சேவைக்காலம் முடிவடைந்த நிலையில் வெளியேறவுள்ள இந்திய தூதுவருக்கு சபாநாயகர் நன்றி தெரிவிப்பு

இலங்கைக்கு வழங்கிய அனைத்து ஒத்துழைப்புக்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவிடம் குறிப்பிட்டார்.

சேவைக்காலத்தை முடித்துக்கொண்டு வெளியேறவுள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவுக்கும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.

இதன்போதே சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் கூறுகையில்,

பொருளாதார நெருக்கடியின் போது இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க இந்தியாவே முதலாவதாக முன்வந்தது.

தனது சேவைக்காலத்தில் இலங்கை – இந்திய தொடர்புகளை விருத்தி செய்வதற்கு வழங்கிய அனைத்து ஒத்துழைப்புக்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவிடம் குறிப்பிட்டார்.

இதேவேளை, இலங்கை தொடர்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி விசேட கவனம் செலுத்துவதாகவும், இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இந்தியா சாதகமான நிலையில் உள்ளது எனவும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே சபாநாயகரிடம் தெரிவித்தார்.

கொக்குதொடுவாய் – முல்லைத்தீவு வீதியின் மையப்புள்ளி வரை மனித புதைகுழி விஸ்தரிக்கப்பட்டுள்ளது – சட்டவைத்திய அதிகாரி வாசுதேவ

கொக்குதொடுவாய் மனித புதைகுழியானது கொக்குதொடுவாய் – முல்லைத்தீவு மையப்புள்ளி வரை விஸ்தரிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட விஷேட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவ தெரிவித்துள்ளார்.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியானது நேற்றையதினம் (27.11.2023) ஏழாவது நாளாக இடம்பெற்று நிறைவடைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலையே தெரிவித்தார்.

ஏழாவது நாளாக தொடர்ந்த கொக்குதொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வாய்வு நேற்றையதினம் நிறைவடையும் போது மூன்று மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டிருந்தது. நேற்றைய தினத்துடன் 37 எலும்புகூட்டு தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த வாரத்தில் இடம்பெற்ற விஷேட ராடர் பரிசோதனையின் போது குறித்த மனித புதைகுழியானது கொக்குதொடுவாய் – முல்லைத்தீவு நெடுஞ்சாலையின் மையப்புள்ளி வரை விஸ்தரிக்கப்பட்டு செல்வது அவதானிக்கபட்டுள்ளது. இது சம்பந்தமான முடிவுகள் எதிர்வரும் காலங்களில் நீதிமன்ற நடவடிக்கையின் போது தீர்மானிக்கப்படும்.

இன்று செவ்வாய்க்கிழமை (28) அகழ்வு பணியானது எட்டாவது நாளாக தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் கடந்த செப்ரெம்பர் மாதம் 06 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு செப்ரெம்பர் (15) வரை அகழ்வாய்வுகள் இடம்பெற்றிருந்தது. இவ் அகழ்வு பணியில் 17 எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்ட நிலையிலும், துப்பாக்கி சன்னங்கள், விடுதலைப் புலிகள் அமைப்பினர் பயன்படுத்தும் இலக்க தகடு, உடைகள் உள்ளிட்ட சான்றுப்பொருட்களும் மீட்கப்பட்டிருந்த நிலையில் குறித்த அகழ்வு பணியானது இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் இம்மாதம் 20 ஆம் திகதி அன்று மீண்டும் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்திய உயர்ஸ்தானிகர் பாக்லே வடக்கிற்கு மூன்று நாள் விஜயம்

இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே புதன்கிழமை மூன்று நாள் விஜயமாக வடக்கு மகாணத்திற்குச் செல்லவுள்ளார்.

இந்த விஜயத்தின் முதன் நாளான நாளையதினம் மதவாச்சியில் பாடசாலைகளுக்கான உதவித்திட்டங்களை கையளிக்கவுள்ளதோடு, அதனையடுத்து மன்னார் பியர் பகுதிக்கும், பின்னர் திருக்கேதீச்வரர் ஆலயத்துக்கும் செல்லவுள்ளார்.

தொடர்ந்து முதன்நாளின் இறுதி நிகழ்வாக இரவு நேர விருந்துபசாரத்துடன் வடக்கு மாகாண அரசியல்தரப்பினரைச் சந்தித்து உரையாடவுள்ளார்.

இரண்டாவது மற்றும் மூன்றாம் நாளான 30ஆம் மற்றும் முதலாம் திகதிகளில் நயினாதீவுக்குக்கான விஜயமொன்றை அவர் மேற்கொள்ளவுள்ளதோடு நயினை நாகபூசனி அம்மன் ஆலயத்துக்கும், நாகவகாரைக்கும் விஜயம் செய்து வழிபாடுகளில் ஈடுபடவுள்ளார்.

தொடர்ந்து , யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் நூறு பேருக்கான புலமைப்பரிசில்களை கையளிக்கும் நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளதோடு, தெரிவு செய்யப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு உதவிப்பொருட்களையும் கையளிக்கவுள்ளார்.

