும் பிரதான பிரச்சினை என்னவென்றால், எதைப்பற்றி அரசாங்கம் உண்மையயை கண்டறியப் போகிறது என்பதாகும். இனப்பிரச்சினையைத் தீர்க்கும் விடயத்தில், நாம் எங்கே பிழை விட்டோம் என்பதைப் பற்றி அரசாங்கம் ஆராயப் போகிறதா அல்லது, போரின் போது இடம்பெற்ற மனித உரிமைகள் மீறல்களைப் பற்றி ஆராயப் போகிறதா?

மனித உரிமைகள் விடயத்தைத்தான் ஆராயப் போகிறது என்றால், எந்தக் கால கட்டத்திலான சம்பவங்கள் ஆராயப்படப் போகின்றன? மக்கள் விடுதலை முன்னணிக்கும் அரச படைகளுக்கும் இடையிலான மோதலின் போது இடம்பெற்ற மனித உரிமைகள் மீறல்களும் ஆராயப்படப் போவதாக ஒரு சிங்கள பத்திரிகை கடந்த வாரம் செய்தி வெளியிட்டு இருந்தது.

அவ்வாறாயின், 1971 ஆம் ஆண்டு முதல் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களை அரசாங்கம் ஆராயப்போகிறதா? இது வேகமாக வளர்ந்து வரும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்களைக் குறி வைத்து ஆரம்பிக்கப் போகும் திட்டமா என்ற கேள்வியும் அதன்படி எழுகிறது.

வடக்கு, கிழக்கு போரை மட்டுமே கருத்தில் கொண்டாலும், போர் முடிவடைந்து 14 வருடங்கள் உருண்டோடிவிட்டன. கருத்தில் கொள்ளப்படப்போகும் சம்பவங்களோடு சம்பந்தப்பட்ட சாட்சியாளர்களில் எத்தனை பேர் உயிரோடு இருக்கிறார்கள் என்பது பெரும் கேள்வியாகும். அத்தோடு போரால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக் கணக்கானோர் வெளிநாடுகளில் வாழ்கின்றனர். அவர்களில் எத்தனை பேர் சாட்சியமளிக்க முன்வருவார்கள் என்பது அடுத்த கேள்வியாகும்.

அதேவேளை நீதி, நியாயம் பற்றிய விடயத்தில் இலங்கை மக்கள் இன ரீதியாக வெகுவாக பிரிந்து சிந்திக்கும் நிலையில் உள்ளனர். சிலர் செஞ்சோலை தாக்குதலை நியாயப்படுத்தும் அதேவேளை, சிலர் புறக்கோட்டை குண்டு வெடிப்பை நியாயப்படுத்துகின்றனர். இந்த நிலையில், உண்மையைக் கண்டறிவதானது மிகவும் கடினமான விடயமாகும்.

அத்தோடு மனித உரிமைகள் விடயத்தில் எவ்வகையான நியாயத்தை வழங்க வேண்டும் என்பதிலும் மக்கள இன ரீதியாக பிரிந்து சிந்திக்கின்றனர். சிலர் குற்றவாளிகளைத் தண்டிப்பதன் மூலமே நீதியை நிலைநாட்ட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்க, வேறு சிலர் குற்றங்களை பரஸ்பரம் ஏற்று ஐக்கியத்தை உருவாக்க வேண்டும் என்கின்றனர்.

2018ஆம் ஆண்டு அதாவது, ‘நல்லாட்சி’ அரசாங்கத்தின் காலத்தில் தயாரிக்கப்பட்ட அறிக்கையொன்றில் விசாரணைகள் மூலம் உண்மையை கண்டறிந்தாலும் அவற்றைப் பாவித்து எவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது. இந்த விடயத்தில் பொதுவானதோர் உடன்பாட்டை ஏற்படுத்த எடுக்கும் முயற்சியே மேலும் கருத்து மோதல்களை உருவாக்கும் என்றே தெரிகிறது.

