எதிரணி உறுப்பினர்களை விலைக்குவாங்கும் கலாசாரத்தை அரசாங்கம் நிறுத்த வேண்டும் – ஹக்கீம்

யுத்தத்தினால் உயிரிழந்த தமது உறவினர்களை நினைவு கூறுவதற்கு கடந்த வருடம் தடை விதிக்கப்பட்ட போதும் இம்முறை ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னாலே நினைவேந்தல் நடைபெற்றது .இது ஒரு புதிய சமிக்ஜையை காட்டுகிறது . இதனை அங்கீகரிக்க வேண்டும்.

அத்துடன் அமைச்சு பதவிகளை வழங்குவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் அரசியல் கலாசாரத்தை அரசாங்கம் நிறுத்திக்கொள்ளவேண்டும் என முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (19) மூன்றாவது நாளாக இடம்பெற்ற கடந்த 9ஆம் திகதி கலவரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

புதிய அரசியல் கலாசாரம் ஒன்றை உருவாக்கவேண்டும் என பிரதமர் தெரிவித்திருந்தார். அதற்கு ஆதரவளிக்க நாங்கள் தயார். அதேபோன்று அரசியல் தாமிகத்தையும் ஆளும் எதிர்க்கட்சியினர் பின்பற்றவேண்டும். குறிப்பாக அமைச்சு பதவிகளை வழங்குவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவதை நிறுத்திக்கொள்ளவேண்டும்.

புதிய பிரதமரின் அரசாங்கத்தில் ஆரம்பத்தில் 15 அமைச்சர்கள் என்றார்கள் அதன் பின்னர் 18 என்றார்கள் ஆனால் தற்போது 22 அமைச்சர்கள் என கேள்விப்படுகின்றது. எதிர்க்கட்சியில் இருந்து உறுப்பினர்களை விலைக்கு வாங்கிக்கொண்டே இதனை செய்யப்பாேவதாகும் தெரியவருகின்றது.

பாராளுமன்றத்தில் அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கி சபை ஒன்றை ஏற்படுத்தி நாட்டின் பிரச்சினைக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுப்போம். அதற்கு ஆதரவளிக்க நாங்கள் தயார். ஆளும் எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு நாட்டை கட்டியெழுப்புவோம். ஆனால் எதிர்க்கட்சி உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் அரசியல் கலாசாரத்தை நிறுத்தவேண்டும். இதந்த அறிவிப்பை ஜனாதிபதிக்கு தெரிவிக்குமாறு சபை முதல்வரை கேட்டுக்கொள்கின்றேன்.

மேலும் கடன் செலுத்த முடியாமல் போயிருப்பதால் நேற்றில் இருந்து நாடு வங்குராேத்து என சட்டரீதியிலாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

ஆனால் யுத்தம் வெற்றிகொண்டு 13ஆவது வருடத்தை நாங்கள் கொண்டாடுகின்றோம். ஆனால் அதிலும் மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது.

காலிமுகத்திடலில் போராடும் மக்கள் முள்ளிவாய்க்காலில் இறந்தவர்களுக்காக அஞ்சலி செலுத்தி இருக்கின்றார்கள். புலிகள் அமைப்பில் இறந்தவர்கள் அதேபோன்று உயிர் நீத்த ராணுவ வீரர்களையும் ஒரே நேரத்தில் நினைவு கூர்ந்தனர்.

கடந்த வருடம் முள்ளவாய்க்காலில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றபோது ராணுவத்தினர் அதனை தடுத்து, அவர்களை சிறையில் அடைத்தார்கள்.

ஆனால் இந்த வருடம் காலிமுகத்திடலில் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாகவே உயிரிழந்தவர்களை நினைகூரும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இதுதான் யுகமாற்றம், புதிய சமிக்ஜை. அதனை நாங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும். இந்த வழியில் நாங்கள் செல்வோம்.

அலரிமாளிகையில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் ஆற்றிய உரையில் எந்த தவறும் இல்லை. ஆனால் அவரின் உரைக்கு பின்னர் உரையாற்றியவர்களே ஆதரவாளர்களை தூண்டிவிடும் வகையில் செயற்பட்டனர்.

