கைதிகளுக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் குறித்து ஐ.நா. அதிருப்தி!

அநுராதபுரம் சிறைச்சாலையில் கைதிகளுக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் தொடர்பாக ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான பிரதிநிதி ஹனா சிங்கர் அதிருப்தி வௌியிட்டுள்ளார்.

இலங்கை அரசாங்கம் கைதிகளின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும் என அவர் தனது ருவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

சிறைக்கைதிகள் தவறான முறையில் நடத்தப்படுவதை வன்மையாகக் கண்டிப்பதாக தெரிவித்துள்ள அவர், தேசத்தின் கடமை கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பது என்றும் அவர் தனது ருவிட்டர் பதிவில் மேலும் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

கைதிகளை அச்சுறுத்திய இராஜாங்க அமைச்சர் இராஜினாமா: நடந்தது என்ன?

வெலிக்கடை மற்றும் அநுராதபுரம் சிறைச்சாலைகளில் ஒழுக்கமற்ற முறையில் செயற்பட்டமைக்கான பொறுப்பை ஏற்று சிறைச்சாலைகள் முகாமைத்துவ மற்றும் கைதிகள் புனர்வாழ்வு நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே இராஜினாமா செய்துள்ளார்.

இராஜாங்க அமைச்சரின் இராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

எவ்வாறாயினும், சிறைக்கைதிகளுக்கு அச்சுறுத்தலான சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டமை தொடர்பிலான விடயத்தை இராஜினாமாவுடன் மூழ்கடிக்காது, லொஹான் ரத்வத்தேவிற்கு எதிராக உடனடியாக சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு உள்நாட்டு வௌிநாட்டு அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் வலியுறுத்தியுள்ளன.

வெலிக்கடை சிறைச்சாலைக்கு கடந்த 6 ஆம் திகதியும் அநுராதபுரம் சிறைச்சாலைக்கு கடந்த 12 ஆம் திகதியும் இரவு வேளையில் ஹெலிகொப்டரில் சென்ற இராஜாங்க அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் கைதிகளை அச்சுறுத்தும் வகையிலான செயற்பாடுகளில் ஈடுபட்டதாக தகவல் வௌியாகியிருந்தது.

இராஜாங்க அமைச்சர் அநுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்று அங்கு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை அழைத்து, விசேடமாக இரண்டு நபர்களை அழைத்து முழங்காலில் நிறுத்தி தன்னுடைய சுய பாதுகாப்பிற்கு இருந்த ஆயுதத்தை பயன்படுத்தி, அவர்களின் நெற்றியில் குறி வைத்து அச்சுறுத்தியதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டார்.

இதனை உறுதிப்படுத்துவதற்காக சிறைச்சாலைகள் திணைக்களத்தை தொடர்புகொண்டு வினவியபோது, சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக ஆணையாளர் ஒருவர் அநுராதபுரத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டதாக பதிலளிக்கப்பட்டது.

சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் நடைமுறைக்கு அமைய, இரவு வேளைகளில் உள்ளக விமான போக்குவரத்து சேவை முன்னெடுக்கப்படுவதில்லை.

அநாவசியமான முறையில் ஆபத்து ஏற்படுவதை தவிர்ப்பதற்காகவே இந்த நடைமுறை பின்பற்றப்படுவதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் உப்புல் தர்மதாஸ கூறினார்.

அதிகார சபையின் உள்ளக விமான சேவைகள் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, இரத்மலானை விமான நிலையங்களுக்கு இடையில் மாத்திரமே முன்னெடுக்கப்படுகின்றன.

அவ்வாறென்றால், இராஜாங்க அமைச்சர் தனியார் விமானத்திலேயே அங்கு சென்றிருக்க வேண்டும்.

விமானப் படையின் விமானங்கள் இரவு வேளையில் பயணங்களை மேற்கொள்ளாது எனவும் தேவை ஏற்பட்டால் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு மாத்திரம் தற்போது சேவைகள் வழங்கப்படுவதாகவும் விமானப்படை பேச்சாளர் குரூப் கெப்டன் துஷான் விஜேசிங்க தெரிவித்தார்.

அதிக மதுபோதையில் இருந்த ஒருவரை விமானத்தில் அழைத்துச்செல்ல முடியுமா என்ற கேள்வியும் எழுகின்றது.

மதுபோதை தொடர்பில் பரிசோதிக்கப்படாவிட்டாலும் அதிகளவு போதையில் இருக்கின்றமை தெரியவந்தால், அவர்களுக்கு சேவை வழங்கப்பட மாட்டாது என சிவில் விமான சேவைகள் அதிகார சபை குறிப்பிட்டது.

எவ்வாறாயினும், குறித்த இராஜாங்க அமைச்சர் அநுராதபுரம் சிறைச்சாலைக்கு ஹெலிகொப்டரிலில் சென்றதாக தகவல் வௌியாகியுள்ளது.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பில் எதிர்ப்புகள் வலுவடைந்த நிலையில், பதவியை இராஜினாமா செய்வதற்கு பரிந்துரை செய்யுமாறு லொஹான் ரத்வத்தே இன்று ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்தார்.

இதற்கமைய, சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சர் பதிவியிலிருந்து விலகும் லொஹான் ரத்வத்தேவின் தீர்மானத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார்.

எவ்வாறாயினும், குறித்த அமைச்சுப் பதவிக்கு மேலதிகமாக அவர் வசமுள்ள இரத்தினக்கல் மற்றும் தங்காபரணம் சார்ந்த கைத்தொழில் இராஜாங்க அமைச்சுப் பொறுப்பில் இருந்து அவர் விலகியமை தெரியவரவில்லை.

