ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்ட உரை 30 ஆம் திகதி!

2022 ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட உரை எதிர்வரும் 30 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த உரையை நிகழ்த்தவுள்ளார்.

இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1 மற்றும் 2 ஆம் திகதி விவாதம் நடத்தப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

கடந்த நவம்பர் மாதத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்கத்தின் மொத்த செலவீனமாக 2,796.44 பில்லியன் ரூபா நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

எனினும் தற்போது முன்வைக்கப்பட்டுள்ள ஒதுக்கீட்டுச் திருத்தச் சட்டமூலத்தில் அந்தத் தொகை 479.43 பில்லியன் ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியுடன் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் பேச்சு

இலங்கை எதிர்கொண்டுள்ள நிதி நெருக்கடிக்கு தீர்வு வழங்குவதற்காக சர்வதேச நாணய நிதியத்துடனான ஆரம்பகட்ட கலந்துரையாடலொன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இன்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.

இலங்கை எதிர்கொண்டுள்ள நிதி நெருக்கடியின் தற்போதைய நிலைமை குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.

மேலும் எதிர்வரும் 26 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இந்த கலந்துரையாடலில் மற்றொரு சுற்றுக்கலந்துரையாடலை நடத்துவதற்கும், எதிர்காலத்தில் மத்திய வங்கி அதிகாரிகளுடன் தொழிநுட்ப விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சுக்குழுவின் தலைவர் பீட்டர் புரூபர், பிரதித் தலைவர் ஒசைரோ கொசையிகோ, சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதி டுபாகன்ஸ் மற்றும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க உட்பட பலர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

Posted in Uncategorized

விடுதலைப் புலிகளிடம் இருந்து நாட்டை மீட்ட கோட்டாபயவை அடித்து விரட்டிய நன்றிகெட்ட தேசம் இது! கொதித்தெழும் தேரர்

டுமையான பயங்கரவாதத்தில் இருந்து நமது நாட்டை விடுவித்த ஒரு தலைவரைப் பாராட்ட முடியாத அளவுக்கு நமது தேசம் நன்றி கெட்டது என எல்லே குணவங்ச தேரர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டைக் காப்பாற்றிய தலைவர் கோட்டாபய நாட்டை விட்டு துரத்தப்பட்டு நாடு விட்டு நாடு செல்கிறார்.கடுமையான பயங்கரவாதத்திலிருந்து நாட்டைக் காப்பாற்றிய ஒரு தலைவருக்கு நன்றி செலுத்தாத இந்த தேசம் மிகவும் நன்றியற்றது.

கருணை காட்டுவதில் நமக்கு முதல் பாடம் கற்பித்தவர் புத்தர். புத்தராக வருவதற்கு அடைக்கலம் தந்த போதியில் ஒரு வாரம் பூஜை செய்து நன்றியறிதலின் மதிப்பை உலகுக்கு எடுத்துரைத்தார். ஆனால் நம் மக்கள் நன்றி மறந்துள்ளனர்.

வயல்களை உழுவதற்குப் பயன்படும் மண்வெட்டியைக் கூடக் கும்பிடும் எமது மக்களுக்கு இந்த நாட்டை விடுவித்த தலைவன் மீது அவ்வளவாக மரியாதை இருந்ததாகத் தெரியவில்லை.

நாட்டின் மற்றும் சர்வதேச சமூகத்தின் பல்வேறு கோரிக்கைகளுக்காக கோட்டாபயராஜபக்சவை  நாட்டை விட்டு விரட்டியடித்துள்ளனர்.

கோட்டாபய சொல்வது சரி என்று நான் நிரூபிக்க முயற்சிக்கவில்லை. நாட்டின் முக்கிய ஆட்சியாளராக, அவருக்கு பல குறைபாடுகள் உள்ளன.

ஆனால் முப்பது வருடங்களாக நீடித்து வந்த புலிகளுடனான  கொடூரமான பயங்கரவாத யுத்தத்தில் இருந்து இந்த நாட்டை விடுவிப்பதற்கு அவர் முன்முயற்சி எடுத்தார். இப்படிப்பட்ட ஒரு தலைவரை நாட்டை விட்டு விரட்டுவது கேவலமான செயல்.

கடுமையான பயங்கரவாதத்தில் இருந்து நமது நாட்டை விடுவித்த ஒரு தலைவரைப் பாராட்ட முடியாத அளவுக்கு நமது தேசம் நன்றி கெட்டது.

அரசியல் சித்தாந்தங்கள் ஒருபுறம் இருக்க, இதுபோன்ற நிகழ்வுகளால் நான் ஏமாற்றம் அடைகிறேன். கலாசாரம், இனம், மதம் ஆகியவற்றை மதிக்காதவர்களால்தான் இவை நடக்கின்றன என குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

ஜனாதிபதி செயலகத்திற்குள் நுழைந்த ஸ்டாலின் உள்ளிட்ட 10 பேருக்கு பிணை!

ஜுலை 9 ஆம் திகதி நடந்த போராட்டத்தின் போது ஜனாதிபதி செயலகத்திற்குள் பிரவேசித்த சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் ஆஜரான அருட்தந்தை ஜீவந்த பீரிஸ், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின், துமிந்த நாகமுவ உள்ளிட்ட 10 சந்தேகநபர்களை பிணையில் விடுவிக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

சந்தேகநபர்களை தலா 5 இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்க கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டார்.