வன்முறையை தடுக்க தவறியது தொடர்பில் பொலிஸ்மா அதிபரும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தென்னகோனும் ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டி கொண்டிருக்கிறார்கள் .

அத்துடன் நீதிபதி தடை உத்தரவு பிரப்பிக்கவில்லை என தெரிவித்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பிரதம நீதியரசருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

இது நீதிமன்ற அவமதிப்பு என தெரிவித்து செயலாளருக்கு எதிராக வழக்கு தொடுக்குமாறு பிரதம நீதியரசர் சட்டமா அதிபருக்கு தெரிவித்திருப்பதாக பத்திரிகைகளில் செய்தி வெளிவந்திருக்கின்றது. இவை தவறான முன்மாதிரியாகும் என்றார்.

Posted in Uncategorized

ஹரீன் உள்ளிட்ட 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தலைமையிலான அரசாங்கத்தில் 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.

இதன்போது ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த ஹரீன் பெர்னாண்டோ உள்ளிட்ட சிலரும் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.

புதிய அமைச்சர்கள் விபரம்

  1. நிமல் சிறிபால டி சில்வா – துறைமுகங்கள், விமான சேவைகள்2 சுசில்
  2. பிரேமஜயந்த – கல்வி
  3. கெஹலிய ரம்புக்வெல்ல – சுகாதாரம்
  4. விஜேதாச ராஜபக்‌ஷ – நீதி, சிறைச்சாலைகள் நடவடிக்கைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு
  5. ஹரீன் பெர்னாண்டோ – சுற்றுலாத்துறை மற்றும் காணி
  6. ரமேஷ் பத்திரண – பெருந்தோட்டக் கைத்தொழில்
  7. மனுஷ நாணயக்கார – தொழில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு
  8. நளின் பெர்னாண்டோ – வர்த்தகம், வணிகம் மற்றும் உணவு பாதுகாப்பு
  9. டிரான் அலஸ் – பொதுமக்கள் பாதுகாப்பு

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கும் இடையில் கருத்து வேறுபாடு – முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கும் இடையில் கருத்து வேறுபாடுகளும் மோதல்களும் தோன்ற ஆரம்பித்துள்ளன என்பது தெளிவாகின்றது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இடைக்கால அரசாங்கத்தையோ அல்லது சர்வகட்சி அரசாங்கத்தையோ அமைக்க முன்வந்தபோதிலும், அமைக்கப்படும் அரசாங்கத்தில் அவை எதுவும் இல்லை என்றும், முன்னர் ஆட்சியில் இருந்த அதே ஆட்சிதான் தற்போதும் உள்ளது என்று நாடாளுமன்றில் இன்று வெள்ளிக்கிழமை உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவிதித்துள்ளார்

புதிய அரசாங்கத்தின் மீதும் மக்கள் நம்பிக்கை இழக்க நேரிடும் எனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானத்திற்கு மாறாக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அமைச்சுப் பதவிகளை ஏற்காமல் அரசாங்கத்தின் ஆக்கபூர்வமான யோசனைகளுக்கு மாத்திரம் ஆதரவளிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

இலங்கைக்கு உதவுமாறு இந்திய நிதி அமைச்சரிடம் இதொகா கோரிக்கை!

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வுகாண உதவிகளை வழங்குமாறு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ்  இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளது.

இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் மற்றும் இ.தொ.காவின் சர்வதேச விவகாரங்களுக்கு பொறுப்பானவரான  பாரத் அருள்சாமி ஆகியோர் சந்தித்து இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு இந்திய அரசாங்கம் தொடர்ச்சியாக வழங்கிவரும் ஒத்துழைப்புகளுக்கு இந்த சந்திப்பின் போது இ.தொ.கா நன்றி தெரிவித்துள்ளதுடன், தற்போதைய இக்கட்டான சூழ்சிலையில் இருந்து இலங்கையை மீண்டெழ இந்திய அரசாங்கத்தின் ஒத்ழைப்பும் உதவியும் அதிகமாக தேவைப்படுகிறது.