இதற்கமைய, இராஜாங்க அமைச்சர் ஒருவருக்கான சிறப்புரிமைகளை அவர் தொடர்ந்தும் அனுபவிப்பதற்கான வாய்ப்பு உள்ளது.

ட்விட்டரில் இன்று காலை பதிவொன்றை மேற்கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இராஜாங்க அமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும் அவர் செயற்பட்ட விதத்தை ஒழுக்கமுள்ள சமூகத்தால் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் வலியுறுத்தியிருந்தார்.

இராஜாங்க அமைச்சரின் பதவி விலகலை பயன்படுத்தி இந்த சம்பவத்தை மூழ்கடிக்காமல் உடனடியாக சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அநுராதபுரம் சிறைச்சாலையில் கடந்த 12 ஆம் திகதி கைதிகள் அச்சுறுத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்தப்பட்டு வழக்குத்தாக்கல் செய்யப்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான கூட்டமைப்பின் ட்விட்டர் பதிவிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, விசாரணை நடத்தப்பட்டு அவர் மற்றும் பொறுப்புக்கூற வேண்டிய அனைவருக்கும் எதிராக வழக்கு தொடரப்பட வேண்டும் என எம்.ஏ.சுமந்திரன் தமது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

கைதிகளின் பாதுகாப்பை எந்த விதத்திலும் சமரசம் செய்துகொள்ள முடியாது எனவும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சு பொறுப்பிலுள்ள ஒருவருக்கு எதிராக இவ்வாறான குற்றச்சாட்டு முன்னெப்போதும் இந்த நாட்டில் எழுந்ததில்லை என, தமிழ் தேசியக் கட்சி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதிகளுக்கு எதிராக, அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி அடாவடித்தனமாக நடந்துகொள்வதற்கு சட்டத்தில் அறவே இடமில்லை என, கட்சியின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி ந.ஶ்ரீகாந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.

அநுராதபுரம் சிறைச்சாலையில் கைதிகளுக்கு ஏற்பட்ட அச்சுறுத்தலுக்கு ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான பிரதிநிதி ஹனா சிங்கர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் கைதிகளின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும் என ஐ.நா பிரதிநிதி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதனிடையே, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட கைதிகள், அநுராதபுரம் சிறைச்சாலையின் உட்பகுதியிலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

அவ்வாறாயின் கைதிகளை அமைச்சர் வௌியே அழைத்தாரா எனவும் இது பாரதூரமான குற்றச்சாட்டு எனவும் அம்பிகா சற்குணநாதன் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையை நிராகரிக்க முடியாது – ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன்

கடந்த ஐ.நா சபையின் அறிக்கை என்பது மிகவும் ஒரு முக்கியம் வாய்ந்த காத்திரமான அறிக்கையாக அமைந்திருந்தது. அத்துடன் இலங்கை அரசு மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையை நிராகரிக்க முடியாது என்று தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசு மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையை நிராகரித்துள்ளமை தொடர்பில் இன்று (15) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே செல்வம் அடைக்கலநாதன் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் குறிப்பிடுகையில்..

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் அவர்களின் அறிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரிக்க முடியாது.
குறித்த அறிக்கையில் இலங்கை அரசாங்கத்தினால் கூறப்பட்ட விடயங்கள் குறிப்பாக இலங்கை அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்த முடியாது என தெரிவித்த விடயங்கள் மீண்டும் ஒத்துழைக்கத் தயார் என்று கூறப்படுகின்ற நிலையில் கூறப்பட்ட விடயங்களுக்கு மாறாக எமது தமிழ் பிரதேசங்களில் பல்வேறு அத்து மீறல்கள் நடந்து கொண்டு உள்ளதை நாங்கள் குறிப்பிட்டிருந்தோம். அவ்விடயம் சம்பந்தமான கருத்துக்கள் கூறப்படவில்லை என்பது கவலையளிக்கின்றது.

மேலும் அரசியல் தீர்வு சம்பந்தமாக ஆணையாளரின் அறிக்கையில் இடம் பெறவில்லை என்பது மிகவும் கவலையளிக்கிறது.

இந்த நாட்டில் இடம் பெறும் இராணுவ ஆட்சி, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினை, ஆசிரியர்களின் போராட்டம் இவை அத்தனையும் ஒரு பிரச்சினையாக கூறப்பட்டுள்ளதே தவிர அரசாங்கம் அவற்றை எல்லாம் உடனடியாக செய்ய வேண்டும் அல்லது நிறுத்த வேண்டும் என்கிற உத்தரவு குறித்த அறிக்கையில் இல்லாமல் இருப்பது கவலையளிக்கிறது.

கடந்த ஐ.நா.சபையின் அறிக்கை என்பது மிகவும் ஒரு முக்கியம் வாய்ந்த காத்திரமான அறிக்கையாக அமைந்திருந்தது.மக்களும் அதனை வரவேற்ற நிலையில் தற்போதைய ஆணையாளரின் அறிக்கை என்பது மிகவும் கவலை தரக்கூடிய விடையமாக அமைந்துள்ளது.

குறித்த அறிக்கையின் ஊடாக நாங்கள் எதிர் பார்க்கின்ற சர்வதேசம் என்கிற விடயம் கை விட்டு போய் விடுமோ? என்கின்ற கேள்வி எங்கள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. குறித்த அறிக்கையில் எமது பல பிரச்சினைகள் தொடர்பாக மேலோட்டமாக காட்டப்பட்டுள்ளது.

