இலங்கைக்கான கடனை நிறுத்தும் சீனா

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் முதல் கட்ட கட்டுமானத்திற்கு தேவையான 51 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை சீன அரசுக்கு சொந்தமான “எக்ஸிம் வங்கி” நிறுத்தி வைத்துள்ளதாகவும், இது அரசாங்கத்தை புதிய நெருக்கடியில் தள்ளியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடவத்தைக்கும் – மீரிகமவுக்கும் இடையிலான 37 கிலோமீற்றர் தூரத்தை உள்ளடக்கிய திட்டத்தில் பணிபுரிந்த சுமார் 500 சீனர்கள் உடனடியாக வெளியேறத் தொடங்கியுள்ளதாகவும், இதன் விளைவாக உள்ளூர் மக்களின் 2000 வேலைகள் ஆபத்தில் இருப்பதாகவும் அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன.

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவதை நிறுத்துவதற்கான இலங்கை அரசாங்கத்தின் முடிவைக் கருத்தில் கொண்டு சீனாவின் எக்ஸிம் வங்கியின் நிதி விடுவிப்பு முக்கியமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக திறைசேரி தகவல்கள் தெரிவிக்கின்றன.

2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் இந்த வேலைகளை முடிப்பதாக 2020 செப்டம்பரில் தொடங்கப்பட்டது. இலங்கை அரசாங்கத்தின் 33 பில்லியன் ரூபா நிதியில் இதுவரை சுமார் 32 வீதமான வேலைத்திட்டம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்திய – இலங்கை ஒப்பந்தம் – 35 வருடங்கள்- எங்கிருந்து எங்கு செல்வது?

யதீந்திரா
கடந்த பத்தியில் நமது அரசியல் சூழலிலுள்ள சில பலவீனங்கள் தொடர்பில் குறிப்பிட்டிருந்தேன். அதாவது, எதிர்பார்ப்புக்களை முன்னிறுத்துபவர்கள் எவரிடடும், அதனை அடையும் வழிமுறைகள் இல்லை. ஏனெனில் அது அவர்களுக்கு தெரியாதென்று குறித்த கட்டுரை சுட்டிக்காட்டியிருந்தது. இது தொடர்பில் சில நண்பர்கள் கேள்வியெழுப்பியிருந்தனர். அந்த பதில் உங்களிடம் இருக்கின்றதா – என்று ஒரு புலம்பெயர் நண்பர் கேட்டிருந்தார். கேள்வி சரியானது. மற்றவர்களை நோக்கி தொடுக்கும் விமர்சனங்கள் என்பவை பூமறாங் போன்றது. பூமறாங் என்பது – அதனை வீசியவரையே நோக்கி தாக்கும் திறன் கொண்டது. எறிந்தவருக்கு அதனை மீளவும் சரியாக பிடிக்கத் தெரியாது போனால், இறுதியில் எறிந்தவரையே அது தாக்கிவிடும்.
ஆனால் இவ்வாறான கேள்விகளுக்கு எனது முன்னைய பத்திகளிலும் பதிலளித்திருக்கின்றேன். மீண்டும் அந்த பதிலை மேலும் உறுதிப்படுத்திக் கொள்ளும் வகையில் சில விடயங்களை இந்த பத்தியில் காண்போம். இந்த கட்டுரை எழுதப்படும் காலத்திற்கும் தமிழர் அரசியலுக்கும் ஒரு வரலாற்று தொடர்புண்டு. 1987,யூலை (29) மாதத்தில்தான், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்திய-இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இந்த ஆண்டுடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 35 வருடங்கள் ஆகின்றன.