இதனைவிடவும், மதத்தலைவர்கள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, டிசம்பர் மாதத்துடன் உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இலங்கைக்கான கடமைகளை பூர்த்தி செய்யவுள்ளதோடு அதனையடுத்து அவர் அவுஸ்ரேலியாவுக்கான உயர்ஸ்தானிகராக நியமனம் பெற்றுள்ளார்.இந்நிலையில், உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயின் வடக்கிற்கான இந்த விஜயமானது பரியாவிடையளிப்பதாகவும், தனது காலத்தில் கிடைக்கப்பெற்ற ஒத்துழைப்புக்களுக்கு நன்றிகளை செலுத்தும் முகமாகவும் இடம்பெறவுள்ளது.

முன்னதாக, இந்திய வெளிவிவகார அமைச்சானது, பெல்ஜியத்தில் தூதுவராக கடமையாற்றி வரும் சந்தோஷ் ஜாவை இலங்கைக்கான தனது நாட்டின் புதிய உயர்ஸ்தானிகராக பெயரிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆயுதப்போராட்டம் முடிவுக்கு வந்திருப்பினும் அரசியல்போராட்டம் இன்னமும் மரிக்கவில்லை – பிரபாகரனின் மகள் என அடையாளப்படுத்தி கொள்ளும் பெண் உரை

ஆயுதப்போராட்டம் முடிவுக்கு வந்திருந்தாலும், சுதந்திரத்துக்கான மற்றும் ஈழத்தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கான அரசியல் போராட்டம் முடிவுக்கு வரவில்லை எனவும், மாவீரர்களின் தியாகங்கள் மற்றும் மாண்டுபோன மக்களின் ஈகைகள் அதற்கு வழிகாட்டும் எனவும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புதல்வி துவாரகா என ‘தமிழ் ஒளி’ இணையப்பக்கத்தால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள பெண் தெரிவித்துள்ளார்.

அதுமாத்திரமன்றி தாம் ஒருபோதும் சிங்கள மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல எனவும், சிங்கள மக்களுக்கு எதிராக செயற்பட்டதில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ள அவர், தவறான கருத்துக்கள் விதைக்கப்பட்டு சிங்கள மக்கள் தமிழர்களுக்கு எதிராகத் தூண்டிவிடப்பட்டார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மாவீரர் நாளான நேற்று திங்கட்கிழமை (27) ‘தமிழ் ஒளி’ எனும் இணையத்தளப்பக்கமொன்று இயங்க ஆரம்பித்ததுடன், அதில் நேற்று மாலை 5.20 மணிக்கு மாவீரர்தின நிகழ்வு எனும் பெயரில் நேரடி ஒளிபரப்பொன்று இடம்பெற்றது. அதில் இலங்கை தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகள் துவாரகா உரையாற்றுவார் எனக்கூறப்பட்டு, அவரது உரையும் ஒளிபரப்பப்பட்டது. கணினித்தொழில்நுட்பத்தின் ஊடாக வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படம் மற்றும் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கொடி என்பன பின்னணியாக அமைக்கப்பட்டிருந்ததுடன், அதன்முன் தோன்றிய துவாரகா என்று ‘தமிழ் ஒளி’யினால் கூறப்படும் நபர் ஆற்றிய உரையின் முழுமையான வடிவம் வருமாறு:

அன்புக்குரிய தமிழீழ மக்களே, இன்று மாவீரர் நாள். ‘தமிழீழம்’ என்ற அதியுயர் இலட்சியத்துக்காகத் தமது இன்னுயிர்களைத் தியாகம் செய்த எமது காவல் தெய்வங்களை எமது இதயக்கோவில்களில் பூஜிக்கும் இத்திருநாளில் உங்கள்முன் உரையாற்றுவதற்குக் காலம் எனக்கு வாய்ப்பளித்திருப்பதைப் பெரும் பேறாகவே கருதுகிறேன். இப்படியொரு சந்தர்ப்பம் எனது வாழ்நாளில் ஏற்படும் என்று நான் நினைத்திருக்கவில்லை. எத்தனையோ ஆபத்துக்கள், நெருக்கடிகள், சவால்கள், துரோகங்களைக் கடந்தே நான் இன்று உங்கள்முன் உரையாற்றுகின்றேன். அதேபோன்று என்றோ ஒருநாள் தமிழீழத் தாயகம் திரும்பி எமது மக்களுடன் ஒன்றாக இருந்து அவர்களுக்கு சேவையாற்றுவதற்கு காலம் எனக்க வாய்ப்பளிக்கும் என்ற அசையாத நம்பிக்கை உண்டு.

ஒன்றுமொத்த உலகமுமே அதியமடையும் வகையில் சாதனை படைத்தவர்கள் எமது மாவீரர்கள். எதிர்த்துநின்று எம்மோடு போர்புரியத் திராணியற்ற நாடுகளை சிங்கள அரசு தன்பக்கம் வளைத்தது. தோல்வியின் விளிம்பில் நின்ற தருணங்களில் எல்லாம் அந்நிய சக்திகளிடமும், ஏனைய நாடுகளிடமும் மண்டியிட்டு யாசகம் கேட்டது. எமது தேச சுதந்திர இயக்கத்தின் மீது உலகின் பல நாடுகளால் தடைகள் விதிக்கப்பட்டு, எமது சொத்துக்கள் முடக்கப்பட்டன. தமிழீழத் தாயகத்துக்கான விநியோகப்பாதைகள் மூடப்பட்டன.

