நிகழ்நிலைக் காப்புச் சட்டம் பொருளாதார மீட்சிக்குத் தீங்கு விளைவிக்கும் – கனடா கவலை

இலங்கையின் நிகழ்நிலை காப்பு சட்டம் பொருளாதார மீட்சிக்கு தீங்கு விளைவிக்கும் என கனடா கவலை வெளியிட்டுள்ளது. இலங்கை மற்றும் மாலைதீவுக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸ் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இதனை தெரிவித்துள்ளார்.

அவரது டுவிட்டர் பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இலங்கையின் நிகழ்நிலை காப்பு சட்டம் பொருளாதார மீட்சிக்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் ஜனநாயக சமூகத்தில் எதிர்பார்க்கப்படும் நியாயமான உரையாடலைக் கட்டுப்படுத்தும் சாத்தியம் உள்ளது என்ற கவலையை நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம்.

இதைத் தவிர்க்க, நிகழ்நிலையில் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தை எதிர்கொள்ள எடுக்கப்படும் எந்தவொரு நடவடிக்கையும் கருத்துச் சுதந்திரம் உட்பட அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

இலங்கையில் தொடர்ந்தும் மனித உரிமைகள் சவாலுக்குட்படுத்தப்பட்டு வருகின்றன – கனடிய பிரதமர்

இலங்கையில் தொடர்ந்தும் மனித உரிமைகள் சவால்களுக்குட்பட்டு வருவதாகவும் தமிழ் சமூகத்துடன் கனடா தொடர்ந்தும் பயணிக்கும் என்றும் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உறுதியளித்துள்ளார்.

இதன் காரணமாகவே கனடா சர்வதேச அமைப்புக்களுடன் இணைந்து தமிழர் நலன் தொடர்பில் செயற்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தைப்பொங்கல் நிகழ்வொன்றில் பங்கேற்ற போதே அவர் இந்த கருத்துக்களை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கூறுகையில்,

1983ஆம் ஆண்டு இலங்கையில் வன்முறைகள் ஆரம்பித்த காலத்தில் தமது தந்தையாரின் தலைமையிலான லிபரல் கட்சி 1800 இலங்கை தமிழர்களை கனடாவில் குடியேற்றியது.

இந்த தொகை கடந்த பல தசாப்தங்களில் அதிகரித்து இன்று புலம்பெயர்ந்த தமிழர்கள் அதிகமாக வசிக்கும் நாடாக கனடா பார்க்கப்படுகிறது.

அத்துடன் கனடாவின் வளர்ச்சிக்கு தமிழர்களின் பங்களிப்பு வியக்கத்தக்கது.

இதன் காரணமாகவே 2016ஆம் ஆண்டு, ஜனவரி மாதத்தை தமிழர் வரலாற்று மாதமாக கனேடிய அரசாங்கம் பிரகடனம் செய்தது.

இந்நிலையில் இலங்கை தமிழர்களின் நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் கனடா தொடர்ந்தும் சர்வதேச மனித உரிமைகள் மற்றும் ஏனைய அமைப்புக்களுடன் செயற்பட்டு வருகிறது.

அத்துடன் வேறு எந்த நாடும் நடைமுறைப்படுத்தாத வகையில் இலங்கை தமிழர்களின் மனித உரிமைகளுக்கு எதிராக செயற்பட்டவர்களுக்கு கனடா தடை விதித்துள்ளது.

இலங்கை அரசும் சிங்கள அமைப்புகளும் கனடிய அரசியலுக்கு அஞ்ச ஆரம்பித்துவிட்டன – அ.நிக்ஸன்

புலம்பெயர் தேசங்களில் தமிழ்த் தேசியத்தை இலக்காகக் கொண்ட ஈழத்தமிழ் அமைப்புகளின் பலத்தை அறிந்த ஒரு பின்னணியிலேதான், சிங்கள அரசியல் தலைவர்கள் பிரித்தானியா, அமெரிக்கா, கனடா போன்ற மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இயங்கும் குறிப்பிட்ட சில தமிழ் அமைப்புகளையும் தனிநபர் குழுக்களையும் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர் என்பது பட்டவர்த்தனமாகும்.