கடந்த 35 வருடங்களில், தமிழர் அரசியலில் பல்வேறு விடயங்கள் இடம்பெற்றிருக்கின்றன. எனினும் தமிழ் மக்களின் அரசியல் பயணத்தில் முன்நோக்கி சென்றிருப்பதற்கான சான்றுகள் இல்லை. பின்னடைவுகளே இடம்பெற்றிருக்கின்றன. பத்து லட்சத்திற்கு மேற்பட்ட ஈழத்-தமிழ் மக்கள், பல ஜரோப்பிய நாடுகளில் சிதறி வாழ்கின்றனர், அவர்கள் தாயக அரசியல் தொடர்பில் பிரச்சாரங்களில் ஈடுபட்டுவருகின்றனர் என்பதற்கு அப்பால், குறிப்பிட்டுச் சொல்ல எதுவும் இல்லை. யுத்தத்திற்கு பின்னரான, கடந்த 13 வருடங்களில் பல்வேறு விடயங்கள் விவாதிக்கப்பட்டிருந்தாலும் கூட, அவைகள் எவற்றிலும் தமிழர்கள் வெற்றிபெறவில்லை. ஆகக் குறைந்தது நம்பிக்கைக்குரிய முன்னேற்றங்கள் கூட ஏற்படவில்லை. சர்வதேச அழுத்தங்கள் தொடர்பில் அதிகம் பேசிக் கொண்டாலும் கூட, கொழும்பின் ஆட்சியாளர்களின் அணுமுறைகளுக்கு ஏற்ப, அழுத்தங்கள் மாறிக் கொண்டிருந்தன. ராஜபக்சக்கள் இருக்கின்ற போது ஒரு மாதிரியும், ரணில் போன்றவர்கள் ஆட்சிக்கு வருகின்றபோது, வேறு மாதிரியுமே, மேற்குலக நாடுகள் நடந்துகொண்டன. அவர்கள் அப்படி நடந்து கொள்வதிலும் ஆச்சரியங்கள் ஏதுமில்லை. இந்த இடைப்பட்ட காலத்தில், இசையமைப்பிற்கு சொற்களை தேடுபவர்கள் போன்றே தமிழர்களின் வாழ்வு கழிந்திருக்கின்றது.

ஆனால், தமிழர் அரசியலில் தீர்மானகரமான சக்தியாக இருக்கும், பிராந்திய சக்தியான, இந்திய பேரசானது – முன்னரும், இப்போதும் ஒரு விடயத்தை மட்டுமே வலியுறுத்திவருகின்றது. அதாவது, 1987 இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையிலான, 13வது திருத்தச்சட்டம் தொடர்பிலேயே, இந்தியா தொடர்ந்தும் அழுத்திவந்திருக்கின்றது. இதனை ஆழமாக நோக்கினால், ஈழத் தமிழர் விடயத்தில் இந்தியாவின் கொள்கை நிலைப்பாடு, 13வது திருத்தச்சட்டம்தான். அதிலிருந்து முன்னோக்கி செல்வதென்பது வேறு விடயம். ஆனால் எந்தவொரு பயணமும், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை அடிப்படையாகக் கொண்டதாக அமைந்திருக்க வேண்டும் என்பதே, புது டில்லியின் நிலைப்பாடாக இருந்திருக்கின்றது. கடந்த 35 வருடங்களில், பல சிங்கள-அரசாங்கங்கள் வந்து போயிருக்கின்றன. அவர்கள் பல்;வேறு விடயங்கள் தொடர்பில் விவாதித்திருக்கின்றனர். எனினும் 13வது திருத்தச்சட்டத்தை எவராலும் தாண்டிச் செல்ல முடியவில்லை. தாண்டிச் செல்லும் முயற்சிகள் ஒன்றில் தோல்வியடைந்திருக்கின்றன அல்லது தோற்கடிக்கப்பட்டிருக்கின்றன. கடந்த 13 வருடகால அரசியல் முன்னெடுப்புக்கள் இதற்கு தெளிவான சான்றாகும்.

ரணில்-மைத்திரி ஆட்சிக் காலத்தில், புதியதொரு அரசியல் யாப்பு தொடர்பில் ஆடம்பரமாக விவாதிக்கப்பட்டது. தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ரணில்-மைத்திரி அரசாங்கமும் தேனிலவில் இருந்தது. ஆனால் என்ன நடந்தது? புதிய அரசியல் யாப்பு விடயத்தில் வெற்றிபெற முடிந்ததா? ரணில்-மைத்திரி காலத்தில், 13வது திருத்தச்சட்டத்தை தாண்டி அதிக தூரம் சென்றுவிட்டதாகவே இரா.சம்பந்தன், கூறிக்கொண்டிருந்தார். ஆனால் இறுதியில் என்ன நடந்தது?

