கனடாவில் கென்சர்வேட்டிவ் ஆட்சி அமைந்தால் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக சர்வதேச நீதிமன்றில் நடவடிக்கை

கனடாவில் கென்சவேர்ட்டிவ் கட்சி ஆட்சியமைத்தால் சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான சட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக நாங்கள் கனடாவின் வெளிவிவகார அமைச்சின் சட்டத்தரணிகளை பயன்படுத்துவோம், என கட்சியின் தலைவர் பியர் பொலியர் தெரிவித்துள்ளார்.

கனடாவின் ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் கனடாவில் கென்சர்வேட்டிவ் கட்சி ஆட்சியமைத்தால் தமிழர்கள் இனப்படுகொலை தொடர்பில் என்ன நிலைப்பாட்டை எடுக்கவுள்ளீர்கள் என்ற கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

1980களில் கனடாவிற்கு பெருமளவு புலம்பெயர்ந்த தமிழர்களை முதலில் வரவேற்றவர் கென்சவேர்ட்டிவ் கட்சியின் அப்போதைய பிரதமர் பிரையன் முல்ரோனி.

இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக முதலில் சர்வதேச தடைகளை விதித்தது கொழும்பில் இடம்பெற்ற பொதுநலவாய உச்சிமாநாட்டில் கலந்துகொள்ளாமல் வெளியேறி மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தை அவமானப்படுத்தியது பிரதமர் ஹார்ப்பர் அரசாங்கமே.

இலங்கையில் இனப்படுகொலையில் ஈடுபட்ட அரசாங்க உறுப்பினர்களிற்கு எதிராக மக்னிட்ஸ்கி தடைகளை விதிப்பதே தற்பொது என திட்டம்,இதன் மூலம் சர்வதேச தடைகள் ஊடாக அவர்களது தனிப்பட்ட நிதிகளை முடக்கலாம்.

சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான சட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக நாங்கள் கனடாவின் வெளிவிவகார அமைச்சின் சட்டத்தரணிகளை பயன்படுத்துவோம்,இதன் மூலம் இலங்கை அரசாங்கத்தின் உறுப்பினர்களை இனப்படுகொலைக்காக இனம்கண்டு சட்டநடவடிக்கைகளிற்கு உட்படுத்தலாம்.

தமிழர்களிற்கு எதிராக தொடரும் இனப்படுகொலை நடவடிக்கைகளிற்காக இலங்கை அரசாங்கத்தை தொடர்ந்து கண்டிப்போம் தனிமைப்படுத்துவோம்.

எங்கள் மீது கல் வீசும் அனைவரையும் நாங்கள் கவனித்துக்கொள்கிறோம் – பசிலின் எச்சரிக்கை!

கற்களை எறிபவர்கள் அனைவரும் கவனிக்கப்படுவார்கள் என பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

“நீங்கள் எப்படி வந்தாலும் , அதற்கு நாங்களும் தயார். வீதியில் ஓடும் நாயின் மீது கல் அடித்தால், அது குரைத்துக் கொண்டு வேகமாக ஓடிவிடும். ஆனால், சிங்கத்தை கல்லால் அடித்தால், சிங்கம் திரும்பி, யார் கல்லை அடித்தது என்று பார்க்கும். நாம் அப்படித்தான். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் கூட. ”

“எங்களை வந்து கல்லால் அடிக்காதீர்கள். நாங்களும் பார்த்துக்கொள்கிறோம். ”

சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (15) இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் தேசிய பொது மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் பணிப்புரைக்கு அமைய இந்த மாநாட்டுக்கு பாரிய பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. ஐக்கிய தேசியக் கட்சியின் பொது மாநாட்டில் அவ்வாறான உத்வேகம் இல்லாத காரணத்தினால் சுகததாச உள்ளக விளையாட்டரங்கிற்கு மிகவும் பிரயத்தனப்பட்டு குழுவினர் அழைத்து வரப்பட்டதாகத் தோன்றியது.

மேலும், இந்த மாநாட்டில் உரையாற்றிய பசில் ராஜபக்ஷ, மீள உருவாக்கப்படும் பொதுஜன பெரமுன அரசாங்கம் இப்படி ஒரு தொய்வாக இருக்காது, துடிப்பான அரசாங்கமாக இருக்கும் என்றார்.

