இயற்கை விவசாய உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கில் நல்லூர் பிரதேச சபையில் தீர்மானம்

நாட்டில் தற்போதைய பொருளாதார இடரை கருத்தில் கொண்டும் நஞ்சற்ற காய்கறி உற்பத்தியினூடாக சுய பொருளாதாரத்தை அதிகரித்தல் ஆரோக்கியமான சந்ததிகளை உருவாக்குதல் எனும் நோக்கில் நல்லூர் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட இயற்கை விவசாயத்தில் ஈடுபாடுள்ள வீட்டு தோட்ட ஆர்வலர்களுக்கு தானிய விதைகள், நாற்றுகள் அதனோடிணைந்த பொருட்களை இலவசமாக வழங்கி வைக்க வேண்டும் என்ற நோக்கில் இயற்கை விவசாய உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்குடனும் நல்லூர் பிரதேச சபையில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

நல்லூர் பிரதேச சபையின் 50 வது மாதாந்த சபை இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற போது குறித்த தீர்மானம் சபை உறுப்பினர் சி. கௌசலாவினால் முன்வைக்கப்பட்டது.நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய பொருளாதார இடரை சிறிதளவேனும் குறைக்கும் வகையில் முன்வக்கப்பட்ட இந்த பிரேரணை ஏக மனதான நிறைவேற்றப்பட்டது .இதேவேளை குறித்த தீர்மானத்தின் அடிப்படையில் அதிகார பூர்வமான விபரங்களை உள்ளடக்கிய பத்திரிகை விளம்பரம் விரைவில் வெளியிடப்படும் என சபை அறிவித்துள்ளது.

தமிழினப் படுகொலை தான் எனக் கனடா அங்கீகரித்தமை நீதி தேடும் நெடும் பயணத்தில் ஒரு மைல் கல் -ஐங்கரநேசன்

இலங்கையில் நடந்தது இனப்படுகொலை தான் என்பதை உலகின் முதல் நாடாக கனடா ஏற்றுக்கொண்டுள்ளது. இது தமிழ் மக்களின் நீதிதேடும் நெடும் பயணத்தின் ஒரு மைல்கல் என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நடந்தது தமிழினப் படுகொலையே என்பதை அங்கீகரித்துக் கனேடியப் பாராளுமன்றம் ஏகமனதாகத் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது. அதற்கு இலங்கை அரசு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.

இலங்கை அரசு மிகக் கொடூரமான யுத்தத்தைத் தொடுத்துத் தமிழினப் படுகொலையை நிகழ்த்தியே 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது. அப்போதிருந்தே தமிழினம் இனப்படுகொலைக்கு நீதிகேட்டு உலக நாடுகளினதும் ஐக்கிய நாடுகள் சபையினதும் கதவுகளைத் தட்டிவந்த நிலையில் கனடாவின் தீா்மானம் அமைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 18ஆம் திகதி கனேடியப் பாராளுமன்றில் இலங்கையில் நடந்தது தமிழினப் படுகொலைதான் என்பதை ஏற்றுத் தீர்மானம் நிறைவேற்றியமை தொடர்பாகப் பொ. ஐங்கரநேசன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இலங்கையில் நடந்த யுத்தம் பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தமே என்று அரச தரப்புப் பரப்புரை செய்து வருகிறது. இது ஓர் போர்க்குற்றமே என்று அரசாங்கத்தைக் காப்பாற்றும் முகமாகச் சில தரப்புகள் கூறிவருகின்றன. ஆனால், நிகழ்ந்தது தமிழினப் படுகொலையேயென தமிழினம் நீதிகேட்டுத் தசாப்த காலத்துக்கும் மேலாகப் போராடி வருகிறது. இந்நிலையிலேயே அவர்களது போராட்டத்துக்குக் கிடைத்த ஒருபெரும் வெற்றியாகக் கனேடியப் பாராளுமன்றத்தின் தீர்மானம் அமைந்துள்ளது.

கனேடியப் பாராளுமன்றில் பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி “இலங்கையில் நடந்தது இனப்படுகொலைதான் என்பதை ஏற்று ஆண்டுதோறும் மே-18 ஆம் திகதியைத் தமிழர் இன்படுகொலை நினைவேந்தல் நாளாக அங்கீகரிக்க வேண்டும்” என்ற பிரேரணையை முன்வைத்தபோது எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் பிரேரணை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. தமிழினம் தன் இலக்கை நோக்கி முன்னேறிச்செல்ல கனேடியப் பாராளுமன்றின் இத்தீர்மானம் ஒரு கொழுகொம்பாக அமைந்துள்ளது.