அதனை நடைமுறைப்படுத்துவதற்கான ஒரு நிலைப்பாட்டை இந்த அறிக்கை சொல்லவில்லை. அதனை விட இலங்கை அரசாங்கத்தை நம்புவதாகவும், புதிதாக தெரிவு செய்யப்பட்ட வெளிவிவகார அமைச்சர் நல்லதொரு மனிதர் என்கின்ற போர்வையில் அவரை புகழ்ந்து பேசுகின்ற ஒரு நிலையும் அரசாங்கத்திற்கு கால அவகாசத்தை வழங்குகின்றது போன்ற ஒரு நிலையும் காணப்படுகிறது.

இந்த ஜனாதிபதியும் அரசாங்கமும் இருக்கும் வரை தமிழ் பேசும் மக்களுக்கு நியாயம் கிடைப்பதற்கான வாய்ப்பு இல்லை. கால தாமதத்தை ஏற்படுத்துகின்ற வாய்ப்பாக இருக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கையின் மனித உரிமை நிலைவரங்கள் கவலையளிக்கின்றது – பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகள்

இலங்கையில் பொறுப்புக்கூறலை உறுதிசெய்யக் கூடியவகையில் வரையறுக்கப்பட்ட அளவிலான நடவடிக்கைகள் மாத்திரம் மேற்கொள்ளப்பட்டிருந்த 2008 – 2009 ஆம் ஆண்டுகாலப்பகுதியில் 11 இளைஞர்கள் காணாமலாக்கப்பட்டமை உள்ளிட்ட சில முக்கிய வழக்குகள் தற்போது மேலும் பின்னடைவைச் சந்தித்துள்ளமை பெரிதும் விசனமளிக்கின்றது.

அதுமாத்திரமன்றி ஊடகவியலாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மீதான தொடர்ச்சியான கண்காணிப்புக்கள், அடக்குமுறைகள் உள்ளடங்கலாக இலங்கையின் மனித உரிமை நிலைவரங்கள் கவலையளிப்பதாக பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அறிவித்துள்ளன.

இந்நிலையில் இலங்கையில் அர்த்தபுஷ்டியுள்ள நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றின் அவசியத்தை தொடர்ந்தும் வலியுறுத்தவிருப்பதாகவும் அந்நாடுகள் தெரிவித்துள்ளன.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது கூட்டத்தொடர் நேற்று திங்கட்கிழமை ஆரம்பமான நிலையில், இதன்போது ஆணையாளர் மிச்சேல் பச்லெட்டினால் இலங்கை தொடர்பான வாய்மூல அறிக்கை வெளியிடப்பட்டது.

அதனைத்தொடர்ந்து இரண்டாம் நாளாக நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற அமர்வின்போது உறுப்புநாடுகள் இலங்கை தொடர்பில் உரையாற்றின.

அதன்பிரகாரம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 47 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் 46/1 என்ற புதிய தீர்மானத்தை முன்மொழிந்த பிரிட்டன், கனடா, ஜேர்மனி, வடமெசிடோனியா, மாலாவி மற்றும் மொன்டெனேக்ரோ ஆகிய இணையனுசரணை நாடுகளின் சார்பில் ஐக்கிய நாடுகள் சபைக்கான பிரிட்டன் தூதுவரும் நிரந்தர வதிவிடப்பிரதிநிதியுமான சிமொன் மான்லே உரைநிகழ்த்தினார். இணையனுசரணை நாடுகளின் சார்பாக அவர் மேலும் கூறியதாவது:

இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையையும் 46ஃ1 தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அவசியமான வளங்களை மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகத்திற்குப் பெற்றுத்தருமாறு கோரியமையையும் நாம் வரவேற்கின்றோம்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தற்போது இலங்கை சவால்களுக்கு முகங்கொடுத்திருக்கின்றது என்பதை ஏற்றுக்கொள்ளும் அதேவேளை, இலங்கையில் தொற்றினால் உயிரிழந்த அனைவருக்கும் எங்களுடைய ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இலங்கையில் அர்த்தபுஷ்டியுள்ள நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றின் அவசியத்தை நாம் தொடர்ந்தும் வலியுறுத்துவோம்.

நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதற்கான இலங்கையின் முயற்சிகள் மற்றும் காணாமல்போனோர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம் என்பவற்றின் தொடர்ச்சியான இயங்குகையை உறுதிசெய்வதற்காக மேற்கொள்ளப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளோம்.

அதேவேளை இக்கட்டமைப்புக்கள் அரசியல் தலையீடுகள் எவையுமின்றி சுயாதீனமாகச் செயற்படுவதை உறுதிப்படுத்துமாறு அரசாங்கத்திடம் கோருகின்றோம்.

பொறுப்புக்கூறலை உறுதிசெய்யக்கூடியவகையில் வரையறுக்கப்பட்ட அளவிலான நடவடிக்கைகள் மாத்திரம் மேற்கொள்ளப்பட்டிருந்த சில முக்கிய வழக்குகள் தற்போது மேலும் பின்னடைவைச் சந்தித்துள்ளமை பெரிதும் விசனமளிக்கின்றது.

அவற்றில் கடந்த 2008, 2009 ஆம் ஆண்டுகாலப்பகுதியில் 11 இளைஞர்கள் காணாமலாக்கப்பட்ட வழக்கின் அண்மைய நகர்வுகளைக் குறிப்பிட்டுக்கூறமுடியும்.