கொழும்பு வடக்கு குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் வழங்கப்பட்ட அறிவித்தலின் பிரகாரம் சந்தேகநபர்கள் இன்று  நீதிமன்றத்தில் ஆஜராகி பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

கடந்த ஜூலை 13ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து அங்கு ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய சம்பவத்தின் சந்தேகநபர்களாக இவர்கள் பெயரிடப்பட்டுள்ளதாக பொலிஸார்  நீதிமன்றில் இன்று அறிவித்தனர்.

வழக்கை எதிர்வரும் 31ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு நீதவான் உத்தரவிட்டார்.

Posted in Uncategorized

கல்முனை வடக்குப் பிரதேச செயலக விடயத்தில் நீதிக்கு முரணான நடைமுறை கையாளப்படுகின்றது – பா.உ. கலையரசன் கண்டனம்

தமிழ் முஸ்லீம் உறவு ஒற்றுமைப்பட வேண்டும் என்று தமிழ்த் தரப்பால் மாத்திரம் எடுக்கப்படுகின்ற முன்னெடுப்புகள் கிழக்கிலே தமிழர்களைத் இல்லாமல் செய்வதற்கான நடைமுறைகளாகவே தமிழ் மக்கள் பார்க்கின்றார்கள். ஏனெனில், அம்பாறை மாவட்டத்தைப் பொறுத்த வரையில் முஸ்லீம் அடிப்படைவாதிகளோ, அரசியல்வாதிகளோ எந்தவொரு நல்ல நோக்கத்தையும் தமிழர்கள் மீது இதுவரை காட்டவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவைத் தீர்மானத்தைக் கொண்டு சுமார் 30 வருடங்களுக்கு மேலாக இயங்குகின்ற கல்முனை வடக்குப் பிரதேச செயலக விடயத்தில் முஸ்லீம் அரசியல்வாதிகளின் கதைகேட்டு நீதிக்கு முரணான நடைமுறையைக் கையாள்வது கசப்பான விடயமாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொது நிருவாக உள்நாட்டலுவல்கள் இணையத்தில் கல்முனை வடக்குப் பிரதேச செயலகம் நீக்கப்பட்டு அம்பறை மாவட்டத்தில் 19  பிரதேச செயலகங்கள் மாத்திரம் குறிப்பிடப்பட்டுள்ளமை தொடர்பில் கண்டனம் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அம்பாறை மாவட்டத்திலே தொடர்ச்சியாகத் தமிழர்களின் பிரதேசங்கள் புறக்கணிக்கப்படுவதும், அதன் அதிகார நிருவாக நடைமுறையை முடக்குவதுமான நடவடிக்கைகளை முஸ்லீம் அடிப்படைவாத சிந்தனை கொண்டவர்களும், சில முஸ்லீம் அரசியல்வாதிகளும் முன்னெடுத்து வருகின்றார்கள்.

இதனூடாக இன்று அம்பாறை மாவவட்டத்திலே பல தமிழக் கிராமங்கள் அழிவுற்ற கிராமங்களாக இருந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக திராய்க்கேணி, அட்டப்பளம், நிந்தவூர், ஆளங்குளம், மீனோடைக்கட்டு, பொத்துவில்லில் பல பகுதிகள் உட்பட பல பிரதேசங்கள் மாற்றப்பட்டிருக்கின்றன. அதுமட்டுமல்லாது பழம்பெரும் கிராமங்கள் பலவற்றின் பெயர்கiளைக் கூட நீக்குகின்ற செயற்பாடுகளும் இடம்பெற்றிருக்கின்றன.

தற்போது கல்முனை வடக்குப் பிரதேச செயலகத்தை மையமாக வைத்துப் பல நகர்வுகளை முன்னெடுக்கப்படுகின்றன. இந்த விடயத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கல்முனை வடக்குப் பிரதேசத்தின் காணிப்பதிவு அலுவலகம் நீக்கப்பட்டது. இது தொடர்பில் தற்போதை நாட்டின் ஜனாதிபதி அவர்களின் கவனத்திற்கு நாங்கள் இதனைக் கொண்டு சென்றோம். அவர் பிரதமராக இருக்கும் போது நாங்கள் நேரடியாகச் சந்தித்து இவ்விடயத்தைக் கூறியபோது தாம் விரைந்து நடவடிக்கை எடுப்பதாகக் கூறி இற்றைவரைக்கும் எவ்விதமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை.

29 கிராம சேவகர் பிரிவுகளைக் கொண்டு 33  வருடங்களாக இயங்கி வந்த கல்முனை வடக்குப் பிரதேச செயலகத்தினை முடக்கும் நடவடிக்கையின் ஆரம்ப கட்டமாக காணிப் பதிவு அலுவலகம் மாற்றப்பட்டது அதன் அடுத்தபடியாக தற்போது உள்நாட்டலுவல்கள் அமைச்சின் இணையத்தளத்தில் அம்பாறை மாவட்டத்தில் கல்முனை வடக்கப் பிரதேச செயலகத்துடன் 20 பிரதேச செயலகங்களாகக் காட்டப்பட்ட விடயம் தற்போது கல்முனை வடக்குப் பிரதேச செயலகம் நீக்கப்பட்டு 19 பிரதேச செயலகங்களாகக் காட்டப்பட்டுள்ளது.

இவ்விடயத்தின் மூலம் அம்பாறை மாவட்டத்திலே தமிழர்களை முற்றாகத் துடைத்தெறிகின்ற செயற்பாடுகளில் முஸ்லீம் அடிப்படைவாத சிந்தனை கொண்டவர்களும், அரசியலல்வாதிகளும் ஈடுபட்டு வருகின்றார்கள் என்ற உண்மை மேலும் நிரூபணமாகின்றது.

