மாகாணசபைத் தேர்தல்களை நடத்துவது பொருத்தமானது

மட்டுப்படுத்தப்படும் வகையில் பழைய தேர்தல் முறையிலாவது மாகாணசபைத் தேர்தல்களை இம்முறை மாத்திரம் நடத்துவது பொருத்தமானது என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி வலியுறுத்தியுள்ளது.

தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளம் காண்பதற்கும் தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழுவில் நேற்று(02) பரிந்துரைத்தது.

சுதந்திரக் கட்சி சார்பில் பாராளுமன்ற விசேட குழுவில் சாட்சியமளித்த இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர, “நீண்டகாலமாக மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படாமையால் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. மாகாண சபைத் தேர்தல் விரைவில் நடத்தப்பட வேண்டும் என்பதே தமது கட்சியின் நிலைப்பாடு” என்றார். அத்துடன் அடுத்த வருட முதலாவது காலாண்டுக்குள் மாகாணசபைத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும். உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை ஆகக் கூடியது 5,500 ஆக வரையறுக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.

“உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக் காலத்தை நீடிப்பது பொருத்தமற்றது” எனத் தெரிவித்த அமைச்சர் மஹிந்த அமரவீர, உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும் என்பதே பொது மக்களின் நிலைப்பாடு என்றார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்ட பின்னர் தேர்தல் நடத்தப்பட்டு புதிய உறுப்பினர்கள் பதவிப்பிரமாணம் செய்யும்வரை குறித்த நிறுவனங்களின் அதிகாரம் ஆணையாளரின் கீழ் கொண்டுவரப்பட வேண்டியதன் அவசியத்தை அமைச்சர் நிமல் சிறிபால.டி.சில்வா இக்குழு முன்னிலையில் சுட்டிக்காட்டினார்.

தற்போதுள்ள சட்டத்தின் கீழ் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாது என சட்டமா அதிபர் கருதுவதாகவும், அதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகள் கொண்டுவரப்பட வேண்டுமெனவும் பாராளுமன்ற விசேட குழுவின் தலைவர் சபை முதல்வர், அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். மாகாண சபைத் தேர்தலை துரிதமாக நடத்த வேண்டும் என்பதே குழுவின் பொதுவான கருத்து என்றார்.

தேர்தல் முறை திருத்தப்படும் போது தொகுதி வாரியில் தெரிவுசெய்யப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை 60 சதவீதமாகவும் விகிதாசார முறையின் கீழ் தெரிவுசெய்யப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை 40 சதவீதமாகவும் காணப்பட வேண்டும் என்பதே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடாக இருந்தது.

Posted in Uncategorized

‘நீங்கள் குற்றம் செய்யவில்லை எனில் சர்வதேச விசாரணைக்கு வாருங்கள்’-பாராளுமன்றத்தில் கஜேந்திரகுமார்

நீங்கள் குற்றம் செய்யவில்லை எனில் ஏன் நீதியான விசாரணைக்கு அஞ்சி ஒழிகிறீர்கள். நீங்கள் பிழை அற்றவர்கள் எனில் அதை பயமின்றி உறுதிப்படுத்த சர்வதேச விசாரணைக்கு வாருங்கள் என்றே கேட்கிறோம் என இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

2022 இற்கான வரவு செலவுத்திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு மீதான நிதி ஒதுக்கீடு குறித்த விவாதத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உரையாற்றுகையில்,

“இனப்படுகொலை என்பது வெறுமனே மக்களை கொல்வது மட்டும் அல்ல. அந்த மக்களை மக்களின் அடையாளத்தை முழுமையாகவோ பகுதியாகவோ அழிக்கும் நோக்குடன் செய்யப்படுபவையும் இனப்படுகொலையே.

இறுதி யுத்ததின் போது வன்னியில் ஏறத்தாழ நான்கு லட்சத்யுக்கு அதிகமான மக்கள் இருப்பதாக பதிவுகள் இருந்தபோதும் அரசு, ஆக 70,000 பேருக்கே உணவும் மருந்தும் அனுப்பி மக்களை பட்டினி போட்டு சாகடிக்க முனைந்தது , இதுவும் இனப்படுகொலையே.

2009 மே 16 ஆம் திகதி மாலை போர்வலயத்தில் அகப்பட்டிருக்கும் மக்களின் உயிரை பாதுகாப்பதற்காக தம்து ஆயுதங்களை மெளனிக்கிறோம் என விடுதலை புலிகள் பகிரங்கமாக அறிவித்த பிறகும், கண்மூடித்தனமாக காட்டுமிராண்டித்தனமாக மக்கள் மீது கடும் ஆட்டிலறி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது . இதை கடந்த தடவை சரத் பொன்சேகாவும் ஒத்துக்கொண்டிருந்தார்.

யுத்தம் புரிகின்ற் மறுதரப்பு யுத்தத்தை நிறுத்தி ஆயுதங்களை மெளனித்த பிறகு நடத்தப்பட்ட இந்த தாக்குதல்கள் அந்த 150,000 மக்களையும் கொல்லும் நோக்குடனேயே ( intention ) நடந்தது. இது இனப்படுகொலையே.

இப்படி மக்கள் மீது தாக்குதல் நடப்பது குறித்து விடுதலைப்புலிகள் என்னிடம் அறிவித்தார்கள். அதை நான் அப்போது பேச்சில் ஈடுபட்டிருந்த பஸில் ராஜபக்சவுக்கு அறிவித்து அத்தாக்குதலை நிறுத்துமாறு கேட்டிருந்தேன். அவர் பாதுகாப்பு அமைச்சோடு கதைத்துவிட்டு , அப்படி செய்ய முடியாது என பாதுகாப்பு அமைச்சு சொன்னதாக கூறினார். இதற்கு நான் சாட்சி.

நீங்கள் குற்றம் செய்யவில்லை எனில் ஏன் நீதியான விசாரணைக்கு அஞ்சி ஒழிகிறீர்கள். நீங்கள் பிழை அற்றவர்கள் எனில் அதை பயமின்றி உறுதிப்படுத்த சர்வதேச விசாரணைக்கு வாருங்கள் என்றே கேட்கிறோம். யுத்தம் முடிந்து 13 ஆண்டுகளின் பின்னரும் தம்ழிஅர் வாழ்விடங்களில் பெருந்தொகை இராணுவம் குவிக்கப்பட்டு இருக்கிறது . வன்னியில் 5:1 எனும் விகிதத்தில் இராணுவம் இருக்கிறது. உண்மை வெளிவந்துவிடும் என இராணுவத்தை குவித்து வைத்திருகிறீர்கள்?

தமிழர்கள் யாருக்க்கும் எதிரிகள் அல்ல, அவர்கள் யாருடனும் போர் புரிய விரும்பவும் இல்லை.அவர்கள் கேட்பதெல்லாம் தமக்கு உரித்தான உரிமைகளை மட்டும் தான். இந்த நாடு பல் தேசமுள்ள நாடு என்பதை ஏற்றுகொள்ளுங்கள்.அப்போதுதான் நீடித்த சமாதான்ம் கிடைக்கும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் இலங்கையர் சித்திரவதைக்குட்படுத்தி கொலை

பாகிஸ்தான் Sialkot பகுதியில் இலங்கை பணியாளர் ஒருவர் கலகக்காரர்களால் சித்திரவதைக்கு உட்படுத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி கடமையை நிறைவேற்ற, அந்நாட்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என இலங்கை எதிர்பார்ப்பதாக வௌிவிவகார அமைச்சின் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் – சியல்கோட் வைராபாத் வீதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சித்திரவதைக்குட்படுத்தி கொலை செய்துவிட்டு உடலை எரியூட்டியுள்ளதாக பாகிஸ்தானின் DON இணையத்தளம் செய்தி வௌியிட்டுள்ளது.

சியல்கோட்டிலுள்ள தனியார் தொழிற்சாலையொன்றில் பொது முகாமையாளராக கடமையாற்றிய ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் பெயர் பிரியந்த குமார என அந்த இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுவோர் அவலமான சம்பவம் என பஞ்சாப் மாநிலத்தின் முதலமைச்சர் ஹுஸ்மான் புஸ்டார் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தில் சட்டத்தை கையில் எடுத்துள்ளமை கண்டிக்கத்தக்க விடயம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், குறித்த இலங்கை பிரஜை கொலை செய்யப்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

இந்த விடயம் தொடர்பில் அறிவதற்காக, பாகிஸ்தானின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் ஓய்வுபெற்ற வைஸ் அட்மிரல் மொஹான் விஜேவிக்ரமவை தொடர்புகொள்ள முயற்சித்த போதிலும், உயர்ஸ்தானிகர் கூட்டமொன்றில் இருப்பதாக அலுவலக அதிகாரி ஒருவர் கூறினார்.