ஆனால் இங்கு பிறிதொரு விடயத்தை ஆழமாக கவனிக்க வேண்டும். இவ்வாறான முயற்சிகள் தோல்வியடைக்கின்ற போது, சிங்கள ஆட்சியாளர்கள் சிறிதும் சலனத்தை வெளிப்படுத்துவதில்லை. ரணில்-மைத்திரி ஆட்சிக் காலத்து முயற்சிகள் தோல்விடைந்தமை தொடர்பில், ரணிலோ அல்லது மைத்திரியோ கவலைப்படவில்லை. ஏனெனில் அவர்களை பொறுத்தவரையில் புதிய அரசியல் யாப்பு ஒரு முதன்மையான தேவையாக இருந்திருக்கவில்லை. அந்த நேரத்தில், கூட்டமைப்பின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவரான தர்மலிங்கம் சித்தார்த்தன் ஒரு விடயத்தை என்னிடம் கூறினார். ரணில்-மைத்திரி அரசாங்கத்தில் அங்கம் வகித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவருக்குமே, புதிய அரசியல் யாப்பு விடயத்தில் அக்கறையிருக்கவில்லை. அவர்களை பொறுத்தவரையில் இது ஒரு ‘வெட நத்தி வெட’ (வேலை இல்லாதவர்களின் வேலை). ஓப்பீட்டடிப்படையில் ரணில், மங்கள சமரவீர போன்ற ஒரு சிலருக்குத்தான், இந்த விடயங்களில் ஆர்வம் இருந்தது எனலாம். இந்த பின்னணியில்தான், புதிய அரசியல் யாப்பு முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை.

இந்த அனுபவங்களிலிருந்து சிந்தித்தால், என்ன செய்யலாம் என்னும் கேள்விக்கான பதிலை காண்பது சிக்கலான காரியமல்ல. தமிழர்களுக்கு முன்னால் இரண்டு தெரிவுகள்தான் இருக்கின்றன. ஒன்று, இருப்பதை கையாளுவதன் மூலம் முன்நோக்கி பயணிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வது. அதாவது, இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை ஒரு அஸ்திபாரமாகக் கொண்டு பயணிப்பது. இதில் உண்மையாகவும் உறுதியாகவும் தமிழ் தரப்புக்கள் இருக்க வேண்டும். ஒரு கட்சி 13 பற்றி பேசியவுடன், இன்னொரு கட்சி, 13 எதிர்ப்பு ஊர்வலம் செய்து கொண்டிருந்தால் இதிலும் முன்நோக்கி பயணிக்க முடியாது. இரண்டாவது, முழுமையான புரட்சிகர மாற்றத்திற்காக போராடுவது. போராட்டம் என்பது, நல்லூர் கோவிலடியில் கூடும் போராட்டம் அல்லது பொலிகண்டியில் எந்த இடத்தில் கல்வைப்பதென்று சண்டைபோடும் போராட்டம் அல்ல. ஆனால் நம் அனைவருக்கும் தெரியும். நிச்சயமாக விடுதலை போராட்டமொன்றை முன்னெடுக்கக் கூடிய நிலையில் இன்றுள்ள தலைமைகள் எவரும் இல்லை. அப்படியொரு தலைமையிருந்தால், அவரை அறிந்துகொள்வதில் இந்தக் கட்டுரையாளர் மிகுந்த ஆர்வம் கொண்டிருக்கின்றார்.

