வடக்கு, கிழக்கு இணைந்த தேச அரசியலை மக்கள் மயமாக்கும் செயற்பாட்டை துரிதப்படுத்த வேண்டும் – அருட்தந்தை மா.சக்திவேல்

இணைந்த வடக்கு கிழக்கிற்கான, தேச அரசியலலை மக்கள் மயமாக்கும் செயற்பாட்டை துரிதப்படுத்துவது காலத்தின் கட்டாயம் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் வலியுறுத்தியுள்ளார்.

இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் அவர் இதனை வலியுறுத்தியுள்ளார்.

இறுதி யுத்தக் காலப்பகுதியில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோர் படுகொலை செய்யப்பட்டதாகவும் யுத்தமற்ற காலப்பகுதியில் இனவாத வன்முறைகளால் பல ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் அருட்தந்தை மா.சத்திவேல் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் மே மாதம் 18 ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் பொது சுடர் ஏற்றப்பட்டு உணர்வு பூர்வமாக நினைவேந்தல் நடத்தப்பட்டபோது கிழக்கின் பல இடங்களில் பொலிசார் காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்டதோடு தாக்குதலும் நடத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பேரினவாதிகளின் தொடர் வன்முறைகளுக்கு பலத்த எதிர்ப்பை அருட்தந்தை மா.சத்திவேல் வெளியிட்டுள்ளார்.

சர்வதேச மன்னிப்பு சபையின் செயலாளர் நாட்டில் இருக்கும் போதே இனவாத அரசின் கைக்கூலிகளான பொலிசார் கிழக்கில் தாக்குதலை மேற்கொண்டு கிழக்கை வடக்கோடு இணைய விடமாட்டோம் என்ற செய்தியை சர்வதேசத்துக்கு கூறி உள்ளதாகவும் அருட்தந்தை மா.சத்திவேல் குறிப்பிட்டுள்ளார்.

நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்தலாம் என ஜனாதிபதி அறிவித்த பின்னரும் கிழக்கில் நான்கு பேரை பொலிசார் கைது செய்திருந்தாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே கிழக்கும் வடக்கும் இணைந்த தேச அரசியலை மக்கள் மயமாக்கும் செயற்பாட்டை துரிதப்படுத்துவதே காலத்தின் கட்டாயம் என தமிழ் தேசிய கொள்கையாளர்களும் அரசியல்வாதிகளும் உணராவிடின் கிழக்கு மட்டுமல்ல வடக்கும் துண்டாடப்படும் எனவும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளார்.

சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் இலங்கை அரசாங்கம் மீது குற்றச்சாட்டு

நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின் போது இராணுவத்தினரால் மீறப்பட்டுள்ள மனித உரிமை மீறல்களை அரசாங்கம் தொடர்ந்தும் மறுத்துவருவதாக சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய பசுபிக் இயக்குநர் எலைன்பியர்சன் தெரிவித்துள்ளார்.

இறுதிக்கட்ட யுத்ததின் போது கொல்லப்பட்டவர்களையும் காணாமல் ஆக்கப்பட்டவர்களையும் நினைவு கூர்ந்தவர்களை பொலிஸார் அச்சுறுத்தியதுடன் சிலரை தடுத்து வைத்திருந்தாகவும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய பசுபிக் இயக்குநர் எலைன் பியர்சன் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் கடந்த 18ஆம் திகதி வடக்கு கிழக்கில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வுகளை குழப்பும் முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டதாக எலைன் பியர்சன் மேலும் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட தரப்பினரை மௌனிக்கச்செய்வதற்கே அரசாங்கம் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்தக் குற்றச்சாட்டுக்களுக்கு அரசாங்கம் பொறுப்பு கூறவேண்டும் என கடந்த 17 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்ததாகவும் ஆசிய பசுபிக் இயக்குநர் எலைன் பியர்சன் நினைவு படுத்தியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் முன்வைத்துள்ள பரிந்துரைகளை வெளிநாட்டு அரசாங்கங்கள்
ஐக்கியநாடுகள் அமைப்புகள் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கையின் பொறுப்புக்கூறல் செயற்திட்டத்திற்கான ஆணையை செப்டம்பர் அமர்வில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை புதுப்பிப்பது மிகவும் அவசியம் என தெரிவித்த எலைன் பியர்சன், அந்த குற்றங்களிற்கு காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்துவதற்கு உலகெங்கிலும் உள்ள சட்டத்தரணிகள் இந்த ஆதாரங்களை பயன்படுத்துவது அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் யாழ் விஜயம் ; பல்கலைக்கழக மருத்துவ பீட புதிய கட்டிடம் திறந்து வைப்பு

யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் 46 வருடங்களில் முதன்முறையாக 942 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சித் தொகுதியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (24) திறந்து வைத்தார்.