ஈழத்தமிழர்கள் அனைவரும் இலங்கை அரச கட்டமைப்புக்குள் இணைந்து வாழத் தயார் என்ற பொய்யான பரப்புரையின் ஊடாக புலம்பெயர் தமிழர்கள் பெருமளவில் வாழும் கனடா போன்ற நாடுகளில் கணக்கைக் காண்பிக்கும் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

வட அமெரிக்க நாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தக்குத் தடை விதிக்கப்பட்டு, அத் தடை கடுமையாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. அமெரிக்காவிலோ கனடாவிலோ தமிழீழ விடுதலைப் புலிகளில் உறுப்பினராக இருந்த ஒருவர் அதைக் கூறி அரசியல் தஞ்சம் கோரினால் அவருக்கு அகதி அந்தஸ்து வழங்கப்படமாட்டாது.

அவ்வாறான ஒருவர் விடுதலைப் புலிகளில் இருந்து விலகியபின் அல்லது விலக்கப்பட்டபின் கூட அவர் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இயங்கினால் அல்லது விடுதலைப்புலிகளுக்கு எதிராகச் சாட்சி சொன்னவர்களுக்கு மட்டுமே கனடாவில் அதுவும் நீண்ட இழுத்தடிப்புக்குப் பின்னர் புகலிட அந்தஸ்து வழங்கப்படுவது வழமை.

ஆனால், ஐரோப்பிய நாடுகளில் நிலைமை அவ்வாறில்லை. தமிழீழ விடுதலைப் புலிகளில் அங்கம் வகித்து ஆனால், கருத்துநிலையை மாற்றாமல் இருக்கும் பலருக்கும் அகதி அந்தஸ்து வழங்கப்படுவது வழமையாகும்.

பிரித்தானிய அரசு புலிகளுக்குத் தடை விதித்திருந்தாலும் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் அங்கு தொடர்ந்தும் வாழ அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால், கனடாவில் அவ்வாறானதொரு சூழல் இன்றுவரையும் இல்லை.

இதனால், புலம்பெயர்ந்து கனடாவில் வாழும் ஈழத்தமிழர்களிடையே கனடாவின் தடை அரசியல் பற்றிய கடுமையான விமர்சனம் இருந்துவருகிறது.

2006ஆம் ஆண்டு கொன்ஸர்வேடிவ் கட்சியின் ஸ்-ரீபன் ஹார்ப்பர் பிரதமராகி இரண்டு மாதங்களுக்குள், அதுவும் பேச்சுவார்த்தைக் காலத்தில், தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை கனேடிய அரசு முதன்முதலாக அமுல்படுத்தியது.

கனடாவில் தடை விதிக்கப்படுவதற்கு ஏழு வருடங்களுக்கு முன்னர், 1997இல் அமெரிக்கா விடுதலைப் புலிகள் மீது தடையை விதித்து இறுக்கமான நடவடிக்கைகளை முன்னெடுத்துவந்தது என்பது இங்கு ஒருசேர நோக்கப்படவேண்டியது.

புலம்பெயர் ஈழத்தமிழர்களின் வாக்குகளைப் பெற விழையும் தேர்தல் காலங்களின் போதெல்லாம் ஈழத்தமிழர்களின் கடுமையான அதிருப்தி குறித்து கனேடிய பிரதான கட்சிகள் அறிந்திருப்பதால், இலங்கை அரசு மீதும் தாம் அழுத்தம் தருவதாக, அல்லது தர இருப்பதாக பாவனை செய்வதும் சில அழுத்தங்களை மேற்கொள்வதும் வழமை.

எந்த ஹார்ப்பர் அரசாங்கம் 2009ஆம் ஆண்டுக்கும் முன்னர் விடுதலைப் புலிகள் மீது தடை விதித்ததோ அதே ஹார்ப்பர் 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் 2013ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற பொதுநலவாய மாநாட்டில் தான் கலந்துகொள்ளாது புறக்கணித்து தமிழ் மக்களிடையே நற்பெயரையும் அதேவேளை, இலங்கையில் அமெரிக்காவுக்குத் தேவையான ஆட்சி மாற்றத்தை உருவாக்கும் அரசியலுக்கும் ஊக்கம் கொடுத்தார்.

