இந்திய நிதியமைச்சருடன் பசில் ராஜபக்ஸ கலந்துரையாடல்

இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்புகளை மேலும் விரிவுபடுத்த நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸ முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.

இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை புது டெல்லியில் சந்தித்த அமைச்சர் பசில் ராஜபக்ஸ இந்த விடயம் குறித்து கலந்துரையாடியுள்ளார்.

இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்புகளில் காணப்படும் சிக்கல்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

பொருளாதார ஒத்துழைப்பு நிகழ்ச்சித் திட்டங்களினூடாக பல வழிகளிலும் இலங்கை வழங்கிய உதவிகளுக்கு நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸ நன்றி தெரிவித்துள்ளார்.

உடன் அமுலுக்கு வரும் வகையில் மட்டக்களப்பு மாநகர சபைக்கு புதிய ஆணையாளர் நியமனம்

உடன் அமுலுக்கு வரும் வரை மட்டக்களப்பு மாநகர சபைக்கு புதிய ஆணையாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த சில காலங்களாக மட்டக்களப்பு மாநகரசபையில் ஏற்பட்ட முரண்பாடுகளுக்கு மத்தியில் இன்றைய தினம் புதிய ஆணையாளர் ஒருவர் கிழக்கு மாகாண ஆளுநரால் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த சில காலமாக மட்டக்களப்பு மாநகர ஆணையாளராகப் பதவி வகித்த மா.தயாபரனுக்கு பதிலாக புதிய ஆணையாளராக ந.சிவலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

இஸ்லாமிய நாடுகளின் தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்களுடன் பிரதமர் சந்திப்பு

இஸ்லாமிய நாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிற்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.

கொழும்பு ஷங்ரில்லா ஹோட்டலில் நேற்றிரவு இந்த சந்திப்பு நடைபெற்றதாக பிரதமரின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

COVID-19 தொற்று நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட துரித செயற்பாட்டிற்கு தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் இதன்போது பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இஸ்லாமிய நாடுகளுடனான இருதரப்பு உறவை தொடர்ந்து பேணுதல் மற்றும் பரஸ்பர செயற்பாடுகள், திட்டங்கள் ஊடாக இலங்கையின் பொருளாதார மேம்பாட்டிற்கு பங்களிப்பு செய்தல் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு இஸ்லாமிய நாடுகளின் ஒத்துழைப்பினை தொடர்ச்சியாக எதிர்பார்ப்பதாக இதன்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கையின் 15 தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.

ஓமான், பாலஸ்தீனம், குவைத், சவுதி அரேபியா, மலேசியா, கட்டார், துருக்கி, ஈரான், லிபியா, ஐக்கிய அரபு இராச்சியம், இந்தோனேசியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுக்கான இலங்கை தூதுவர்கள் மற்றும் மாலைத்தீவு, பங்களாதேஷ், பாகிஸ்தான் ஆகிய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி அந்நாடுகளின் இலங்கை உயர்ஸ்தானிகர்கள் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.

‘ஒமிக்ரோன்’ இந்நாட்டினுள் நுழைந்து விட்டதா?

ஒமிக்ரோன் பிறழ்வு இந்நாட்டிற்கு வந்துள்ளதாக உறுதியாக கூற முடியாது என சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

மற்றைய நாடுகளுடன் ஒப்பிடும் போது நமது நாட்டிற்கு குறித்த வைரஸ் தாமதமாக வரக்கூடும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

“இது தொடர்பில் உறுதியாக கூற முடியாது. உறுதியான தகவல்கள் எமக்கு இதுவரை கிடைக்கவில்லை. எனினும், உலகின் ஏனைய நாடுகளுக்கு பரவியுள்ள விதத்தை பார்க்கும் போது நமது நாட்டிற்கு குறித்த பிறழ்வு வரவில்லை என எவராளும் கூற முடியாது. எனினும், இலங்கைக்கு தென்னாபிரிக்காவில் இருந்து நேரடியாக அதிகளவான மக்கள் வருவதில்லை. அதன் காரணமாக மற்றைய நாடுகளை விட நமது நாட்டுக்கு வருவது தாமதமாகக்கூடும். நாங்கள் ஒரு மாதிரியை எடுத்து மட்டுமே பகுப்பாய்வு செய்கிறோம். அந்த மாதிரிக்கு அகப்படும் வரையில் குறித்த வைரஸ் பிறழ்வு நாட்டில் பரவுவதற்கு வாய்ப்புள்ளது.”

Posted in Uncategorized

ஐ.நா.வுடன் இலங்கை தொடர்ந்தும் ஒத்துழைக்கும் – பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்

ஐக்கிய நாடுகள் சபையுடன் இலங்கை தொடர்ந்தும் ஒத்துழைக்கும் என்று வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் , ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் டொமோயா ஒபோகாட்டாவிடம் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அடிமைத்தனத்தின் தற்கால வடிவங்கள் , அதன் காரணங்கள், விளைவுகள் உள்ளிட்டவை தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் டொமோயா ஒபோகாட்டா வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸை சந்தித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.