யாழ் வைத்தியசாலை விரைவில் தேசிய வைத்தியசாலையாக தரமுயர்த்தப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இதன்மூலம் வடக்கில் சிறந்த சுகாதார கட்டமைப்பை உறுதிப்படுத்த முடியும் என யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கான மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக் கட்டிடத்தை இன்று (24) திறந்து வைத்து உரையாற்றிய ஜனாதிபதி தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்திற்கான மூன்று நாள் விஜயத்திற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று காலை யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார்.

உலங்கு வானூர்தி மூலம் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் வந்திறங்கிய ஜனாதிபதியை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் வரவேற்றனர்.

இந்நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட கட்டிடத்தை திறந்துவைத்துள்ளதுடன், துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெறும் இளைஞர் சேவை மன்ற நிகழ்வு, தந்தை செல்வா கலையரங்கில் நடைபெறும் ஆசிரியர் நியமன நிகழ்விலும் கலந்துகொள்கிறார்.

Posted in Uncategorized

ரெலோவின் யாழ். அலுவலகத்தில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

15 ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் யாழ்ப்பாண மாவட்ட பணிமனையில் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர் சபா குகதாஸ் அவர்களின் பொதுச் சுடர் ஏற்றலுடன் ஆரம்பிக்கப்பட்டது.

கட்சி உறுப்பினர்களின் பங்குபற்றலுடன், முன்னாள் வலி கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் நிரோஸ் முன்னாள் யாழ்ப்பாண மாநகர பிரதி மேயர் ஈசன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

முள்ளிவாய்க்கால் போர்க்களத்தில் இருந்து மீண்டு வந்த போரின் சாட்சியமான சபா குகதாஸ் நினைவுரை ஆற்றினார்.

யுத்தம் முடிந்து 15 வருடங்களாகியும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை – பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர்

இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவடைந்து 15 வருடங்கள் கடந்துள்ள போதிலும், இறந்தவர்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதற்கான பதிலைத் தேடிக்கொண்டிருப்பதாக பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்து 15 வருடங்கள் நிறைவடைந்துள்ளதை முன்னிட்டு அறிக்கையொன்றை வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

2013ஆம் ஆண்டு இலங்கையின் வடக்குப் பகுதிக்கு விஜயம் செய்தபோது, ​​போரினால் ஏற்பட்ட அழிவுகள் குறித்தும், அங்கு போரினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதி வழங்குவது குறித்தும் கேட்டறிந்ததாகவும், உண்மை மற்றும் பொறுப்புக்கூறலுக்காக ஐக்கிய இராச்சியத்தில் ஆதரவை வழங்க உறுதி பூண்டுள்ளதாக தெரிவித்தார்.

இலங்கையில் மனித உரிமைகள் மற்றும் நிலைமாறுகால நீதி தொடர்பான சர்வதேச முயற்சிகளுக்கு ஐக்கிய இராச்சியம் தொடர்ந்து தலைமைத்துவத்தை வழங்கும் எனவும் டேவிட் கமரூன் குறிப்பிட்டுள்ளார்.

முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கான மக்கள் உணர்வுபூர்வ அஞ்சலி: சர்வதேச மன்னிப்புசபை செயலாளரும் அஞ்சலி

2009 இல் இறுதியுத்தத்தில் கொல்லப்பட்டவர்களை நினைவுகூர்ந்து இன்று முள்ளிவாய்க்காலில் உணர்வபூர்வ அஞ்சலி செலுத்தப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தினர்.

சர்வதேச மன்னிப்புசபையின் செயலாளர் நாயகம் ஆக்னஸ் காலமர்ட் அவர்களும் அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டு, உயிரிழந்தவர்களுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

 

கடந்த ஓரிரு ஆண்டுகளை விட இம்முறை அதிகளவான மக்கள் நினைவஞ்சலியில் கலந்துகொண்டார். காலை 10.30 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, உயிரிழந்தவர்கள் நினைவாக தீப்பந்தங்கள் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

கண்ணீர், அழுகையென அந்த பகுதியே சோகத்தில் மிதந்தது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்வம் அடைக்கலநாதன், த.சித்தார்த்தன், செ.கஜேந்திரன், சி.சிறிதரன் உள்ளிட்டவர்களும் அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டனர்.