கனடாவில் தற்போது லிபரல் கட்சி தலைமையிலான ஆட்சி நடைமுறையில் இருக்கிறது. அதன் பிரதமர் ஜஸ்ரின் ரூடோவும் விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை நீடித்து வருகிறார். இந்தத் தடையை நீடிக்கும் அதேவேளை, ஈழத்தமிழர் இன அழிப்புக்கு நீதி கோருவது போன்ற பாவனையையும் ஆங்காங்கே வெளிப்படுத்திவருகிறார்.

இவ்வாறு, கனடாவில் புலம்பெயர் ஈழத்தமிழர் மனநிலையைப் புரிந்துகொண்டு இந்த இரண்டு பிரதான கட்சிகளும் இன அழிப்புக்கு நீதி கேட்பது போன்ற தேர்தல் அரசியற் பாவலாவைக் காட்டிவருகின்றன. இதனை ஈழத்தமிழர்களும் தகுந்தமுறையில் பயன்படுத்திக்கொள்ள ஓரளவுக்காவது ஆரம்பித்துவிட்டார்கள் என்றே சொல்லவேண்டும்.

குறிப்பாக, இலங்கைத் தீவில் ஈழத்தமிழர்கள் மீது இன அழிப்பு நடந்துள்ளது என்றும் அதற்குச் சர்வதேச நீதி வேண்டும் என்றும் புலம்பெயர் தமிழர்கள் தமது அரசியல் தரப்புகளுக்கு ஊடாக முன்வைக்கப்பட்ட தீர்மானம்கனேடிய பாராளுமன்றில் அனைத்துக்கட்சி ஆதரவுடனான தீர்மானமாக வெளிப்பட்டது மட்டுமல்ல, 2022ஆம் ஆண்டிலிருந்து மே 18 தமிழ் இன அழிப்பை நினைவுகூரும் நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டும் உள்ள சூழலும் தோன்றியுள்ளது.

ஈழத்தமிழர்கள் மீது தடை விடயத்தில் கடுமையாக இயங்கிய கனடா ஈழத்தமிழர்களுக்கு இலங்கையில் நடந்தது இன அழிப்பு என்று பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற அனுமதித்தது எதற்காக, இன அழிப்பு நினைவேந்தலை அங்கீகரித்தது எதற்காக என்று அங்கு மிகச் சிறிய அளவிலேனும் குடியேறி வாழும் சிங்களத் தரப்பினர் ஆத்திரமடைந்து கேள்வி எழுப்பிவருகின்றனர். அதேவேளை, சட்ட நடவடிக்கைகளைச் சவாலாக முன்னெடுத்தும் வந்துள்ளனர்.

கனடாவின் பிரபலமான நகரமாகவும் பெருமளவு ஈழத்தமிழர் வாழுகின்ற பகுதியாகவும் ரொறன்ரோ விளங்கும் போதும், அந்த நாட்டின் தலைநகரான ஒட்டாவாவில் இலங்கை அரசின் தூதராலயமும் குறைந்தளவில் என்றாலும் தாக்கம் செலுத்தக்கூடிய அளவில் சிங்கள சமூகமும் காணப்படுகின்றன.

இந்தச் சிங்கள அமைப்புகள் இன அழிப்பு என்ற கருத்தியலுக்கு கனேடிய அரச அங்கீகாரம் கிடைப்பதை எதிர்க்கின்றன. கனடாவைத் தொடர்ந்தும் இலங்கையின் பக்கம் வைத்திருக்கும் செயற்பாடுகளை அவை தீவிரப்படுத்தியுள்ளன.

அண்மையில் இலங்கைத் தீவுக்கு விஜயம் மேற்கொண்ட புலம்பெயர் தனிநபர் க்குழுவான சுரேன் சுரேந்திரன் மற்றும் கனேடிய தமிழர் பேரவை முட்டுக்கொடுக்கும் உலகத்தமிழர் பேரவை என்ற அமைப்பின் செயற்பாடுகளோடு சிங்கள புலம் பெயர் அமைப்பும் முட்டுக்கொடுத்து இயங்கிவருவதற்குக் கனடாவில் வலுப்பெறும் ஈழத்தமிழர் சார்பான அரசியலைத் தடுக்கும் நோக்கம் உள்ளது என்பது வெளிப்படை.