அதேபோன்று இலங்கையின் தற்போதைய மனித உரிமை நிலைவரங்கள் பெரிதும் கவலையளிக்கின்றன. குறிப்பாக ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மீதான தொடர்ச்சியான கண்காணிப்புக்கள், அடக்குமுறைகள் என்பனவும் அமைதியான போராட்டங்களின் ஈடுபட்டவர்கள் மீதான அடக்குமுறைகளும் கரிசனைகளை ஏற்படுத்தியுள்ளன.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் சிவில் சமூக செயற்பாட்டாளர்களுக்கு பாதுகாப்பானதொரு சூழலை உறுதிசெய்யவேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்த விரும்புகின்றோம்.

அத்தோடு பொலிஸ் காவலின் கீழ் இடம்பெற்ற உயிரிழப்புக்கள் தொடர்பில் உரியவாறு விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று நாம் கடந்த 47 ஆவது கூட்டத்தொடரில் குறிப்பிட்டிருந்த நிலையில், தற்போது அதனை மீளவலியுறுத்த விரும்புகின்றோம்.

பயங்கரவாதத்தடைச்சட்டத்தை மீளாய்வு செய்வது குறித்து இலங்கை அரசாங்கத்தினால் சர்வதேச சமூகத்திற்கு வழங்கப்பட்டிருக்கும் தெளிவுபடுத்தல்கள் வரவேற்கத்தக்கவையாகும்.

இந்நிலையில் பயங்கரவாத்தடைச்சட்டத்தின் சரத்துக்களை சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்டக்கடப்பாடுகளுக்கு அமைவாக மாற்றியமைப்பதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மீளவலியுறுத்துகின்றோம்.

அதேவேளை பயங்கரவாத்தடைச்சட்டத்தின் கீழ் புனர்வாழ்வளிப்பதற்கான வழிகாட்டல்களை அறிமுகப்படுத்துவதற்கான முயற்சிகளை மீள்பரிசீலனைக்குட்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்தைக் கோருகின்றோம்.

அதுமாத்திரமன்றி மனித உரிமைகள் சட்டத்தரணியான ஹிஜாஸ் ஹிஸ்புல்லா மற்றும் கவிஞரும் ஆசிரியருமான அஹ்னாப் ஜசீம் ஆகியோர் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் கீழ் தொடர்ச்சியாகத் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை தொடர்பிலும் அவதானம் செலுத்தியிருக்கின்றோம்.

இ;ந்நிலையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளருக்கு முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்குமாறு இலங்கையை வலியுறுத்தும் அதேவேளை, 46/1 தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்குத் தயாராக இருக்கின்றோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

Share

இலங்கை மனித உரிமைகள்: ஐ.நா ஆணையரின் குற்றச்சாட்டுகளை நிராகரித்த ஜீ.எல். பீரிஸ்

இலங்கை தொடர்பிலான ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் மிச்செல் பெச்சலட் வெளியிட்ட வாய்மொழி அறிக்கையை இலங்கை வெளி விவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் நிராகரித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் 48வது அமர்வு, ஜெனிவாவில் நேற்று (செப்டம்பர் 13) தொடங்கியது.

இதில் உரையாற்றிய மீச்செல் பெச்சலட், இலங்கை மனித உரிமை நிலைமைகள் குறித்து பேசினார்.

உணவு பாதுகாப்பு மற்றும் விலை கட்டுப்பாடு ஆகியவற்றை மேற்கொள்ளும் நோக்கில் இலங்கை அரசாங்கத்தினால் அமல்படுத்தப்பட்ட அவசரகால விதிமுறைகள் ராணுவ மயமாக்கலை தீவிரப்படுத்தும் என அவர் கூறினார்.

அவசரகால விதிமுறையின் சிவில் செயற்பாடுகளில் ராணுவத்தின் பங்களிப்பு மேலும் விரிவாகும் என்றும் சமூக, பொருளாதார ஆட்சியில் இலங்கை தற்போது எதிர்நோக்கியுள்ள சவால்கள் ராணுவ மயமாக்கலின் பாரிய தாக்கத்தை செலுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

ராணுவ செயற்பாடுகளை ஐக்கிய நாடுகள் சபை, மிக உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் ஆணையாளர் மிச்செல் பெச்சலட் குறிப்பிட்டார். பின்னர் அவர் தமது கவலைகளை ஒவ்வொன்றாக பட்டியலிட்டார்.

ஆணையர் முன்வைத்த குற்றச்சாட்டு

அமைதியான எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் நினைவேந்தல்களை அனுசரிக்கும் நபர்களை, அரசாங்கம் தமது அதிகாரங்களை பயன்படுத்தி கைது செய்வதுடன், தனிமைப்படுத்தல் நிலையங்களில் பலவந்தமாக தடுத்து வைத்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

சிவில் சமூக குழுக்கள் மீது புதிய கட்டுப்பாடுகள் உருவாக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

இலங்கையின் சிவில் சமூகக் கருத்தாடலுக்கான வழிகள், பரந்த கலந்துரையாடல்கள் ஊடாக திறக்கப்பட வேண்டும் என ஆணையாளர் மிச்செல் பெச்சலட் வலியுறுத்தினார்

துரதிருஷ்டவசமாக மனித உரிமை பாதுகாவலர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் காணாமல் போனோரின் குடும்பங்கள் மீதான கண்காணிப்பு, மிரட்டல்கள், நீதித்துறை துன்புறுத்தல்கள் ஆகியன தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதுடன், மாணவர்கள், கல்வியாளர்கள், வைத்திய நிபுணர்கள், மத தலைவர்களின் அரசாங்கம் மீதான விமர்சனங்களுக்கு வரையறைகள் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், அடிப்படை சுதந்திரங்கள் மீதான கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படலாம் என்ற அச்சம் காணப்படுவதாகவும் அவர் கூறினார்.