குறிப்பாகத் தமிழ் முஸ்லீம் உறவு பாதுகாக்கப்பட வேண்டும் அல்லது ஒற்றுமைப்பட வேண்டும் என்று தமிழ்த் தரப்பால் மாத்திரம் கூறப்படுகின்ற ஒவ்வொரு வார்த்தைகளும் கிழக்கிலே தமிழர்களைத் இல்லாமல் செய்வதற்கான வார்த்தைகளாகவே தமிழ் மக்கள் பார்க்கின்றார்கள். கிழக்கு மாகாணத்தைப் பொருத்தவரையில் குறிப்பாக அம்பாறை மாவட்டத்தைப் பொறுத்த வரையில் முஸ்லீம் அடிப்படைவாதிகளும் சரி, அரசியல்வாதிகளும் சரி எந்தவொரு நல்ல நோக்கத்தையும் தமிழர்கள் மீது இதுவரை காட்டவில்லை.

கல்முனை வடக்கை மையப்படுத்தி முஸ்லீம் அடிப்படைவாதிகளால் முன்னெடுக்கப்டுகின்ற செயற்பாடுகள் கிழக்கு மாகாணத்திலே பாரியதொரு பிரிவினையையே ஏற்படுத்தும். எந்த அரசாங்கம் அமைந்தாலும் ஒரு கொள்கையற்ற ரீதியில் அவர்களுடன் சேர்ந்து தமிழர்களை இல்லாதொழிக்கின்ற வரலாறே இருந்து கொண்டிருக்கின்றது.

1990களிலே அரச படைகளுடன் சேர்ந்து எமது மக்களை அழித்த வரலாறுகள் உண்டு. இவ்வாறான கடந்த கால வடுக்களை எல்லாம் மறந்து எதிர்காலத்தில் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற சிந்தனையுடன் தமிழர்கள் இருந்தாலும், சில முஸ்லீம் அரசில்வாதிகளிடம் அவ்வாறான சிந்தனைகள் இல்லை. மத ரீதியாகவும், இன ரீதியாகவும் கையாளுகின்ற தன்மையே அவர்களிடம் இருக்கின்றது. அதன் ஒரு அங்கமாகவே கல்முனையில் நடக்கின்ற விடயங்கள் இருக்கின்றன.

இந்த விடயத்தில் அரசாங்கம் மௌனம் காப்பதும், முஸ்லீம் அரசியல்வாதிகளின் கதைகேட்டு நீதிக்கு முறனான நடைமுறையைக் கையாள்வதும் ஒரு வேடிக்கையானதும், கசப்பானதுமான விடயமாகும். பொது நிருவாகத்திற்குப் பொறுப்பாகப் பிரதமர் இருக்கின்ற போதும், காணிப்பதிவகம் பிரதமர் வசமிருந்தும் இவ்வாறான செயற்பாடுகள் நீதிக்கு முறனாக இடம்பெறுவது வேடிக்கையானது.

அமைச்சரவைத் தீர்மானத்தைக் கொண்டு சுமார் 30 வருடங்களுக்கு மேலாக இயங்குகின்ற இந்தக் கல்முனை வடக்குப் பிரதேச செயலகத்தின் நிருவாக நடைமுறைகளைக் குழப்புகின்ற வேலைகள் கட்டம் கட்டமாக கையூட்டல்களினூடாக மேற்கொள்ளப்படுகின்றதா? அல்லது உரிய அமைச்சருக்குத் தெரியாமல் மேற்கொள்ளப்படுகின்றதா? என்கின்ற கேள்விகளெல்லாம் எழுகின்றன. ஏனெனில் ஒரு அமைச்சரவையில் எடுக்கப்படுகின்ற தீர்மானத்தை இன்னுமொரு அமைச்சரவைத் தீர்மானத்தினூடகவே வலுவிழக்கச் செய்ய முடியும். ஆனால் கல்முனையைப் பொருத்தவரையில் அவ்வாறான செயற்பாடுகள் இல்லை. அவர்கள் நினைத்தபடி கல்முனை வடக்குப் பிரதேசத்தைக் கூறுபோடுகின்ற செயற்பாடுகளை கல்முனை தெற்குப் பிரதேச செயலாளர் உட்பட ஏனைய அதிகாரிகளும் மேற்கொள்வது மனவேதனையானதும், கண்டிக்கப்படுகின்றதுமான விடயம். இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் எதிர்காலத்தில் இந்த இரண்டு இனங்களும் பாதுகாக்கப்படுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இவ்விடயம் தொடர்பில் எங்களது பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடியுள்ளோம். எதிர்வரும் 29ம் திகதி பாராளுமன்ற அமர்வுகள் இடம்பெறவுள்ளன. இதன்போது உரிய அமைச்சர், திணைக்களம் என்பவற்றுடன் கலந்துரையாடி இதற்குரிய விரைவு நடவடிக்கைளை மேற்கொள்வோம் என்று தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

புலம்பெயர் உறவுகளின் உதவியை பெறுவதற்கு இனப்பிரச்சினையை தீர்க்க வேண்டும்: சுரேஷ் பிரேமச்சந்திரன் Ranil Wickremesinghe

புலம்பெயர் உறவுகளின் உதவிகளை இலங்கை அரசாங்கம் பெற விரும்பினால் தேசிய இனப்பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வை முன்வைப்பதுடன் தனது நம்பகத்தன்மையையும் வெளிப்படுத்த வேண்டும் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னனியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

ஊடக அறிக்கை ஒன்றில் நேற்று(23) இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், “கடந்த சில நாட்களுக்கு முன்பாக குறிப்பிட்ட சில புலம்பெயர் அமைப்புக்கள் மீது விதிக்கப்பட்டிருந்த தடையையும், அதேபோன்று புலம்பெயர் தனிநபர்கள் சிலரின் மீதான தடையையும் நீக்கியுள்ளதாக அரசாங்கம் வர்த்தமானி மூலம் அறிவித்துள்ளது.