அதேபோன்று இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மக்கள் அதிகமாக இந்த பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்டுள்ளனர்.எனவே இந்தியா அவர்களுக்கு பொருளாதார ரீதியான உதவிகளை வழங்க வேண்டும் என்பதுடன், இலங்கை நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு அனைத்து விதத்திலும் இந்திய அரசாங்கம் உதவிகளை வழங்க வேண்டுமெனவும் இந்த சந்திப்பில் இ.தொ.கா இந்திய நிதி அமைச்சரிடம் கோரிக்கைவிடுத்துள்ளது.

இக்கோரிக்கைக்கு சாதகமான நடவடிக்கைகளை எதிர்காலத்தில் இந்தியா முன்னெடுக்கும் என இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

விடுதலைப் புலிகளுடனான யுத்தம் சரியான வழியில் வெல்லப்பட்டதாக நான் நினைக்கவில்லை

விடுதலைப்புலிகள் ஒரு இயக்கமாக இருந்தாலும் விடுதலைப்புலிகள் என்ற விடயம் ஒரு சர்ச்சைக்குரிய விடயமாகும்.கடந்த காலத்தில் விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற யுத்தமானது  சரியான வழியில்  வெல்லப்பட்டதாக நான் நினைக்கவில்லை.அதாவது உள்நாட்டு யுத்தம் அல்லது பிரச்சினை என்றால் அது ஒரு பேச்சுவார்த்தை மேசையில் தான் முடிந்திருக்க வேண்டும்.இந்த போரின் முடிவு சமாதான முறையில்  நிறைவிற்கு கொண்டு வரவில்லை.பெரும் அழிவுகளுடன் தான்  நிறைவடைந்தது என ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் செயலாளர் நாயகம்  எம்.ரி.ஹசன் அலி தெரிவித்தார்.
சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பில் அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பகுதியில் உள்ள அவரது கட்சி  அலுவலகத்தில் வியாழக்கிழமை(19)   நடாத்திய விசேட செய்தியாளர்   சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும்  தெரிவித்ததாவது.
வட கிழக்கு மாகாண சபையில் முதலமைச்சராக இருந்த வரதராஜ பெருமாள் காலத்தில் ஒரு உறுப்பினராக இருந்துள்ளேன்.அதுமாத்திரமன்றி வரதராஜ பெருமாள் அவர்கள் தமிழீழ பிரகடனம் செய்த போது வெளிநடப்பு செய்த  குழுவிலும் நான் அங்கம் வகித்திருந்தேன்.அதாவது இந்த நாட்டை பிரிப்பதற்கு ஒருபோதும் நாங்கள் உடன்பட மாட்டோம் என அப்போது நாம் வெளியேறி இருந்தோம்.இந்நிலையில் பின்னர் அங்கு பல பிரச்சினைகள்  எழுந்தமையினால் நாங்கள் ஐ.பி.கேயின் உதவியுடன் விசேட விமானத்தில் இரத்மலான விமான நிலையத்திற்கு பாதுகாப்பாக அழைத்து செல்லப்பட்டோம்.
மேலும்  விடுதலைப்புலிகள் ஒரு இயக்கமாக இருந்தாலும் அந்த இயக்கத்தில் இருந்தவர்கள் விடுதலை புலிகள் என்ற  உயரிய சிந்தனைகளில் இருந்தார்களா? என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.அதாவது விடுதலை புலிகளின் உயர் மட்டத்தலைவர்கள் என கூறப்படுவோர் தற்போது கூட சிங்கள கட்சிகளின் உயர்பதவிகளில் வந்து இருக்கின்றார்கள்.இவ்வாறானவர்களும் விடுதலைப்புலிகளில் கடந்த காலங்களில் அங்கம் வகித்துள்ளார்கள் என்பதை நாங்கள் புரிந்து கொள்ள முடிகின்றது.ஆகவே விடுதலைப்புலிகள் என்ற விடயம் ஒரு சர்ச்சைக்குரிய விடயமாகும்.கடந்த காலத்தில் விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற யுத்தமானது வெல்லப்பட்டது என்பதற்காகவே ராஜபக்ஸக்களை மக்கள் ஆட்சிக்கு கொண்டு வருகின்றார்கள்.
இந்த யுத்தமானது வெளிநாடு ஒன்றுடன் செய்யப்படவில்லை.இலங்கை பிரஜைகளுடன் தான் இலங்கை அரசாங்கம் யுத்தம் செய்தது உண்மையாகும்.இந்த யுத்தமானது சரியான வழியில்  வெல்லப்பட்டதாக நான் நினைக்கவில்லை.அதாவது உள்நாட்டு யுத்தம் அல்லது பிரச்சினை என்றால் அது ஒரு பேச்சுவார்த்தை மேசையில் தான் முடிந்திருக்க வேண்டும்.ஒரு போர்க்களத்தில் நின்று கொண்டு பொதுமக்களை இராணுவம் சுட்டுத்தள்ளி அல்லது ஒரு விடுதலை இயக்கம் இராணுவத்தை சுட்டுத்தள்ளுவதை ஒரு காலமும் யுத்தமோ சமாதானமோ என்று கூற முடியாது.
இந்த போரின் முடிவு சமாதான முறையில்  நிறைவிற்கு கொண்டு வரவில்லை.பெரும் அழிவுகளுடன் தான் அவ்யுத்தம் நிறைவடைந்தது.உதாரணமாக தென்னாபிரிக்காவில் 243  இயக்கங்கள் போர் இட்டு  வந்திருந்தன.அதில் வெள்ளையர் கறுப்பர் குழு மோதலும் இடம்பெற்றிருந்தது.நெல்சன் மண்டேலா அந்த காலகட்டத்தில் வெஸ்மன் ரூட்டோ போன்றவரகள் இப்போராட்ட இயக்கங்களுடன் எத்தனையோ பேச்சுவார்த்தைகளை நடாத்தி 11 குழுக்களாக  மேற்குறித்த இயக்கங்களை ஒருங்கிணைத்தனர்.இவ்வாறு 11 குழுக்களுடனும் பின்னர் அவர்கள் பேச்சுவார்த்தை மேற்கொண்டு பிணக்குகளை தீர்த்து வைத்தனர்.இதனால் தான் அவருக்கு கூட நோபல் பரிசு கிடைக்கப்பெற்றிருந்தது.இந்த நாட்டிலும் ஒரு இணக்கப்பாட்டுடன் நடந்து முடிந்த  யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வந்திருந்தால் இவர்களுக்கும் நோபல் பரிசு கிடைக்க சந்தர்ப்பம் கிடைத்திருக்கும்.ஆனால் இந்த யுத்தமானது அரைகுறையாக நிறைவடைந்து விட்டது என்பதே உண்மையாகும்.சமாதான மேசையில் பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டு  இந்த யுத்தம் முடிவிற்கு கொண்டு வரப்படவில்லை.மாறாக பெரும் அழிவு யுத்த அவலத்துடன் தான் இந்த யுத்தம்  அரைகுறையாக நிறைவடைந்துள்ளது என்பதை  நான்  பார்க்கின்றேன் என்றார்.
Posted in Uncategorized