சம்பவம் தொடர்பில் சரியான தகவல்கள் கிடைக்கப்பெற்றதும் இது தொடர்பில் உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.

Posted in Uncategorized

இலங்கை இராணுவத்தினரால் ஊடகவியலாளர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் மிகுந்த கவலையளிக்கின்றன – சர்வதேச மன்னிப்புச்சபை

வடமாகாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் இலங்கை இராணுவத்தினரால் அச்சுறுத்தப்படுகின்ற மற்றும் தாக்கப்படுகின்ற சம்பவங்கள் அதிகரித்துவருகின்றமை மிகவும் கவலையளிப்பதாகத் தெரிவித்துள்ள சர்வதேச மன்னிப்புச்சபை, இத்தகைய சம்பவங்களை உடனடியாக முடிவிற்குக்கொண்டுவருவதுடன் இலங்கை அரசாங்கமும் அதன் அதிகாரிகளும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்திற்கு மதிப்பளித்து அதனைப் பாதுகாக்கும் வகையில் செயற்படவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

மாவீரர் நாளான கடந்த சனிக்கிழமையன்று முல்லைத்தீவின் முள்ளிவாய்க்கால் பகுதியில் செய்தி அறிக்கையிடலில் ஈடுபட்டிருந்த பிராந்திய ஊடகவியலாளரொருவர்மீது இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதில் படுகாயமடைந்த அவர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

அதுமாத்திரமன்றி குறித்த ஊடகவியலாளர் தனக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய காயங்களைக் காண்பித்து, இராணுவ சிப்பாய் ஒருவர் முட்கம்பி சுற்றப்பட்ட பனை மட்டையினால் தாக்கியமையினாலேயே அந்தக் காயங்கள் ஏற்பட்டதாகக் கூறுகின்ற காணொளியொன்று சமூகவலைத்தளங்களில் அதிகளவானோரால் பகிரப்பட்டதுடன் அதற்குப் பல்வேறு தரப்பினரும் தமது கண்டனங்களை வெளியிட்டிருந்தனர்.

இதுகுறித்து சர்வதேச மன்னிப்புச்சபை அதன் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது. அப்பதிவில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

முள்ளிவாய்க்கால் பெயர்ப்பலகையை கடந்த நவம்பர் மாதம் 27 ஆம் திகதி புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த தமிழ் ஊடகவியலாளர் விஷ்வசந்திரன் நான்கு இராணுவ சிப்பாய்களால் தாக்கப்பட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் மிகுந்த கவலையடைந்திருக்கின்றோம்.

இலங்கை இராணுவத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் இச்சம்பவம் தொடர்பில் இராணுவப்பொலிஸாருடன் இணைந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டிருந்தது.

குறித்தவொரு சம்பவம் தொடர்பான விசாரணை பயனுள்ளதாக அமையவேண்டுமெனின், அவை துரிதமானவையாகவும் பக்கச்சார்பற்றவையாகவும் இருக்கவேண்டும். இருப்பினும் இச்சம்பவம் குறித்த விசாரணைகளில் அத்தகைய காரணிகள் போதியளவில் பூர்த்திசெய்யப்படவில்லை.

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறுவதிலும் தண்டனை பெறுவதிலும் இருந்து இலங்கை இராணுவம் பல தசாப்தகாலமாக விலகிவருகின்றது.

இவ்வாறானதொரு பின்னணியில் தற்போது வடமாகாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் இராணுவ சிப்பாய்களால் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவதுடன் தாக்கப்படுகின்ற சம்பவங்கள் அதிகரித்துவருகின்றன. இவை உடனடியாக முடிவிற்குக்கொண்டுவரவேண்டும்.

அதுமாத்திரமன்றி ஊடகவியலாளர்கள் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் பங்களிப்புச்செய்யக்கூடிய வகையில் செயற்திறனுடன் பணியாற்றுவதற்கான சூழலை உறுதிசெய்யும் அதேவேளை, இலங்கை அரசாங்கமும் அதன் அதிகாரிகளும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்திற்கு மதிப்பளிப்பதுடன் அதனைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் ஏற்றவகையில் செயற்படவேண்டும்.

அடக்குமுறைகள் தொடர்பான அச்சமின்றி செயற்படுவதற்கு அவசியமான கடப்பாடுகள் சர்வதேச சட்டத்திற்கு அமைவாக நிறைவேற்றப்படவேண்டும் என்று மன்னிப்புச்சபை வலியுறுத்தியுள்ளது.

Posted in Uncategorized

எமது நாட்டு பாதுகாப்புக்கு வெளிநாட்டு அச்சுறுத்தல் உள்ளதா?. – ரெலோவின் செயலாளர் நாயகம் ஜனா

எமது நாட்டின் பாதுகாப்புக்கு ஏதாவது வெளிநாட்டு அச்சுறுத்தல் உள்ளதா?. அல்லது உள்நாட்டுக் கிளர்ச்சி ஏற்படலாம் என்ற ஆதாரபூர்வ புலனாய்வுத் தகவல் உள்ளதா?. தாக்குதல் நடக்கும் என்ற புலனாய்வுத் தகவல்கள் வெளிநாடுகளிலிருந்து வந்தும் கூட அந்தத் தாக்குதல்களைத் தடுக்க முடியாத ஒரு நாட்டுக்கு இந்தளவு பாதுகாப்புச் செலவீனம் தேவைதானா? என்று தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் நாயகமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இன்று பாதுகாப்பு அமைச்சு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவரது உரையின் முழு வடிவம்,

இந்த உயரிய சபை எத்தனையோ ஆளுமைகள் கொண்ட நிதி அமைச்சர்களின் வரவு செலவுத்திட்ட உரைகளைச் செவிமடுத்துள்ளது.

சுதந்திரமடைந்த காலத்திலிருந்து சிம்மாசனப் பிரசங்கள் மூலம் அரச கொள்கைகள் வெளிக்கொணர்ந்த முறைமை குடியரசு அரசியலமைப்புக்குப் பின்னர் வரவு செலவுத்திட்டம் ஊடாகவே வெளிப்படுத்தும் முறை ஆரம்பமாகியது.

ஒரு நாட்டின் வரவு செலவுத்திட்டம் வெறுமனே இலக்கங்களும் எழுத்துக்களும் கொண்ட அறிக்கையல்ல. அடுத்த வருடத்துக்கான நாட்டின் வருமான மூலங்கள், அதன் செலவின மதிப்பீடுகள், வரவு செலவுத்திட்டப் பற்றாக்குறைகள், அதனைக் குறைநிரப்பும் வழிமுறைகளை தெளிவான முறையில் வெளிப்படுத்தும் கூற்றாக அமைய வேண்டும்.

எனக்கு இன்னும் ஞாபகமிருக்கிறது. அந்த நாட்களில் வரவு செலவுத்திட்ட உரைகளைச் செவிமடுப்பதற்காக கிராமங்கள் தோறும் மக்கள், வானொலிப்பெட்டியருகில் காதை வைத்துக் கொண்டு செவிமடுத்துக் கொண்டிருப்பார்கள், பாராளுமன்றக் கலரிகள் கூட பொருளாதார வல்லுனர்கள், முதலீட்டாளர்கள், வர்த்தகர்கள், தனியார் துறையினர், அரச அலுவலர்கள், ஆர்வமுள்ள நாட்டின் பொது மக்கள் ஏன் வெளிநாட்டு இராஜதந்திரகள் கூட சபாநாயகரின் கலரியினை நிறைத்திருந்து அதனை அவதானிக்கும் நிலை இருந்தது. ஆனால், இந்த வரவு செலவுத்திட்டத்தில் முற்றிலும் நிலைமை தலைகீழாகவே இருந்ததை நோக்க முடிகின்றது.

குறிப்பாக உப்புச்சப்பற்ற ஒரு சம்பிரதாயபூர்வ நிகழ்வாக இது நிகழ்ந்தேறியுள்ளது. இதுவே இந்த வரவு செலவுத்திட்ட உரைமீதான எனது ஒரு வரி விமர்சனம்.