ஒவ்வோரு கிராமம் , நகரம் என எங்கு சென்று மேலே பார்த்தாலும், கீழே பார்த்தாலும், பூமிக்கு அடியில் பார்த்தாலும், மஹிந்த ராஜபக்ஷ செய்ததைத்தான் பார்ப்பார்கள் என்றும், வேறு யாருக்கும் உரிமை வழங்க வேண்டாம் என்றும் பசில் ராஜபக்ச கட்சி உறுப்பினர்களிடம் கேட்டுக்கொண்டார்.

அத்துடன் மகிந்த ராஜபக்ச ஒழுக்கமான கட்சியை கட்டியெழுப்பியதுடன், கட்சி உறுப்பினர்களை முடிந்தவரை ஒழுக்கமாக நடந்து கொள்ளுமாறு கூறிய பசில், இதனை கோழைத்தனமாக கருத வேண்டாம் எனவும் ஏனைய கட்சிகளுக்கு அறிவித்துள்ளார்.

பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் கொழும்புக்கு வந்த கிராம மக்கள் குழுக்களை பாதுகாப்பாக வீடுகளுக்கு அனுப்ப பாதுகாப்பு தரப்பினருடன் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கிராமத்திற்குச் சென்ற தேசிய அமைப்பாளர் மஞ்சள் கோடு வழியாக தவிர , வேறு இடங்களால் வீதியைக் கூட கடக்க வேண்டாம் என்று கூறியதுடன், சமூக ஊடகங்கள் மொட்டு கட்சியினர் தவறு செய்யும்வரை காத்திருக்கின்றன என்றார் அவர்.

முல்லைத்தீவில் கனமழையால் 695 குடும்பங்களை சேர்ந்த 2117 பேர் பாதிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற கனமழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களும் முற்று முழுதாக நிறைந்து வான் கதவுகளிலிருந்து நீர் பாய்கின்ற நிலைமை காணப்படுகிறது.

எனவே தற்போது பெய்கின்ற சிறிய மழைக்கு கூட மிக பெரிய அழிவுகளை எதிர்நோக்குகின்ற நிலைமைக்கு முல்லைத்தீவு மாவட்ட மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இவ்வாறான பின்னணியில் சற்று முன்னர் திடீரென வந்த வெள்ளம் காரணமாக ஒட்டுசுட்டான் பிரதேசத்தின் புளியங்குளம் பண்டாரவன்னி உள்ளிட்ட கிராம மக்களின் வீடுகள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் பலர் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர். இவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன.

இதேபோன்று குளங்களுக்கான நீர் வரத்து மிக வேகமாக காணப்படுவதால் பல்வேறு குளங்கள் உடைப்பெடுக்கும் அபாயத்தையும் எதிர்கொண்டுள்ளதோடு வான் கதவுகள் வழியே பாய்கின்ற நீர் மக்கள் குடியிருப்புகளுக்குள் செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளமையினால் மக்கள் மிக அவதானமாக செயல்படுமாறு முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை இன்று காலை 9 மணி வரையான தகவல் அடிப்படையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவில் அம்பாள்புரம், கரும்புள்ளியான், ஒட்டறுத்த குளம், நட்டாங்கண்டல், பாண்டியன்குளம், செல்வபுரம், பாலிநகர், சிராட்டிகுளம், சிவபுரம், மூன்றுமுறிப்பு ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளை சேர்ந்த 261 குடும்பங்களை சேர்ந்த 870 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோன்று ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் மாங்குளம், பனிக்கன்குளம், பண்டாரவன்னி, இந்துபுரம், தட்டையர்மலை, புளியங்குளம், தச்சடம்பன் ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளை சேர்ந்த 127 குடும்பங்களை சேர்ந்த 423 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோன்று கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கள்ளப்பாடு, சிலாவத்தை, செல்வபுரம், வற்றாப்பளை , தண்ணிமுறிப்பு, முள்ளியவளை தெற்கு, கள்ளப்பாடு வடக்கு, கள்ளப்பாடு தெற்கு ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளை சேர்ந்த 44 குடும்பங்களை சேர்ந்த 136 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோன்று துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவில் அணிஞ்சியன்குளம், உயிலங்குளம், தென்னியங்குளம், கோட்டைகட்டிய குளம், ஆலங்குளம், தேராங்கண்டல், கல்விளான், மல்லாவி, யோகபுரம் கிழக்கு, புகழேந்தி நகர், பாரதிநகர், யோகபுரம் மேற்கு ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளை சேர்ந்த 86 குடும்பங்களை சேர்ந்த 267 பேர் பாதிக்கப்பட்டுள்ளன.