அரசாங்கத்தின் நம்பகத்தன்மை தமிழ்த் தேசிய பரப்பில் அரசியல் பணியாற்றும் சில கட்சிகளும் அமைப்புகளும் இதனை வரவேற்றுள்ள அதேவேளை, பலர் இந்த அறிவித்தல் தொடர்பில் அரசாங்கத்தின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்புகின்றனர்.

ரணில் மற்றும் மைத்திரி அரசாட்சியின் போது, இந்தத் தடைகள் நீக்கப்பட்டிருந்தபோதிலும், கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தில் மீண்டும் இந்த தடைகள் விதிக்கப்பட்டன.

இது ஒருபுறமிருக்க, ஜெனிவா மனித உரிமைகள் ஆணையகத்தின் கூட்டத்தொடர் ஆரம்பிக்கின்ற காலங்களில், இலங்கை அரசாங்கம் இவ்வாறான சில அறிவித்தல்களை வெளியிடுவதும் ஒரு நடைமுறையாக இருக்கின்றது.

இலங்கை இரண்டு முக்கிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கின்றது. ஒன்று பொருளாதார ரீதியாக வங்குரோத்து நிலையில் இருக்கின்றது. அந்த வங்குரோத்து நிலையிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு சர்வதேச நிதி நிறுவனங்களின் ஒத்துழைப்பு தேவையாக இருக்கின்றது.

அவ்வாறான நிதி நிறுவனங்களைத் திருப்திப்படுத்துவதும் அதேசமயம் ஜெனிவா மனித உரிமைகள் ஆணையகம் போன்றவற்றைத் திருப்திப்படுத்துவதும் இலங்கைக்கு முக்கியத் தேவைகளாக இருக்கின்றது.

ஆகவே, புலம்பெயர் அமைப்புக்கள் மீதான தடை நீக்கம் என்பது அரசாங்கம் தன்னைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டு எடுக்கப்படும் ஒரு நடவடிக்கையாகவே தோற்றம் அளிக்கின்றது.

இலங்கை அரசாங்கம் பல்வேறுபட்ட சந்தர்ப்பங்களில் தமிழ் மக்களுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் பல உறுதிமொழிகளை வழங்கியிருந்தாலும் அந்த உறுதிமொழிகளிலிருந்து பல சந்தர்ப்பங்களிலில் பின்வாங்கியிருக்கின்றது.

தமிழ்த் தலைவர்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் கிழித்தெறியப்பட்டதும், இந்திய மற்றும் இலங்கை ஒப்பந்தத்தில் இருதரப்பும் கையெழுத்து வைத்ததன் பின்பாக, அந்த ஒப்பந்தத்தின் பல சரத்துக்களை ஒருதலைப்பட்சமாகவே விலக்கிக்கொண்டுள்ளது.

இந்த நிலையில், 13ஆவது திருத்தத்தில் உள்ள அம்சங்களையே நடைமுறைப்படுத்த மறுப்பதும், இவற்றுக்கு நல்ல உதாரணங்களாகும். ஒருசில அமைப்புக்கள் மீது நீக்கப்பட்ட தடையை, வரப்போகின்ற புதிய அரசாங்கம் விலக்கிக்கொள்ளமாட்டாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

இந்த நாட்டிலிருந்து மில்லியன் கணக்கான தமிழ் மக்கள் புலம்பெயர்வதற்குக் காரணமாக இருந்த தமிழ் மக்களுக்கு எதிராகப் பாவிக்கப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டம் இதுவரை நீக்கப்படவில்லை. அரசாங்கம் தனக்குத் தேவையான நேரங்களில் சில தற்காலிக ஏற்பாடுகளினூடாக புலம்பெயர் தமிழர்களின் ஒத்துழைப்பைப் பெற முயற்சித்து வருகின்றது.

இனப்பிரச்சினைக்கு தீர்வு
இந்த விடயங்களை ஈழத் தமிழ் மக்களும் புலம்பெயர் தமிழர்களும் சரியாகப் புரிந்துள்ளனர் என்பதை அரசாங்கம் நினைவில் கொள்ளவேண்டும். மிக நீண்டகாலமாக இருக்கக் கூடிய தேசிய இனப்பிரச்சினைக்கு சரியான ஒரு தீர்வை முன்வைப்பதுடன், இந்த நாட்டில் சம பங்கைக் கொண்டுள்ள தமிழ் மக்களை சமத்துவமாக நடத்துவதற்கான கொள்கை முடிவுகளை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும்.

அரசியல் சாசனத்தில் உள்ளவற்றையே நடைமுறைப்படுத்த மறுப்பதும், கொடுக்கப்பட்ட உரிமைகளையே மீளப் பறித்தெடுப்பதும் என்ற போக்கு தொடர்ச்சியாகவே நிலவி வருகின்றது.