அப்படியாயின் என்ன வழிதான் உண்டு? இப்போது, எஞ்சியிருப்பது என்ன? அது ஒன்றுதான் – அதவாது, இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை பயன்படுத்திக் கொண்டு, மெதுவாக முன்னோக்கி நகர்வது மட்டுமே ஒரேயொரு தெரிவாக இருக்க முடியும். அப்படிப் பார்த்தால், மாகாண சபை முறைமையை திறம்பட முன்னெடுப்பதற்கான முயற்சிகளைத்தான் தமிழர் தரப்புக்கள் மேற்கொள்ள வேண்டும். இந்த விடயத்தில் மட்டும்தான், புதுடில்லியின் ஆதரவை ஈழத் தமிழர்கள் கோர முடியும். இதை தவிர்த்து எந்த விடயங்களை பற்றிப் பேசினாலும் அவற்றால் தாயகத்திலுள்ள மக்களுக்கு எந்தவொரு நன்மையும் ஏற்படப் போவதில்லை. ஈழத் தமிழர்களிடம் புவிசார் பலமிருக்கின்றது, பிராந்திய பலமிருக்கின்றது என்பதெல்லாம் அரசியல் அறியாமை. நாங்கள் தேவையானதொரு மக்கள் கூட்டமென்று உலகம் கருதியிருந்தால், முள்ளிவாய்க்கால் அவலம் நிகழ்ந்திருக்காது. ஏழு கோடிக்கு மேற்பட்ட தமிழ் நாட்டு தமிழர்கள், பத்துலட்சம் ஈழத்து புலம்பெயர் சமூகம், இவர்களை சாட்சியாகக் கொண்டுதானே அனைத்தும் நடந்துமுடிந்தது. அப்போது புவிசார் பலத்திற்கும், பிராந்திய பலத்திற்கும் என்ன நடந்தது? பதில் இலகுவானது. இவ்வாறான விடயங்கள் அனைத்தும் சிலரது கற்பனை. இவ்வாறான கற்பனைகள் நல்ல திரைப்படமொன்றிற்கு பயன்படலாம் ஆனால் பாதிக்கப்பட்டு, நிலை குலைந்து போயிருக்கும் ஈழத் தமிழினத்திற்கு ஒரு போதும் பயன்படாது.

மாகாண சபை முறைமையை உச்சளவில் பயன்படுத்திக் கொண்டு, முன்நோக்கி நகர்வது தொடர்பில் சிந்திப்பது, செயற்படுவது மட்டும்தான், இப்போதுள்ள ஒரேயொரு தெரிவாகும். ஏதிர்காலத்தில் ஒரு சமஸ்டித் தீர்வை நோக்கி பயணிப்பதாக இருந்தாலும் கூட, அதற்கான அடிப்படையும் இங்குதான் இருக்கின்றது. இந்த இடத்தில் பிறிதொரு சங்கடமும் குறுக்கிடலாம். அதாவது, சிலர் அன்று இதனை விடுதலைப் புலிகள் ஏற்றுக்கொள்ளவில்லையென்று வாதிட முயற்சிக்கலாம். ஆனால் இங்கு கவனிக்க வேண்டியது, ஏற்றுக்கொள்ளாத விடுதலைப் புலிகள் இப்போது இல்லை. அவர்கள் ஏன் இல்லாமல் போனார்கள் என்பது ஒரு வரலாற்று படிப்பினை. எதிர்காலத்தை சிறந்ததாக ஆக்கிக்கொள்ள வேண்டுமென்று எண்ணினால், கடந்தகாலத்தை படிப்பது மிகவும் கட்டாயமானது.

”சர்வகட்சி அரசாங்கத்தில் இணைவதாக நான் எங்கேயும் கூறவில்லை”

சர்வகட்சி அரசாங்கத்துடன் நான் இணைந்து கொள்வதாக வெளியான செய்திகள் தவறானது என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடி, அரசியல் நெருக்கடியாக உருவாகியுள்ள இத்தருணத்தில், இந்த இடைவெளியைக் கடப்பதற்கு அனைத்துக் கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிப்பதே சரியான பதில் என்றே தான் கூறியிருந்தாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்துக் கட்சிகளின் ஒருமித்த கருத்துடன் குறைந்தபட்ச பொது தேசிய வேலைத்திட்டத்தை அனைத்துக் கட்சி அரசாங்கம் செயல்படுத்த வேண்டும். எங்களின் ஆலோசனைகளை கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் தயாரிக்கப்படும் ‘குறைந்தபட்ச பொது தேசிய வேலைத்திட்டம் குறித்து நாங்கள் கண்காணிப்போம் எனவும் வீரவன்ச தெரிவித்துள்ளர்.