எமது தேசவிடுதலை இயக்கம் பலவீனப்படுத்தப்பட்ட ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அந்நிய நாடுகள் தலையிட்டு சிங்கள அரசுக்கு உயிர்ப்பூட்டின. உலகில் ஒரு மூலையில் தனித்துநின்று, எமது மக்களின் ஆதரவில் மாத்திரம் தங்கிநின்று போராடிய எமது தேசவிடுதலை இயக்கத்தின் ஆயுதப்போராட்டம் முள்ளிவாய்க்காலில் மௌனித்துப்போவதற்கு இதுவே காரணமாகும். ஆனாலும் அரசியல் சுதந்திரத்துக்கான எமது போராட்டம் முற்றுப்பெறவில்லை.

தமிழீழம் என்ற இலட்சியம் கருக்கொள்ளக் காரணமான புறநிலைச்சூழ்நிலைகள் இன்றும் அப்படியேதான் இருக்கின்றன. தமது தாயகபூமியில் தம்முடைய கலாசார, பண்பாட்டு விழுமியங்களையும் பாதுகாக்கமுடியாதவாறு சீரழிவுகளை மேற்கொள்வதுடன், சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை முன்னிறுத்தும் நடவடிக்கைகளை சிங்கள பௌத்த அரசு முழுமூச்சுடன் முன்னெடுத்துவருகின்றது. இதுபோதாதென்று ஈழத்தமிழ் தாயகம் சிங்களப்படைகளால் முற்றுமுழுதாக மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது.

சுதந்திரமும், அனைத்து உரிமைகளும் மறுக்கப்பட்ட தேசமாகத் தமிழீழம் திகழ்கிறது. சட்டவாட்சி மறுக்கப்பட்டு, பயங்கரவாதத்தடைச்சட்டம், அவசரகாலச்சட்டம் என எந்நேரமும் இராணுவத்தின் ஆட்சியை சிங்கள அரசு திணித்துள்ளது. குரல்வளை நசுக்கப்பட்டவர்களாகவே எமது மக்கள் ஈழத்தில் வாழ்கின்றனர்.

மறுபுறத்தில் போர்நிகழ்ந்த காலத்தில் ஆசைவார்த்தைகூறிய உலகின் சக்திவாய்ந்த நாடுகள், இன்றளவிலும் எமது மக்களுக்கு காத்திரமானதொரு அரசியல் தீர்வை வழங்கவில்லை. ஈழத்தீவில் தமிழ்மக்களுக்கு இழைக்கப்பட்டது போர்க்குற்றமென்றும், மனித உரிமை மீறலென்றும் கடந்த 14 ஆண்டுகளில் பல்வேறு அறிக்கைகளை வெளியிட்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் பல தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. இருப்பினும் எந்தவொரு தரப்பினரும் ஈழத்தமிழர்களுக்கான தீர்வைப் பெற்றுத்தரவில்லை. இவையே எமது அரசியல் போராட்டம் இன்னமும் உயிர்ப்புடன் இருப்பதற்கான காரணங்களாகும்.

1950 களில் சமஷ்டியைக்கோரி எழுச்சியடைந்த எமது போராட்டம் 1960 களில் ஆயுதபலத்தைப் பயன்படுத்தி சிங்கள அரசால் நசுக்கப்பட்டது. 1970 களில் போர்க்குணமுடைய இளைய தலைமுறை தோற்றம்பெற்றது. சிங்கள ஆயுதப்படைகளையும், அதன் அரச ஒடுக்குமுறை இயந்திரத்தையும் எதிர்த்து வீரம் செறிந்த ஆயுதப்போராட்டத்தை எமது இளைஞர்கள் நிகழ்த்தினார்கள். எமது தேசியத்தலைவரும், எனது தந்தையுமாகிய வேலுப்பிள்ளை பிரபாகரனின் வழிநடத்தலில் ஆயிரமாயிரமாய் இளைஞர்களும், யுவதிகளும் அணிதிரண்டனர். அவர்கள் தமிழீழத்துக்காய் தமது இன்னுயிரைத் தியாகம்செய்த மாவீரர்களே. அவர்கள் என்றும் காலத்தால் அழியாதவர்கள். அந்த மகத்தான, உன்னதமானவர்களை என்றுமே எமது மனக்கோவிலில் வைத்துப் பூஜிப்போம்.

ஆயுதப்போராட்டம் முடிவுக்கு வந்திருந்தாலும், சுதந்திரத்துக்கான மற்றும் எமது அரசியல் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கான அரசியல் போராட்டம் உயிர்ப்போடு இருப்பதற்கு புலம்பெயர் தேசங்களில் வாழ்வோரும், எமது மக்களும், அரசியல் தலைவர்களும், முன்னாள் போராளிகளும், செயற்பாட்டாளர்களுமே காரணம் என்பேன். சுதந்திரத்துக்கான போராட்டம் முனைப்புடன் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. இவ்வாறான யதார்த்த சூழமைவில் மக்களென்றும், புலிகளென்றும் ஈழத்தமிழர்களை வேறுபடுத்திப்பார்ப்பது அர்த்தமற்றது. மக்களே புலிகளாகவும், புலிகளே மக்களாகவும் விளங்கும் யதார்த்தம் எமது போராட்டத்தின் பரிணாமமாகும். ஆனாலும் எமது அரசியல் போராட்டத்தை மேலும் வினைத்திறனுடன் முன்னெடுத்து, எமது அரசியல் உரிமைகளை வென்றெடுக்கவேண்டியவர்களாக நாங்கள் இருக்கின்றோம். கட்சிபேதங்கள், அமைப்புக்களுக்கு இடையில் நிலவும் வேறுபாடுகளைக் கடந்து தமிழீழ அபிலாஷைகளை வென்றெடுப்பதற்காகவும், இனப்படுகொலை தொடர்பில் நீதியை நிலைநாட்டுவதற்காகவும் ஒற்றுமையோடும், வினைத்திறனோடும் ஒன்றிணைந்து பயணிக்கவேண்டிய கடப்பாடு ஈழத்தமிழ் மக்களுக்கும், புலம்பெயர் தேசங்களில் வாழும் ஒவ்வொரு ஈழத்தமிழனுக்கும் உண்டு. எமக்கிடையில் கருத்து வேறுபாடுகள் நிலவலாம். ஆனால் அரசியல் தீர்வு என்று வரும்போது நாமனைவரும் ஒரே கோட்டில் பயணிக்கவேண்டிய நிலையில் இருக்கின்றோம்.