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, மிக நீண்ட காலம் சிறை வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலையை இலங்கை அரசாங்கம் விரைவுப்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினர் மற்றும் மத தலைவர்கள் நியாயத்தை நிலைநாட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்து வருவதையும் அவர் நினைவுகூர்ந்தார்.

இந்த நிலையில், சட்டத்தரணி ஹிஜாஷ் ஹிஸ்புல்லா, நம்பிக்கையில்லா சாட்சியங்கள் இல்லாது, நீதிமன்ற நடவடிக்கைகளின் ஊடாக 16 மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கையில் மனித உரிமை தொடர்பிலான வழக்கு விசாரணைகள் குறித்தும் மிச்செல் பெச்சலட் கவலை வெளியிட்டார்.

2008 மற்றும் 2009ஆம் ஆண்டில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்ட வழக்கில், முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரணாகொடவிற்கு எதிரான வழக்கை தொடர முடியாது என சட்ட மாஅதிபர் அறிவித்தது, 2011ஆம் ஆண்டு அரசியல்வாதியின் கொலை குற்றத்திற்காக தண்டனை வழங்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு, ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியது போன்ற செயல்பாடுகள், நீதி செயல்முறை மீதான நம்பிக்கையை இல்லாது செய்வதாக மிச்செல் பெச்சலட் தெரிவித்தார்.

போலீஸ் தடுப்புக் காவலில் உள்ளவர்கள் மேலும் உயிரிழப்பது, போதைப்பொருள் குற்றத்தில் ஈடுபடுவோர் மீதான துப்பாக்கி பிரயோகங்கள் மற்றும் சட்ட அமலாக்க அதிகாரிகள் மீதான தொடர் சித்திரவதைகள் மற்றும் மோசமான நடத்தைகள் குறித்து தான் கவலை அடைவதாகவும் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் மிச்செல் பெச்சலட் கூறுகின்றார்.

இலங்கை அரசு எதிர்வினை

மனித உரிமை பேரவையின் ஆணையாளர் மிச்செல் பெச்சலட் நேற்றைய தினம் வெளியிட்ட கருத்துக்கு இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், மிச்செல் பெச்சலட்டின் குற்றச்சாட்டுக்களுக்கு இன்று பதிலளித்தார்.

தீர்மானம் 46/1 ஆல் நிறுவப்பட்ட எந்தவொரு வெளிப்புற முன்முயற்சிகளுக்கான முன்மொழிவை தாங்கள் நிராகரிக்கும் அதே நேரத்தில், சம்பந்தப்பட்ட விடயங்களில் உள்நாட்டு செயன்முறைகள் கையாளப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தீர்மானம் 30/1 இனால் தாங்கள் அனுபவித்தபடி இது தமது சமூகத்தைத் துருவப்படுத்திவிடும் எனவும் அவர் தெரிவித்தார்.

மனித உரிமைகள் பேரவை அதன் ஸ்தாபகக் கொள்கைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட நாட்டின் ஒத்துழைப்பு இல்லாமல் தொடங்கப்பட்ட வெளிப்புற முயற்சிகளால் அந்த நாட்டினால் குறிப்பிட்ட இலக்குகளை அடைந்து கொள்ள முடியாது என்பதுடன், அது அரசியல்மயமாக்கலுக்கு உட்படுத்தப்படும் எனவும் அவர் கூறினார்.

குறிப்பாக உலகின் பல பகுதிகளில் மனிதாபிமான மற்றும் ஏனைய ஆக்கபூர்வமான நோக்கங்களுக்காக அவை அவசரமாகத் தேவைப்படும்போது, இந்த முயற்சியில் செலவிடப்பட்ட வளங்கள் தேவையற்றவை என அவர் கூறுகின்றார்;.

2019ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலின் குற்றவாளிகள் மீது இலங்கை தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து, அனைத்து விதமான சட்ட நடைமுறைகளையும் பின்பற்றி வருவதாக அவர் குறிப்பிடுகின்றார்.

பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதிலும், அனைத்து மதங்களைச் சார்ந்த இலங்கையர்களைப் பாதுகாப்பதிலும் எப்போதும் போல தாம் விழிப்புடன் இருப்பதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவிக்கின்றார்.

கோவிட்-19 வைரஸ் தொற்று நோயின் நாளாந்த சவால்கள் இருந்த போதிலும், உள்நாட்டு செயன்முறைகளில் ஏற்பட்ட முன்னேற்றத்தை இதன்போது பட்டியலிட்டு அவர் முன்னிலைப்படுத்தியிருந்தார்.

01. காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகம் அதன் முக்கிய செயற்பாடாக, ஏனைய நிறுவனங்களுடன் இணைந்து காணாமல் போனவர்களின் பட்டியலை இறுதி செய்கின்றது.

02. இழப்பீட்டு அலுவலகம் இந்த ஆண்டு 3775 கோரிக்கைகளை செயலாக்கியுள்ளது.

03. தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம் அதன் 8 அம்ச செயற்றிட்டத்தைத் தொடர்கின்றது.

04. தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு அதன் ஆணையை நிறைவேற்றுகின்றது.

05. நிலையான அபிவிருத்தி இலக்கு 16 இன் கீழான வழிநடத்தல் குழுவொன்று சமாதானம், நீதி மற்றும் வலுவான நிறுவனங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

06. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மறுபரிசீலனை செய்வதற்கும், சர்வதேச விதிமுறைகள் மற்றும் சிறந்த நடைமுறைகளுக்கு ஏற்ப கொண்டு வரவும் அமைச்சரவை உப குழுவொன்று நியமிக்கப்பட்டது. இம்மாத இறுதியில் அமைச்சரவையில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள வழக்குகளை விசாரணை செய்யவும், இதுபோன்ற வழக்குகளை விரைவாக சமாளிப்பதற்கான பரிந்துரைகளை வழங்கவும் ஆலோசனைக் குழுவொன்று நியமிக்கப்பட்டது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் வழக்குகளை விரைந்து தீர்ப்பதும் நடைபெற்று வருகின்றது.