மிருசுவிலில் 8 தமிழர்கள் படுகொலை: கொலையாளி சிப்பாயை மன்னித்த கோட்டாவுக்கு உயர்நீதிமன்றம் அழைப்பாணை

கடந்த 2000ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் மிரிசுவில் பகுதியில் இடம்பெயர்ந்த 5 வயதுக் குழந்தை உட்பட 8 பேர் வெட்டியும், சுட்டும் கொல்லப்பட்ட கொடூர குற்றத்திற்காக கொழும்பு மேல் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவை ஜனாதிபதி மன்னிப்பில் விடுவித்தமை தொடர்பில் நீதிமன்றில் தனது தரப்பு உண்மைகளை முன்வைக்குமாறு கோரி அவருக்கு அழைப்பாணை அனுப்புமாறு உயர் நீதிமன்றம் இன்று (17) உத்தரவிட்டுள்ளது.

மாற்றுக் கொள்கை மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்துவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு இன்று யசந்த கோதாகொட மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் அழைக்கப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மனு அழைக்கப்பட்ட நேரத்தில், மனுதாரர் தரப்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதியின் மன்னிப்பின் பின்னர் விடுவிக்கப்பட்ட இராணுவ சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்புமாறு நீதிமன்றில் கோரினார்.

இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் குழாம், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியது தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டது.

அத்துடன், மனுவில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் விடுவிக்கப்பட்ட இராணுவ சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவுக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதன்பின், உண்மைகளை உறுதிப்படுத்துவதற்காக சம்பந்தப்பட்ட மனுவை செப்டம்பர் 4ஆம் திகதிக்கு அழைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் 2000 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19 ஆம் திகதி, ஒரு சிறு குழந்தை உட்பட 8 பொதுமக்களை வெட்டிக் கொன்று புதைத்ததாக குற்றம் சாட்டப்பட்ட இராணுவ கோப்ரல் சுனில் ரத்நாயக்க மற்றும் ஒரு இராணுவக் குழுவினருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் சட்டமா அதிபர் வழக்குத் தாக்கல் செய்தார்.

வழக்கு விசாரணையின் பின்னர், குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட சுனில் ரத்நாயக்கவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய பெஞ்ச் மரண தண்டனை விதித்தது.

அதனையடுத்து, சுனில் ரத்நாயக்க, தன்னை மரண தண்டனையிலிருந்து விடுவிக்குமாறு கோரி உயர் நீதிமன்றில் மேன்முறையீடு செய்திருந்தார்.

மே 20, 2017 அன்று, மேன்முறையீட்டு மனுவை விசாரித்த ஐந்து பேர் கொண்ட உயர் நீதிமன்ற பெஞ்ச், பிரதிவாதி சுனில் ரத்நாயக்கவுக்கு மரண தண்டனை விதித்து, கொழும்பு உயர் நீதிமன்றத்தின் மூவரடங்கிய பெஞ்ச் தீர்ப்பை உறுதி செய்தது.

அதன் பின்னர், மரண தண்டனை விதிக்கப்பட்ட சுனில் ரத்நாயக்க, 2020 மார்ச் 26 அன்று அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் விடுவிக்கப்பட்டார்.

மே 18 ஆம் திகதியை தமிழ் தேசிய துக்க தினமாக அனுஷ்டியுங்கள் – ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு கோரிக்கை

முள்ளிவாய்க்கால் நினைவு தினமான எதிர்வரும் 18 ஆம் திகதியை தமிழர் தாயகமெங்கும் தமிழ் தேசிய துக்க தினமாக அனுஷ்டிக்குமாறு ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடர்பில் ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தவத்திரு.அகத்தியர் அடிகளார் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் மிக கொடூரமாக கொன்று அழிக்கப்பட்டு 15 ஆண்டுகள் நிறைவுறுகின்ற வலி சுமந்த நாட்களை நினைவு கூருகின்ற இந்த தருணத்தில் தமிழராகிய எம் ஒட்டுமொத்த ஆன்மாவையும் பாதித்த மே 18 ஐ தமிழ் தேசிய துக்க நாளாக நாம் அனைவரும் கடைப்பிடிப்போம்

ஏற்கனவே வட மாகாண சபையால் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ள நிலையில் இதனை உணர்வுபூர்வமாக தமிழர் தாயகமெங்கும் அனுட்டிக்க தமிழ் தேசிய சக்திகளோடு கலந்தாலோசித்து ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு அழைப்பு விடுக்கின்றது.