ஆகவே, ஒரு கையால் கொடுத்து மறு கையால் பறிக்கின்ற போக்குக்கும், அரசியல் சாசன விடயங்களை மேவிச் சென்று அரசியல் சாசனத்தில் உள்ளவற்றையே நடைமுறைப்படுத்த மறுக்கின்ற போக்குக்கும் தீர்வுகள் எட்டப்பட வேண்டும்.

பொருளாதார வங்குரோத்து நிலையிலிருந்து நாட்டை மீட்பதற்குப் புலம்பெயர் தமிழர்களின் ஒத்துழைப்பை இலங்கை அரசாங்கம் எதிர்பார்க்குமாக இருந்தால், அந்த ஒத்துழைப்பு என்பது வடக்கு, கிழக்கு மாகாணங்கள் ஊடாக நடக்க முடியுமே தவிர, கொழும்பை நம்பி அந்த ஒத்துழைப்புகள் வரமாட்டாது என்பதையும் இலங்கை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும்.

நாட்டைக் கட்டியெழுப்புதல்
இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான பேச்சுக்களும், அதிகாரப் பகிர்வு தொடர்பான பேச்சுக்களும் இடம்பெற வேண்டும்.

அத்துடன் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்றுக் கொண்டிருக்கும் மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை ஆகியவை தொடர்பில் நியாயமான சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட்டு உரிய பரிகாரங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று கோருகின்ற அரசாங்கம் மேற்கண்ட விடயங்களைக் கவனத்தில்கொள்ள வேண்டும்.

ஆனால், வெளி உலகத்துக்கு ஒரு பேச்சும், உள்ளார்ந்த ரீதியாக அதற்கு எதிரான போக்கையும் கடைப்பிடிப்பதையே எம்மால் பார்க்கக்கூடியதாக இருக்கின்றது.

அரசாங்கத்தின் மீது நம்பகத்தன்மை ஏற்படுவது போன்ற எத்தகைய செயற்பாடுகளையும் காணமுடியவில்லை. தென்னிலங்கை அரசியல்வாதிகளுக்கு இந்த நாட்டின் சமபங்காளிகளான தமிழ்த் தேசிய இனத்தையும் இணைத்துக்கொண்டு நாட்டை முன்னேற்ற வேண்டும் என்ற சிந்தனை இருப்பதாக தெரியவில்லை.

தமிழர்கள் இந்த நாட்டில் வாழ்வதற்கே தகுதியற்றவர்கள் என்ற போக்கிலேயே செயற்படுகின்றனர். இலங்கை அரசாங்கத்தின் இந்த போக்கை மாற்றுவதற்கு சர்வதேச சமூகம் தன்னாலான அனைத்தையும் செய்ய முன்வர வேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஞ்சன் ராமநாயக்க ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவதற்கான பத்திரங்களில் தாமதமின்றி கையொப்பமிடவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

என்று ஜனாதிபதி உறுதியளித்ததாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படுவார் என ஜனாதிபதி கூறியதாக ஹரின் பெர்னாண்டோ மேலும் தெரிவித்தார்.

பிரித்தானிய உயர்ஸ்தானிகரத்தின் கோரிக்கை

பயங்கரவாதத் தடைச் சட்டம் பயன்படுத்தப்படும் விதம் குறித்து தாம் கவலையடைவதாக இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்துவது மனித உரிமைகளுக்கு முரணானது எனவும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் தனது உத்தியோகபூர்வ ருவிட்டர் பக்கத்தில்  குறிப்பிட்டுள்ளது.

இந்த சட்டத்தை பயன்படுத்தப்படுவதை நிறுத்துவதற்கான உறுதிமொழிகளை அதிகாரிகள் மேற்கொள்ளவேண்டும் எனவும் பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் கோரியுள்ளது.

Posted in Uncategorized

பிரித்தானிய சுற்றுலாப் பயணியை இலங்கையிலிருந்து வெளியேற்ற ஜனாதிபதி உத்தரவு

காலி முகத்திடல் போராட்டத்திற்கு ஆதரவாக சமூக வலைத்தள பிரசாரங்கள் மூலம் சர்ச்சையில் சிக்கிய பிரித்தானிய சுற்றுலாப் பயணியை உடனடியாக இலங்கையிலிருந்து வெளியேற்றுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளதாக குடிவரவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் மூத்த அதிகாரி ஒருவர் ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்துத் தெரிவிக்கையில், பிரித்தானிய சுற்றுலாப் பயணியை நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்கான ஆவணங்களில் கடந்த வாரம் ஜனாதிபதியும் கையொப்பமிட்டுள்ளார்.

ஓகஸ்ட் 2 ஆம் திகதி பத்தரமுல்லையில் உள்ள கெய்லி பிரேசரின் இல்லத்திற்கு சென்ற குடிவரவு அதிகாரிகள் குழுவொன்ரூ அவரது பயண ஆவணங்களை விசாரணைக்காக திணைக்களத்திடம் ஒப்படைக்குமாறு  அறிவுறுத்தியது . குடிவரவு அதிகாரிகள் அவரது இல்லத்தில் விசாரணை நடத்துவது வீடியோவாக எடுக்கப்பட்டு பல தளங்களில் வைரலாகி, காலி முகத்திடலில் நடந்த நிகழ்வுகளை ஆவணப்படுத்தியதற்காக ஒரு சுற்றுலாப் பயணியை அரச அதிகாரிகள் கைது செய்ய முயற்சிக்கிறார்கள் என்று சர்ச்சையை உருவாக்கியது.