07. பொறுப்புக்கூறல் மற்றும் காணாமல் போனவர்கள் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காகவும், முந்தைய ஆணைக்குழுக்களின் பரிந்துரைகளை மறுபரிசீலனை செய்வதற்காகவும் உயர் நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் விசாரணை ஆணைக்குழு அமைக்கப்பட்டது. விசாரணை ஆணைக்குழு தனது இடைக்கால அறிக்கையை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்தது. இறுதி அறிக்கை அடுத்த 06 மாதங்களுக்குள் சமர்ப்பிக்கப்படும்.

08. நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தியை அடைந்து கொள்வதற்கு, நுண்ணறிவுகளைப் பெறுவதற்கும், ஆதரவைப் பயன்படுத்துவதற்கும் நாங்கள் சிவில் சமூகத்துடன் தீவிரமான ஈடுபாட்டைப் பராமரிக்கின்றோம என்று பீரிஸ் கூறியுள்ளார்.

Posted in Uncategorized

ஈழத்தமிழர் கருத்தை உள்வாங்கிய வெளியுறவுக்கொள்கை நிலைப்பாட்டை பலப்படுத்தவேண்டும் – ரெலோ

நோர்வேயில் வாழும் ஈழத்தமிழர்கள் கொண்டிருக்கும் கருத்தையும் உள்வாங்கியே வெளியுறவுக்கொள்கையை அந்த நாடு வகுக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டை பலப்படுத்தவேண்டும் என்று தமிழ் ஈழ விடுதலை இயக்கம்- ரெலோ தெரிவித்துள்ளது.

நோர்வேயில் பாராளுமன்றத் தேர்தலில் பங்காற்றிய புலம்பெயர் தமிழர்களை பாராட்டுகிறோம் என்ற தலைப்பில் நோர்வேயில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத்துக்கான தேர்தல்களில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் கைக்கொண்ட அணுகுமுறைகளை நாம் வரவேற்ற்றுப் பாராட்டும் வகையில் ரெலோவின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

2021 செப்டம்பர் மாதம் 13ம் திகதி நோர்வேயில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத்துக்கான தேர்தல்களில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் கைக்கொண்ட அணுகுமுறைகளை நாம் வரவேற்கிறோம். பாராட்டுகிறோம்.

புலம்பெயர் நாடுகளில் தேர்தல்கள் நடைபெறும்போது கொள்கை ரீதியாகக் குறைந்தபட்சம் திம்புக்கோட்பாடுகளில் வெளிப்படுத்தப்பட்ட ஈழத்தமிழர் தரப்புக் கோரிக்கைகளைக் கொள்கை ரீதியாக ஆதரிக்கும் கட்சிகளுக்குத் தமிழர்கள் கூட்டாக வாக்களிக்கும் நிலைப்பாட்டைக் கைகொண்டது பொருத்தமான ஓர் அணுகுமுறை என்று நாம் கருதுகிறோம். இது சம்பந்தமாக நோர்வே வாழ் எமது உறவுகளின் பிரதிநிதிகளோடு நாம் தொடர்ச்சியான கலந்துரையாடல்களில் கடந்த காலங்களில் ஈடுபட்டிருந்தோம்.

இலங்கைத் தீவின் வடக்கு-கிழக்குப் பகுதிகளை ஈழத் தமிழர்களின் மரபுவழித் தாயகமாவும், ஈழத் தமிழர்கள் தனி இனமாகவும் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள் எனவும் அங்கீகரித்தல் ஆகிய நிலைப்பாடுகள் அடிப்படையானவை.

இவ்வருட ஆரம்பத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகள் சிவில் சமூகத்தோடு ஒன்றிணைந்து ஐ.நா. மனித உரிமைப் பேரவைக்கும் அங்கு தீர்மானம் இயற்றும் நாடுகளுக்கும் இக்கோட்பாடுகளை முன்வைத்து கூட்டுக் கோரிக்கையை சமர்பித்துள்ளோம்.

குறைந்தபட்சம் இந்த கோரிக்கைகளை கொள்கையளவில் பிரகடனப்படுத்தும் கட்சிகளை நோர்வே புலம்பெயர் தமிழ் உறவுகள் குறிப்பாக ஆதரிக்கவேண்டும் என தெளிவு படுத்தியிருந்தோம்.

இந்த கொள்கை அடிப்படையில் , நோர்வேயின் தலைநகர் தேர்தற்தொகுதியில் நாடாளுமன்ற உறுப்புரிமையைக் கொண்டிருந்த ரொட்த் கட்சி கடந்த பெப்ரவரி மாதத்தில் ஈழத் தமிழர் தேசியம் சார்ந்த கொள்கையை கட்சியின் நிலைப்பாடாக அறிவித்திருக்கிறது. இது ஒரு முன்மாதிரியான, வரவேற்கத்தக்க செயற்பாடு.

நோர்வே தழுவிய தேசிய மட்டத்தில் ஏனைய கட்சிகளையும் அதைப் போன்ற தீர்மானங்களை நிறைவேற்றுமாறு தமது அரசியல் நடவடிக்கைகளை புலம் பெயர் தமிழர்கள் ஒருமித்த நிலையில் கட்டமைக்கவேண்டும் எனவும் எமது நோர்வே வாழ் உறவுகள் முன்னெடுத்திருந்தனர்.