இந்த அரசாங்கம் மூன்று விம்பங்களைக் கொண்ட பெரும் தூண்களின் மேல்தான் கட்டியெழுப்பப்பட்டது. அது மஹிந்த ராஜபக்ச எனும் பிம்பம், கோட்டபாய ராஜபக்ச என்னும் பிம்பம், பௌத்த சிங்கள  பேரினவாதம் எனும் பிம்பம்.

ஆனால் கடந்த இரு வருட காலத்தில் மஹிந்த  ராஜபக்ச, கோட்டபாய ராஜபக்ச எனும் இரு பிம்பங்கள் கொண்ட தூண்களும் ஆட்டம் காணத் தொடங்க நான்காவது தூணின் அவசியம் உணரப்பட்டு அது எண்ணை விலை உணர்வு என்ற நாடகம் மூலம் பசில் ராஜபக்சவினை பாராளுமன்ற உறுப்பினராக்கி நிதி அமைச்சர் என உயர்த்தி அரசைத்தாங்கும் நான்காவது தூணாக  இருத்த முனைந்தது.

அலாவுதீனின் அற்புத விளக்கோடு பொருளாதார அற்புதங்களையும் நிகழ்த்துவார் என்ற பெரும் எதிர்பார்க்களுடன் பாராளுமன்றம் வந்து நிதியமைச்சராகி இன்று இந்த வரவு செலவுத்திட்டத்தினை வெற்றுப் பானையாக வெறும் எழுத்துக்களுடனும் இலக்கங்களுடனும் சமர்ப்பித்துள்ளார்.

இந்த வரவு செலவுத்திட்டத்தினை எதிர்க்கட்சியினர் மாத்திரமல்ல நடுநிலை நின்று ஆய்வு மேற்கொள்ளும் பொருளாதார நிபுணர்கள் வர்த்தகர்கள், பொது மக்கள், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் என அனைத்துத் தரப்பினருமே தத்தமது துறைகளில் உப்புச்சப்பற்ற வரவு செலவுத்திட்டம் என்றே உரைக்கின்றனர். விமர்சிக்கின்றனர். அரச அமைச்சர்கள், அரசின் பங்காளிக் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மெல்லவும் முடியாது விழுங்கவும் முடியாது வரவு செலவுத்திட்ட உரை மீது தமது விமர்சனத்தினை முன்வைத்து வருகின்றனர்.

இந்த வரவு செலவுத்திட்டத்தின் குழுநிலை விவாதத்தின் மீதான எனது உரை, பாதுகாப்பு அமைச்சு, அரச பாதுகாப்பு அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சு, மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு என்பவற்றின் மீதானதாகும். இந்த அமைச்சுக்களுக்கான மொத்த ஒதுக்கீடு வரவு செலவுத்திட்டத்தின் மொத்தச் செலவீனத்தின் 19.56வீதமாகும். இது ஏறக்குறைய வரவு செலவுத்திட்டத்தின் ஐந்தில் ஒருபங்காகும். உலக வல்லரசாகவும் உலக யுத்த வலுச்சமநிலையை தக்க வைப்பதும் உலக பொருளாதார நிலைமையினை தீர்மானிக்கும் சக்திவாய்ந்த வல்லரசு நாடான ஐக்கிய அமெரிக்காவின் பாதுகாப்புச் செலவீனம் அதன் மொத்த வரவு செலவுத்திட்டத்தின் 39சதவீதமாகும். இது உலக அரங்கில் அந்நாட்டின் நிலை பொறுத்து ஏற்கத்தக்கதேயொழிய, வியக்கத்தக்கதல்ல.

தென்னாசியப் பிராந்தியத்தின் வல்லரசு எனவும் தென்னாசியாவின் அரசியல் பொருளாதார வெளி விவகாரங்களைத் தீர்மானிக்கும் இந்தியாவின் 2020-21ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் பாதுகாப்புச் செலவீனங்களுக்கான ஒதுக்கீடு மொத்த வரவு செலவுத்திட்டத்தின் 14.5 வீதமாகும். இத்தனைக்கும் இந்தியா தனது இருபுற எல்லைகளிலும் யுத்த நிலைமையினை நித்தமும் எதிர் கொள்ளும் ஒரு நாடாகும்.

பிராந்திய வல்லரசான இந்தியாவோடு நித்தமும் முட்டிமோதுவது மாத்திரமன்றி நாடு உருவான காலம் முதல் இந்தியாவோடு பகைமையினை வெளிக்காட்டும் பாகிஸ்தான் நாட்டின் பாதுகாப்புச் செலவீனமோ 2021ஆம் ஆண்டில் அதன் மொத்த வரவு செலவுத்திட்டத்தில் 18.4 வீதமாகும்.

இவை உலக நாடுகள் பாதுகாப்புச் செலவீனங்கள் தொடர்பான ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் போன்று சிறிய உதாரணமேயாகும்.

எமது நாட்டின் தற்போதைய நிலைமையில் அதாவது, உலகளாவிய கொவிட்- 19 பெருந்தொற்று அவலம் அது ஏற்படுத்திய பொருளாதார வீழ்ச்சி அதிலிருந்து மீள முடியாத எமது அரசின் தவறான கொள்கைகள், அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையினால் வீழ்ச்சியடைந்த உற்பத்தித் துறை, திட்டமிடாத முறையில் எழுந்தமானமாக ஒரே மூச்சில் மேற்கொள்ளப்பட்ட சேதன உரக் கொள்கையினால் பெருந்தோட்ட விவசாயம், நெல் உற்பத்தி, உப உணவு உற்பத்தி என்பன வீழ்ச்சியடைந்து சோமாலியா போல் மாறுவது தவிர்க்க முடியாத ஒரு நிலை.

சென்மதி நிலுவை பற்றாக்குறை, டொலர் நெருக்கடி, வானைத் தொடும் அளவுக்கு விலைவாசி உயர்வு, இவற்றை திட்டமிட்ட முறையில் தீர்ப்பதற்கான எந்தவிதமான தீர்க்கதரிசனம் கொண்ட முன்மொழிவுகள் இல்லாத இந்த வரவுசெலவுத்திட்டத்தில், ஒட்டு மொத்த  பாதுகாப்புத் துறைகளுக்கு நாட்டின் மொத்த வரவு செலவுத்திட்டத்தில் ஐந்தில் ஒரு பங்கினை ஒதுக்கீடு செய்வது அவசியமா?. அல்லது இதை ஏற்றுக் கொள்ளத்தான் முடியுமா?.

இன்று எமது நாட்டின் பாதுகாப்புக்கு ஏதாவது வெளிநாட்டு அச்சுறுத்தல் உள்ளதா?. அல்லது உள்நாட்டுக் கிளர்ச்சி ஏற்படலாம் என்ற ஆதாரபூர்வ புலனாய்வுத் தகவல் உள்ளதா?. தாக்குதல் நடக்கும் என்ற புலனாய்வுத் தகவல்கள் வெளிநாடுகளிலிருந்து வந்தும் கூட அந்தத் தாக்குதல்களைத் தடுக்க முடியாத ஒரு நாட்டுக்கு இந்தளவு பாதுகாப்புச் செலவீனம் தேவைதானா?

உள்நாட்டு யுத்தம் நிகழ்ந்த காலத்தில் அந்த யுத்தத்திற்கான காரண காரியம் உணராது அதன் தார்ப்பரியம் புரியாது, போராடியவர்கள் நம்நாட்டவர்கள் என்பதையும் உணராது பேரினவாத முனைப்பில் யுத்தத்தை நடத்தினீர்கள். அதற்காகப் பாதுகாப்புச் செலவீனத்தை உயர்த்தினீர்கள். பாதுகாப்புத்துறையின் மூலதனச் செலவீடு அதிகரித்துச் சென்றது. அதனையொட்டி அதற்கான நடைமுறைச் செலவுகளும் அதிகரித்துச் சென்றது.

எம்மால் இதனை ஏற்றுக் கொள்ள முடியாவிட்டாலும் உங்கள் பார்வையில், நீங்கள் அதனை நியாயப்படுத்தினீர்கள். ஆனால் இன்று இந்த அளவு பாதுகாப்புச் செலவீனம் அதிகரிப்பதற்கு நீங்கள் எந்த நியாயத்தைக் கற்பிக்கப் போகின்றீர்கள்.