அதேவேளை தாயகத்தில் வறுமைக்கோட்டின்கீழ் வாழும் எமது மக்களினதும், கடந்தகாலங்களில் தமது வாழ்வை அர்ப்பணித்துப்போராடிய முன்னாள் போராளிகளினதும் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்பி, வாழ்க்கையை மேம்படுத்தவேண்டிய கடப்பாட்டைக் கொண்டவர்களாக புலம்பெயர் தேசங்களில் வாழும் வளம்பொருந்திய எமது மக்கள் இருக்கின்றனர். ஈழத்தமிழர்கள் அனைவரையும் பொறுப்பேற்று, அவர்களுக்கு உதவி புரிந்தால் அந்நிய தேசத்திடம் கையேந்திநிற்கும் நிலை அவர்களுக்கு ஏற்படாது. இத்தனை ஆண்டுகளாக எமக்காகத் தொடர்ந்து குரலெழுப்பி பக்கபலமாகத் திகழும் தமிழக உறவுகளுக்கும், அரசியல் தலைவர்களுக்கும், உலகத்தமிழ் மக்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். அதுமாத்திரமன்றி இந்தியாவிலும், உலகநாடுகளிலும் எம்மோடு துணைநிற்கும் உறவுகளின் கரங்களையும் வாஞ்சையுடன் பற்றிக்கொள்கின்றேன். ஈழத்தமிழ் மக்களின் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்காக நீங்கள் தொடர்ந்து குரல்கொடுப்பீர்கள் என்ற அசையாத நம்பிக்கை எனக்கு உண்டு.

எனது அன்பார்ந்த மக்களே, நாம் வரித்துக்கொண்ட இலட்சியமும், அதற்காக மாவீரர்கள் கொடுத்த விலையும், எமது தேசம் சந்தித்த இழப்புக்களும் அளப்பரியவை. இவை ஒருநாளும் வீண்போகாது. மாற்றங்கண்டுள்ள உலக ஒழுங்குக்கு ஏற்றவாறு அறவழியில் நின்று நாம் தொடர்ந்தும் போராடுவோம். எல்லாவிதத்திலும் அரசியல் போராட்டம் மிகவும் கடினமானது. அவ்வகையான போராட்டத்துக்கு பொறுமையும், நம்பிக்கையும், இலட்சிய உறுதியும் இன்றியமையாதவை என்பதை நான் உணர்ந்துகொள்ளாமல் இல்லை.

இந்நேரத்தில் சிங்கள மக்களுக்கு ஒரு விடயத்தைக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். நாம் என்றுமே சிங்கள மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல. சிங்கள மக்களுக்கு எதிராக நாம் செயற்பட்டதுமில்லை. தவறான கருத்துக்கள் விதைக்கப்பட்டு சிங்கள மக்கள் தமிழர்களுக்கு எதிராகத் தூண்டிவிடப்பட்டார்கள் என்பதை நானறிவேன். எமது தேசியத்தலைவர் குறிப்பிட்டதுபோன்று, எமது பாதைகள் மாறலாம். ஆனால் எமது இலட்சியங்கள் ஒருபோதும் மாறப்போவதில்லை. மாவீரர்களின் தியாகங்களும், மாண்டுபோன மக்களின் ஈகங்களும் எமது மக்களுக்கு வழிகாட்டும். நாம் எமது இலட்சியத்தின் பாதையில் சென்று, அதனை ஒருநாள் அடைந்தே தீருவோம். புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்.

நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்தினால் கருத்துச் சுதந்திரம் பாதிக்கப்படுகின்றது – கர்தினால்

உத்தேச நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்தினூடாக மக்களின் கருத்து வெளியிடும் உரிமை, உண்மையை கண்டறியும் உரிமை என்பன மட்டுப்படுத்தப்படுகின்றன என கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

நாட்டின் ஒற்றையாட்சியை நடாத்திச்செல்லும் இவ்வாறான முயற்சிகள் தோற்கடிக்கப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

2023 ஆம் ஆண்டுக்கான சிக்னீஸ் விருது வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டபோதே கொழும்பு பேராயர் இதனை கூறினார்.

சமூக ஊடகங்களை அரசாங்கம் கட்டுப்படுத்த வேண்டும் எனும் போர்வையில் மக்கள் கருத்து வெளியிடுதல், உண்மையை கண்டறியும் உரிமைகள் மட்டுப்படுத்தப்படுவதாக இந்த சட்டமூலம் முன்வைக்கப்பட்டுள்ளமை தெளிவாகின்றது என அவர் குறிப்பிட்டார்.