அதனை நடைமுறைப்படுத்த அனைத்துக் கட்சி அரசாங்கத்துடன் இணைந்தால் அதனை வெளிப்படையாக மக்களுக்கு தெரிவிப்போம் என்பதையும் குறிப்பிட விரும்புகின்றோம் என அறிக்கை ஒன்றை வெளியிட்டு விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பை உடைக்க தேங்காயை உடைத்திருக்கின்றார் ரணில் – சி.வி.கே.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா தனது பாணியில் கூட்டமைப்பை உடைக்கின்ற முதலாவது தேங்காயை உடைத்திருக்கின்றார் என கூட்டமைப்பின் சிரேஸ்ட தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்பத்தாவது தேசிய மாநாட்டில் உரையாற்றும்போதே சீ.வீ.கே.சிவஞானம் இதனை தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனக்கு வாக்களித்ததாக ரணில் விக்கிரமசிங்க கூறுகின்றார்.
பத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் சந்தேகக் கண்ணுடன் ஒருவரை ஒருவர் பார்க்கின்ற விடயத்தை கெட்டித்தனமாக ரணில் விக்கிரமசிங்க செய்திருக்கின்றார்.
அந்தளவிற்கு தமிழ்க் கூட்டமைப்பு தலைவர்கள் சோரம் போகமாட்டார்கள் என்ற நம்பிக்கை மக்களுக்கு இருக்கின்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பை பொறுத்தவரையில் மூன்று கட்சிகளும் எல்லோரையும் இணைத்துக் கொண்டு செயல்பட வேண்டும்.
அதனுடைய ஒற்றுமை நீடிக்க வேண்டும்.எல்லோரையும் அணைத்து செல்லக்கூடிய சுபாவம் கொண்ட சித்தார்த்தன் இந்த முயற்சியை தொடர்வார்.
என்னைப் பொறுத்தவரையில் தமிழரசு கட்சியின் உப கட்சியினுடைய நிகழ்வே இது. இங்கு அங்கம் வகிப்பவர்கள் அனைவரும் தமிழரசுக் கட்சியில் இருந்து வந்தவர்களே. தற்போது அது உடைந்து இருந்தாலும் கூட அடிப்படையில் தமிழரசு என்ற ஒற்றுமை இருக்கின்றது.
தேசிய அரசாங்கம் அமைக்கப்படலாம் என்று தற்போது பேசப்பட்டு வருகின்றது. ஆனால் தேசிய அரசாங்கம் அமைக்கப்படும் என நான் நம்பவில்லை” என்றார்.

Posted in Uncategorized

கடன் நிபந்தனைகளுக்காக 40 அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்த முயற்சி!

கடன் நிபந்தனைகளுக்கமைய இலங்கையில் நட்டத்தில் இயங்கும் 40 அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்த சர்வதேச நாணய நிதியத்தினால் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

எதிர்க்கட்சி பிரதம கொரடாவான ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் கியெல்ல இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான யோசனைக்கு பாராளுமன்றத்தில் தங்களால் ஆதரவு வழங்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகளை பெறுவதற்கு அதனால் முன்வைக்கப்படும் நிபந்தனைகள் சிலவற்றை நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளதாக கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.

சர்ச்சைக்குரிய கப்பலின் வருகையை ஒத்தி வைக்குமாறு சீனாவிடம் இலங்கை கோரிக்கை!

இலங்கை வரும் சீன ஆய்வுக் கப்பலின் பயணத்தை ஒத்திவைக்குமாறு இலங்கை வெளிவிவகார அமைச்சு சீன அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

சீன ஆராய்ச்சி மற்றும் ஆய்வுக் கப்பலான “யுவான் வாங் 5” இந்நாட்டிற்கு வருவது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஒகஸ்ட் 11 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைய வேண்டிய கப்பல், 17 ஆம் திகதி வரை அங்கே நங்கூரமிட்டிருக்கும் என்று கூறப்படுகின்றது.

குறித்த கப்பலின் வருகை குறித்து தனது கவலையை வெளிப்படுத்திய இந்தியா, உயர் தொழில்நுட்ப சீனக் கப்பலின் வருகையானது பிராந்தியத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளதாக தெரிவித்துள்ளது.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைவதற்காக கடந்த ஜூலை 13ஆம் திகதி சீனாவின் ஜியாங்யின் பகுதியில் இருந்து புறப்பட்ட கப்பல் தற்போது தைவானின் கடல் எல்லையை வந்தடைந்துள்ளது.

இலங்கை குறித்து இந்தியாவும் அமெரிக்காவும் நேரடிப்பேச்சு!