இலங்கை உண்மை, நீதி, பொறுப்புக்கூறல் ஆகியவற்றை உறுதிப்படுத்துவது அவசியம் – பிரிட்டன் அமைச்சர் தாரிக் அஹமட்

போரில் கொல்லப்பட்டவர்கள் மற்றும் காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பில் உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றை உறுதிப்படுத்துவது அவசியம் என்றும், இதுகுறித்து தமது அரசாங்கம் விசேட அவதானம் செலுத்தியிருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ள பிரிட்டனின் பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் தாரிக் அஹமட், அனைத்து சமூகங்களையும் உள்ளடக்கிய அரசியல் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதையும் முன்னிறுத்தி முக்கிய தரப்புக்களுடன் கலந்துரையாடுவதற்குத் தாம் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

நாட்டில் சுமார் மூன்று தசாப்தகாலமாக இடம்பெற்றுவந்த யுத்தம் கடந்த 2009 ஆம் ஆண்டில் முடிவிற்குக்கொண்டுவரப்பட்டதன் பின்னர், மேமாதம் 11 – 18 ஆம் திகதி வரையான ஒருவாரகாலப்பகுதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரமாகவும், அவ்வாரத்தின் இறுதிநாளான 18 ஆம் திகதி போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்கான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளாகவும் தமிழ்மக்களால் அனுட்டிக்கப்பட்டுவருகின்றது. அந்தவகையில் நேற்றைய முன்தினம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு காணொளியொன்றின் ஊடாகக் கருத்து வெளியிட்டிருக்கும் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