பாரம்பரிய அடிமைத்தனம், கடன் கொத்தடிமை, கட்டாய உழைப்பு, அடிமைத்தனம் மற்றும் அடிமைத்தனம் சார்ந்த நிலைமைகளில் உள்ள சிறுவர்கள் , பாலிய அடிமைத்தனம், கட்டாய மற்றும் இள வயது திருமணங்கள் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள், வெளிநாட்டு தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் போன்றன விசேட அறிக்கையாளரின் ஆணையில் உள்ளடங்கும்.

இந்த சந்திப்பின் போது தொழிலாளர் நலன் தொடர்பான இலங்கையின் முன்னேற்றம் மற்றும் சிறுவர் தொழிலாளர் முறைமையை ஒழிப்பதற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள ஆக்க பூர்வமான நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் கலந்துரையாடினார்.

சிறுவர் தொழிலாளர்கள் , புலம்பெயர் தொழிலாளர்கள் , கடன் கொத்தடிமைகள் உட்பட பல துறைகளில் சர்வதேசத்திற்கு ஏற்ப இலங்கையின் தொழிலாளர் சட்டங்களைக் கொண்டு வருவதற்காக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அவர் விவரித்தார்.

இலங்கையை ‘சிறுவர் தொழிலாளர்கள் இல்லாத வலயமாக மாற்றுவது தொடர்பான இலங்கையின் முன்னேற்றத்தை விசேட அறிக்கையாளர் பாராட்டினார்.

பாதிக்கப்படக் கூடிய தொழிலாளர் குழுக்களை பாதுகாப்பதில் இலங்கை விழிப்புடன் இருப்பதாக சுட்டிக்காட்டிய அமைச்சர் , ஐக்கிய நாடுகள் சபையுடன் இலங்கை தொடர்ந்தும் ஒத்துழைக்கும் என்று வலியுறுத்தினார்.

சம்பந்தப்பட்ட துறைகளில் இலங்கையின் அனுபவங்களை புரிந்து கொள்வதற்கும் , சர்வதேச அர்ப்பணிப்புக்களுக்கு இணங்க உள்நாட்டு செயற்பாடுகளை மேம்படுத்துவதற்கும் விசேட நடைமுறைகள் ஆணை பெற்றவர்களின் விஜயங்கள் உதவியாக இருந்தததாக அவர் குறிப்பிட்டார்.

Posted in Uncategorized

மன்னாரில் டெங்கு காய்ச்சல் அபாயம்

மன்னார் மாவட்டத்தில் நிலவும் பலத்த மழையுடனான வானிலையுடன் தற்போது டெங்கு காய்ச்சலும் தீவிரமாக பரவி வருவதாக சுகாதார பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த மாதத்தில் மாத்திரம் 25 பேர் டெங்கு காய்ச்சலுடன் அடையாளங்காணப்பட்டுள்ளதாக மன்னர் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர், வைத்தியர் ரி. விநோதன் தெரிவித்துள்ளார்.

இன்று (01) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.

காய்ச்சல் ஏற்பட்டவுடன் பிற சிகிச்சைகளின்றி, உடனடியாக வைத்தியசாலையை நாடுமாறும் மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Posted in Uncategorized

ஊடகவியலாளர் மீதான தாக்குதலுக்கு நாடாளுமன்றத்தில் தமிழ் எம்.பிக்கள் கண்டனம்

முல்லைத்தீவில் செய்தி சேகரிக்கச் சென்ற  ஊடகவியலாளர் ஒருவர் இராணுவத்தினரால் கடுமையாகத் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தமிழ்க் கட்சிகளின் எம்.பிக்கள் சபையில் கடும் கண்டனங்களை வெளியிட்டனர்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற மின்சக்தி அமைச்சு, வலுசக்தி அமைச்சு ஆகியவற்றின் நிதி ஒதுக்கீடுகள் மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றும்போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பிக்களான செல்வம் அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதன் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் எம்.பியான செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் தமது கடுமையான கண்டனங்களை வெளியிட்டனர்.

கடந்த சனிக்கிழமை காலை முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளரான விஸ்வலிங்கம் விஸ்வச்சந்திரன் என்பவர் முள்ளியவாய்க்கால் கிழக்கில் காலை செய்தி சேகரிப்புக்காகச் சென்று அங்கிருந்து வீடு திரும்பிய நிலையில் முள்ளிவாய்க்கால் பகுதியில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் பெயர்ப்பலகையை ஒளிப்படம் எடுத்துள்ளபோது அந்தப் பகுதியில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்ட நான்கு இராணுவத்தினர் குறிப்பிட்ட ஊடகவியலாளர் மீது முள்ளுக்கம்பி சுற்றப்பட்ட பச்சைப் பனை மட்டையால் தாக்குதல் நடத்தியமை மிருகத்தனமானது எனவும் இவர்கள் குற்றஞ்சாட்டினர்.