கனேடியப் பாராளுமன்றில் இப்பிரேரணையைக் கொண்டு வந்தமைக்காக பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரிக்கும், ஏகமனதாக ஏற்றுக்கொண்ட ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இதன் பின்னால் நின்று உழைத்த புலம்பெயர் தமிழ்ச் சமூகத்துக்கும் தமிழ்கூறும் நல்லுலகு தலைசாய்த்துத் தனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

அவசரகால நிலை பிரகடனம் நேற்று முதல் நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவிப்பு

அவசரகால நிலை பிரகடனம் நேற்று முதல் நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.பாதுகாப்புப் படையினருக்கு முழு அதிகாரம் அளித்து, மே மாத தொடக்கத்தில் இரண்டாவது முறையாக அவசரகால நிலையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரகடனம் செய்தார்.இந்நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை முதல் அவசரகால சட்டம் செயலில் இல்லை என ஜனாதிபதி அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.

அவசரகால நிலை பிரகடனம் நிறைவேற்றப்பட்டு 14 நாட்களுக்குள் பாராளுமன்றத்தின் அங்கீகரம் பெறப்பட வேண்டும். இதுவரை பாராளுமன்றத்தில் அனுமதி பெறப்பட்டிருக்காத நிலையிலேயே தன்னியல்பாக நேற்று முதல் ரத்தாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இனப்படுகொலை நினைவு நாளாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை கனடா அங்கீகரித்தமையை வரவேற்கிறோம் – ரெலோ

கனடா பாராளுமன்றம் கடந்த 19ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளான மே 18 ம் திகதியை இனப்படுகொலைக்கான நினைவேந்தல் நாளாக ஏகமனதாக அங்கீகரித்துள்ளது.

உலகத்திலேயே முதல் அங்கீகாரம் வழங்கிய நாடாக கனடா அமைந்துள்ளது. இதை நாம் வரவேற்கிறோம். இந்த முயற்சிக்கு பின்னணியில் இருந்த புலம்பெயர் உறவுகளுக்கு நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். இந்தப் பிரேரணையை கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கரி ஆனந்தசங்கரி அவர்கள் பாராளுமன்றில் சமர்ப்பித்த வேளை ஏகமனதாக அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அட்டூழிய குற்றங்களுக்கான நீதிக்கான போராட்டத்திற்கு கிடைத்த அங்கீகாரத்தின் முதல் படியாக இதை நாம் கருதுகிறோம்.

2009 ஆம் ஆண்டு மே மாதம் முடிவடைந்த யுத்தத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள், யுத்தக்குற்றங்கள் மற்றும் அட்டூழிய குற்றங்களுக்காக நீதியைக் கோரி பல வருடங்களாக எமது இனம் போராடி வருகிறது. கனடியப் பாராளுமன்றத்தின் இந்த அங்கீகாரம் எமது முயற்சிக்கு நம்பிக்கை தருவதோடு ஊக்கம் அளிப்பதாகவும் அமைந்திருக்கிறது.

இது போன்று ஏனைய நாடுகளில் வாழும் புலம்பெயர் உறவுகளும் எமது மக்களுக்கு இழைக்கப்பட்ட அட்டூழியக் குற்றங்களுக்கான சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகளை ஒருமித்து முன்னெடுக்க வேண்டும் என கோரி நிற்கிறோம்.

சுரேந்திரன்
ஊடகப் பேச்சாளர் ரெலோ
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

Posted in Uncategorized

எதிரணி உறுப்பினர்களை விலைக்குவாங்கும் கலாசாரத்தை அரசாங்கம் நிறுத்த வேண்டும் – ஹக்கீம்

யுத்தத்தினால் உயிரிழந்த தமது உறவினர்களை நினைவு கூறுவதற்கு கடந்த வருடம் தடை விதிக்கப்பட்ட போதும் இம்முறை ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னாலே நினைவேந்தல் நடைபெற்றது .இது ஒரு புதிய சமிக்ஜையை காட்டுகிறது . இதனை அங்கீகரிக்க வேண்டும்.