இலங்கையில் தமிழர்கள் உள்ளடங்கலாக நாட்டுமக்கள் அனைவருக்கும் பாதிப்புக்களை ஏற்படுத்திய சிவில் யுத்தம் முடிவிற்குவந்து இன்றுடன் (நேற்று முன்தினத்துடன்) 13 வருடங்கள் பூர்த்தியடைகின்றது. இவ்வாறானதொரு சூழ்நிலையில் போரில் கொல்லப்பட்ட மற்றும் காணாமலாக்கப்பட்ட மக்களுக்குரிய நீதியையும் பொறப்புக்கூறலையும் நிலைநாட்டுமாறு வலியுறுத்துவதில் நானும் பிரிட்டன் அரசாங்கமும் கொண்டிருக்கின்ற ஸ்திரமான நிலைப்பாட்டை மீளுறுதிப்படுத்துகின்றேன்.

பாதிக்கப்பட்ட தரப்பினர்மீது, குறிப்பாக அவர்களின் அன்பிற்குரியவர்கள் மற்றும் குடும்பத்தினர்மீது நாம் கரிசனைகொண்டிருக்கின்றோம். இவ்விடயத்தில் எமது 46ஃ1 தீர்மானம் முன்வைக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை உள்ளடங்கலாக அனைத்துத் தரப்பினருடனும் இணைந்து பணியாற்றுவது குறித்த பிரிட்டனின் நிலைப்பாட்டையும் மீண்டும் சுட்டிக்காட்டுகின்றேன். இலங்கையில் மனித உரிமைகள் நிலைவரத்தை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தும் அதேவேளை, போரின்போது இடம்பெற்ற வன்முறைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முன்னேற்றகரமானதும் செயற்திறனானதுமான பொறுப்புக்கூறலை உறுதிசெய்யுமாறும் வலியுறுத்துவோம்.

தற்போது இலங்கை பாரிய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கின்றது. நாம் இலங்கையின் தற்போதைய நிலைவரங்களைத் தொடர்ச்சியாக அவதானித்துவரும் அதேவேளை, பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு அவசியமான உதவிகளை வழங்குவதையும் அனைத்து சமூகங்களையும் உள்ளடக்கிய அரசியல் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதையும் முன்னிறுத்தி முக்கிய தரப்புக்களுடன் கலந்துரையாடுவதற்கும், இலங்கை அரசாங்கத்துடன் நேரடியாகத் தொடர்புகொள்வதற்கும் பிரிட்டன் அரசாங்கம் தயாராக இருக்கின்றது.

இவ்வாறானதொரு பின்னணியில் தற்போதைய நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கு ஜனநாயக ரீதியிலான செயற்திறன்வாய்ந்த தீர்வுகள் குறித்து ஒன்றிணைந்து ஆராயுமாறு அனைத்துக் கட்சிகளிடமும் வலியுறுத்துகின்றோம். அதேவேளை உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றை உறுதிசெய்வதில் விசேட அவதானம் செலுத்தியிருப்பதுடன், இலங்கை மக்கள் அனைவரினதும் சுபீட்சமான எதிர்காலத்தை உறுதிசெய்வதற்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கும், அதனை முன்னிறுத்தி இணைந்து பணியாற்றுவதற்கும் தயாராக இருக்கின்றோம் என்று அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் அன்றாட தேவைகளுக்கு செலவிட திறைசேரியில் பணம் இல்லை – பிரதமர் ரணில்

உணவு நெருக்கடி உலகளாவிய நெருக்கடியாக மாறுவதற்கான அறிகுறிகள் தென்படுவதாகவும் நிலைமையை முன்னறிவிப்பதற்கும் நடவடிக்கை எடுப்பதற்கும் உலக வங்கி 30 பில்லியன் டொலர்களை ஒதுக்கியுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் இலங்கையை மாத்திரம் பாதிக்கும் பிரச்சினையல்ல எனவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை இலங்கையில் அன்றாட தேவைகளுக்கு செலவிட திறைசேரியில் பணம் இல்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அன்றாட நுகர்வுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான செலவினங்களுக்காக உடனடியாக நிதியைக் கண்டறிய வேண்டியதன் அவசியம் தொடர்பான விரிவான அறிக்கை அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அவர் இன்று வியாழக்கிழமை தெரிவித்தார்

Posted in Uncategorized

பல்கலைக்கழக மாணவர்களின் பேரணியில் கண்ணீர்ப்புகை, நீர்த்தாரை பிரயோகம்

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரின் போராட்டத்தை கலைக்க பொலிஸார் உயர் அழுத்தம் மிகுந்த கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டனர்.