இலங்கைத்தீவில் அண்மையில் ஏற்படுத்தப்பட்ட ஆட்சிமாற்றத்தின் இரண்டு முக்கிய பங்காளர்களாக கருதப்படும் இந்தியாவும் அமெரிக்காவும் கம்போடியாவில் இலங்கையின் சமகால நிலவரங்கள் குறித்து இன்று பேச்சுக்களை நடத்தியுள்ளன.

கம்போடியாவில் இடம்பெற்றுவரும் ஆசியான் நாடுகளின் அமைச்சர்களின் சந்திப்பின் பின்னணியில் அமெரிக்க ராஜாங்க செயலாளர் அன்ரனி பிளிங்கனும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் இன்று பனோம் பென்னில் இந்தப்பேச்சுக்களை நடத்தியுள்ளனர்.

இலங்கை, மற்றும் மியான்மார் ஆகிய சீன ஆதரவு நாடுகளில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் முக்கியமாக சவால்கள் இருப்பதை ஏற்றுக்கொண்ட இருவரும் இந்த விடயங்களை குறித்து விரிவாக பேசுவதற்காக விரைவில் தனித்துவமான சந்திப்பு ஒன்றை நடத்தவும் உடன்பட்டுள்ளனர்.

சீனாவின் உளவுக்கப்பல் இலங்கைக்கு வருவது குறித்து இந்தியா ஏற்கனவே ஆட்சேபம் தெரிவித்துள்ள நிலையில், இலங்கை குறித்து பேச வேண்டிய விடயங்கள் இருப்பதாக அன்ரனி பிளிங்கன் குறிப்பிட்டுள்ளார்

Posted in Uncategorized

நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடாது இருக்க வேண்டும்- சீனத் தூதுவருடனான சந்திப்பையடுத்து ரணில் ட்வீட்

க்கிய நாடுகள் சபையின் கொள்கைகளுக்கும், ஒரே சீனா என்ற கொள்கைக்கும் இலங்கை எப்போதும் அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சீனத் தூதுவர் Qi Zhenghong உடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தாக அவர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

அத்துடன், நாடுகளுக்கிடையில் தற்போது நிலவிவரும் பதற்றமான சூழ்நிலையை அதிகரிப்பதற்கு காரணமான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இருப்பதற்கு நாடுகள் கவனம் செலுத்த வேண்டுமென ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஒரு நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடாது பரஸ்பர மரியாதையை பேணுவதற்கு அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான மக்களின் உரிமைக்கு மதிப்பளிக்கவும் – சர்வதேச மன்னிப்புச் சபை !

பொது இடங்களில் அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான மக்களின் உரிமைக்கு மதிப்பளிக்குமாறும், அமைதியான எதிர்ப்பாளர்களைக் கலைப்பதற்கு அச்சுறுத்தல் அல்லது பலத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும் இலங்கை அதிகாரிகளுக்கு சர்வதேச மன்னிப்புச் சபை கோரியுள்ளது.

ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ள குறித்த அமைப்பு, போராட்டத் தளமான ‘கோட்டா கோ கம’ வை காலி செய்யுமாறு பொலிஸாரின் அறிவிப்பு தொடர்பில் கவலை தெரிவித்துள்ளது.

போராட்டக்காரர்கள் மற்றும் போராட்ட ஏற்பாட்டாளர்களின் தொடர்ச்சியான கைதுகள் மூலம் அரசாங்கத்திற்கு எதிரான குரல்களின் ஒடுக்குமுறையின் தீவிரம் குறித்து எச்சரிக்கையை வெளிப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான உரிமையைப் பயன்படுத்தியதற்காக மாத்திரமே தடுத்து வைக்கப்பட்டுள்ள போராட்டக்காரர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை இலங்கை அதிகாரிகள் உடனடியாக விடுவித்து கைவிட வேண்டும் என மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

கருத்துச் சுதந்திரம் மற்றும் அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான உரிமைகளை மதிக்கவும், பாதுகாக்கவும், ஊக்குவிக்கவும் மற்றும் நிறைவேற்றவும், மக்கள் தங்கள் மனித உரிமைகளை சுதந்திரமாகப் பயன்படுத்த அனுமதிக்குமாறு அந்த அமைப்பு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