இதேபோன்று புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர்கள் பிரிவில் புதுக்குடியிருப்பு மேற்கு மற்றும் தேவிபுரம் கிராம அலுவலர் பிரிவுகளை சேர்ந்த 177 குடும்பங்களை சேர்ந்த 415 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அந்த வகையிலே மொத்தமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் 695 குடும்பங்களை சேர்ந்த 2117 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ பிரிவின் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட மாங்குளம் கிராம அலுவலர் பிரிவில் 4 குடும்பங்களை சேர்ந்த 17 பேரும், புளியங்குளம் கிராம அலுவலர் பிரிவில் 5 குடும்பங்களை சேர்ந்த 21 பேரும், பண்டாரவன்னி கிராம அலுவலர் பிரிவில் 19 குடும்பங்களை சேர்ந்த 55 பேருமாக 28 குடும்பங்களை சேர்ந்த 93 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் பதவியிலிருந்து விடைபெற்றார் கோபால் பாக்லே

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே நேற்று வெள்ளிக்கிழமையுடன் அப்பதவியிலிருந்து விடைபெற்றிருப்பதுடன், அடுத்ததாக அவர் அவுஸ்திரேலியாவுக்கான இந்திய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கோபால் பாக்லே இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராகக் கடந்த 2020 ஆம் ஆண்டு மேமாதம் பொறுப்பேற்றுக்கொண்டதுடன், அவரது காலப்பகுதியில் இலங்கை – இந்திய இருதரப்பு உறவில் பல்வேறு ‘மைல்கல்’ அடைவுகள் எட்டப்பட்டன.

குறிப்பாக கடந்த ஆண்டு இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருந்த வேளையில் இந்தியாவினால் வழங்கப்பட்ட சுமார் 4 பில்லியன் டொலர் பெறுமதியான உதவிகள் அவரது பதவிக்காலத்தில் இடம்பெற்ற இருதரப்பு உறவு சார்ந்த மிகமுக்கிய நகர்வாகும். அதேபோன்று திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் தொடர்பில் எட்டப்பட்ட இணக்கப்பாடு, கடந்த ஆண்டு ஜனவரியில் முன்னெடுக்கப்பட்ட இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை இந்திய பெற்றோலிய கூட்டுத்தாபனம் ஆகியவற்றின் கூட்டுமுயற்சி என்பனவும் குறிப்பிட்டுக்கூறத்தக்க அடைவுகளாகும். அத்தோடு கோபால் பாக்லேவின் பதவிக்காலத்தில் கொவிட் – 19 வைரஸ் பெருந்தொற்றிலிருந்து இலங்கை மீட்சியடைவதற்கு உதவும் வகையில் சுமார் 25 டொன்களுக்கு மேற்பட்ட மருந்துப்பொருட்கள், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொவிட் – 19 தடுப்பூசி, அன்டிஜன் பரிசோனை உபகரணங்கள், திரவ ஒட்சிசன் என்பன இந்தியாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்டன.

மேலும் கோபால் பாக்லே உயர்ஸ்தானிகராகப் பதவிவகித்த காலகட்டத்தில் இருநாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தகத் தொடர்புகள் குறிப்பிடத்தக்களவு முன்னேற்றத்தைப் பதிவுசெய்தன. புதுப்பிக்கத்த சக்திவலு உற்பத்தியில் ஒத்துழைப்பு, திருகோணமலை துறைமுக அபிவிருத்தி, டிஜிட்டல் கொடுப்பனவு முறைமை, வர்த்தக ரீதியான கொடுப்பனவுகளுக்கு இந்திய ரூபாவைப் பயன்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. அதுமாத்திரமன்றி இலங்கையின் மிகமுக்கிய வர்த்தகப் பங்காளியாக இந்தியா எழுச்சியடைந்தது. இலங்கையின் தனித்துவ டிஜிட்டல் அடையாள செயற்திட்டம் போன்ற அபிவிருத்தித்திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டதுடன், இருநாடுகளுக்கும் இடையில் பல தலைமுறைகளாக நிலவிவந்த பௌத்தமதம் சார்ந்த தொடர்புகள் 15 மில்லியன் டொலர் நிதியுதவி, இலங்கையிலிருந்து குஷிநகருக்கு சர்வதேச விமானசேவை ஆரம்பிக்கப்பட்டமை, அதனூடாக சுமார் 100 பௌத்த பிக்குகள் குஷிநகருக்கு அழைத்துவரப்பட்டமை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மூலம் மீளப்புதுப்பிக்கப்பட்டன. அதுமாத்திரமன்றி சென்னை – யாழ்ப்பாணத்துக்கு இடையிலான கப்பல் சேவை போன்ற மாறுபட்ட நடவடிக்கைகள் மூலம் இருநாட்டுத் தொடர்புகள் மேலும் விரிவுபடுத்தப்பட்டன.

இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கைக்கான அடுத்த இந்திய உயர்ஸ்தானிகராக சந்தோஷ் ஜா பொறுப்பேற்றுக்கொள்ளவிருக்கிறார். அவர் தற்போது பெல்ஜியம், லக்ஸம்பேர்க் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இந்தியத்தூதுவராகப் பதவிவகித்துவருகின்றார். சுமார் 30 வருடங்களுக்கும் மேலான இராஜதந்திர உறவுகள்சார் அனுபவத்தைக் கொண்டிருக்கும் அவர், பல்வேறு முக்கிய பதவிகளை வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நலிவுற்ற நிலையிலுள்ள சமூகங்களுடன் நேரடியாகப் பணியாற்றுவதற்கு அதிக முக்கியத்துவம் வழங்க எதிர்பார்ப்பு

இலங்கையில் நலிவுற்ற நிலையிலுள்ள சமூகங்கள் மற்றும் குடும்பங்களுக்கு உதவும் வகையில் அவர்களுடன் இணைந்து நேரடியாகப் பணியாற்றுவதற்கு அதிக முக்கியத்துவம் வழங்கியிருப்பதாக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்டத்தின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி அசூஸா குபோட்டா தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடியை அடுத்து நாட்டிலுள்ள வறிய மற்றும் பின்தங்கிய சமூகப்பிரிவினர் வருமான வீழ்ச்சி, உணவுப்பாதுகாப்பின்மை, போசணை குறைபாடு உள்ளிட்ட பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்துவருகின்றனர். இவ்வாறானதொரு பின்னணியில் அவர்களுக்கு உதவுவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்பட்டுள்ள செயற்திட்டம் குறித்துத் தெளிவுபடுத்துகையிலேயே அசூஸா குபோட்டா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது,

அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூகங்களுக்கு இடையில் பரந்துபட்ட வகையில் மீளெழும் தன்மையைக் கட்டியெழுப்பல் ஆகியவற்றை இலக்காகக்கொண்டு இலங்கையில் நலிவுற்ற நிலையிலுள்ள சமூகங்கள் மற்றும் குடும்பங்களுடன் நேரடியாக இணைந்து பணியாற்றுவதற்கு நாம் அதிக முக்கியத்துவம் வழங்கியிருக்கின்றோம். அதனைச் செய்வதற்கு நாம் பல்வேறு தரப்பினருடன் ஒன்றிணைந்து செயலாற்றவேண்டும்.

அதன்படி, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்டமும் இலங்கையில் இயங்கிவரும் ஹிர்டரமனி ஆடை உற்பத்தி நிறுவனமும் இணைந்து முன்னெடுக்கவிருக்கும் உதவிச்செயற்திட்டத்தின் ஊடாக சுமார் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயனடையும். குறிப்பாக அக்குடும்பங்கள் பழங்கள் மற்றும் மரக்கறிகளைப் பயிரிடுவதற்கு அவசியமான ஒத்துழைப்பு வழங்கப்படுவதுடன், அதனூடாக அக்குடும்பங்களின் வருமானம் மற்றும் போசணைசார் தேவைகள் பூர்த்திசெய்யப்படும் என்று குறிப்பிட்டார்.

தமிழ் சிவில் சமூகக் குழுக்கள் இமயமலைப் பிரகடனத்தை நிராகரிப்பு

தமிழ் சிவில் சமூக குழுக்கள் தமிழ் குறைகளை நிவர்த்தி செய்யாததற்காக “இமயமலை பிரகடனத்தை” நிராகரிக்கின்றன என பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வேலன் சுவாமிகள் தெரிவித்தார்.