கீழே தரப்படும் சிங்கள அமைப்பின் காணொளி அதற்குச் சாட்சியாகிறது. அதேபோல இலங்கை அரசின் வெளிநாட்டமைச்சர் அலி சப்ரி கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோ வெளியிட்ட இன அழிப்பு செய்தி தொடர்பான கருத்தும் இலங்கை அரசின் இது தொடர்பான பயத்தையும் வெளிப்படுத்துகிறது.

கனடாவில் பாராளுமன்றத் தேர்தல் 2025ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சூழலில், அல்லது அதற்கு முன்னர் திடுமென அவ்வாறு நடைபெறும் சூழல் எப்போது தோன்றினாலும், அதை எதிர்கொள்வதில் தற்போதைய ஆளும் கட்சியான லிபரல் கட்சிக்கு எதிராகப் போட்டியிடக்கூடிய எதிர்க்கட்சித் தலைவரும் கென்சர்வேற்றிக் கட்சியின் பிரதமருக்கான வேட்பாளருமான பியர் பொலியெர்வ் கூட தற்போது ஈழத்தமிழர்களுக்கு நடந்த இன அழிப்புக்குக் கனடா நீதி கோரும்
எனக் கூற ஆரம்பித்துள்ளார்.

இது மேலோட்டமாக வாக்கு அரசியலாகத் தெரிந்தாலும் இலங்கை தொடர்பான கனடா அரசின் வெளியுறவுக் கொள்ளையில் ஈழத்தமிழர் மீதான இன அழிப்புக்கான சர்வதேச நீதியைக் கோருதல் என்ற கோரிக்கையின் வகிபாகம் வலுப்பட ஆரம்பித்துள்ளதை நாம் இங்கு கூர்மையாக நோக்கவேண்டும்.

இதை மேலும் செம்மைப்படுத்தும் கடமை அங்குள்ள புலம்பெயர் ஈழத்தமிழர் அமைப்புகளுக்கு உண்டு என்ற கருத்தைக் கனடா வாழ் புலம்பெயர் செயற்பாட்டாளர்கள் வலியுறுத்துகிறார்கள்.
தேர்தல் அரசியலுக்காக இரண்டு கட்சிகளும் ஈழத்தமிழர் மீதான இன அழிப்புத் தொடர்பான கருத்தியலை ஆதரிக்க ஆரம்பித்திருந்தாலும் கனடாவின் வெளியுறவுக் கொள்கையில் இதுவரை இன அழிப்புக்கான நீதி தாக்கம் செலுத்த ஆரம்பிக்கவில்லை என்பதையும் இங்கு நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

கனேடிய அரசின் ஐ.நா. மனித உரிமை விவகாரங்களுக்குப் பொறுப்பானவரும் ஒரு காலத்தில் சிங்களத் தரப்போடும் தமிழ்த் தரப்போடும் சமஷ்டி தீர்வுகுறித்து கருத்துத் தாக்கத்தை ஏற்பட்ட முனைந்தவருமான பொப் ரே கனடிய அரசு ஈழத்தமிழர் மீதான இன அழிப்பு என்ற கருத்தியலைத் தனது அதிகாரப்பூர்வ நிலைப்பாடாக இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை என்று 2023 ஆரம்பத்தில் வலியுறுத்தியிருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

கனடாவில் கென்சர்வேட்டிவ் ஆட்சி அமைந்தால் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக சர்வதேச நீதிமன்றில் நடவடிக்கை

கனடாவில் கென்சவேர்ட்டிவ் கட்சி ஆட்சியமைத்தால் சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான சட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக நாங்கள் கனடாவின் வெளிவிவகார அமைச்சின் சட்டத்தரணிகளை பயன்படுத்துவோம், என கட்சியின் தலைவர் பியர் பொலியர் தெரிவித்துள்ளார்.