‘கோட்டா – ரணில் சதி அரசாங்கத்தை விரட்டுவோம், முறைமையை மாற்றுவோம்’ எனும் தொனிப்பொருளிலான பல்கலைக்கழக மாணவர்களின் பேரணி அழகியற்கலை பல்கலைக்கழகத்திற்கு அருகில் ஆரம்பமானது.

ஆர்ப்பாட்டம் ஆரம்பமாவதற்கு முன்னர் பொலிஸார் அவ்விடத்திற்கு சென்று அதனை நிறுத்துமாறு அறிவுறுத்தல் விடுத்தனர்.

எனினும், கொழும்பு நகர மண்டபம் , மருதானை, தொழில்நுட்ப சந்தியை தாண்டி ஆர்ப்பாட்டப் பேரணி கொழும்பு கோட்டையை சென்றடைந்தது.

இதற்கிடையில், அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் உள்ளிட்ட உறுப்பினர்கள் கொழும்பு கோட்டை பகுதியிலுள்ள எந்தவொரு அரச நிறுவனங்களுக்குள்ளும் 5 வீதிகளுக்குள்ளும் பிரவேசிக்க முடியாதவாறு, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

கொழும்பு கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கோரிக்கைக்கு அமைய, கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இந்த உத்தரவை பிறப்பித்தார்.

நீதிமன்ற உத்தரவிற்கு அமைய உத்தியோகபூர்வ இல்லங்களுக்குள் பிரவேசிப்பது , பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் அதிகாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்துவது, பொருட்களுக்கு சேதம் விளைவிப்பது, சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டது.

கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாகக் கூடியிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களிடம் பொலிஸார் இதனைக் கூற
முற்பட்டபோது அங்கு இரு தரப்பினருக்கும் இடையில் அமைதியின்மை ஏற்பட்டதால், பொலிஸார் அங்கிருந்து ஓடிச்சென்றனர்.

இதனையடுத்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் உலக வர்த்தக மைய வளாகத்தை அடைந்தனர்.

இதன்போது, பொலிஸாரால் உயர் அழுத்தம் மிகுந்த கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்காக பொலிஸார் பல சந்தர்ப்பங்களில் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொண்டதை அவதானிக்க முடிந்தது.

அப்பகுதியில் தமது வேலைகளில் ஈடுபட்டிருந்த சாதாரண மக்களும் பொலிஸாரின் கண்ணீர்ப்புகை, நீர்தாரை பிரயோகத்தினால் பாதிக்கப்பட்டனர்.

மஹிந்த 2 ஆவது தடவையாக ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின் ஓய்வுபெற்றிருக்க வேண்டும் – சமல்

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ, இலங்கையின் இரண்டாவது தடவையாக ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் ஓய்வு பெற்றிருக்க வேண்டும் என அவரது சகோதரரும் பாராளுமன்ற உறுப்பினருமான சமல் ராஜபக்ஷ இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அவ்வாறு செய்யத் தவறியதன் விளைவாகவே தற்போதைய நிலைமைக்கு மஹிந்த ராஜபக்ஷ முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

“கிட்டத்தட்ட 50 ஆண்டுகால அவரது சிறப்பான அரசியல் சாதனைகள் மற்றும் பயணம் தற்போது தொலைந்து போயுள்ளது,” என்று அவர் மேலும் கூறினார்.

அரசியலில் பிரவேசிப்பது மற்றும் ஈடுபடுவதுடன், மக்கள் சரியான நேரத்தில் விட்டுக்கொடுக்க கற்றுக்கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

“நாம் அதிகாரம் மற்றும் அரசியல் பதவிகளுக்கு பேராசை கொண்டால், இன்று நாம் காணும் இத்தகைய விளைவுகளை சந்திப்பதைத் தவிர வேறு வழியில்லை” என்று அவர் சுட்டிக்காட்டினார்.