அத்துடன் தாக்குதல் நடத்திய  3 இராணுவத்தினர் கண்துடைப்புக்காகக் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில்கூட ஆஜர்செய்யப்படாது பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டு விட்டனர் என்று குற்றஞ்சாட்டிய தமிழ் எம்.பிக்கள், நாட்டில் இராணுவ ஆட்சி நடப்பதற்கு இந்தத் தாக்குதல் சிறந்த உதாரணம் எனவும் குறிப்பிட்டனர்.

Posted in Uncategorized

மொட்டு தம்மை புறக்கணித்துவிட்டதாக 12 சிறு அரசியல் கட்சிகள் விசனம்

அரசாங்கத்தின் வெற்றிக்காக செயற்பட்ட தாம் தற்போது புறக்கணிக்கப்பட்டுள்ளதாக பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவு வழங்கிய 12 சிறு அரசியல் கட்சிகள் அறிவித்துள்ளன.

ஐக்கிய இலங்கை பொதுஜன கட்சி, அருணலு மக்கள் முன்னணி, எமது மக்கள் உரிமை கட்சி, சமூக அபிவிருத்தி கட்சி, தேசிய பொதுஜன கட்சி, மக்கள் அபிவிருத்தி கட்சி, ஹெலபிம ஜனதா கட்சி, ஐக்கிய இலங்கை மக்கள் சக்தி கட்சி, இலங்கை இந்திய பிரஜைகள் கட்சி, ஐக்கிய சுதந்திரக் கட்சி, ஐக்கிய ஜனநாயக மக்கள் கட்சி, இலங்கை ஜனநாயக தேசியக் கட்சி ஆகியன இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் அரசாங்கம் தொடர்பான தமது அதிருப்தியை வௌிப்படுத்தின.

மொட்டுடன் கைகோர்த்து தற்போதுள்ள அரசாங்கத்தையும் ஜனாதிபதியையும் உருவாக்க ஒத்துழைப்பு வழங்கிய போதும், தமது கருத்துக்கள் செவிமடுக்கப்படுவதில்லை என ஐக்கிய இலங்கை பொதுமக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் ருவன் திலக்க பேதுருஆரச்சி குறிப்பிட்டார்.

இந்த நிலை தொடர்ந்தால் அரசாங்கமும் நாடும் நாட்டு மக்களும் கஷ்டத்தில் வீழ்வார்கள் என அவர் குறிப்பிட்டார்.

இது நாட்டு மக்களின் துரதிர்ஷ்டம் என கூறி மெளமாக இருக்க தாம் தயாரில்லை என கூறிய ருவன் திலக்க, சரியான பாதையில் பயணிக்க முடியாவிட்டால் அரசுடனான நட்புறவை கைவிட வேண்டிய நிலை தமக்கு ஏற்படும் என கூறினார்.

உகாண்டாவின் நிலை இலங்கைக்கு ஏற்படும்: சரத் பொன்சேகா

உகாண்டாவை போலவே சீனாவின் கடன் இலங்கையை விழுங்கிக்கொண்டிருப்பதாக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குறிப்பிட்டார்.

சீனாவிடமிருந்து பெற்ற கடனை திருப்பி செலுத்த முடியாமையால் உகாண்டாவிலுள்ள ஒரேயொரு சர்வதேச விமான நிலையத்தையும் சீனா கையகப்படுத்தியதாக ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.

தேசிய திட்டமிடலொன்று இல்லாமல் சீனாவிடமிருந்து பாரியளவில் கடன் வாங்கும் ஊழலுடன் தொடர்புடைய அரசியல்வாதிகளின் முறையற்ற முடிவு இதுவென்பதே சரத் பொன்சேகாவின் நிலைப்பாடாகும்.

இதனிடையே, மேற்குலகின் கடன் வலையிலிருந்து இலங்கையை சீனா காப்பாற்றியுள்ளதாக இலங்கைக்கான சீன தூதரகம் ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை குத்தகைக்கு எடுத்து, அத்தியாவசிய டொலர்களை திரட்ட அரசாங்கம் தீர்மானித்ததாகவும், அந்த பணம் சீனாவின் EXIM வங்கிக்கு திருப்பி செலுத்துவதற்கு பயன்படுத்தப்படவில்லை எனவும் சர்வதேச இறையாண்மை பத்திரங்களை திருப்பி செலுத்துவதற்கு பயன்படுத்தப்பட்டது எனவும் சீன தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.