கனடாவின் ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் கனடாவில் கென்சர்வேட்டிவ் கட்சி ஆட்சியமைத்தால் தமிழர்கள் இனப்படுகொலை தொடர்பில் என்ன நிலைப்பாட்டை எடுக்கவுள்ளீர்கள் என்ற கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

1980களில் கனடாவிற்கு பெருமளவு புலம்பெயர்ந்த தமிழர்களை முதலில் வரவேற்றவர் கென்சவேர்ட்டிவ் கட்சியின் அப்போதைய பிரதமர் பிரையன் முல்ரோனி.

இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக முதலில் சர்வதேச தடைகளை விதித்தது கொழும்பில் இடம்பெற்ற பொதுநலவாய உச்சிமாநாட்டில் கலந்துகொள்ளாமல் வெளியேறி மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தை அவமானப்படுத்தியது பிரதமர் ஹார்ப்பர் அரசாங்கமே.

இலங்கையில் இனப்படுகொலையில் ஈடுபட்ட அரசாங்க உறுப்பினர்களிற்கு எதிராக மக்னிட்ஸ்கி தடைகளை விதிப்பதே தற்பொது என திட்டம்,இதன் மூலம் சர்வதேச தடைகள் ஊடாக அவர்களது தனிப்பட்ட நிதிகளை முடக்கலாம்.

சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான சட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக நாங்கள் கனடாவின் வெளிவிவகார அமைச்சின் சட்டத்தரணிகளை பயன்படுத்துவோம்,இதன் மூலம் இலங்கை அரசாங்கத்தின் உறுப்பினர்களை இனப்படுகொலைக்காக இனம்கண்டு சட்டநடவடிக்கைகளிற்கு உட்படுத்தலாம்.

தமிழர்களிற்கு எதிராக தொடரும் இனப்படுகொலை நடவடிக்கைகளிற்காக இலங்கை அரசாங்கத்தை தொடர்ந்து கண்டிப்போம் தனிமைப்படுத்துவோம்.

இலங்கைக்கும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் திறன் உள்ளது – கனடா தூதுவர்

கனடாவில் இனப்படுகொலை இடம்பெற்றது என்பதை ஏற்றுக்கொண்டுள்ள இலங்கைக்கான கனடா தூதுவர் கனடா சுதேசிய மக்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முயல்கின்றது இலங்கைக்கும் இதற்கான திறன் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையாலும் கனடாவை போல அதிகளவு சாதிக்க முடியும்,கனடா தன்னை இருமொழி நாடாக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் முன்னிறுத்தியுள்ளது என எரிக்வோல்ஸ் தெரிவித்துள்ளார்.

கனடாவின் வாழ்க்கை பெருமளவிற்கு ஆங்கில பிரென்ஞ் ஆகியவற்றை கொண்டதாக காணப்படுகின்றது தமிழ் மொழியும் பயன்படுத்தப்படுகின்றது கனடா தன்னை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தன்னை இவ்வாறே முன்னிறுத்துகின்றது இலங்கை உடனான உறவுகளிலும் இது குறித்தே கவனம் செலுத்துகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கனடா சுதேசிய மக்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முயல்கின்றது கனடாவில் இனப்படுகொலை இடம்பெற்றதை ஏற்றுக்கொண்டுள்ளோம் இது மிகவும் நீண்டகால கடினமான நடவடிக்கை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையும் இதனை சாதகமான அம்சங்கள் சாதகதன்மைகளுடன் முன்னெடுக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கனடா ஒரு சிறந்ததேசமாக விளங்குவதற்கு இலங்கை தமிழர்கள் ஆற்றியுள்ள பங்களிப்பை அவர் பாராட்டியுள்ளார்.

கனடாவின் சுதேசிய விவகார அமைச்சராக ஹரி ஆனந்தசங்கரி பதவியேற்பு

கனடாவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்த சங்கரி கனடாவின் சுதேசிய உறவுகளின் அமைச்சராக பதவியேற்றுள்ளார்.