வலி கிழக்கு பிரதேச சபையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அஞ்சலி

யாழ். வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

ரெலோ யாழ் மாவட்ட தலைவரும் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் தலைமையில் (மே 18) காலை 7 மணிக்கு ஒன்று கூடிய பிரதேச சபை உறுப்பினர்கள் பணியாளர்கள் ஈகைச்சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.

இந்த அஞ்சலி அனுஷ்டிப்பைத் தொடர்ந்து தவிசாளர், மற்றும் சபையின் உறுப்பினர்கள் செல்வதிசைநாயகம் தவநாயகம் ஆகியோர் அஞ்சலியுரையாற்றினர். இவ் அஞ்சலியுரைகளில் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட பாரதூரமான மனித உரிமைகளுக்கு நீதி நிலைநாட்டப்படவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இதனைத்தொடர்ந்து வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளார் தியாகராஜா நிரோஷ் சிறப்புரையாற்றினார்.

அதில் அவர் தெரிவித்ததாவது,

“எமது மக்கள் மீது தொடர்ச்சியாக அரச பயங்கரவாதம் பிரயோகிக்கப்பட்டே வந்துள்ளது. சிங்கள மக்கள் போன்று நாட்டில் உரிமைகளுடன் நாமும் ஓர் தேசிய இனம் என்ற வகையில் வாழ வேண்டும் என்றே எமது இனம் அபிலாசை கொண்டுள்ளது.

அரசியல் உரிமைகளை கேட்டு அகிம்சை வழியில் போராடிய போது எமக்கு எதிராகப் பிரயோகிக்கப்பட்ட அரச பயங்கரவாதமே ஆயுதப்போருக்கு வழிவகுத்தது.

அரச படைகள் ஊடாக எமது சிறுவர்கள் வயோதிபர்கள் பெண்கள் என்ற பாகுபாடின்றி மிலேச்சத்தனமாக படுகொலை செய்யப்பட்டுள்ளோம்.

உலகம் மனித உரிமைகளுக்காக பாடுபடுகின்ற ஓர் சூழ்நிலையில் அத்தனை உரிமைகளும் அரசினாலேயே இலாவகமாக மீறப்பட்டுள்ளன.

அரச படைகளால் எமது மக்கள் கடலிலும், தரையிலும் வெட்டியும், சுட்டும், வான் வெளி கொத்துக் குண்டு வீச்சிலும் எத்தனையே ஆயிரம் சிறார்கள் கொல்லப்பட்டுள்ளனர். பெண்களின் உரிமைகள் பற்றி உலகம் பேசுகின்றது.

ஆனால் எத்தனை பெண்கள் யுத்தகாலத்தில் அரச அணுசரனையில் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டுனர். அதுபோன்று தமிழ் மக்களை கொன்றழித்த கொலைக்குற்றவாளிகள் தண்டனைகள் வழங்கப்படாது அவர்களுக்கு அரச அந்தஸ்தளிக்கப்பட்டுள்ளது.

அரச படைகளிடம் சரணடைந்த மற்றும் அரச படைகளால் கடத்தப்பட்ட ஆயிரக்கணக்கானவர்களைத் தேடி தாய்மார் இன்றும் போராடுகின்றனர்.

எதற்குமே நீதி கிட்டவில்லை. போரில் குழந்தைகளைக் கூட கொன்று குவித்த அரசிற்கு எதிராக போதுமான மனித உரிமை ரீதியிலான ஒழுங்குகள் பிரயோகிக்கப்படவில்லை என்பதை ஓர் இனமாக நாம் வெளிப்படுத்துகின்றோம்.

இந்நிலையில் இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இலங்கைக்கு வழங்க இணக்கம் காணப்படுகின்ற உதவிகள் தமிழ் மக்கள் மீது இழைக்கப்பட்ட பாரிய மனித உரிமை மீறல்கள் பற்றிய பொறுப்புச் சொல்வதை உறுதிப்படுத்துவதுடன் தமிழ் மக்கள் மீது மீளவும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் உறுதிப்படுத்துவதாகவும் எமக்கான தீர்வை முன்வைப்பதாகவும் அமையவேண்டும்”. என மேலும் தெரிவித்துள்ளார்.