இந்நிலையில்,குறித்த சுற்றுலாப்பயணி தலைமறைவாகியுள்ளதாக கூறப்படும் நிலையில், அவரை  நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்காக தமக்கு உதவுமாறு குடிவரவுத் திணைக்களம் பொதுமக்களையும்  காவல்துறையினரையும்  கோரியுள்ளது.

புலம்பெயர்ந்த தமிழர்களால் நாட்டை நெருக்கடியிலிருந்து மீட்கமுடியுமா?

நிலாந்தன்

கடந்த இரு தசாப்தகால அனுபவத்தின்படி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில் ஜனநாயகவெளி ஒப்பீட்டளவில் அதிகரிப்பதுண்டு.எனினும் இம்முறை அவர் அதிர்ஷ்டலாபச் சீட்டில் ஜனாதிபதியாக வந்ததும் தென்னிலங்கையில் ஜனநாயகவெளி ஒப்பீட்டளவில் சுருங்கியது எனலாம்.மக்கள் எழுச்சிகளின் காரணமாக அந்த வெளி கடந்த மூன்று மாதங்களாக குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவுக்கு அதிகரித்துவந்தது. ஆனால் ரணில் அதைச் சுருக்கி விட்டார்.அரகலயவை முறியடிப்பதில் அவர் முதற்கட்ட வெற்றியைப் பெற்றிருக்கிறார்.அதனால் அவசரகாலச் சட்டத்தைத் நீக்கப்போவதாகக் கூறியிருக்கிறார்.

இவ்வாறு தென்னிலங்கையில் மக்கள் எழுச்சிகளின் விளைவாக அதிகரித்து வந்த ஜனநாயக வெளியைக் குறுக்கிய ஒருவர்,எப்படித் தமிழ்மக்களுக்கு ஜனநாயக வெளியை அதிகப்படுத்துவார் என்று எதிர்பார்ப்பது?ஆனால் தென்னிலங்கை நிலவரமும் தமிழ்ப் பகுதிகளின் நிலவரமும் ஒன்று அல்ல. தென்னிலங்கையில் போராட்டத்தை தொடர்ந்து அனுமதித்தால் ரணில் தன்னுடைய ஆட்சியை பாதுகாக்க முடியாது. அதேசமயம் தமிழ் பகுதிகளில் அவ்வாறான போராட்டங்கள் எவையும் இடம்பெறவில்லை. மேலும் ஜெனிவாக் கூட்டத்தொடரை நோக்கி அவ்வாறு தமிழ் மக்களின் அரசியலில் ஜனநாயக வெளியை அதிகப்படுத்த வேண்டிய தேவை ரணிலுக்கு உண்டு.கடந்த நல்லாட்சி என்று அழைக்கப்பட்ட ஆட்சிக் காலத்தில் அவர் அதைச் செய்தார்.அவர் திறந்துவிட்ட அதிகரித்த ஜனநாயக வெளிக்குள்தான் தமிழ் மக்கள் பேரவை எழுச்சி பெற்றது, இரண்டு எழுக தமிழ்கள் இடம்பெற்றன.

இம்முறையும் அவர் அவ்வாறு தமிழ் மக்களுக்கு ஜனநாயக வெளியை அகலப்படுத்துவாரா என்று பார்க்க வேண்டும்.கடந்தவாரம் அவர் சில புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் மற்றும் தனி நபர்கள் மீதான தடைகளை அகற்றினார்.அதை அவர் நல்லாட்சி என்று அழைக்கப்பட்ட ஆட்சிக் காலத்திலும் செய்தார்.அதைவைத்து அவர் ஜனநாயக வெளியை அதிகப்படுத்துகிறார் என்று எடுத்துக் கொள்ளலாமா? இல்லை. ஏனென்றால் புலம்பெயர் தமிழர்கள்-தமிழ் டயஸ்பொறா- இப்பொழுது நாட்டுக்குத் தேவை. புலம்பெயர்ந்த தமிழர்கள் நாட்டில் முதலீடு செய்தால் நாட்டின் செல்வச்செழிப்பை அதிகப்படுத்தலாம்.நாடு இப்பொழுது எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியில் இருந்து விடுபடுவதற்கு புலம்பெயர் தமிழர்களின் முதலீடுகள் தேவை என்பதனை ரணில் மட்டுமல்ல கோட்டாபயவும் ஏற்றுக் கொண்டிருந்தார்.

தமிழ் டயாஸ்போற எனப்படுவது தட்டையான, ஒற்றைப்படையான ஒரு சமூகம் அல்ல. அதில் பல அடுக்குகள் உண்டு. இப்பொழுது தடை நீக்கப்பட்ட எல்லா அமைப்புகளும் நபர்களும் முழுத்தமிழ் டயஸ்போறவையும் பிரதிபலிக்கிறார்களா என்ற கேள்வி உண்டு.மேலும்,ராஜபக்சவால் தடை செய்யப்பட்ட உலகத்தமிழர் அமைப்பின் தலைவரான மதகுரு யாழ்ப்பாணத்தின் தெருக்களில் லேடிஸ் பைசிக்கிளில் வழமைபோல நடமாடினார். அவர் விடயத்தில் தடை ஒரு நடைமுறையாகவே இருக்கவில்லை. எனவே தடை நீக்கமும் அவ்வாறு சம்பிரதாயபூர்வமானதா ?எதுவாயினும், ,இதுதொடர்பில் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் என்ன செய்ய வேண்டும்?