அரசாங்கத்தின் தேவை ஆட்சியைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ளுதல். பெரும்பான்மை இனத்தின் பெரும்பான்மை வாக்குகளால் வெற்றிகொண்டோம் என்று பெருமை பேசிய நீங்கள் இன்று பெரும்பான்மை இனத்தின் பெரும்பான்மையினரால் படுமோசமாக விமர்ச்சிக்கப்படுகின்றீர்கள்.

இன்று உங்களுக்குத் தேவை இந்த நாட்டில் மீண்டும் பேரினவாதிகளின் ஆதரவுத் தளத்தைத் தக்கவைத்துக் கொள்வது ஒன்றேயாகும். அதற்காக இல்லாத பயங்கரவாதத்தை இல்லாத இனத்துவ வாதத்தை இல்லாத மொழிப்பிரச்சினையினை இருப்பதாகக் காட்டி அமைதியாக வாழும் பௌத்த சிங்கள,  பௌத்த கத்தோலிக்க, இந்து, இஸ்லாமிய மக்களிடையே பகைமையினையும் பிணக்கினையும் ஏற்படுத்த முயல்கின்றீர்கள். மத முரண்பாடு, இன முரண்பாடு, மொழி முரண்பாடு என்பவற்றை ஏற்படுத்தி அதன் நெருப்பில் குளிர் காய்ந்து ஆட்சி அதிகாரத்தைத் தொடர்ந்து சுவைப்பதற்கு முயற்சிக்கின்றீர்கள். இதற்கு எதிராக ஜனநாயக ரீதியாக கிளர்ந்தெழும் மக்களை பாதுகாப்புத் துறை கொண்டு நசுக்க முயல்கின்றீர்கள். இதற்காகவா பாதுகாப்புத் துறைக்கு இந்தளவு நிதியினை ஒதுக்கியுள்ளீர்கள்.

சொந்த நாட்டு மக்கள் மீதா உங்கள் பாதுகாப்பு பலத்தினைப் பிரயோகிக்க முயல்கின்றீர்கள். இதற்காகவா, இத்தனை பாதுகாப்புச் செலவினை ஒதுக்கியுள்ளீர்கள்.

நாட்டில் அமைதியான சூழல் நிலவுவதை ஆட்சியாளர்களான நீங்கள் விரும்பவில்லை. யுத்தம் நடைபெறும் நாடொன்றில் இரு தரப்புக்களிலும் உயிரிழப்புக்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாது என நீங்கள் கூறுகின்றீர்கள். அவ்வாறு ஏற்பட்ட உயிரிழப்புக்களை நினைவுகூருவதற்கு ஒரு தரப்புக்கு மாத்திரம் மறுக்கப்படுகின்றது. மீண்டும் ஒரு இருண்ட யுகம் போல வெள்ளை வான் மாத்திரம் இல்லாது ஊடக அடக்கு முறையும் ஆரம்பமாகிவிட்டது. இதையெல்லாம் இருப்பதாகக் காட்டிக் கொண்டால்தான் பேரினவாதிகளின் பேராதரவு உங்களுக்கு இருக்கும் என்ற எண்ணத்தில் இவற்றை மேற்கொள்கின்றீர்கள்.

கொவிட் – 19 பெருந்தொற்றினை உங்களது தவறான கொள்கைகளால்  கட்டுப்படுத்த முடியாது தமது உயிரினைக் கூட துச்சமென மதித்து கடமையாற்றிக் கொண்டிருக்கும் அலுவலர்களைக் கொண்ட சுகாதாரத்துறைக்கு ஒதுக்கீடு 6.13 வீதம். உற்பத்தித் துறைக்கு முக்கிய பங்களிக்கும் விவசாயத்துறைக்கு 0.97 வீதம்.

ஒட்டு மொத்த பாதீட்டு ஒதுக்கீட்டை நோக்கும் போது இது மக்கள் நலன் சார்ந்த, நாட்டு நலன் சார்ந்த பாதீடாக நோக்க முடியவில்லை. சில ஒதுக்கீடுகளின் அதிகரிப்பினை நோக்கும் பொழுது அது பேசன்ரேஜ் பெறுவதற்கான ஒதுக்கீடாகவே நோக்க முடிகிறது.

ஒரு வகையில் இது மக்கள் நலன் சார்ந்த பாதீடு என்பதை விட, நாட்டின் பொருளாதார நலன் சார்ந்த பாதீடு என்பதை விட, ஆட்சியாளர்களுக்கான பேர்சன்ரேஜ் பாதீடு என்பதே பொருத்தம் என்பது எனது கருத்தாகும்.

பாதுகாப்புத் தொடர்பாக நான் கூற விரும்புவது இந்து சமுத்திரத்தில் நமது நாட்டின் கேந்திர மையம், பிராந்திய ஒத்துழைப்பு, பிராந்திய அபிவிருத்தி, மற்றும் பிராந்தியப் பாதுகாப்பு என்பன தொடர்பாக நம் நாட்டுக்குத் தேவையான தெளிவான கொள்கை ஒன்று இன்னும் இல்லை. அதை உருவாக்கவும் நீங்கள் முனையவில்லை. தவறான வெளிநாட்டுக் கொள்கைகளை மேற்கொண்டு  நமது நாட்டிற்கே பெருமையுடன் இருந்த அணிசேராக் கொள்கையினை அழித்துவிட்டு தென்னாசியப் பிராந்திய வல்லரசான இந்தியாவுக்கு சவால் விடு;ம் அளவுக்கு கொள்கைகளை வகுப்பதிலேயே நீங்கள் கவனம் செலுத்துகின்றீர்கள். உங்களது அமைச்சரவையின் சில அமைச்சர்களது அறிவீனமான உரைகள் புத்திஜீவித்துவமற்ற உரைகள் இவற்றையே தெளிவாகக் காட்டுகின்றது.

அண்டை நாடான இந்தியாவுடனான வரலாற்று, கலாசார, பாரம்பரிய, மதத்  துறைகளில் இரு நாடுகளுக்குமிடையே பிரிக்க முடியாத பிணக்குகள் ஏற்பட முடியாத இணைப்பு வரலாற்றுக் காலம் முதல் உள்ளது என்பதை நீங்கள் இலகுவாக மறந்து விடுகிறீர்கள். சீனாவை நண்பனாக்கி இந்தியாவைச் சீண்டிக் காரியமாற்ற விளைகின்றீர்கள். ஆபத்தில் காப்பாற்றுவான் என நம்பிய சீனா சேதனப் பசளை விவகாரத்தில் உங்களுக்கு நல்லதொரு பாடத்தைக் கற்றுத் தந்துள்ளது. அதிலிருந்தாவது உங்கள் வெளிநாட்டுக் கொள்கை, தேசிய பாதுகாப்புக் கொள்கைகளின் மீதான தவறுகளைத் திருத்த விளையுங்கள்.

சீனாவை நண்பனாக்குவதற்காக இந்தியாவை எதிரியாக்கும் கொள்கையினை மறந்து இந்தியாவும் சீனாவும் எமது நண்பர்கள் என்ற நிலைமைக்கு உங்களது கொள்கையினை மாற்றுங்கள்.

எமது நாட்டின் பாதுகாப்பு முக்கியம். எமது நாட்டில் மக்கள் இன, மத, மொழி, பால் வேறுபாடு கடந்து சரிநிகர் சமானமாக ஏற்றத்தாழ்வின்றி இணக்கப்பாட்டுடன் வாழவேண்டும் என்பது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய உண்மை. இப்போது நான் உங்களது ஒரு நாடு ஒரு சட்டம் தொடர்பாக ஓரிரு வார்த்தைகள் கூற விரும்புகின்றேன்.

ஒரு நாடு ஒரு சட்டம் என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதே. அது ஒரு நாடு இலங்கை என்பதாகவும், ஒரு சட்டம் என்பது இலங்கை மக்களுக்கான சட்டமாகவும் இருக்க வேண்டும். ஆனால் உங்கள் ஒரு நாடு ஒரு சட்டத்தின் கீழ் நடப்பது என்ன?. உங்களது பார்வையில் நீங்கள் கூறும் ஒரு நாடு ஒரு சட்டம் சொல்வதென்ன.? இது சிங்களப் பௌத்த நாடு. இங்கு சட்டமும் சிங்கள பௌத்த சட்டமே.