கனடாவில் அமைச்சரவை மாற்றத்தின் போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

1983ம் ஆண்டின் காயங்கள் இன்னமும் ஆறவில்லை – கனடா தூதுவர் எரிக்வோல்ஸ்

1983ம் ஆண்டின் காயங்கள் இன்னமும் ஆறவில்லை என  இலங்கைக்கான கனடா தூதுவர் எரிக்வோல்ஸ் தெரிவித்துள்ளார்.

கறுப்பு ஜூலையின் நாற்பதாவது வருடத்தை குறிக்கும் விதத்தில்  டுவிட்டரில் பதிவிட்டுள்ள கருத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நாற்பது வருடங்களிற்கு முன்னர் இலங்கையில் பல பகுதிகளில் இடம்பெற்ற தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளை நாங்கள் நினைவுருகின்றோம்.

1983ம் ஆண்டின் காயங்கள் இன்னமும் ஆறவில்லை.

இந்த பயங்கரமான நினைவுகள் இடம்பெற்றன என்பதை அங்கீகரி;ப்பதும் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூருவதும் இலங்கையில் அனைவரையும் உள்ளடக்கிய நிரந்தர செழிப்பிற்கான முக்கிய நடவடிக்கையாகும்.

இந்த இலககுகளை நோக்கிய செயற்பாடுகளை முன்னெடுக்கும் அனைவரையும் நாங்கள் முழுமையாக ஆதரிப்போம் என  கனடா தூதுவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் யாழ் பொது சன நூலகத்துக்கு விஜயம்

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் இன்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டு பார்வையிட்டுள்ளார்.

இதன்போது நூலகத்தில் யாழ் மாநகர ஆணையாளர் இ.த.ஜெயசீலன், உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸை வரவேற்று கலந்துரையாடினார்.

குறித்த சந்திப்பில் யாழ் பொதுசன நூலக நூலகர் உள்ளிட்ட சில உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் இலங்கைக்கு விஜயம் செய்வதற்கான விசா கோரிக்கையை நிராகரித்தது இலங்கை அரசாங்கம்

கனடாவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிஆனந்தசங்கரி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கான விசாவை வழங்குவதற்கு இலங்கை அரசாங்கம் மறுத்துள்ளது.

ஹரிஆனந்தசங்கரி தனது டுவிட்டர் பதிவில் இதனை தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்கு ஏற்றதாக காணப்படும்போதே கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடுவதற்கான அனுமதி வழங்கப்படுகின்றது.

கொடும்பாவிகளை எரிப்பது இலங்கையின் அரசாங்கங்களின் தவறுகளை சரிசெய்யாது.

கவலையளிக்கும் விதத்தில் இலங்கை எனக்கு விசா வழங்க மறுத்துவிட்டது.நாங்கள் முன்னெடுத்துள்ள வேலைதிட்டத்திற்காக பழிவாங்கும் நடவடிக்கை இது எங்களை மௌனமாக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிலவாரங்களிற்கு முன்னர் சிங்கள ஆர்ப்பாட்டக்காரர்கள் வவுனியாவில் கனடா பிரதமர் மற்றும் ஹரி ஆனந்தசங்கரியின் கொடும்பாவிகளை எரித்தமை குறிப்பிடத்தக்கது.

கனடாவின் தமிழர் இனப்படுகொலை நினைவுதினத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்திலேயே இந்த கொடும்பாவிகள் எரிக்கப்பட்டன.

இதேவேளை தமிழர்கள் உரிமைக்கான கனடாவின் ஆதரவிற்கு பதில் நடவடிக்கையாகவே ஹரி ஆனந்தசங்கரிக்கு விசா மறுக்கப்பட்டுள்ளது என சமூக ஊடகங்களில் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

Posted in Uncategorized

13ஐ அமுல்படுத்த இலங்கையை வலியுறுத்துமாறு கனேடிய தெற்காசிய விவகார பணிப்பாளரிடம் தமிழ்த் தலைவர்கள் கூட்டாக வலியுறுத்தல்