நாட்டை சர்வாதிகாரத்திற்கு இட்டுச்செல்லும் இவ்வாறான முயற்சிகளை முறியடிக்க வேண்டியது அரசியல், மக்கள் சார்பான ஊடகங்களின் கடமையாகும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

புதிய அமைச்சர்கள் இருவர் சத்தியபிரமாணம்

நீர்ப்பாசன அமைச்சராக பவித்ரா வன்னியாரச்சியும் இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சராக ஹரின் பெர்னாண்டோவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் நேற்று (27) பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

அத்திப்பட்டியை போல மன்னார் தீவும் மாயமாகும் – வினோ எம்.பி

 

நடிகர் அஜித் நடித்த ”சிட்டிசன்” என்ற படத்தில் ”அத்திப்பட்டி”என்ற கிராமத்துக்கு நேர்ந்த கதியே இன்னும் 50 வருடங்களுக்கு பின்னர் மன்னார் தீவுக்கும் ஏற்படும்.

மன்னார் தீவு இருந்ததற்கான அடையாளங்களையே இல்லாமல் செய்யும் பணிகளை  அவுஸ்திரேலியாவின்  நிறுவனமும் ,அரசும் கனிய மணல் அகழ்வாராய்ச்சி என்ற பெயரில் மன்னார் தீவில் முன்னெடுக்கிறது.

மக்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் முன்னெடுக்கப்படும் இந்த அகழ்வாராய்ச்சியை உடனடியாக நிறுத்த வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின்    பாராளுமன்ற உறுப்பினர்  வினோ நோகராதலிங்கம் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை  (27) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில்  சுற்றாடற்றுறை மற்றும் வனஜீவராசிகள், வனவிலங்குகள் பாதுகாப்பு அமைச்சுக்கான செலவுத்தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

மன்னார் தீவில் கனிய மணல் அகழ்வு அல்லது கனிய மணல் அகழ்வாராய்ச்சி என்ற பெயரில் அவுஸ்திரேலியாவின் டைட்டானியம் சாம்ஸ் லிமிட்டெட் என்ற நிறுவனம் அங்கு அகழ்வுப்பணிகளை  முன்னெக்கிறது.

மன்னார் தீவு மக்களின் விருப்பத்துக்கு மாறாக, அவர்களின் எதிர்ப்பையும் மீறி  மன்னார் மாவட்டம் ஒரு காலத்தில் முற்றாக கடலுக்குள் மூழ்கக் கூடியவாறு இந்த கனிய  மணல் அகழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான திட்டமிடல்கள் அரசின், அரச நிறுவனங்களின்  ஆதரவோடு டைட்டானியம் சாம்ஸ் லிமிட்டெட் நிறுவனத்தின் துணை நிறுவனங்களோடு  சேர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன.

மன்னார் மாவட்ட மக்கள் இந்த அகழ்வாராய்ச்சி பணியை நிறுத்தக்கோரி பாரிய ஆர்ப்பாட்டங்களை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் அரசு அபிவிருத்தி என்ற பெயரில் அல்லது அங்கே  கனிய மணல் இருப்பதை உறுதிப்படுத்துவதற்காக  இந்த  ஆராய்ச்சிகளை தொடர்ந்து மேற்கொள்கின்றது.

இதனூடாக அங்குள்ள சாதாரண மக்களை ஏமாற்றி சுமார் 2000 முதல் 3000 ஏக்கர் வரையான  காணிகளை அந்த மக்களின் வறுமைஇ அவர்களின் அறியாமையை பயன்படுத்தி அவர்களிடம் விலை பேசி ஏறக்குறைய மன்னார் தீவில் மட்டும் 2600 மில்லியன் ரூபாவுக்கு காணிகள் வாங்குவதற்கான நடவடிக்கைகள் இந்த அமைப்புக்களினால் முன்னெடுக்கப்படுகின்றன.

ஆழ்துளை கிணறுகள் மூலமாக இந்த அகழ்வாராய்ச்சி பணிகள் ஆரம்பிக்கப்பட்டு தற்போது நிறுத்தப்பட்டாலும் அது தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.

சுமார் 40 அடி   ஆழத்தில் இந்த அகழ்வாராய்ச்சிப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இது ஒருகட்டத்தில் நிச்சயமாக நன்னீரும் கடல் நீரும் கலந்து குடிநீர் பிரச்சினை ஏற்படுவதற்கான நிலையை உருவாக்குகின்றது.

இதனால் மன்னார் தீவு மக்கள் மிகப்பெரிய ஆபத்தை எதிர்நோக்கியுள்ளனர். அரசு எந்த வகையில் இதற்கான அனுமதியை வழங்கியது என்பதுவே எமது கேள்வி.

தென்னிந்திய நடிகர் அஜித் நடித்த  ”சிட்டிசன்”என்ற படத்தில் ”அத்திப்பட்டி”என்ற கிராமமே காணாமல் போகும்.  அரசியல்வாதிகள் அதிகாரிகள் ஆகியோரின் ஊழல் மோசடியால் இந்த கிராமம் அழிந்தது.

கிராமத்திலிருந்து மக்களை வெளியேற்றி தமது சொந்த நலன்களுக்காக  அரசியல்வாதிகள் அந்தக் கிராமத்தை முற்றாக்கக்கடலுக்குள் அமிழ்த்தி விட்டு செய்த ஒரு காரியம்தான் தற்போது மன்னார் தீவிலும் நடக்கின்றது.