இந்த இடத்திலே நாம் எமது நீதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி கௌரவ அலி சப்ரி அவர்களை நினைத்து கவலைப்படுகின்றேன். ஒரு திறமையான இளமையான புத்திகூர்மை கொண்ட அமைச்சர். அவருடைய திறமைக்கு களங்களத்தை ஏற்படுத்தி அவருக்கு சட்டவாக்கம் பற்றி ஆலோசனை வழங்குவதற்கு ஜனாதிபதியவர்கள் நியமித்த ஆலோசனைக் குழுவினை நோக்கும் பொழுது நான் உண்மையில் எமது நீதியமைச்சர் குறித்துக் கவலைப்படுகிறேன்.

அன்று ஆட்சிக் கட்டிலில் ஏறும் நோக்கம் ஒன்றையே இலக்காகக் கொண்டு எஸ்.டப்ளியூ. ஆர்.டி.பண்டாரநாயக்கா ஆட்சியமைத்து 24 மணி நேரத்தில் சிங்களம் மட்டும் சட்டத்தினைக் கொண்டு வருவேன் எனக் கூறி  பௌத்த சிங்கள மக்களினை உணர்ச்சி வசப்படுத்தி அவர்களது உணர்ச்சியினை தான் ஆட்சியமைப்பதற்கான அத்திவாரமாக்கினார். அன்று அவர், ஆட்சிக்காக மூட்டிய தீப்பொறி 6 தசாப்த காலமாக இந் நாட்டில் கொழுந்து விட்டெரிந்தது. அது முறையாக அணையமுன்பு ஒரு நாடு ஒரு சட்டமென்று இன்னொரு தீப்பொறியினை ஏற்றுவதற்கு முயல்கின்றீர்கள்.

ஆட்சியதிகாரத்தினைத் தக்க வைக்க வேண்டும் என்ற உங்களது இந்த ஆர்வத்தால் நீங்கள் மூட்டும் இரண்டாவது தீப்பொறி இன்னும் எத்தனை தசாப்தங்களுக்கு நாட்டை எரிய வைக்கப் போகின்றதோ, வரலாற்றிலிருந்து நீங்கள் பாடம் எதனையும் கற்கவில்லை. மீண்டும் மீண்டும் வரலாற்றுத் தவறுகளை இழைத்துக் கொண்டு செல்கின்றீர்கள்.

இதே போன்றுதான் கிழக்குத் தொல்பொருள் ஜனாதிபதி செயலணி என்று ஒன்றை அமைத்து கிழக்கு வாழ் தமிழ், முஸ்லிம்களது பாரம்பரிய வழிபாட்டிடங்களையும், பாரம்பரிய நிலங்களையும் கபளீகரம் செய்ய முயற்சிக்கின்றீர்கள்.

யுத்தம் முடிவடைந்து 12 வருடங்களுக்கு மேலாகியும் வடக்குக்கிழக்கில் இராணுவ முகாம் அமைப்பதும், புதிய படையணிகளை உருவாக்கி அவற்றை வடக்குக் கிழக்கில் இருந்தி வைப்பதும் இன்னமும் முன்னர் கையகப்படுத்திய தனியார் நிலங்களினை மீளக் கொடுக்காது புதிதாக படைத்துறை முகாம் அமைப்பதற்காக பொதுமக்களின் காணிகளை கபளீகரம் செய்வதும் நாளாந்தம் நடக்கும் நிகழ்வுகளேயாகும்.

உங்களை ஆட்சி பீடம் ஏற்றி அலங்கரித்து அழகுபார்த்த பெரும்பான்மை இனத்தின் பெரும்பான்மை மக்கள் இன்று உங்களைச் சரியாhக இனங்கண்டுள்ளார்கள். முறையானதும் சரியானதும், பொருத்தமானதுமான  தீர்மானம் எடுக்க முடியாதவர்கள் என்பதனை அவர்கள் இனங்கண்டுவிட்டார்கள். இன்று நாட்டில் எழுந்துள்ள வெகுசனக் கிளர்ச்சி இதனை நன்கு வெளிக்காட்டி நிற்கின்றது.

வெளிநாட்டில் விலையுயர்வு ஏற்படின் உள்நாட்டில் விலையும் உயரவேண்டுமென்றால், ஜனாதிபதி எதற்கு, நிதியமைச்சர் எதற்கு. அமைச்சரவை எதற்கு என்று ஓங்கி ஒலித்து லிப்ரன் சுற்றுவட்டத்தை அன்று கலவர பூமியாக்கிய விமல் வீரவன்ச, உதய கமம்பம்பில, வாசுதேவ நாயக்கார போன்றவர்கள் இன்று எங்கே.?

எரிபொருள் விலை ஐந்து ரூபாவால் உயர்த்தப்பட்ட போது பாராளுமன்றத்துக்கு மிதி வண்டியில் படை குடி சகிதம், இன்றைய பிரதமர் மஹிந்த ராஜபக்ச சகிதம் வந்த போராட்ட வீரர்கள் எங்கே. 2500 ரூபாவுக்கு ஒருமாதம் ஒரு குடும்பம் வாழ முடியும் என்ற பொருளாதார நிபுணர் பந்துள குணவர்த்தன எங்கே?

இறுதியாக,

மக்கள் கிளர்ச்சி ஆரம்பித்து விட்டது. அது ஆட்சி மாற்றத்தில் மட்டுமே முடியும். அது வரை வேண்டுமானால் உங்கள் அராஜகத்தைத் தொடரலாம். ஆனால், இறுதி வெற்றி நாட்டுக்கும் எமது மக்களுக்குமேயாகும். நீங்கள் அனுபவிக்கும் வெற்றி ஒரு சிறிய காலமாகவே அமையும்.

Posted in Uncategorized

கனேடிய உயர்ஸ்தானிகருடன் கூட்டமைப்பினர் சந்திப்பு

கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மக்கினான் மற்றும் உதவியாளர் டானியல் பூட் ஆகியோருடனான அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு ஒன்றை கூட்டமைப்பினர் மேற்கொண்டிருந்தனர்.

இன்று வெள்ளிக்கிழமை முன்பகல் கொழும்பிலுள்ள உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இச்சந்திப்பு நடைபெற்றது.

இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் நாயகமுமான கோ. கருணாகரம், மத்திய குழு உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் மற்றும் ரெலோவின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இச் சந்திப்பின் போது தற்போதுள்ள அரசியல் சூழ்நிலைகள், எதிர்கால நடவடிக்கைகள் பற்றி விளக்கமளிக்கப்பட்டது. ஐநா மனித உரிமை பேரவையின் 46/1 பிரேரணைக்கு பிரதான பங்கு வகித்த நாடான கனடாவுடனான இச் சந்திப்பு தமிழ் தரப்பின் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இச்சந்திப்பு என்று ரெலோவின் ஊடகப்பேச்சாளர் சுரேந்திரன் தெரிவித்தார்.

 

வடமாகாண ஆளுநர் காணிகளை பிடிக்கும் அரச படைகளுக்கான முகவரா? ரெலோ இளைஞர் அணித் தலைவர் சபா குகதாஸ்

வடமாகாண ஆளுநர் ஜீவன் பொது மக்களின் காணிகளை பிடிக்கும் அரச படைகளுக்கான முகவரா? என்று தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் இளைஞர் அணித்தலைவரும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான சபா குகதாஸ் கேள்வியெழுப்பியுள்ளார்.

வடமாகாணத்திலுள்ள காணிகளை அரச படையினரால் கைப்பற்றப்பட:டு வருகின்றமை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்,

வடக்கு மாகாணத்தில் பொது மக்களின் காணிகளை அரச படைகள் பிடிக்கும் நிகழ்ச்சி அண்மைய நாட்கள் முல்லைத்தீவு , வடமராட்சி கிழக்கு, மண்டைதீவு, காரைநகர், மாதகல் , வடமராட்சி வடக்கு வவுனியா வடக்கு, என தீவிரமாக முன்னகர்த்தப்படுகிறது. இதற்கு நில அளவைத் திணைக்கள அதிகாரிகளும் ஆயுதம் தரித்த படைகளும் பயன்படுத்தப்படுகின்றனர்.

காணி அபகரிக்கும் செயற்பாட்டிற்கு இடையூறாக யாரும் இருந்தால் எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக வடமாகாண ஆளுநர் அறிக்கை ஒன்றை 01/12/2021 வெளியிட்டுள்ளார். இது மிக வேதனையான விடயம் காரணம் காணி சுவீகரிப்பு என்பது பிரதேச செயலங்களின் ஒருங்கிணைப்புக் கூட்டங்களில் தீர்மானங்களாக எடுத்தே மேற்கொள்ள முடியும் என்ற ஒழுங்கு முறை இருக்கும் போது சட்ட முறையற்ற வகையில் தனியாருக்கு சொந்தமான காணிகளை சுவீகரித்தல் என்ற பெயரில் படை முகாம்கள் அமைக்க அபகரிக்க முடியாது.