எனினும் கடந்த காலத்தில் அரசாங்கங்கள் வழங்கிய வாக்குறுதிகளை கவனிக்கும் போது, உண்மையைக் கண்டறியும் பொறிமுறையைப் பற்றியும் பெரிதாக எதிர்ப்பார்ப்புகளை வைத்திருப்பதில் பயனில்லை என்றே கூற வேண்டும். அதுதான் இதுவரை கண்டறிந்த உண்மையாகும்.

ஜனாதிபதி வேட்பாளர் குறித்து வாய் திறக்க வேண்டாம்!

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் பகிரங்கமாக எதனையும் அறிவிக்க வேண்டாம் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர்கள் கட்சியின் அமைச்சர்களுக்கு அறிவித்துள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடத்திற்கு மேல் உள்ள நிலையில், ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் பெரமுனவைச் சேர்ந்தவர்கள் கருத்து வெளியிடுவது சிக்கலாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் அடுத்த ஜனாதிபதிவேட்பாளர் தொடர்பில் அக்கட்சியின் அமைச்சர்கள் பலர் அரசியல் மேடைகளில் கருத்துக்களை வெளியிட்டு வருவதுடன், கட்சிக்குள் அது தொடர்பில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இனிமேல் ஜனாதிபதிவேட்பாளர் தொடர்பில் கருத்துக்களை வெளியிடுவது கட்சியின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு இடையூறாக அமையும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, அடுத்த அதிபர் வேட்பாளராக ரணில் விக்ரமசிங்கவே பொருத்தமானவர் என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் பிரசன்ன ரணதுங்க மற்றும் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ஆகியோர் அண்மையில் பகிரங்கமாகத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

13ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் – இந்தியா

13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கும் இலங்கையில் மாகாண சபைத் தேர்தல்களை முற்கூட்டியே நடத்துவதற்கும் இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்தும் எனும் உறுதிப்பாட்டை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே வழங்கியுள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களும், இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகருக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே (28-04-23) இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், தமிழ் மக்கள் விடுதலை கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் கோவிந்தன் கருணாகரம்,ஊடக பேச்சாளர் குருசாமி சுரேந்திரன், மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சித் தலைவர் வேந்தன் உள்ளிட்ட தமிழ் அரசியல் தலைவர்கள் இந்திய உயர்ஸ்தானிகளை சந்தித்துள்ளனர்.

புத்தாண்டு வாழ்த்துகளைப் பகிர்ந்துகொண்டதுடன் இலங்கையின் தற்போதைய நிலைவரம் குறித்தும் கலந்துரையாடியிருந்தனர்.

இலங்கையிலுள்ள தமிழ் மக்களின் அபிலாஷைகள் தொடர்பாகவும் அவ்விடயம் சார்ந்த செயற்பாடுகளின் நிலைவரம் குறித்தும் இப்பிரதிநிதிகள் உயர் ஸ்தானிகருக்கு விளக்கமளித்திருந்தனர்.

இந்த சந்திப்பின்போது உயர் ஸ்தானிகரும் பரஸ்பரம் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கும் இலங்கையில் மாகாண சபைத் தேர்தல்களை முற்கூட்டியே நடத்துவதற்கும் இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்திக்கூறினார் என இந்திய தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

எரிபொருள் விநியோகத்தில் சீனா – மகாநாயக்கர்களுக்கு விளக்கமளித்தார் தூதுவர்!

இலங்கையில் எரிபொருள் விநியோக மற்றும் விற்பனை செயற்பாடுகள் வெற்றியளித்தால் , மசகு எண்ணெய் சுத்தீகரிப்பு நிலையமொன்றை ஸ்தாபிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. இத்திட்டம் வெற்றியளிக்கும் பட்சத்தில் இவ்வாண்டுக்குள் 120 – 140 மில்லியன் டொலர் முதலீட்டை மேற்கொள்ள முடியும் என்றும் சீனா குறிப்பிட்டுள்ளது.