இன்னும் ஒரு 50 வருடங்களுக்கு பின்னர் மன்னார் தீவு அங்கு இருக்காது .அப்படி ஒரு தீவு இருந்ததற்கான அடையாளங்களையே இல்லாமல் செய்கின்ற திட்டத்திற்கு   இந்த சுற்று சூழல் அமைச்சும் அரசும் உடந்தையாக இருக்கின்றன.

அரச அதிகாரிகளும் அது அரசின் உத்தரவு, மேலிட உத்தரவு எனக்கூறிக்கொண்டு வாய்மூடி மௌனிகளாக இருக்கின்றனர்.இந்த திட்டங்களை மன்னார் தீவு மக்கள் விரும்பவில்லை. மீன் வளம் இல்லாது போகும் என மீனவர்கள் கூறுகின்றனர். எனவே இந்த அகழ்வாராய்ச்சி பணிகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.மன்னார் தீவு காப்பாற்றப்பட வேண்டும் என்றார்.

பிரித்தானியாவில் மிக உணர்வுபூர்வமாக அனுஷ்ட்டிக்கப்பட்ட மாவீரர் நாள் நினைவேந்தல்

பிரித்தானியாவில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் மிகவும் உணர்வுபூர்வமாக அனுஷ்ட்டிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

தமிழர் வரலாற்று மையத்தில் மாவீரர் நாள் சிறப்பு நிகழ்ச்சிகள் பல்லாயிரக்கணக்கான மக்களுடன் உணர்வுபூராவாக அனுஷ்ட்டிக்கப்படுகின்றது.

தமிழ் இளையோர் அமைப்பு செயற்பாட்டாளர்களினால் கொடிவணக்கம் நிகழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து ஈகைச்சுடருக்கான ஆயத்த மணி ஒலி எழுப்பப்பட்டு தாயக மண்ணுக்காக தம் உயிரை ஈந்த மாவீரர்களுக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டது.

கல்லறைகளுக்கு முன்பாக மாவீரர் குடும்பத்தை சேர்ந்த உறவுகளால் தமிழர் வரலாற்று மைய கண்ணீரில் மூழ்கியது. தொடர்ந்து தமிழீழ எழுச்சிப் பாடல்களும் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

பிரித்தானியாவில் நடைபெற்ற தமிழீழ தேசிய மாவீரர் நாள்

மாவீரர் நாள் 2023 ஆண்டிற்க்கான பொதுசுடரினை வட கிழக்குப் பகுதியில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் நீண்ட காலப் பணியாளரான அப்பன் என்று அழைக்கப்படும் செல்லையா கனகரத்தினம் அவர்கள் ஏற்றிவைத்தார்கள்.

தொடர்ந்து மாவீரர் நாள் 2023ம் ஆண்டிற்க்கான பிரித்தானியத் தேசியக் கொடிஇளையோர் அமைப்பு செல்வி பார்பரா ராஜன் அவர்கள் ஏற்றிவைத்தார்கள்.

மாவீரர் நாள் 2023ம் ஆண்டில் தமிழீழத் தேசியக் கொடியினை பிரித்தானியத் தமிழர் ஒருங்கமைப்புக் குழுவின் பொறுப்பாளர் திரு. ஆனந் அவர்கள் ஏற்றிவைத்தார்கள்.

பிரிகேடியர் சொர்ணம் அவர்களின் புதல்வன் பிரபாநந்தன் அவர்கள் ஈகைச் சுடரினை ஏற்றி வைத்தார்கள். ஆயிரக்கணக்கான மக்கள் சுடர் ஏந்தி மலர்வணக்கத்தினை செலுத்தினார்கள்.

வடக்கு-கிழக்கில் தடைகளை தாண்டி உணர்வெழுச்சியுடன் மாவீரர் நாள்!

வடக்கு, கிழக்கில் உள்ள எட்டு மாவட்டங்களிலும் உள்ள மாவீரர் துயிலுமில்லங்களில் தடைகளை தாண்டி மாவீரர் நாள் நினைவேந்தல் நேற்று உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம், கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லம், எள்ளங்குளம் மாவீரர் துயிலுமில்லம், உடுத்துறை மாவீரர் துயிலுமில்லம், சாட்டி மாவீரர் துயிலுமில்லத்திலும் கிளிநொச்சி மாவட்டத்தில் கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம், முழங்காவில் மாவீரர் துயிலுமில்லம், தேராவில் மாவீரர் துயிலுமில்லம் ஆகியவற்றில் நினைவேந்தல் மிகவும் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றன. இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தில், முல்லைத்தீவு கடற்கரை, இரட்டைவாய்க்கால், தேவிபுரம், களிக்காடு, கொக்குத்தொடுவாய், சுதந்திரபுரம், அளம்பில், வன்னி விளான்குளம், முள்ளியவளை, ஆலங்குளம், இரணைப்பாலை, முள்ளிவாய்க்கால் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மாவீரர் துயிலுமில்லங்களிலும் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன.

மன்னார் மாவட்டத்தின் ஆட்காட்டி வெளி, பெரிய பண்டிவிரிச்சன், முள்ளிக்குளம் துயிலுமில்லங்களிலும், வவுனியா மாவட்டத்தில் ஈச்சங்குளம் துயிலுமில்லத்திலும் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.