குறித்த விடயம் தொடர்பாக இன்று அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தமிழ் பல்கலைக்கழக மாணவர்கள், காணாமல் போனோர் குடும்பங்கள் உட்பட பாதிக்கப்பட்ட குழுக்கள், சமய குழுக்கள், தொழிற்சங்கங்கள், கல்விமான்கள் மற்றும் பலர் அடங்கிய தமிழ் சிவில் சமூக குழுக்கள் சங்காவின் சிறந்த இலங்கை (SBSL) மற்றும் உலகத் தமிழ் மன்றம் (SBSL) மற்றும் உலகளாவிய தமிழ் மன்றம் (இமயமலை பிரகடனத்தை” கூட்டாக நிராகரித்துள்ளன. GTF).

இமயமலைப் பிரகடனத்தை (“பிரகடனம்”) ஆர்வத்துடன் படித்தோம். ஆனால், சுதந்திரத்திற்குப் பிறகு தமிழர்கள் அனுபவித்து வரும் வேதனைகள் மற்றும் வேதனைகள் மற்றும் தமிழர்களின் குறைகளையும், வேதனைகளையும் முற்றிலும் புறக்கணித்ததற்காக ஏமாற்றமடைந்தோம்.

வெளிப்படையாக, பௌத்த மதகுருமார்களுக்கு தமிழர்களின் குறைகள் பற்றி தெரியாது, ஏனெனில் அவர்கள் தமிழர் பகுதிகளுக்கு வெளியே சிங்களவர்களிடையே வசிப்பதால், நாம் என்ன கடந்து வந்தோம், தொடர்ந்து கடந்து வருகிறோம்.

பதினான்கு வருடங்களுக்கு முன்னர் யுத்தம் முடிவடைந்த பின்னர், P2P (பொதுவில் முதல் பொலிகண்டி வரை) போன்ற வெகுஜன பேரணிகள் மூலம் நேரடியாக எமது குறைகளை வெளிப்படுத்தியுள்ளோம். பாதுகாப்புப் படையினரின் மிரட்டல் மற்றும் தாக்குதல்களுக்கு மத்தியிலும் சுமார் அரை மில்லியன் தமிழர்கள் இணைந்து தமிழ்ப் பகுதிகளில் ஐந்து நாள் அணிவகுப்பை P2P வழிநடத்தியது. தமிழ்ப் பல்கலைக்கழக மாணவர்களும், காணாமல் போனவர்களின் குடும்பங்கள் போன்ற பாதிக்கப்பட்ட குழுக்களும் தமிழர்களின் குறைகளை வெளிப்படுத்தும் வகையில் ஏராளமான போராட்டங்கள், உண்ணாவிரதப் போராட்டங்கள் மற்றும் ஊர்வலங்களை நடத்தினர். அவர்களின் குறைகள் எதுவும் இந்த “பிரகடனத்தில்” கவனிக்கப்படவில்லை. பதினான்கு ஆண்டுகளுக்கு முன்னர் யுத்தம் முடிவடைந்த பின்னர் தமிழர்களால் வெளிப்படுத்தப்பட்ட பின்வரும் தமிழ்க் குறைகளை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறோம்.

1.போருக்கு முந்தைய 1983 நிலைகளுக்கு தமிழர் பகுதிகளில் ஆயுதப் படைகளின் இருப்பைக் குறைத்தல். யுத்தம் முடிவடைந்து பதினான்கு வருடங்களுக்கு மேலாகிவிட்டது, ஆனால் மே 2009 இல் போரின் உச்சக்கட்டத்தில் இருந்ததைப் போலவே மோசமான இராணுவப் புலனாய்வுப் பிரிவு உட்பட பாதுகாப்புப் படைகளின் பிரசன்னம் பராமரிக்கப்பட்டு வருகிறது. அமைதிக் காலத்தில் பொதுமக்கள் மத்தியில் அவர்களின் இருப்பு இனப்படுகொலை மற்றும் தமிழ்ப் பெண்களை பாதுகாப்புப் படையினரால் பெருமளவிலான கற்பழிப்பு உள்ளிட்ட கடுமையான அட்டூழியக் குற்றங்களை எதிர்கொண்ட தமிழர்களுக்குப் பல பாதுகாப்பு மற்றும் சமூகப் பிரச்சினைகளை உருவாக்குகிறது.

2. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ICC) இலங்கையைப் பார்க்கவும்: போர் முடிவடைந்து பதினான்கு ஆண்டுகள் கடந்துவிட்டன, ஆனால் ஒரு பாதுகாப்புப் படை அதிகாரியோ அல்லது அரசியல் தலைவரோ நீதியை எதிர்கொள்ளவில்லை – ஐ.நா உள் ஆய்வு அறிக்கையின்படி, சுமார் எழுபதாயிரம் தமிழர்கள் 2009 இல் நடந்த போரின் இறுதி ஆறு மாதங்களில் கொல்லப்பட்டனர். மேலும், குழந்தைகள் மற்றும் குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கான தமிழர்கள் காணாமல் போனார்கள். மனித உரிமைகளுக்கான ஐ.நா உயர்ஸ்தானிகர் உட்பட பல ஐ.நா அதிகாரிகளின் கோரிக்கையின்படி இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ஐ.சி.சி) பரிந்துரைக்குமாறு நாங்கள் கோருகிறோம்.

3. புராதன இந்து இடங்கள் உட்பட இந்துக் கோவில்களை அழிப்பதை நிறுத்தவும், பௌத்தர்கள் யாரும் வசிக்காத தமிழ் பகுதிகளில் புத்த கோவில்கள் கட்டுவதை நிறுத்தவும்.

4. தமிழர் பிரதேசங்களில் அரச அனுசரணையுடன் சிங்களக் குடியேற்றங்களை நிறுத்துதல் மற்றும் தமிழர் நிலங்களை அபகரிப்பதை நிறுத்துதல்.

5. நீடித்து வரும் தமிழர் மோதலைத் தீர்க்க சர்வதேச அளவில் வாக்கெடுப்பு நடத்தவும்: சுதந்திரம் பெற்றதில் இருந்து நீடித்து வரும் தமிழர் மோதலுக்கான அடிப்படைக் காரணம் அர்த்தமுள்ள அரசியல் தீர்வு இல்லாததுதான். இந்த மோதலின் விளைவாக 1958, 1977, 1983 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் தமிழர்கள் பெருமளவில் கொல்லப்பட்டனர். தமிழ்த் தலைவர்களுக்கும் சிங்கள மேலாதிக்க அரசாங்கங்களுக்கும் இடையிலான பல ஒப்பந்தங்கள் ஒருதலைப்பட்சமாக அடுத்தடுத்த அரசாங்கங்களால் ரத்து செய்யப்பட்டன மற்றும் இந்தியா மற்றும் நோர்வேயின் சர்வதேச மத்தியஸ்தம் கூட தோல்வியடைந்தது. உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் உள்ளதைப் போலவே, ஜனநாயக ரீதியில் அரசியல் தீர்வைக் காண்பதற்கு சர்வதேச அளவில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று தமிழர்கள் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வடமாகாண ஆளுநருடன் வெளிநாட்டு தூதுவர்கள் சந்திப்பு

சுவிட்சர்லாந்து, ஜப்பான் ஆகிய நாடுகளின் தூதுவர்களும், தென்னாப்பிரிக்கா உயர்ஸ்தானிகரும் வடமாகாண ஆளுநரை சந்தித்தனர்.

சுவிட்சர்லாந்து நாட்டின் இலங்கைக்கான தூதுவர் சிறி வோல்ட் (Dr. Siri Walt), ஜப்பான் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் மிசுகொஷி ஹிடேகி (MIZUKOSHI Hideaki) மற்றும் தென்னாபிரிக்காவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் சாண்டைல் எட்வின் ஷால்க் (Sandile Edwin Schalk) ஆகியோர் வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸை நேற்றிரவு சந்தித்து கலந்துரையாடினர்.

யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இந்த சிநேகபூர்வ கலந்துரையாடல் நடைபெற்றது.

வடமாகாணத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள், நல்லிணக்க செயற்பாடுகள், மாகாணத்தில் எதிர்நோக்கப்படும் சவால்கள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் சிநேகபூர்வ சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.