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி புலம்பெயர்ந்த தமிழர்கள் நாட்டில் முதலீடு செய்வதற்கு முண்டியடித்துக் கொண்டு வரத்தேவையில்லை. நிதானமாக முடிவெடுக்கலாம். இந்த அரசாங்கமும் ஒரு நாள் மாறும்.மாறும்போது எப்படி கோட்டாபய வந்ததும் ரணில் தடை நீக்கிய அமைப்புக்கள்,தனி நபர்கள் மீண்டும் தடை செய்யப்பட்டார்களோ,அப்படி இந்த நிலையும் மாறலாம். எனவே புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் ஆட்சி மாற்றங்களைக் கண்டு மயங்கத் தேவையில்லை. மாறாக இந்த சந்தர்ப்பத்தை வெற்றிகரமாகக் கையாண்டு எப்படி ஒரு அரசுக் கட்டமைப்பு மாற்றத்துக்கான பேரத்தைப் அதிகப்படுத்தலாம் என்று சிந்திக்க வேண்டும்.தமிழ் முதலீடுகளை நாட்டுக்குள் கொண்டு வருவது என்று சொன்னால் அதற்கு ஓர் அரசியல் சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும்.தமிழ் மக்களை நாட்டின் பொருளாதாரத்தில் பங்காளிகளாக ஏற்றுக் கொள்ளவேண்டும்.அதாவது தமிழ்மக்களை முதலீட்டாளர்களாக இணைப்பதற்கு பதிலாக தமிழ்மக்களை அரசியற் பொருளாதாரப் பங்காளிகளாக இணைக்கவேண்டும்.அதற்கு முதலில் அரசியல் தீர்வு ஒன்று வேண்டும்.அரசுக்கட்டமைப்பில் மாற்றம் செய்யப்பட வேண்டும்.

இப்பொழுது முதலீடு செய்தவர்கள் சில ஆண்டுகளின் பின் அவற்றை திருப்பி எடுத்துக் கொள்ளும் ஒரு நிலைமை வரக்கூடாது. எனவே இனப்பிரச்சினைக்கு தீர்வு தரப்படாத ஒரு பின்னணிக்குள் புலம்பெயர்ந்த தமிழ் முதலீட்டாளர்கள் கண்ணை மூடிக்கொண்டு ரணிலின் அழைப்பை ஏற்கத்தேவையில்லை. பதிலாக இத்தருணத்தை பயன்படுத்தி ரணில் விக்ரமசிங்கவின் மீது அழுத்தங்களைப் பிரயோகிக்கலாம். ஒரு தீர்வை முதலில் கொண்டு வாருங்கள், அதற்குரிய நல்லெண்ண சூழலை முதலில் உருவாக்குங்கள். உதாரணமாக பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குங்கள்,கைதிகளை விடுதலை செய்யுங்கள், காணிகளை விடுவியுங்கள்,காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிவாரணத்தை வழங்குங்கள்.இவற்றின் மூலம் ஒரு நல்லெண்ண சூழலை பயமற்ற சூழலை ஏற்படுத்துங்கள்.அதைத்தொடர்ந்து அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகளைத் தொடங்குங்கள். அதில் புலம்பெயர்ந்த தமிழர்களையும் பங்காளிகள் ஆக்குங்கள். ஒரு தீர்வு கிடைக்கட்டும். அதன் பின் நாங்கள் முதலீடு செய்கிறோம் என்று நிபந்தனை விதிக்கலாம்.

தமிழ்மக்கள் ஏன் புலம்பெயர்ந்தார்கள்? ஏனென்றால் நாட்டுக்குள் பாதுகாப்பு இல்லை என்பதனால்தான்.கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக தென்னிலங்கையில் தமிழ் மக்களின் சொத்துக்களை குறி வைத்து தாக்குதல்களை நடத்தப்பட்டன. அதுதான் பின்னாளில் முஸ்லிம்களுக்கும் நடந்தது..தென்னிலங்கையில் சிங்களவர்கள் அல்லாத ஏனைய இனங்கள் நிதி ரீதியாக செழித்தோங்குவதைக் கண்டு சகிக்க முடியாத ஒரு கூட்டு மனோ நிலை சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதத்திடம் உண்டு. அது இப்பொழுது மாறிவிட்டதா?

அந்த மனநிலையின் விளைவாகத்தான் தமிழ் மக்கள் நாட்டின் பொருளாதாரத்தில் பங்களிக்காத ஒரு நிலை அதிகரித்தது.ஆனால் புலப்பெயர்ச்சியானது சிங்கள பெருந்தேசியவாதம் கற்பனை செய்ய முடியாத வேறு ஒரு வளர்ச்சியை ஏற்படுத்திவிட்டது.புலம்பெயர்ந்து சென்ற சென்ற தமிழர்கள் புலம்பெயர்ந்து சென்ற நாடுகளில் மிக விரைவாக தங்களை ஸ்தாபித்துக் கொண்டார்கள்.நிதி ரீதியாக செழித்தோங்கினார்கள்.சில தசாப்தங்களுக்கு முன்பு ரூபாய்களோடு முதலாளிகளாக காணப்பட்டவர்கள்,புலம்பெயர்ந்த பின் டொலர்களை விசுக்கும் பெரு வணிகர்களாக மாறினார்கள்.எந்தத் தமிழர்களை தென்னிலங்கையில் இருந்து அகற்றவேண்டும் என்று திட்டமிட்டு இன அழிப்பு முன்னெடுக்கப்பட்டதோ, அதே தமிழர்கள் இப்பொழுது கொழும்புக்கு திரும்பி வந்து தனது டொலர்களால் காணிகளையும் கட்டிடங்களையும் விலைக்கு வாங்குகிறார்கள். சிங்கள மக்கள் விற்கும் காணிகளை வாங்கி அங்கெல்லாம் அடுக்குமாடித் தொடர்களைக் கட்டி வருகிறார்கள். இங்கே ஒரு உதாரணத்தைச் சுட்டிக்காட்ட வேண்டும்.