இலங்கைக்கான சீனத் தூதுவர் ஷீ ஷெங் ஹொங் அஸ்கிரிய பீட மகா நாயக்க வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரர் மற்றும் மல்வத்து பீட மகாநாயக்க திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர் ஆகியோருடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்விடயத்தைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தேரர்களுக்கு மேலும் தெளிவுபடுத்தியுள்ள சீனத் தூதுவர் ,

கடந்த வாரம் சீனாவின் சினொபெக் நிறுவனத்தின் தலைவர் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார். அவரால் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் விரைவில் , சீன எரிபொருளைக் கொண்ட 150 எரிபொருள் நிரப்பும் நிலையங்களை இலங்கையில் ஸ்தாபிப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம்.

இந்த வேலைத்திட்டம் வெற்றியளித்தால் , நாளாந்தம் 4 மெட்ரின் தொன் மசகு எண்ணெண் சுத்திகரிப்பினை நாட்டில் முன்னெடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த செயற்பாடுகள் சிறப்பாக இடம்பெற்றால் , இவ்வாண்டுக்குள் 120 – 140 மில்லியன் டொலர் முதலீடுகளை மேற்கொள்ள முடியும்.

நாம் அறிந்த வகையில் இலங்கை ஒரேயொரு எண்ணெய் சுத்தீகரிப்பு நிலையம் மாத்திரமே காணப்படுகிறது. அது 1960ஆம் ஆண்டு நிறுவப்பட்டதாகும். அதன் இயந்திரங்களும் மிகப் பழமை வாய்ந்தவையாகக் காணப்படுகின்றன.

எனவே புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமொன்றை இலங்கை ஸ்தாபிக்க முடிந்தால் அது இலங்கையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்புகின்றோம். இதனை அமைப்பதன் ஊடாக நூற்றுக்கணக்கான வேலை வாய்ப்புக்களும் உருவாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதே வேளை தேரர்களுடனான சந்திப்புக்களின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட சீனத் தூதுவர் , இலங்கை எண்ணெய் சுத்தீகரிப்பு நிலையத்தை ஸ்தாபிக்க வேண்டும் என்பது சீன பெற்றோலிய நிறுவனத்தின் தீர்மானமாகும். அரசாங்கம் என்ற ரீதியில் இரு நாடுகளுக்கிடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டால் அது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். இதன் பிரதிபலன் நுகர்வோரையே சென்றடையும் என்றார்.

Posted in Uncategorized

வசந்த கரன்னாகொடவிற்கு அமெரிக்காவில் நுழைய தடை

வடமேல் மாகாண ஆளுநரான அட்மிரல் ஆஃப் தி ஃப்ளீட் வசந்த கரன்னாகொடவிற்கு தமது நாட்டிற்குள் நுழைய அமெரிக்காவால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மனித உரிமைகளை மீறிய குற்றச்சாட்டின் கீழ் வசந்த கரன்னாகொடவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

வசந்த கரன்னாகொட மற்றும் அவரது மனைவி அசோகா கரன்னாகொட ஆகியோருக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அந்தோணி ஜே. பிலின்கன் சுட்டிக்காட்டியுள்ளார்.

யுத்த மோதல்களின் போது கடற்படைத் தளபதியாக கடமையாற்றிய போது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டின் பேரில் வசந்த கர்ன்னாகொடவிற்கு இந்த தடை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

சவேந்திரவுக்கு எதிராக விமல் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு: மறுக்கும் பாதுகாப்பு அமைச்சு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச, பாதுகாப்புத் தலைமை அதிகாரி சவேந்திர சில்வாவுக்கு எதிராக சுமத்திய குற்றச்சாட்டை, இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு நிராகரித்துள்ளது.

முன்னாள் இராணுவத் தளபதியுமான சவேந்திர சில்வா, அரகலய போராட்டத்தின்போது இடைக்கால நிர்வாகத்தை உருவாக்கும் சதித்திட்டத்திற்கு ஆதரவளித்ததாக விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியிருந்தார்.