பிரபாகரனை நேருக்கு நேர் எதிர்கொண்ட தலைவர் நானே – போர் வெற்றிக் கோஷம் எழுப்பிய மஹிந்த

“தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை நேருக்கு நேர் எதிர்கொள்ள எந்தவொரு முன்னாள் ஜனாதிபதியும் முன்வரவில்லை. ஆனால், நான்தான் அவரை நேருக்கு நேர் எதிர்கொண்டேன்.”– இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

“எனது ஆட்சிக் காலத்தின் பின்னரான காலப்பகுதியில், இலங்கையை ஆட்சி செய்த வேறு எந்தவொரு ஜனாதிபதியும் போரை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்படவில்லை” – என்றும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேசிய மாநாட்டில் உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இலங்கையைக் கடந்த 2005 ஆம் ஆண்டு நான் ஏற்றுக்கொள்ளும் போதும் எமது கட்சி மீது பலர் சேறு பூசினார்கள். எனினும், நாடு இரண்டாகப் பிளவுபடுவதைத் தடுக்குமாறு மாத்திரமே அன்று மக்கள் எம்மிடம் கோரினார்கள்.

முப்பது வருட ஆயுதப் போரில், தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனை எந்தவொரு ஜனாதிபதியாலும் எதிர்கொள்ள முடியவில்லை.சில ஜனாதிபதிகள் போரை நிறுத்துமாறு கோரி பிரபாகரனுக்கு ஆயுதங்களையும் வழங்கினார்கள்.

அந்த ஜனாதிபதி யார் என்று நான் கூற மாட்டேன். இவ்வாறான போரை எனக்குப் பின்னர் வந்த இலங்கையின் மற்ற ஜனாதிபதிகள் எதிர்நோக்கும் நிலையை நாம் உருவாக்கவில்லை. சிங்கள, தமிழ், முஸ்லிம் உள்ளிட்ட அனைத்து மக்களும் சமாதானமாக வாழக்கூடிய நிலையை நாம் ஏற்படுத்தினோம்.

கடந்த 2009 ஆம் ஆண்டு போர் நிறைவடைந்த போது, குழந்தைகளாக இருந்தவர்கள், தற்போது போர் என்றால் என்ன என்று தெரியாத வாழ்க்கையை வாழ்கின்றார்கள்.

எனினும், மக்களை ஏமாற்றி தங்கள் அரசியல் நோக்கங்களுக்காகச் செயற்படும் தரப்பினர் இன்றும் இருக்கின்றார்கள்.இவ்வாறானவர்கள் சர்வதேசத்தின் வலைகளில் சிக்கி எமது சொந்த நாட்டைப் பாதிப்படைய செய்கின்றார்கள்.

எமது கட்சியின் ஆட்சிக் காலத்தில் காணப்பட்ட பொருளாதார நிலை குறித்து தற்போதும் பலர் கருத்துக்களை முன்வைக்கின்றார்கள்.எம்மைக் குற்றவாளிகளாக வெளிக்காட்டும் முயற்சிகளில் பலர் ஈடுபடுகின்றார்கள்.

2005 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குள் நாம் நாட்டின் பொருளாதாரத்தை 6 வீதத்தால் வளர்ச்சியடையச் செய்திருந்தோம்.இந்தநிலையில், இலங்கையைச் சரியான பாதையில் கொண்டு செல்ல சரியானதொரு அரசியல் வழிநடத்தல் தேவை.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மிகக் குறுகிய காலத்தில் நாட்டில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. இலங்கை நாட்டை யாருடைய சொந்தத் தேவைக்காகவும் பிளவுபட நாம் இடமளிக்க மாட்டோம்.அனைத்து சவால்களையும் எதிர்நோக்கக்கூடிய ஒரே நாடு இலங்கை என்பதை சொல்வதில் நான் பெருமிதம் கொள்கின்றேன்.

எமக்குள்ள மக்கள் ஆணையுடன் எதிர்வரும் நாள்களில் நடைபெறவுள்ள தேர்தல்களில் நாம் போட்டியிடுவோம். பாரிய வெற்றியையும் அடைவோம். எமது வெற்றிப் பயணத்தில் பங்கேற்க பல அரசியல் கட்சிகள் ஆர்வமாகக் காத்திருக்கின்றன.” – என்றார்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மஹிந்த ராஜபக்‌ஷ நியமனம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாடு கொழும்பில் இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ மற்றும் கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்க்ஷ ஆகியோரின் தலைமையில் வெள்ளிக்கிழமை (15) பிற்பகல் சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது.

இதன்போது பொதுஜன பெரமுன உறுப்பினர்களின் இணக்கப்பாட்டுடன் கட்சியின் தலைவராக மஹிந்த ராஜபக்‌ஷ நியமிக்கப்பட்டார்.

மஹிந்த ராஜபக்‌ஷவின் பெயரை காமினி லொகுகே முன்மொழிந்தார். அதனை ஜோன்ஸ்டன்  பெர்ணான்டோ  வழிமொழிந்தார்.