அரசியல் கைதிகளை வாழ விடுங்கள் அல்லது வழியை விடுங்கள் -அருட்தந்தை மா.சத்திவேல்

அரசியல் கைதிகளாக நீண்ட நாட்கள் தடுப்புக் காவலில் இருந்து விடுதலையானவர்களை வாழவிடுங்கள் அல்லது வழியை விடுங்கள் என அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அரசியல் கைதிகளாக நீண்ட நாட்கள் தடுப்புக் காவலில் இருந்து விடுதலையானவர்களையும், ஒட்டு மொத்த தமிழர்களையும் வாழ விடுங்கள் அல்லது வழியை விடுங்கள் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவரால் இன்று வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு நாடு என பிரகடனப்படுத் தப்பட்டுள்ளது. அனைத்து மக்களுக்கும் கருத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம், நடமாடும் சுதந்திரம் என்பன உண்டு. இதனை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு அரசுக்கும் , அரசு அதிகாரிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும், பொலிசாருக்கும் உள்ளது. இத்தகைய சுதந்திரமும், பாதுகாப்பும் அரசியல் கைதிகளாக சிறையில் இருந்து விடுதலை பெற்றவர்களுக்கும் முழுமையாக கிடைக்க வேண்டும்.

இதனை விடுத்து விசாரணை என அழைப்பு விடுப்பது, தங்களை இரகசிய பொலிசாரும், புலனாய்வாளர்களும் பின்தொடர்கிறார்கள் என்று உணரச் செய்வதும் அடிப்படை உரிமை மீறல் ஆகும். இது தொடரக்கூடாது என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு ஆட்சியாளரிடம் வேண்டுகோள் விடுக்கின்றது.

முன்னாள் அரசியல் கைதியான வவுனியாவை சேரந்த செல்வநாயகம் ஆனந்தவர்ணன் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரால் எதிர்வரும் டிசம்பர் மாதம் 1ம் திகதி விசாரணைக்கென கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளார். இது அரசியல் கைதியாக இருந்து விடுதலை பெற்றவர்களுக்கு பின்னால் புலனாய்வாளர்கள் கழுகு கண்களோடு உள்ளனர் என்பதை உறுதிப்படுத்துகின்றது.

அரசியல் கைதிகளை வாழ விடுங்கள் அல்லது வழியை விடுங்கள் -அருட்தந்தை மா.சத்திவேல்அரசியல் கைதிகளாக நீண்ட காலம் சிறை வாழ்க்கையை அனுபவித்த பின்னர் விடுதலையானோர் தன் குடும்ப உறவுகளோடு சந்தோஷமாகவும், சுதந்திரமாகவும் நடமாடி விடுதலையை முழுமையாக அனுபவிக்க வேண்டும். நாம் தொடர்ந்தும் கண்காணிக்கப்படுகின்றோம் எனும் உணர்வுக்குள் அவர்களை தள்ளுவதும், விசாரணைக்கு அழைப்பதும் அவர்களின் மகிழ்வை இல்லாதொழித்து திறந்தவெளி சிறைக்குள் நாம் இருக்கின்றோம் எனும் மனநிலையை தோற்றுவிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

புலிப் பயங்கரவாதிகளை தோற்கடித்து விட்டோம், பயங்கரவாதத்தை இல்லாதொழித்து விட்டோம் என வெற்றிவிழா எடுப்பவர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் அரசியல் கைதிகள் தன் குடும்ப உறவுகளோடு வாழ்வை தொடர அனுமதிக்க வேண்டும். இது மறுக்கப்பட்டு நாம் அடிமை நிலையில் இருக்கின்றோம் என உணர்வு தூண்டப்படுமாயின் அது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என ஆட்சியாளர்கள் உணரத் தவறுவது ஏன்? போர் வெற்றி என்பது மக்களை அடிமையாக்குவதல்ல.

மக்களது சுதந்திரமானதும், கௌரவமானதுமான வாழ்வை உறுதி செய்வதாகும். அது இன்றும் முன்னாள் அரசியல் கைதிகளுக்கும், தமிழ் மக்களுக்கும் கிடைக்கவில்லை என்பதனையே விசாரணைக்கான அழைப்பு வெளிப்படுத்துகின்றது.

அரசியல் கைதிகளாக நீண்ட நாட்கள் தடுப்புக் காவலில் இருந்து விடுதலையானவர்களையும், ஒட்டு மொத்த தமிழர்களையும் வாழ விடுங்கள் அல்லது வழியை விடுங்கள் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு வேண்டுகோள் விடுப்பதோடு சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் ஐநா மனித உரிமை ஆணையகம் வருடாந்த திருவிழாவை நடத்துவதோடு நின்றுவிடாமல் அடிப்படை மனித உரிமைகளை பாதுகாக்க முனைப்பு காட்ட வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கின்றது.

Posted in Uncategorized