“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிறையவே பேசுகின்றார். குறைவாகவே செய்கின்றார். அரசமைப்பு சட்டத்தில் உள்ள 13 ஆவது திருத்தத்தை அமுல் செய்து முதலில் தமது நேர்மையை பறை சாற்றும்படி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை கனடா, அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம், ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளடங்கிய சர்வதேச சமூகம் ஒரே குரலில் வலியுறுத்த வேண்டும். இதற்கு கனடா முன்முயற்சி எடுக்க வேண்டும். நாட்டை வெளியேறிய தமிழர் பெருந்தொகையினருக்கு அடைக்கலம் கொடுத்துள்ள நாடு என்ற வகையில் கனடாவுக்கு இதற்கு உரிமை உள்ளது.”

இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி., தமிழீழ விடுதலை இயக்க தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி., ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி தலைவர் த.சித்தார்த்தன் எம்.பி. ஆகியோர், கனேடிய வெளிவிவகார அமைச்சின் தெற்காசிய விவகார பணிப்பாளர் நாயகம் மரியா லூயிஸ் ஹனானிடம் நேரில் வலியுறுத்திக் கூறியுள்ளனர்.

“13 ஆவது திருத்தம் தேசிய இனப்பிரச்சினைக்கு முழுமையான தீர்வு அல்ல. இது எமக்குத் தெரியும். ஆனால், புதிய சட்டங்களை உருவாக்க முன், அரசமைப்பு சட்டத்தில் இன்று இருக்கும் 13 ஆவது திருத்த அதிகாரப் பகிர்வு சட்டதையும், 16 ஆவது திருத்த மொழியுரிமை சட்டதையும் அமுல் செய்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க காட்டட்டும். அதை சர்வதேச சமூகம் வலியுறுத்த வேண்டும். இன்று நாம் இலங்கை அரசுடன் பேசி சலித்துப் போய் விட்டோம். அதேபோல் சர்வதேச சமூகத்திடமும் மீண்டும் இவற்றையே பேசி சலித்துப் போய் கொண்டிருக்கின்றோம்” – என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கொழும்பிலுள்ள கனேடியத் தூதுவரின் இல்லத்தில் இன்று நடைபெற்ற இந்தச் சந்திப்பில், இலங்கைக்கான கனேடியத் தூதுவர் எரிக் வெல்ஷ், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பிரதிநிதி சின்னையா இரத்தின வடிவேல், கனேடியத் தூதரக அரசியல் அதிகாரி கோபிநாத் பொன்னுத்துரை ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இது தொடர்பில் மனோ கணேசன் எம்.பி. விடுத்துள்ள ருவீட்டர் பதிவில்,

“பன்மைத்தன்மையை கொண்டாடுவது, அதிகாரப் பகிர்வு, 13ம் திருத்தம், மொழியுரிமை மற்றும் சமத்துவம், ஆகியவை பற்றி கனேடியத் தரப்புடன் பயன்தரும் விதத்தில் பேசப்பட்டன” – என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நாட்டில் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சி பிரதிநிதிகள், கனேடிய வெளிவிவகார அமைச்சின் தெற்காசிய விவகாரப் பணிப்பாளர் நாயகத்திடமும், இலங்கைக்கான கனேடியத் தூதுவரிடமும், இந்த நாட்டை சிங்கள பெளத்தர்களுக்கு மாத்திரம் சொந்தமான நாடு எனத் தாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை எனவும், இத்தகையை கொள்கையை முன்னெடுக்கும் எந்தவொரு கொழும்பு அரசையும் தாம் எதிர்த்துப் போராடுவோம் எனவும் கூறினர்.

தமது அபிலாஷைகள் தொடர்பில் அரசுடன் பேச்சு நடத்துவதைப் போன்று, சர்வதேச சமூகத்திடம் எடுத்துக் கூறுவதிலும் சலிப்படைந்து வருகின்றார்கள் என்று தமிழ்த் தலைவர்கள் இன்று கூறியதைத் தாம் புரிந்துகொள்வதாகவும், அது தமக்கு ஒரு செய்தி என்றும் கனேடியத் தரப்பினர் தம்மைச் சந்தித்த கட்சித் தலைவர்களிடம் தெரிவித்தனர்.