ஜனவரியில் இலங்கை வரும் மற்றுமொரு சீன ஆராய்ச்சிக் கப்பல்

சீனாவின் சி யான் 6ஆராய்ச்சி கப்பல் தனது ஆராய்ச்சிகளை முடித்துக்கொண்டு டிசம்பர் 2ம் திகதி சிங்கப்பூர் திரும்பிய பின்னர் இலங்கையின் துறைமுகத்திலும் மாலைதீவிலும் தனது மற்றுமொரு கப்பல் தரித்து நிற்பதற்கு அனுமதிக்குமாறு சீனா கொழும்பிடம் வேண்டுகோள் விடுத்தது.

2024 ஜனவரி ஐந்தாம் திகதிமுதல் மே மாதம் வரை தனது கப்பல் தென்இந்திய சமுத்திரத்தில் ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கான அனுமதியை சீனா கோரியுள்ளது.

இந்தியா ஏற்கனவே தனது எதிர்ப்பை இலங்கைக்கும் மாலைதீவிற்கும் தெரிவித்துள்ளதுடன் சீன கப்பல் இனிமேல் இந்து சமுத்திரத்தில் இராணுவநோக்கங்களிற்காக ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கு அனுமதிக்ககூடாது என வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஜியாங் யாங் கொங் 3 என்றகப்பல் தென்சீனாவின் சியாமென் கரையோர பகுதியில்தரித்து நிற்கின்றது இந்த நாடுகளிடம் அனுமதியை பெற்ற பின்னர் மலாக்கா நீரிணை ஊடாக பயணிக்கும்.

2016 தயாரிக்கப்பட்ட இந்த கப்பல் நவீன கண்காணிப்பு ஆராய்ச்சி சாதனங்களை தொழில்நுட்பங்களை கொண்டுள்ளது.

இந்தியாவின் கடும் எதிர்ப்பிற்கு மத்தியில் ரணில்விக்கிரமசிங்க அனுமதி வழங்கிய சீனாவின் சியான் 6 கப்பல் இலங்கையின் விசேட பொருளாதார வலயத்திலும் தென்இந்திய சமுத்திரத்திலும் ஆராய்ச்சிகளில் ஈடுபட்ட பின்னர் நவம்பர் 20 ம் திகதி மலாக்க நீரிணையிலிருந்து வெளியேறியது.

கொழும்புதுறைமுகத்திற்குள் ஒக்டோபர் 25 ம் திகதி நுழைவதற்கு முன்னர்சென்னையிலிருந்து 500 கடல் மைல் தொலைவில் இந்த கப்பல்காணப்பட்டது.

சீனாவின் ஏவுகணை கண்காணிப்புமற்றும் ஆராய்ச்சி கப்பல்களிற்கு இலங்கை அனுமதி வழங்குவது குறித்தும் , தற்போது மாலைதீவில் உள்ள சீனா சார்பு அரசாங்கம் குறித்தும் இந்தியா கரிசனைகளை கொண்டுள்ளது.

கடல்சார் ஆராய்ச்சி என்ற பெயரில் இந்த கப்பல்கள் இந்தியாவை வேவு பார்ப்பதற்காக பயன்படுத்தப்படுவதாக இந்தியா கரிசனை கொண்டுள்ளது.

கடந்த வருடம் ஜூலை மாதம் 21ம் திகதி இலங்கை ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டவேளை இந்திய பிரதமர் இது குறித்த தனது கரிசனைகளை பகிர்ந்துகொண்டார். இந்தியாவின் மூலோபாய கரிசனைகளிற்கு இலங்கை மதிப்பளிக்கவேண்டும் எனஅவர் வேண்டுகோள் விடுத்தார்.

சீன கடற்படை மூன்று விமானம்தாங்கி கப்பல்கள் அணுவாயுத நீர்மூழ்கிகள் ஏவுகணைகளை அழிக்கும் நாசகாரிகள் போன்றவற்றை பெற்றுகொண்டு தனது கடல்சார் வளங்களை வேகமாக அதிகரித்து செய்துவருகின்றது.

கம்போடியா முதல் செங்கடல் வரை பல கடற்படை தளங்களை அமைப்பதன் மூலம் சீனா இந்து சமுத்திரத்தில் தனது காலடியை விரிவுபடுத்துகின்றது.