Posted in Uncategorized

ஆறுமுகநாவலரின் கனவுகளை நனவாக்கும் பணிகளில் யாழ்.பல்கலைக்கழகத் தமிழ்த்துறை

தமிழ்மொழியின் நவீனமயமாக்கலிற்கு ஈழத்தவர்களின் பங்களிப்பு என்று நோக்கும் போது முதன்முதலாக எங்கள் கண் முன்னே தோன்றுபவர் ஆறுமுகநாவலர். நாவலர் பிறந்து இந்த ஆண்டு 200 ஆவது ஆண்டுகள் நிறைவடைகின்றது. இந்த 200 ஆவது ஆண்டில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை ஒரு தமிழியல் ஆய்வு மாநாட்டை நடாத்தி நாங்கள் ஆறுமுகநாவலரின் கனவுகளை நனவாக்கும் பணிகளில் ஈடுபட்டிருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் தமிழ்த்துறைத் தலைவரும், மூத்த பேராசிரியருமான எஸ்.சிவலிங்கராஜா பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் ஏற்பாட்டில் சிங்கப்பூர் எஸ்டேட் கந்தையா கார்த்திகேசன் அறக்கொடை நிதியத்தின் முழுமையான நிதிப் பங்களிப்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சர்வதேச ஆய்வரங்கின் ஒரு பகுதியாக மூன்றாவது அனைத்துலகத் தமிழியல் ஆய்வு மாநாடு நேற்றுப் புதன்கிழமை(03.8.2022) மேற்படி பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் “ஈழத்துத் தமிழியல் மரபும் மாற்றமும்” (இருபதாம் நூற்றாண்டிற்கு முற்பட்டது) எனும் தொனிப் பொருளில் சிறப்பாக இடம்பெற்றது.

மேற்படி நிகழ்வில் கலந்து கொண்டு ஆய்வரங்கைத் திறந்து வைத்து திறப்புரை ஆற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நவீனத்துவம் என்பது என்ன? இந்தக் கேள்விக்கான விடையளிப்பது மிகவும் கடினம். பொதுவாகக் கூறினால் பழமையிலிருந்து வேறுபட்டுப் புதுமையை நோக்கிச் செல்வது என இதற்குப் பொருள் கூறுவார்கள். அல்லது சம காலத்தையது அல்லது பழமை அல்ல என்றும் இதற்குப் பொருள் சொல்கிறார்கள். நவீனத்துவம் என்ற கருத்து நிலை முதன்முதலில் மேலைப் புலங்களிலேயே உருவானது.

உலகளாவிய ரீதியில் வேர்விட்டு வளரத் தொடங்கிய நவீனத்துவம் மொழி, இலக்கியம், கலை, பண்பாடு, சமயம் முதலான பல்வேறு துறைகளிலும் செல்வாக்குச் செலுத்தியது. இந்தச் செல்வாக்கு மெல்ல மெல்ல எங்கள் தமிழ்ச் சூழலுக்குள்ளும் தலைவைக்கத் தொடங்கியது.
அதற்கு அனுகூலமாக அரசியல், சமூகம், பொருளாதாரம், பண்பாட்டுப் பின்னணிகள் காரணமாக அமைந்தன.

ஈழநாட்டில் நீண்டகாலமாக நிலவி வந்த வாழ்வியல் அம்சங்களில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைப் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் காலம் ஏற்படுத்துகின்றது. எனினும், நாம் தற்போது காணும், அனுபவிக்கின்ற நவீனத்துவம் பெருமளவில் இக்காலங்களில் தான் தோன்றியது என்று கூற முடியாது.

18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து 20 ஆம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியில் ஈழத்தில் நவீனத்துவம் தனது கரங்களை அகல விரித்தது. 19 ஆம் நூற்றாண்டு பல வழிகளிலும் இதற்குச் சாதகமாக அமைந்தது.