எதிரிசிங்க குரூப் ஒஃப் கொம்பனி என்று அழைக்கப்படும் ஒரு பிரம்மாண்டமான வணிக நிறுவனம் தென்னிலங்கையில் வந்துரோத்து நிலையை அடைந்தது. நூற்றுக்கணக்கான நகைக்கடைகள், சுவர்ணவாகினி என்று அழைக்கப்படும் ஊடக நிறுவனம் போன்றவற்றைச் சொந்தமாக கொண்டிருந்த எதிரிசிங்க குரூப் ஒஃப் கொம்பனி வங்குரோத்தானபோது அதை புலம்பெயர்ந்து வாழும் ஒரு தமிழ் பெரு வணிகர் விலைக்கு வாங்கினார். அவர் ஏற்கனவே ஒரு ஊடகப் பெரு வணிகரும் ஆவார். இவ்வாறு தென்னிலங்கையில் வங்குரோத்தாகும் கொம்பனியை விலைக்கு வாங்கும் அளவுக்கு தமிழ் மக்கள் நிதி ரீதியாகப் பலம் மிக்கவராக காணப்படுகிறார்கள். புலப்பெயர்ச்சி தமிழ் மக்களை ஒரு விதத்தில் சிதறடித்திருக்கிறது.இன்னொரு விதத்தில் உலகில் மிகவும் கவர்ச்சியான,பலம்வாய்ந்த ஒரு டயஸ்பொறவை உருவாக்கியிருக்கிறது.இந்த வளர்ச்சியை சிங்களபௌத்த பெருந்தேசியவாதம் கணித்திருக்கவில்லை.அதன் விளைவாகத்தான் புலம்பெயர்ந்த தமிழர்களை நாட்டில் முதலீடு செய்யுமாறு கோட்டாவும் கேட்டார். இப்பொழுது ரணிலும் கேட்கிறார்.

மேலும் ஜெனிவாவில் அரசாங்கத்துக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுப்பது புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள்தான். எனவே அவர்களோடு சுமுகமான உறவை வைத்துக் கொள்வதன்மூலம், அரசாங்கம் ஜெனிவாவில் தனக்கு ஏற்படக்கூடிய நெருக்கடியின் அளவைக் குறைக்கலாம்.

ஆனால் எதுகாரணமாக தமிழ்மக்கள் நாட்டின் பொருளாதாரத்தில் முழு அளவுக்குப் பங்களிக்க முடியாத ஒரு நிலை ஏற்பட்டதோ,அக்காரணங்களை அகற்ற ரணில் விக்ரமசிங்க தயாரா என்ற கேள்விக்கு விடை இல்லாமல் புலம்பெயர்ந்த தமிழர்கள் நாட்டில் முதலீடு செய்ய முன்வரக்கூடாது. அதுபோலவே ஜெனிவாவில் அரசாங்கத்தின் மீது நெருக்கடியைப் பிரயோகிக்கும் செய்முறைகளையும் நிறுத்தக்கூடாது.

இந்தவிடயத்தில் புலம்பெயர்ந்த தமிழர்கள் முதலில் ஓர் அமைப்பாகத் திரள வேண்டும். அதன்பின் அந்த அமைப்பானது அனைத்துலகை வழமைகளின் ஊடாக அரசாங்கத்தோடு தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளலாம்.அப்பொழுது இனப்பிரச்சினைக்கான தீர்வை ஒரு முக்கிய முன் நிபந்தனையாக முன் வைக்கலாம். தனித்தனி அமைப்பாக தனிநபர்களாக அரசாங்கத்தோடு டீல் களுக்குப் போவதற்கு பதிலாக ஒரு அமைப்பாகத் திரண்டு அதைச் செய்ய வேண்டும்.குறிப்பாக ரணில் விக்ரமசிங்க டயஸ்போறாவை பிரித்துக் கையாள வாய்ப்பளிக்கக்கூடாது.

நாட்டுக்குள் முதலீடு செய்வது என்பது இலங்கைத்தீவின் பொருளாதாரத்தில் டயஸ்பொறா ஒரு பங்காளிகளாக மாறுவது என்ற பொருளில் அல்ல.அதைவிட ஆழமானபொருளில் ,தமிழ்த்தேசத்தைக் கட்டியெழுப்புவது என்ற நீண்ட கால நோக்குநிலையிருந்தே திட்டமிடப்படவேண்டும்.அதாவது முதலீட்டின் மூலம் தேசத்தைக் கட்டியெழுப்புவது.யூதர்கள் கடந்த நூற்றாண்டில் அவ்வாறு முதலீட்டின்மூலம் ஒரு தேசத்தை-இஸ்ரேலைக்- கட்டியெழுப்பினார்கள்.எனவே புலம்பெயர்ந்த தமிழ்மக்கள் இலங்கைத்தீவின் பொருளாதாரத்தில் பங்காளிகளாவது என்று சொன்னால்,அதைத் தமிழ்த் தேசத்தைக் கட்டியெழுப்புவது என்ற உள்நோக்கத்தோடு திட்டமிடவேண்டும்.