இதனடிப்படையில் ஈழத் தமிழ் தேசத்தின் அங்கீகரித்த ரொட்த் எனும் சிவப்பு கட்சி 8 ஆசனங்களைப் பெற்று வெற்றியீட்ட நோர்வே வாழ் ஈழத் தமிழர்களின் பங்களிப்பு பாராட்டுக்குரியது.

அங்கு வாழும் ஈழத்தமிழர்கள் கொண்டிருக்கும் கருத்தையும் உள்வாங்கியே தமது நாடுகளின் வெளியுறவுக்கொள்கையை அந்த நாடு வகுக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டை நோர்வே புலம்பெயர் தமிழர்கள் பலப்படுத்தவேண்டும்.

நோர்வேயில் பரந்து வாழும் தமிழர்கள் எமது தேசியம் சார்ந்த கொள்கை வகுப்பை வலியுறுத்தும், பலப்படுத்தும் வகையில் நீங்கள் ஆதரிக்கும் கட்சிகளிடம் கோரிக்கைகளை முன்வைக்குமாறும் வேண்டுகிறோம்.

ஈழத் தாயகத்தில் எமது மக்களின் நிரந்தர அரசியல் தீர்வின் விடிவுக்காய் போராடிக் கொண்டிருக்கும் எமது வேலைத்திட்டங்களுக்கு வலுச் சேர்க்க,  புலம்பெயர் நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் எமது தமிழ்தேசிய உறவுகளை இவ்வகையான செயல்பாடுகளை ஒருமித்த நிலைப்பாட்டில் தொடர்ந்தும் முன்னெடுக்குமாறு கோருகிறாம்.

Posted in Uncategorized

ஊரடங்கு உத்தரவு அடுத்த வாரம் நீக்கப்படும் – ரமேஷ் பத்திரண

இலங்கையில் தற்போது அமுலிலுள்ள  தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு அடுத்த வாரம் நீக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சரவை இணைப் பேச்சாளரான அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று (14) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அண்மையில் அமுல்படுத்தப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவின் காரணமாக கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. எவ்வாறாயினும், ​கொரோனா ஜனாதிபதி ஆணைக்குழு பரிசீலனை செய்த பிறகு இந்த விஷயத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு சிறு வணிகங்களில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து இன்று நடைபெற்ற அமைச்சரவை செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே டாக்டர் ரமேஷ் பத்திரண பதிலளித்தார்.

இந்த மாத இறுதிக்குள் நிலைமையில் ஒரு பெரிய முன்னேற்றத்தை அதிகாரிகள் எதிர்பார்க்கிறார்கள். எவ்வாறாயினும் கொரோனா பணிக்குழு பரிசீலனை செய்த பின்னரே இந்த விடயத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 20ஆம் திகதி முதல் ஆமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு மூன்று தடைவைகள் நீடிக்கப்பட்டதன் அயப்படையில் எதிர்வரும் 21ஆம் திகதி வரை அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

ரஞ்சனுக்குப் பொது மன்னிப்பு -இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே மறுப்பு

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக வெளியாகியிருந்த தகவல்களை மறுத்துள்ள இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரணங்கள் சார்ந்த கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் மற்றும் சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வளிப்பு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே அவ்வாறான எந்தவொரு தீர்மானத்தையும் அரசாங்கம் எடுக்கவில்லை என்றார்.

சிறை தண்டனை அனுபவித்துவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க ஜனாதிபதி பொது மன்னிப்புக்கான ஆவணங்களில் கையெழுத்திட்டுள்ளதாக கையெழுத்திடப்பட்ட பொது மன்னிப்புக்கான ஆவணங்கள், சட்டத்தரணி அசான் பெர்ணான்டோவினால் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டிருந்த நிலையில் இந்தத் தகவலை இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே இதனைத் தெரிவித்துள்ளார்.

சிறைத்தண்டனை அனுபவித்துவரும் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

அவருடைய கடிதத்தில் கிட்டத்தட்ட 08 மாதங்களாக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்க வேண்டும் எனஇ நாட்டின் மூத்த பிரஜை மற்றும் முன்னாள் அரச தலைவர் என்ற ரீதியில் கேட்டுக்கொள்வதாக குறிப்பிட்டிருந்தார்.

ஒரு நடிகராக, ஒரு சமூக சேவையாளராக, ஒரு அரசியல்வாதியாக ரஞ்சன் ராமநாயக்க, பொது மக்களுக்கான சேவைகளை ஆற்றிவந்த ஒருவர் என முன்னாள் ஜனாதிபதி கூறியுள்ளார்.

பாரிய குற்றங்களுக்காக சிறைத்தண்டனை வழங்கப்பட்ட பலருக்குஇ தற்போதைய அரசாங்கத்தினால் பொது மன்னிப்பு வழங்கப்பட்ட காரணத்தினால் அத்தகைய பாரிய குற்றமல்லாத விடயத்திற்காக ரஞ்சன் ராமநாயக்க இவ்வாறு துன்பப்படுவது துரதிர்ஷ்டவசமான விடயம் என முன்னாள் ஜனாதிபதியின் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட ரஞ்சன் ராமநாயக்கவுக்கு 2021 ஜனவரி 12 ஆம் திகதி நான்கு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையை விதித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

காணிப்பதிவுகளை நிறுத்துங்கள் – வலி. வடக்கு மீள்குடியேற்ற குழுத் தலைவர்

வலிகாமம் வடக்கில், காணி பதிவுகள் மேற்கொள்வதை உடனடியாக நிறுத்துமாறு, வலிகாமம் வடக்கு மீள்குடியேற்ற குழுவின் தலைவர் அ. குணபாலசிங்கம் தெரிவித்தார்.