மக்கள் பிரதிநிதிகளை மக்கள் அழைக்கும் போது அதில் கலந்து கொண்டு அதற்காக நியாயம் கேட்பது மக்கள் பிரதிநிதிகளின் கடமை அவர்கள் அதனை செய்யும் போது சட்ட நடவடிக்கை எடுப்பேன் என கூறும் போது நீங்கள் ஆளுநரா? இல்லை பொது மக்களின் காணிகளை அரச படைகளுக்கு முகாம் அமைப்பதற்கு பிடித்துக் கொடுக்கும் முகவரா?

அரசியல் தீர்வில் அமெரிக்க – இந்திய கூட்டு?

சுமந்திரன் பங்குகொள்ளும் விடயங்களில் சர்ச்சைகள் ஏற்படுவது சாதாரணமான ஒன்று. இப்படித்தான் இப்போது ஏற்பட்டிருக்கும் சர்ச்சைகளையும் நோக்க வேண்டும். சுமந்திரன் தலைமையிலான குழுவொன்று அமெரிக்கா செல்லவுள்ளதாக செய்திகள் வெளியான நாளிலிருந்தே இவ்வாறான சர்ச்சைகள் ஆரம்பித்துவிட்டன. பின்னர், சுமந்திரன் தரப்போடு, உலகத் தமிழர் பேரவையின் பிரதிநிதிகள் இணைந்த போது, மேலும் புதிய சர்ச்சைகள் ஏற்பட்டன. இறுதியில் கூட்டமைப்பினரின் அமெரிக்க பயணமே ஒரு சர்ச்சைக்குரிய ஒன்றாக நோக்கப்படுமளவிற்கு நிலைமைகள் மாறியது.

சுமந்திரன் என்னும் தனிநபர் தொடர்பான சர்ச்சைகளை ஓரு புறமாக வைத்துவிட்டு – விடயங்களை ஆழமாக நோக்க வேண்டியதே இப்போது முக்கியமானது.
சுமந்திரன் தலைமையில் ஒரு குழுவினர் அமெரிக்கா செல்லவுள்ளதான செய்தி வெளியான சூழலில்தான், கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான டெலோ, டி.பி.எல்.எப் (புளொட்) மற்றும் விக்கினேஸ்வரன் தரப்பு ஆகியோர் இணைந்து, இந்தியப் பிரதமர் மோடியிடம் – அதாவது இந்தியாவிடம் ஒரு கோரிக்கையை முன்வைப்பது தொடர்பாக, யாழ்ப்பாணத்தில் கூடி ஆராய்ந்திருந்தனர். தமிழரசு கட்சியையும் இணைத்துக் கொண்டு அடுத்த கட்டம் தொடர்பில் ஆராயும் முடிவுடன் குறித்த சந்திப்பு கலைந்தது.

இதனடிப்படையில் உடனேயே ஒரு கொன்ஸ்பிரசி (சதிக் கோட்பாடு) அரசியலும் மெதுவாக எட்டிப்பார்த்தது. அதாவது, இந்தியாவிடம் ஒரு கோரிக்கையை முன்வைக்கும் முயற்சியை மழுங்கடிக்கும் வகையிலேயே, சுமந்திரனின் அமெரிக்க பயணம் இடம்பெறுகின்றது. இது இந்தியாவை விட்டுவிட்டு தனித்து ஓடுவதற்கான முயற்சியென்றும் சிலர் பேச முற்பட்டனர். தமிழ் சூழலில் எப்போதுமே இ;வ்வாறான கொன்ஸ்பிரசி அரசியலுக்கு பஞ்சமிருந்ததில்லை.

ஆனால் சுமந்திரன் கனடாவில் பேசுகின்ற போது, இந்திய – அமெரிக்க கூட்டின் மூலம் அரசியல் தீர்வொன்றை காணும் முயற்சியில் தாம் ஈடுபட்டிருப்பதாக தெரிவித்;திருக்கின்றார். அதே வேளை தமது பயணம் தொடர்பிலும், தங்களுடைய கலந்துரையாடல்கள் தொடர்பிலும் அமெரிக்காவிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகருக்கு விளக்கமளித்துள்ளதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார். அதே வேளை சுமந்திரன் குறிப்பிட்டிருக்கும் பிறிதொரு கருத்து முக்கியமானது. அதாவது, இந்தியா ஒன்றுதான் ஈழத் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு எவ்வாறானதாக அமைந்திருக்க வேண்டுமென்பது தொடர்பில் பேசிவருகின்றது. இந்த அடிப்படையில் உலக வல்லரசான அமெரிக்காவும் பிராந்திய வல்லரசானா இந்தியாவும் அரசியல் தீர்வு விடயத்தில் சேர்ந்தியங்கும் வகையிலான முயற்சிகளிலேயே தாம் ஈடுபட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.

ஆனால் இங்குள்ள கேள்வி – அது எப்படியான தீர்வு? ஒரு வேளை இந்திய – அமெரிக்க கூட்டில் ஒரு புதிய தீர்வாலோசனை முன்வைக்கப்படுமானால் அதனை கோட்டபாய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் ஏற்றுக்கொள்ளுமா – ஏற்றுக்கொள்ளாவிட்டால் அமெரிக்காவும் இந்தியாவும் எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்? இந்த கேள்விகளுக்கு நிச்சயமாக சுமந்திரனிடம் பதில் இருக்காது. ஒருவேளை ஒரு நம்பிக்கையின் அடிப்படையில் செயற்படுகின்றோம் என்னும் பதிலில் அவர் சரணடையலாம். அது ஒரு இலகுவான பதில்.

இந்தியா ஒன்றுதான் ஈழத் தமிழர் விடயத்தில் ஒரு உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்திவருகின்றது. இதற்கு பக்கபலமாக இருப்பது இந்திய-இலங்கை ஒப்பந்தமாகும். இதன் காரணமாகத்தான் ஈழத் தமிழர் விவகாரம் என்று வருகின்ற போதெல்லாம் – இந்தியாவின் பார்வை, 13வது திருத்தச்சட்டத்தின் மீது மட்டுமே இருக்கின்றது. ஏனெனில் 13இற்கு அப்பால் ஒரு விடயத்தை வலியுறுத்துவதற்கான உரித்தை இந்தியா கொண்டிருக்கவில்லை. அப்படியான ஒன்றை புதுடில்லி வலியுறுத்த வேண்டுமாயின் – இந்தியா அதன் பலத்தை பிரயோகிக்க வேண்டும்.

ஏனெனில், அப்படி பலத்தை பிரயோகித்ததன் மூலம் வந்ததுதான், இந்திய-இலங்கை ஒப்பந்தம் என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது. அவ்வாறான பலத்தை பிரயோகித்த போதும் அது சிங்கள – தமிழ் இரண்டு தரப்புக்களதும் எதிர்ப்பையே இறுதியில் சம்பாதித்தது. ஆனால் இன்றைய நிலைமை அப்படியான ஒன்றல்ல. எனவே, இந்த நிலையில் அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து ஒரு தீர்வாலோசனையை முன்வைப்பதென்பது, மேடையில் பேசுவது போன்று சாதாரணமான ஒரு விடயமல்ல.

ஒருவேளை, ஈழத் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தில், இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயற்படுவதாக இருந்தாலும் கூட, அங்கும் இந்திய- இலங்கை ஒப்பந்தம்தான் ஒரு அரசியல் அஸ்திபாரமாக இருக்க முடியும். இல்லாவிட்டால், அமெரிக்க – இந்திய கூட்டு முயற்சியில் இலங்கையுடன், ஒரு புதிய ஒப்பந்தம் இடம்பெற வேண்டும். அது இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் இரண்டாம் பாகமாக இருக்க வேண்டும். அதாவது, இன்றைய புதிய உலக அரசியல் போக்கிற்கு அமைவாக ஒரு புதிய இந்திய-இலங்கை ஒப்பந்தம் இடம்பெற வேண்டும். அதில் அமெரிக்காவின் நலன்களும் உள்ளடக்கப்பட்டிருக்க வேண்டும்.