கிழக்கு மாகாணத்தினைப் பொறுத்த வரையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாவடிமுன்மாரி, தரவை, தாண்டியடி, வாகரை கண்டலடி ஆகிய மாவீரர் துயிலுமில்லங்களிலும், திருகோணமலை மாவட்டத்தின் சம்பூர் ஆலங்குளம் துயிலுமில்லத்திலும், அம்பாறை கஞ்சிக்குடிச்சாறு துயிலுமில்லத்திலும் நினைவேந்தல் இடம்பெற்றது.

இதேவேளை, இறுதி நிமிடத்தில் உட்புகுந்த பொலிஸாரின் அராஜகத்துக்கு மத்தியில் மட்டக்களப்பு தரவையில் நினைவேந்தல் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. அங்கு நுழைந்த பொலிஸார் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறக்கொடிகளை அறுத்தெறிந்தனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் கனகபுரம், முழங்காவில், தேராவில் மாவீரர் துயிலுமில்லங்களில் மாவீரர் தின நிகழ்வுகள் இடம்பெற்றது. இதன்போது மாவீரர்களின் உறவுகள், பொது மக்கள் என பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு அஞ்சலி செலுத்தினர்.

இதனால் வரலாறு காணாத வகையில் இன்றைய தினம் மக்கள் திரண்டமையால் கடும் வாகன நெரிசலும் சுமார் 2 மணிநேரத்திற்கு மேலாக காணப்பட்டது.

கிளிநொச்சி – கனகபுரம்
கிளிநொச்சி – கனகபுரம்
கிளிநொச்சி – முழங்காவில்

யாழ்ப்பாணம் – கோப்பாய்

கோப்பாய் – யாழ்ப்பாணம்
கோப்பாய் – யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் முன்பாக ,மாவீரர் நாளான இன்றைய தினம் உணர்வெழுச்சியுடன் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

கோப்பாய்  மாவீரர் துயிலும் இல்லம்  இராணுவ கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில் துயிலும் இல்லத்திற்கு முன்பாக உள்ள காணி ஒன்றில் அஞ்சலி நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், நினைவேந்தல் இடம்பெற்றது.

கொடிகாமம்

கொடிகாமம் – யாழ்ப்பாணம்
கொடிகாமம் – யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம் – கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் தின நிகழ்வுகள் நேறறு மாலை முன்னெடுக்கப்பட்டன. அகவணக்கத்தைத் தொடர்ந்து ஈகச்சுடரை மாவீரர்களான கப்டன் ரசியன், மேஜர் ரெஸ்ரார்,மேஜர் வண்ணன் ஆகியோரின் தாயாரும் மற்றும் மாவீரர் குமரர் மற்றும் சந்திரன் ஆகியோரின் சகோதரியும் ஏற்றி நினைவேந்தலை ஆரம்பித்து வைத்திருந்தார். அதனைத் தொடர்ந்து மாவீரர்களின் உறவுகள் மற்றும் பொதுமக்களால் பொதுச்சுடர்கள் ஏற்றி வைக்கப்பட்டன. நிகழ்வில் மாவீரர்களின் பெற்றோர், சகோதரர்கள்,உறவுகள், சமூக ஆர்வலர்கள்,அரசியல் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பெருந்திரளானவர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் – யாழ்ப்பாணம்

எள்ளங்குளம்-யாழ்ப்பாணம்
எள்ளங்குளம்-யாழ்ப்பாணம்

வடமராட்சி எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் முன்பாக ,மாவீரர் நாளான இன்றைய தினம் உணர்வெழுச்சியுடன் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் இராணுவ கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில் துயிலும் இல்லத்திற்கு அருகில் உள்ள காணி ஒன்றில் அஞ்சலி நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பிரதான ஈகச்சுடரினை கடற்கரும்புலி மாவீரர் தமிழினியின் தந்தையார் முத்துலிங்கம் சிவப்பிரகாசம் ஏற்றி வைத்தார்.

சாட்டி மாவீரர் துயிலும் இல்லம்

சாட்டி – தீவகம்
சாட்டி – தீவகம்

யாழ்ப்பாணம் – தீவகம், சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களுக்கு உணர்வெழுச்சியுடன் அஞ்சலி செலுத்திப்பட்டது. ஆரம்பத்தில் மாவீரர்களின் பெற்றோர், மற்றும் உறவினர்கள் சாட்டி மாதா தேவாலயத்தில் இருந்து அழைத்து வரப்பட்டனர். தொடர்ந்து பொது ஈகச்சுடர் முன்னாள் போராளியும், இரண்டு மாவீரர்களின் தந்தையுமான வி.கந்தசுவாமியினால் ஏற்றப்பட்டது.

வல்வெட்டித்துறை கம்பர் மலை

வல்வெட்டித்துறை – கம்பர்மலை

வல்வெட்டித்துறை கம்பர்மலையில் உள்ள தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முதல் மாவீரர் சங்கரது நினைவாலயம் முன்பாக மாவீரர் நினைவேந்தல் இடம்பெற்றது. மாவீரர்களின் உறவுகள் கலந்துகொண்டு சுடரேற்றி அகவணக்கம் செலுத்தி அஞ்சலி செலுத்தினர்.