இந்த நாளில் முள்ளிவாய்காலில் சென்று நினைவேந்த கூடியவர்கள் வழமைபோன்று முள்ளிவாய்கால் பொது கட்டமைப்பு ஒழுங்கு செய்த நிகழ்வுகளில் பெருந்திரளாக பங்கேற்குமாறு வேண்டி நிற்கின்றோம்.

அதே நேரம் அங்கு செல்லமுடியாதவர்கள் தங்கள் பிரதேச வழிபாட்டுத்தலங்களில் ஒன்றுகூடி பிரார்த்தனைகளை மேற்கொள்ளவும் வேண்டுகின்றோம்.

அன்றைய தினம் அனைத்து தமிழர் வணிக வளாகங்கள் பொது இடங்களில் கறுப்புக்கொடிகளை பறக்கவிடுமாறும் கறுப்புப் பட்டியுடன் கடமைகளில் ஈடுமாறும் கோருகின்றோம்.

எமது தெருக்களை பொது இடங்களை வீட்டின் முன்னுள்ள வீதியோரங்களை துப்புரவு செய்வதுடன் அனைத்து கேளிக்கை நிகழ்வுகளையும் தவிர்த்து முள்ளிவாய்கால் கஞ்சியை ஒரு நேர உணவாகவேனும் உண்பதற்கு ஒவ்வொரு தமிழ் குடும்பமும் முன் வருவோம்.

மேலதிக தனியார் கல்வி நடவடிக்கைகள் அனைத்தையும் அன்றைய தினம் முழுமையாக நிறுத்தி எம் இளையோருக்கு எம் வலிகளின் ஆழத்தை சாத்வீகமாக உணர்வபூர்வமாக வெளிப்படுத்துவோம்.

பல்கலைக்கழக மாணவர் எற்பாடு செயதுள்ள இந்த காலப்பகுதிக்கான இரத்ததான முகாம்களில் பங்கேற்போம்.

வலி சுமந்த குடும்பங்களிற்கு மனரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் ஆறுதல் அளிப்போம்.

இந்த தமிழ்த்தேசிய துக்க நாளில் ஒட்டுமொத்த தமிழராய் நிலத்திலும் புலத்திலும் எம் உச்சபட்ச ஆத்மார்த்த உணர்வை அமைதியாக உறுதியாக லெளிக்காட்டுவோம். அதற்காக அனைவரும் திடசங்கற்பம் பூணுவோம் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குமுதினி படுகொலையின் 39 ஆவது நினைவேந்தல்!

நெடுந்தீவு குமுதினி படுகொலையின் 39 வது நினைவேந்தல் நிகழ்வு இன்று (15) காலை நெடுந்தீவு மாவிலி துறைமுகத்தில் அமைந்துள்ள குமுதினி படுகொலை நினைவுத் தூவியில் நடைபெற்றது.

நிகழ்வில் பொதுச்சுடர்அ ஏற்றப்பட்டு நினைவுத் தூபிக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு நினைவுச் சுடர்கள் ஏற்றப்பட்டு மலர் வணக்கம் செலுத்தப்பட்டு அஞ்சலி நிகழ்வு உணர்வெளிச்சியுடன் நடைபெற்றது.

செப்டம்பர் 17 – ஒக்டோபர் 16 இடையே ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் – தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு

தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் பிரகாரம் செப்டம்பர் 17ஆம் திகதிக்கும் ஒக்டோபர் 16ஆம் திகதிக்கும் இடையில் ஜனாதிபதி தேர்தலை நடத்தவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அரசியலமைப்பு மற்றும் 1981ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க ஜனாதிபதி தெரிவு விசேட ஏற்பாடுகள் சட்டத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு, குறிப்பிட்ட காலத்திற்குள் வேட்புமனுக்கள் கோரப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் R.M.A.L.ரத்னாயக்கவின் கையொப்பத்துடன் இந்த அறிக்கை வௌியாகியுள்ளது.