இப்படியான ஒரு விடயம் இடம்பெறுகின்ற பட்சத்தில் மட்டும்தான், அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து ஈழத் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தில் தலையீடு செய்கின்ற நிலைமை ஏற்படும். ஆனால் இவ்வாறானதொரு நிலைமை தற்போதைக்கு ஒரு போதையூட்டக் கூடிய கற்பனையாக மட்டுமே இருக்க முடியும்.

ஏனெனில் கொழும்பின் ஆட்சியாளர்களை – முக்கியமாக சிங்கள – பௌத்த கருத்தியல் ஆதிக்கத்தின் பிடிக்குள் சிக்குண்டிருக்கும் தென்னிலங்கை மக்களை பாரதூரமாக விரோதித்துக் கொள்ளும் வகையில் அமெரிக்காவோ, இந்தியாவோ எந்தவொரு முடிவையும் எடுக்கப் போவதில்லை. அமெரிக்கா, அதன் மனித உரிமை சார்ந்த அழுத்தங்களை தொடரும். அதேவேளை, அரசியல் தீர்வு விடயத்தில் அதிகம் தலையீடு செய்யாது. ஏனெனில், அமெரிக்காவின் அணுமுறைகள், இருதரப்பு உறவுகளை பாதிக்காத வகையிலேயே அமைந்திருக்கும். ஈழத் தமிழர்களுக்காக அமெரிக்கா அதன் மூலோபாய நலன்களை ஏன் கெடுத்துக் கொள்ள வேண்டும்? இந்த கேள்வியிலிருந்துதான் விடயங்களை தமிழர் தரப்புக்கள் நோக்க வேண்டும்.

அரசியல் தீர்வை ஒரு ஆசையாகவும் அல்லது வெறும் நம்பிக்கையாகவும் நோக்கக் கூடாது. ஆனால் தமிழ் சூழலில் காணப்படும் அரசியல் தீர்வு தொடர்பான உரையாடல்களை நோக்கும்போது – எங்குமே ஆசையும் வெறும் நம்பிக்கையுமே மேலோங்கியிருக்கின்றது. இதன் காரணமாகவே அமெரிக்கா, இந்தியா தொடர்பில் அளவுக்கதிகமான கற்பனைகள் வெளிப்படுகின்றன.

அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் முன்னரைவிடவும் நெருக்கமான உறவு இருப்பது உண்மை. குறிப்பாக, மோடி தலைமையிலான அரசாங்கம் முன்னைய அரசாங்கங்களைவிடவும் அமெரிக்காவுடன் நெருங்கிச் செயற்படுகின்றது. இந்த பின்புலத்தில்தான், இந்தோ-பசுபிக் குவாட் நகர்வுகளை நோக்க வேண்டும். அதே வேளை இந்தியா அதன் அணிசாரா வெளிவிவகாரக் கொள்கை பாரம்பரியத்தை முற்றிலுமாக இழந்துவிடக் கூடாதென்பதிலும் எச்சரிக்கையுடன் இருக்கின்றது.

அமெரிக்கா சவாலாக பார்க்கும் நாடுகளுடன் கூட இந்தியா தொடர்புகளை பேணிவருகின்றது. உதாரணமாக ரஸ்யா. அதே வேளை முற்றிலும் சீன எதிர்ப்பு கொள்கைக்குள்ளும் இந்தியா இல்லை ஆனால், இந்தியாவின் பிராந்திய செல்வாக்கை கேள்விக்குள்ளாக்கும் வகையிலான சீன நகர்வுகள் தொடர்பிலும் இந்தியா எச்சரிக்கையுடன் இருக்கின்றது.

ஆசியாவில் சீனாவின் எழுச்சியென்பது இந்தியாவிற்கு நெருக்கடியான ஒன்றுதான். சீன எழுச்சியின் இலக்கு தெளிவானது, அதாவது, ஆசியாவில் ஒரு ஒரு மேலாதிக்க அதிகாரமாக தங்களை நிலைநிறுத்திக் கொள்வது. சீன ஜனாதிபதி சி-ஐpன்பிங்கின் இலக்கு இதுதான். சீனாவின் ஆசிய மேலாதிக்க கனவானது, ஒரு உறையில் இரண்டு ஈட்டிகளை போன்ற உபாமாகவே இருக்கும். முதல் ஈட்டியில், அதன் இலக்கு ஆசியாவின் மீதான அமெரிக்க செல்வாக்கை நிர்மூலமாக்குவது.

இரண்டாவது ஈட்டியில் இந்தியாவின் பிராந்திய செல்வாக்கை நிர்மூலமாக்குவது. இந்தியாவின் பிராந்திய செல்வாக்கை பேணிப்பாதுகாக்க வேண்டுமாயின், ஆசியாவில் அமெரிக்க செல்வாக்கு வீழ்ச்சியுறக் கூடாது. ஆசியாவில் அமெரிக்காவின் செல்வாக்கு வீழ்சியுறுமாக இருந்தால், அதன் பின்னர் இந்தியாவினால் தனித்து சீனாவை எதிர்கொள்ள முடியாமல் போகும். இந்த மூலோபாய இலக்கின் அடிப்படையில்தான் இன்றைய அமெரிக்க – இந்திய கூட்டு நகர்வுகளை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்.

இந்த இடத்தில்தான் இலங்கை விடயம் முக்கியத்துவம் பெறுகின்றது. இலங்கையில், சீனாவின் செல்வாக்கு அதிகரித்திருக்கின்ற நிலையில்தான், இந்திய-அமெரிக்க கூட்டு வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கையும் உள்ளடங்குகின்றது. இலங்கைக்கு விஐயம் செய்த, அமெரிக்க ராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோ, கொழும்பில் வைத்து சீனா தொடர்பில் காட்டமான கருத்துகளை வெளியிட்டிருந்தார். இலங்கையின் இறைமையை சீனா நிலத்திலும் கடலிலும் மோசமாக மீறி வருவதாக அவர் குறிப்பிட்டிருந்தார். இந்தக் கூற்றானது, இலங்கையும் அமெரிக்க-சீன அதிகாரப் போட்டிக்குள் வந்துவிட்டது என்பதையே உணர்த்துகின்றது.

அண்மையில் வெளியான பென்ரகன் அறிக்கையில், சீனா ஒரு இராணுவ தளத்தை இலங்கைக்குள் நிறுவ முற்படுகின்றது என்று, குறிபிடப்பட்டிருப்பதையும் நாம் இணைத்தே வாசிக்க வேண்டும். பைடன் நிர்வாகத்தின் ஆசிய விவகாரங்களை கையாளும் உயர் அதிகாரியான ஹேர்ட் ஹம்பல், அண்மையில் தெரிவித்திருந்த கருத்தொன்று அமெரிக்க-சீன மேலாதிக்க போட்டியை தெளிவாக எடுத்துரைக்கின்றது. அதாவது, அமெரிக்க-சீன ஊடாட்ட காலம் முடிவுக்கு வந்துவிட்டது. அதிகாரப் போட்டியே இனி மேலாதிக்கம் பெறும்.

அமெரிக்க – சீன போட்டியென்பது தவிர்க்க முடியாத ஒன்றாகவே எழுச்சிபெற்றுவருகின்ற நிலையில், இலங்கையில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்திருக்கின்ற நிலையில் – ஈழத் தமிழர் விவகாரம் சர்வதேச அரங்கில் ஒரு மனித உரிமை விவகாரமாக கவனம் பெற்றிருக்கின்றது. இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையிலான 13வது திருத்தச்சட்டம் தொடர்பில் இந்தியா வலியுறுத்திவருகின்றது. அதே வேளை புதிய அரசியல் யாப்பொன்றை கொண்டுவரப் போவதாக கோட்டபாயவின் அரசாங்கம் கூறிவருகின்றது. அரசியல் யாப்பின் பிரதான இலக்கு தமிழர்களுக்கு விசேட சலுகைகளை இல்லாதொழிப்பதுதான்.

13வது திருத்தம் ஓரளவு விசேட சலுகைகளை வழங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த விடயங்களை துல்லியமாக கணித்தால், தென்னிலங்கையின் நகர்வுகள் அடிப்படையிலேயே ஈழத் தமிழர்களுக்கு ஆபத்தானது. புதிய அரசியல் யாப்பின் ஒன்றை இலக்கு, 13வது திருத்தத்தை இல்லாமலாக்குவதுதான் என்றால், அமெரிக்க – இந்திய கூட்டின் மூலம் அரசியல் தீர்வை பெறலாம் என்பது ஒரு கவர்சியான மேடைப் பேச்சாக மட்டுமே இருக்க முடியும். இந்த நிலைமைகளை விளங்கிக்கொண்டு தமிழ் தலைமைகள் பயணிக்க வேண்டும். இப்போதுள்ள நிலையில், ஒன்றில் இருப்பதை பாதுகாப்பது – முன்னோக்கிப் பயணிப்பது, இரண்டையும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாகவே நோக்க வேண்டும். இதுதான் சரியானதொரு அரசியல் தந்திரோபாயமாக இருக்க முடியும்.