ஈழத்து இலக்கிய வரலாற்றைப் பொறுத்தவரையில் பல சிறப்பியல்புகளை உடைய வரலாற்றுக் காரணங்களால் 19 ஆம் நூற்றாண்டு அதி முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. மேல்நாட்டுக் கலாசாரம், ஆங்கிலக் கல்வி ஆகியவற்றின் கடுமையான தாக்கமும் அதற்கு எதிரான நிலைப்பாடுகளும் இலக்கிய, இலக்கணச் சிந்தனைகளுக்கும், ஆக்கங்களுக்கும் புதிய உத்வேகத்தைக் கொடுத்ததாகப் பேராசிரியர் கைலாசபதி குறிப்பிட்டுள்ளார்.ஈழத்து நவீனத்துவத்தின் ஊற்றுக் கால்களை இந்த மேற்கோள் தெளிவாகக் காட்டுகிறது.

19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து நவீனத்துவம் குட்டி போட்டுப் பட்டி பெருகியது. பின் நவீனத்துவம் என்பது போல…ஈழத்தில் காலனித்துவ காலம் நவீனமயமாக்கத்தை உள்வாங்க, உருவாக்க உதவியமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

19 ஆம் நூற்றாண்டில் இலங்கைக்கு வந்த மிஷனரிமார்களின் செயற்பாடுகள் பல வழிகளிலும் இவற்றின் பின்னணியாக அமைந்தன.

ஈழத்தவர்கள் நவீனத்துவத்திற்குள் பயணிக்க மிஷனரிமார்களின் பணிகளும் முக்கிய காரணங்களாக அமைந்தன என்பதில் கருத்து வேறுபாடுகள் இருக்க முடியாது.

மிஷனரிமார்கள் வருவதற்கு முன்னர் எமது கல்வி, கலை, கலாசாரம், இலக்கியம், பண்பாடு, மொழி முதலானவை கட்டிறுக்கமான, நெகிழ்ச்சித் தன்மையற்ற, குறிப்பிட்ட சில எல்லைகளுக்கு உட்பட்டே விளங்கின. சமயம், கல்வி, பண்பாடு, அரசியல், பொருளாதாரம் போன்றவற்றில் ஏற்பட்ட மாற்றங்களை குறிப்பிட்ட கட்டிறுக்கங்களைத் தகர்த்தும், தளர்த்தியும் விட்டமை நவீனத்துவ செயற்பாடுகளுக்கு வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தன.

ஈழத்தில் நவீனமயமாக்கல் எனக் குறிப்பிடும் போது நமக்கு முன்னே விஸ்வரூப தரிசனமாகத் தெரிவது அச்சுக் கலையே எனலாம். ஈழத்து அச்சு இயந்திரப் பயன்பாடு பற்றிப் பலரும் விஸ்தாரமாக எழுதியுள்ளனர். பேராசிரியர் கைலாசபதி ஈழத்து இலக்கிய முன்னோடிகள் என்ற தனது நூலில் அச்சுக் கலையில் நவீனத்துவத்தை எவ்வாறு வளர்த்தெடுத்தது என்பது தொடர்பில் விரிவாக எழுதியுள்ளார்.

அச்சுக் கலையின் உடன்பிறப்பாகப் பதிப்புத் துறை மேற்கிளம்புகிறது. தமிழ் நூல்களின் பதிப்புத் துறைக்கு அத்திவாரமிட்டவர் நாவலர்.சுவர் எழுப்பியவர் சி.வை.தாமோதரம்பிள்ளை, கூரை மேய்ந்தவர் உ.வை. சாமிநாத ஐயர். வையாபுரிப்பிள்ளை போன்ற பெரிய பதிப்புச் சூறாவளிகள் வீசத் தொடங்க அத்திவாரமும், சுவரும் அசையாமலிருக்க கூரை ஆட்டம் துறையாக விளங்குகிறது.கொடுக்கத் தொடங்கியது. எனவே, ஈழத்து நவீனமயமாக்கலிற்குப் பதிப்பு முயற்சி மிக முக்கிய துறையாக விளங்குகிறது.

நவீனத்துவம் என்பது முற்றிலும் மேற்கத்தைய வாதம் அல்ல. அது எங்களுடையது. அடிப்படையில் அது எங்களுக்கு உரியது என்பதை நாங்கள் மனதிற் கொண்டு செயற்பட வேண்டும் எனவும் அவர் மேலும் சுட்டிக் காட்டினார்.

Posted in Uncategorized