2022ஆம் ஆண்டு மே 09ஆம் திகதி நடைபெற்ற போராட்டத்தின் பின்னணியில் இருந்தவர்களின் முதல் திட்டமாக, அப்போதைய நிறைவேற்று ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு தலைவர்கள் ஜனாதிபதி மாளிகைக்குள் இருந்த நிலையில் கொலை செய்வதாகும் என்று குறிப்பிட்டிருந்த விமல் வீரவன்ச, அந்த நேரத்தில் ஜெனரல் சவேந்திர சில்வா இந்திய விஜயத்தை மேற்கொண்டமை இந்த சந்தேகத்தை எழுப்பியதாகவும் தெரிவித்திருந்தார்.

தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பில் ஜனாதிபதி விசேட அறிக்கை!

தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தம் குறித்து நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார்.

இலங்கை மறுமலர்ச்சிப் பாதையில் பிரவேசித்து மீண்டும் புத்துயிர் பெறுவதாகவும் அதனை முன்னோக்கி கொண்டு செல்ல முழு நாட்டின் ஆதரவையும் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த நியாயமான சமூக வர்த்தக, பசுமை மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் ஆகியவற்றை உருவாக்குவதற்கு தான் பாடுபட்டு வருவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

2019 ஆம் ஆண்டு வரிகளை குறைத்ததன் மூலம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4% இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

மேலும் கொரோனா தொற்றுநோய் போன்ற பிரச்சினைகளால் ரூபாயின் மதிப்பு கடந்த வருடத்தின் மூன்று மாதங்களுக்குள் 40% குறைந்துள்ளது.

இந்த பின்னணியில் தான் ஜனாதிபதி பதவியை ஏற்றதாகவும் இல்லையெனில் இந்த நாடு அழிவை சந்தித்திருக்கும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.

இதேவேளை நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டெடுக்க சரத்வத்தேச நாணய நித்தியத்திற்கு செல்வதைத்தவிர மாற்று வழி கிடையாது என்றும் தெரிவித்தார்.

Posted in Uncategorized

இலங்கையில் ஒளிபரப்பு சேவையினை ஆரம்பித்தது ஆதவன் தொலைக்காட்சி

லைக்கா குழுமத்தின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரனின் தலைமையின் கீழ் பிரித்தானியாவை தலைமையகமாகக் கொண்டு கடந்த 2014ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பு சேவையினை செய்துவரும் ஆதவன் தொலைக்காட்சி இன்று(புதன்கிழமை) முதல் இலங்கையிலும் தனது ஒளிபரப்பினை ஆரம்பித்துள்ளது.

கடந்த 9 ஆண்டுகளுக்கும் மேலாக ஐரோப்பா, பிரித்தானியா, கனடா என புலம்பெயர்ந்து வாழும் உலக தமிழ் மக்களுக்கோர் உறவுப்பாலமாக ஆதவன் தொலைக்காட்சி தனது ஒளிபரப்பு சேவையினை முன்னெடுத்து வருகின்றது.

இவ்வாறான பின்னணியைக் கொண்ட ஆதவன் தொலைக்காட்சி இன்று முதல் இலங்கையிலும் தனது ஒளிபரப்பினை ஆரம்பித்துள்ளது.

இதன் அங்குரார்ப்பண நிகழ்வு லைக்கா குழுமத்தின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரன் தலைமையில் இன்று இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் லைக்கா குழுமத்தின் பிரதித்தலைவர் பிரேம் சிவசாமி உள்ளிட்ட லைக்கா குழுமத்தின் முக்கியஸ்தர்களும் பங்கேற்றிருந்தனர்.

மூன்று நேர பிரதான செய்திகளையும், மணித்தியால செய்திகளையும், தமிழர் தாயகத்தில் இடம்பெறும் முக்கிய நிகழ்வுகளையும், புலம்பெயர் நாடுகளில் இடம்பெறும் தமிழர்களின் முக்கிய நிகழ்வுகளையும், திரைப்படங்கள், நிகழ்ச்சிகள் என 24 மணித்தியாலங்களும் மக்களை மகிழ்ச்சிப்படுத்த ஆதவன் தொலைக்காட்சி தொடர்ந்தும் சேவையாற்றவுள்ளது.