தற்பொழுது இராணுவத்தின் பிடியில் உள்ள காணிகள் தொடர்பில் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், கடந்த 31 வருடங்களாக வலிகாமம் வடக்கில் இராணுவத்தினரின் வசம் உள்ள காணிகள் விடுவிக்கப்படவில்லை என்றார்.

அரசாங்கத்தால் இராணுவம் வசமுள்ள பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளை விடுவிப்பதற்காக, அக்காணிகளின் காணிகளின் உரிமையாளர்கள், தம்மை பதிவு செய்யுமாறு பல தடவைகள் கோரப்பட்டு, பொதுமக்களும் அவ்வாறு பதிவுகளை மேற்கொண்டிருந்ததாகவும் ஆனால் இன்றுவரை தமது காணிகள் விடுவிக்கப்படவில்லை எனவும், குணபாலசிங்கம் தெரிவித்தார்.

ஏற்கெனவே இராணுவத்திடமிருந்து தமது காணியை மீட்பதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருந்ததாகத் தெரிவித்த அவர், ஆனால் தற்போது வரை அந்த முயற்சி பயனளிக்கவில்லை எனவும் கூறினார்.

இந்நிலையில், தற்போதைய அரசாங்கத்தாலும், இராணுவத்திடம் காணிகள் உள்ளோர் பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதற்கு இனியும் விவரங்களை சேகரித்து கொண்டிருக்காது, அந்த விவரம் சேகரிப்பதை தற்காலிகமாக இடைநிறுத்தி, இந்தப் பதிவு நடைமுறையை சற்று பிற்போடுமாறும், அரசாங்கத்தை கோரினார்.

ஏற்கெனவே சேகரிக்கப்பட்ட பொதுமக்களின் காணி விவரங்கள்இராணுவ தளபதி மற்றும் ஏனைய அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு மீண்டும் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கூறுவதன் காரணமாக, பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்குகிறார்கள் எனவும், அவர் தெரிவித்தார்.

அரசாங்கம்  மக்களுக்குரிய காணிகளை விரைவில் விடுவிக்க வேண்டும் எனத் தெரிவித்த அவர், பொதுமக்கள் கடந்த 30 வருடங்களாக பெரும் சிரமத்தை எதிர்நோக்கி உள்ளார்கள் எனவும் எனவே, பொதுமக்களின் நலன் சார்ந்து பொதுமக்களின் காணிகளை கையளிக்க வேண்டும் எனவும் கோரினார்.

அத்துடன், ‘ஒவ்வொரு வருடமும் ஐ.நா சபையில் அமர்வு ஆரம்பமாகும் போது, ஆட்சியில் உள்ள அரசாங்கமானது, காணி விடுவிப்பு தொடர்பில் சில முன்னெடுப்புகளை முன்னெடுக்கும். ஆனால் ஐக்கிய நாட்டு சபையின் கூட்டத்தொடர் முடிந்த பின்னர், அது புஷ்வானமாக போய்விடும். எனவே இம்முறை இந்த அரசாங்கமானது வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் விடுவிக்கப்படாதுள்ள காணிகளை பொதுமக்களிடம் கையளிக்க வேண்டும்’ எனவும், குணபாலசிங்கம் தெரிவித்தார்.

Posted in Uncategorized

யாழ். பிள்ளையார் குள சுற்று வேலியின் பௌத்த கொடியின் வர்ணங்களால் சர்ச்சை

யாழ். பொஸ்கோ பாடசாலைக்கு அருகாமையில் உள்ள மாநகர சபைக்கு சொந்தமான பிள்ளையார் குளத்தைச் சுற்றி, பௌத்த கொடிகளில் காணப்படும் வர்ணங்களை ஒத்தவகையில் நிறம் தீட்டும் செயற்பாடு இடம்பெற்று வருகிறது.

உலக வங்கியின் நிதி அனுசரணையுடன், மீளப் புனரமைக்கப்பட்டு வருகின்ற பிள்ளையார் குளத்தின் சுற்று கம்பங்களுக்கே, இவ்வாறு பௌத்த கொடிகளில் உள்ள நிறங்களை பொறிக்கும் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.

1996ஆம் ஆண்டு 1.51(0.6063) ஏக்கராக இருந்த இந்தக் குளத்தின் பரப்பளவு 2013ஆம் ஆண்டு மீள அளக்கப்பட்ட போது, 1.26(0.5078) ஏக்கராக குறைவடைந்துள்ளமை தெரியவந்தது.

இவ்வாறான நிலையில், குறித்த குளம் தற்போது புனரமைக்கப்பட்டு வரும் நிலையில், குளத்திலிருந்து தூர்வாரப்பட்டு மண்ணை மீண்டும் குளத்தின் சுற்றுப்புறங்களில் கொட்டியதாக குற்றச்சாட்டுகளும் எழுந்தன.

இந்நிலையில், யாழ். மாவட்டத்தில் இடம்பெறும் அபிவிருத்திகள் தொடர்பில் கள ஆய்வுகளை மேற்கொள்வதற்காக, கடந்த வாரம் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ குறித்த பகுதிக்கு விஜயம் செய்திருந்தார்.

இவ்வாறான நிலையில், அவர் பார்வையிட்டு சென்ற  நிலையில், இவ்வாறு இடம்பெறுவது பலருக்கும் சந்தேகங்களை ஏற்படுத்துகின்றது.