முல்லைத்தீவு இரட்டைவாய்க்கால்

முல்லைத்தீவு – இரட்டைவாய்க்கால்

இரட்டைவாய்க்கால் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நாள் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது. பொதுச்சுடரினை இரண்டு மாவீரர்களின் தந்தையான தனபாலசிங்கம் ஏற்றி வைக்க ஏனைய உறவுகளுக்கு அவர்களது உறவுகள் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.

முல்லைத்தீவு கடற்கரை

முல்லைத்தீவு – கடற்கரை

முல்லைத்தீவு கடற்கரையில் மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்கள், முன்னாள் போராளிகள், பொதுமக்கள் என பெருந்திரளானவர்கள் உணர்வுபூர்வமாக ஒன்று திரண்டு உயரிய இலட்சியத்திற்காக தங்களின் இன்னுயிர்களை தியாகம் செய்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு கடற்கரையில் மாலை 6.05 மணிக்கு மணியோசை எழுப்பப்பட்டு, அகவணக்கம் செலுத்தப்பட்டு பின்னர் பிரதான பொதுச் சுடரை கடற் கரும்புலி மேஜர் நிதர்சன் அவர்களின் தாயார் ஏற்றி வைக்க ஏனைய சுடர்களை மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களால் ஏற்றி வைக்கப்பட்டது.

வவுனியா ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லம்

வவுனியா – ஈச்சங்குளம்
வவுனியா – ஈச்சங்குளம்

வவுனியாவில் பிரதான மாவீரர் துயிலும் இல்லம் அமைந்துள்ள ஈச்சங்குளம் பகுதியில் 561 ஆவது இராணுவ தலைமையகம் அமைந்திருப்பதால் அதற்கு அருகாமையிலுள்ள மைதானத்தில் நினைவேந்தல்கள் இடம்பெற்றன. இதன் போது மணி ஒலிக்கப்பட்டு, ஈச்சங்குளம் துயிலும் இல்லத்தின் பிரதான ஈகச்சுடரினை மேஜர் உமாசங்கர் மற்றும் கப்டன் கஜலக்சுமி ஆகியோரின் தாயார் வள்ளிப்பிள்ளையால் ஏற்றி வைக்கப்பட்டது. இதனையடுத்து நினைவேந்தலில் கலந்து கொண்ட மாவீரர்களின் பெற்றோர்களால் சுடர் ஏற்றி நினைவேந்தல் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவடிமுன்மாரி

மட்டக்களப்பு – மாவடிமுன்மாரி
மட்டக்களப்பு – மாவடிமுன்மாரி

மட்டக்களப்பு மாவட்டம் மாவடி முன்மாரி மாவீரர் துயிலுமில்லத்தில் மக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். மட்டக்களப்பு மாவட்டம் கொக்கட்டிச் சோலைப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிமுன்மாரி மாவீரர் துயிலுமில்லத்தில் திங்கட்கிழமை மாலை 6.05 மணிக்கு கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு ஈகைச் சுடர் ஏற்றி அஞ்சலி சொலுத்தினர். குறித்த மாவீரர் துயிலும் இல்லத்தைச் சூழ பொலிசார் அவர்களது கடமையில் ஈடுபட்டிருந்துடன் அவ்வப்போது நிகழ்வை குழப்பும் வகையில் ஏற்பாட்டாளர்களுடன் தர்க்கத்திலும் ஈடுபட்டிருந்ததுடன், கலந்து கொண்டிருந்த பொது மக்கள் மற்றும் ஊடகவியலாளர்களையும் பொலிசார் அவர்களது கைபேசியில் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

மட்டக்களப்பு – வாகரை

மட்டக்களப்பு- வாகரை
மட்டக்களப்பு- வாகரை

மட்டக்களப்பு வாகரையில் உணர்வெழுச்சியுடன் மாவீரர் தின நிகழ்வுகள் நேற்று இடம்பெற்றன.

மன்னார் – பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலுமில்லம்

மன்னார் – பண்டிவிரிச்சான்
மன்னார் – பண்டிவிரிச்சான்
மன்னார் – பண்டிவிரிச்சான்

மன்னார் பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில் ஒன்று திரண்ட மக்கள் சுடரேற்றி உணர்வுபூர்வமாக தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினர். பொதுச் சுடர் ஏற்றப்பட்ட பின் மாவீரர்களின் உறவுகள் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.இதன் போது மாவீரர்களின் உறவுகள் அருட்தந்தையர்கள்,அருட் சகோதரிகள்,அரசியல் பிரதிநிதிகள் என ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.

ஆட்காட்டிவெளி

மன்னார் – ஆட்காட்டிவெளி
மன்னார் – ஆட்காட்டிவெளி

மாவீரர் தினத்தையொட்டி மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் சிவப்பு, மஞ்சள் கொடிகள் பறக்க விட்டு உணர்வு பூர்வமாக மாவீரர் நினைவு தினம் இன்றைய தினம் நேற்று மாலை நினைவு கூரப்பட்டது. தமிழ் தேசிய விடுதலைக்காக தனது மகனை கரும்புலியாக வழங்கிய தந்தை பொதுச் சுடரை ஏற்றி எழுச்சி பூர்வமாக நினைவேந்தலை ஆரம்பித்து வைத்தார் .

திருகோணமலை
திருகோணமலை மாவட்டம் சம்பூர் ஆலங்குளம் துயிலும் இல்லத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் பொலிஸாரால் தடுக்கப்பட்ட நிலையில், சம்பூர் பத்திரகாளி கோவில் முன்றலில் அனுஷ்டிக்கப்பட்டது.