வரலாற்றில் முதல் தடவையாக லண்டனில் தமிழுக்கு கிடைத்த அங்கீகாரம்!

பிரித்தானிய தலைநகர் லண்டன் பெருநகரபிராந்தியத்தில் தமிழ் மொழியையும், பண்பாட்டையும், கலைகளையும் கொண்டாடும் வண்ணம், தமிழ் மரபுரிமைத் திங்கள் கருப்பொருளை கடைப்பிடிக்கும் செயற்திட்டத்துக்காக லண்டன் அஸெம்பிளி எனப்படும் பெருநகர அவையில் இன்று ஏகமனதாகவும் அவையில் நூறுவீத ஆதரவுடனும் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ள வரலாற்று பதிவு உருவாகியுள்ளது.

பெருநகர அவையின் இருந்த கென்சவேட்டிவ் கட்சிஉறுப்பினர்களால் முன்மொழியப்பட்டு வழிமொழியப்பட்டு நிறைவேற்றப்பட்ட இந்தபிரேரணைக்கு அவையில் இருந்த ஆளும்தரப்பான தொழிற்கட்சி உட்பட்ட அனைத்துவ உறுப்பினர்களும் ஆதரவு வழங்கியுள்ளனர்.

கனடாவை போல லண்டன் பெருநகரபிராந்தியத்திலும் தமிழ் மொழியையும், பண்பாட்டையும், கலைகளையும் கொண்டாடும் வண்ணம், தமிழ் மரபுரிமைத் திங்கள் கருப்பொருளை எதிர்வரும் தைமாதம் முதல் கடைப்பிடிக்கப்படும் வகையில் ஒரு செயற்திட்டத்தை உருவாக்கும் வகையில் ஒரு வரலாற்றுத்தருணம் உருவாகியுள்ளது.

லண்டன் அஸெம்பிளி எனப்படும் பெருநகர அவையில் இன்று ஏகமனதாகவும் அவையின் நூறுவீதஆதரவுடனும் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த பிரேரணை மூலம் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் ஒவ்வொரு வருடம் ஜனவரி மாதத்திலும் லண்டன் பெருநகரப்பிராந்தியத்தில் தமிழ் மரபுத் திங்கள் கடைப்பிடிக்கும் வகையிலான சாத்தியப்பாடுகள் உருவாகியுள்ளன.

லண்டன் பெருநகர அவையின கென்சவேட்டிவ் உறுப்பினர் நிக் றொஜர்ஸ் அவர்களால் இன்று பிற்பகல் இந்தபிரேரணை முன்மொழியப்பட்டு அதன் பின்னர் இது விவாதத்துக்கு விடப்பட்டிருந்தது.

இந்த விவாதத்தில் அனைத்து உறுப்பினர்களும் பிரேரணைக்கான ஆதரவினைத் தெரிவித்த பின்னர், ஜனவரி மாதத்தை தமிழ் மரபுத் திங்களாக அதாவது Tamil Heritage Month ஆக பிரகடனப்படுத்தும் பிரேரனை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் எதிர்வரும் நாட்களில் லண்டன் பெருநகர பிராந்தியத்தில் உள்ள அனைத்து நகராட்சிகளிலும் இந்த செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையிலான பேச்சுக்களும் செயற் திட்டங்களும் நகர்த்தப்படலாம் என எதிர்பார்க்கபடுகிறது.

இந்த நர்வுகள் வெற்றியளித்தால் ஜனவரி மாதத்தில், தமிழ் மொழியையும், பண்பாட்டையும், கலைகளையும் கொண்டாடும் வகையிலும் அதனை பகிரும் வகையிலும் நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்படுமென எதிர்பார்க்ப்படுகின்றது

தமிழ் முற்போக்கு கூட்டணி பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டது! மின்சூள் சின்னம்! – மனோ கணேசன்

தேர்தல் ஆணைக்குழுவினால், தமிழ் முற்போக்கு கூட்டணி ஒரு பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக அங்கீகரித்து ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

“டோர்ச் லைட்” என்ற மின்சூள் சின்னம் கூட்டணியின் அதிகாரபூர்வ சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான கடிதத்தை தேர்தல் ஆணைக்குழு ஆணையாளர் நிமல் புஞ்சிஹேவா, தமிழ் முற்போக்கு கூட்டணியின் செயலாளர் சந்திரா சாப்டருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இதுபற்றி கூட்டணி தலைவர் மனோ எம்பி ஊடகங்களுக்கு கூறியுள்ளதாவது,

2015 வருடம் ஜூன் 3ம் திகதி கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில், ஜனநாயக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய முன்னணி, மலையக மக்கள் முன்னணி ஆகிய மூன்று கட்சி தலைவர்களால் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் ஆரம்பிக்கப்பட்ட தமிழ் முற்போக்கு கூட்டணி இன்று ஆறு ஆண்டுகளை கடந்த நிலையில், இடையில் இரண்டு பாராளுமன்ற தேர்தல்கள், ஒரு ஜனாதிபதி தேர்தல், ஒரு உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஆகியவற்றை வெற்றிகரமாக எதிர்கொண்டு இந்நாட்டின் தேசிய அரங்கில் தவிர்க்க முடியாத ஒரு அரசியல் இயக்கமாக வளர்ந்து, இன்று தேசிய தேர்தல் ஆணைக்குழுவினால் அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளோம்.

தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகள், தமிழ் பேசும் மக்களை பிரதிநிதித்துவம் கட்சிகள், தேசிய அரங்கில் ஒன்றுசேர வேண்டும் என்ற பேரவா இன்று தமிழ் முஸ்லிம் மக்கள் மனங்களில் ஆழமாக வேரூன்றி இருப்பதை நானறிவேன்.

எமது மக்களின் இந்த மன உணர்வுக்கு உயிர் கொடுத்து முழு நாட்டுக்கும் முன்மாதிரியாக நாம் இன்று நிற்கிறோம்.

“ஒற்றுமை நிலைக்க வேண்டும்” என எதிர்பார்த்த பெருந்திரள் மக்கள் மத்தியில், இது “தேர்தல் வரையிலான உறவு”, ஆகவே தேர்தல்கள் முடிந்த பின் உடைந்து விடும், உடைய வேண்டும் என்று எதிர்பார்த்த வினோதமானவர்களும் நம் மத்தியில் இருந்தார்கள். இருக்கிறார்கள்.

அவர்களை நாம் இன்று ஏமாற்றி இருக்கிறோம் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.

ஆகவே, கட்சிகள் “ஒன்றுசேர வேண்டும், ஒன்றுசேர வேண்டும்” என கோரிக்கை விடுக்கப்படும், அதேவேளை இன்று ஒன்றுபட்டு நின்று, பல சவால்களுக்கு மத்தியில் ஆறு ஆண்டுகளை கடந்து, எம்மை விட்டு பிரிந்தவர்களுக்கு துயருடன் விடை கொடுத்து விட்டு, புதியவர்களை உள்வாங்கி, எமது தேசிய பயணத்தை மாத்திரம் நிறுத்தி விடாமல் பயணித்து, இன்று அதிகாரபூர்வ பதிவையும், தமிழ் முற்போக்கு கூட்டணி பெற்றுள்ளது.

இந்த வெற்றிக்கு பின்னால் எங்கள் ஒவ்வொருவரினதும் கடும் உழைப்பு, நேர்மை, துணிச்சல், தூரப்பார்வை, நிதானம், இன உணர்வு ஆகியவை இருக்கின்றன.

எங்கள் மின்சூள் சின்னம், நாடு முழுக்க இருளை அகற்றி, ஒளி பாய்ச்சும் இயக்கமாக இன்னமும் முன்னேற்றம் பெற, அனைத்து உடன்பிறப்புகளினதும், இரத்தத்தின் இரத்தங்களினதும் வாழ்த்துகளையும், ஆதரவுகளையும் எதிர்பார்க்கிறோம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் என்ற முறையில் மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.