அத்துடன் அமைச்சு பதவிகளை வழங்குவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் அரசியல் கலாசாரத்தை அரசாங்கம் நிறுத்திக்கொள்ளவேண்டும் என முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (19) மூன்றாவது நாளாக இடம்பெற்ற கடந்த 9ஆம் திகதி கலவரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

புதிய அரசியல் கலாசாரம் ஒன்றை உருவாக்கவேண்டும் என பிரதமர் தெரிவித்திருந்தார். அதற்கு ஆதரவளிக்க நாங்கள் தயார். அதேபோன்று அரசியல் தாமிகத்தையும் ஆளும் எதிர்க்கட்சியினர் பின்பற்றவேண்டும். குறிப்பாக அமைச்சு பதவிகளை வழங்குவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவதை நிறுத்திக்கொள்ளவேண்டும்.

புதிய பிரதமரின் அரசாங்கத்தில் ஆரம்பத்தில் 15 அமைச்சர்கள் என்றார்கள் அதன் பின்னர் 18 என்றார்கள் ஆனால் தற்போது 22 அமைச்சர்கள் என கேள்விப்படுகின்றது. எதிர்க்கட்சியில் இருந்து உறுப்பினர்களை விலைக்கு வாங்கிக்கொண்டே இதனை செய்யப்பாேவதாகும் தெரியவருகின்றது.

பாராளுமன்றத்தில் அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கி சபை ஒன்றை ஏற்படுத்தி நாட்டின் பிரச்சினைக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுப்போம். அதற்கு ஆதரவளிக்க நாங்கள் தயார். ஆளும் எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு நாட்டை கட்டியெழுப்புவோம். ஆனால் எதிர்க்கட்சி உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் அரசியல் கலாசாரத்தை நிறுத்தவேண்டும். இதந்த அறிவிப்பை ஜனாதிபதிக்கு தெரிவிக்குமாறு சபை முதல்வரை கேட்டுக்கொள்கின்றேன்.

மேலும் கடன் செலுத்த முடியாமல் போயிருப்பதால் நேற்றில் இருந்து நாடு வங்குராேத்து என சட்டரீதியிலாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

ஆனால் யுத்தம் வெற்றிகொண்டு 13ஆவது வருடத்தை நாங்கள் கொண்டாடுகின்றோம். ஆனால் அதிலும் மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது.

காலிமுகத்திடலில் போராடும் மக்கள் முள்ளிவாய்க்காலில் இறந்தவர்களுக்காக அஞ்சலி செலுத்தி இருக்கின்றார்கள். புலிகள் அமைப்பில் இறந்தவர்கள் அதேபோன்று உயிர் நீத்த ராணுவ வீரர்களையும் ஒரே நேரத்தில் நினைவு கூர்ந்தனர்.

கடந்த வருடம் முள்ளவாய்க்காலில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றபோது ராணுவத்தினர் அதனை தடுத்து, அவர்களை சிறையில் அடைத்தார்கள்.

ஆனால் இந்த வருடம் காலிமுகத்திடலில் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாகவே உயிரிழந்தவர்களை நினைகூரும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இதுதான் யுகமாற்றம், புதிய சமிக்ஜை. அதனை நாங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும். இந்த வழியில் நாங்கள் செல்வோம்.

அலரிமாளிகையில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் ஆற்றிய உரையில் எந்த தவறும் இல்லை. ஆனால் அவரின் உரைக்கு பின்னர் உரையாற்றியவர்களே ஆதரவாளர்களை தூண்டிவிடும் வகையில் செயற்பட்டனர்.

வன்முறையை தடுக்க தவறியது தொடர்பில் பொலிஸ்மா அதிபரும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தென்னகோனும் ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டி கொண்டிருக்கிறார்கள் .

அத்துடன் நீதிபதி தடை உத்தரவு பிரப்பிக்கவில்லை என தெரிவித்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பிரதம நீதியரசருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

இது நீதிமன்ற அவமதிப்பு என தெரிவித்து செயலாளருக்கு எதிராக வழக்கு தொடுக்குமாறு பிரதம நீதியரசர் சட்டமா அதிபருக்கு தெரிவித்திருப்பதாக பத்திரிகைகளில் செய்தி வெளிவந்திருக்கின்றது. இவை தவறான முன்மாதிரியாகும் என்றார்.

Posted in Uncategorized

ஹரீன் உள்ளிட்ட 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தலைமையிலான அரசாங்கத்தில் 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.

இதன்போது ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த ஹரீன் பெர்னாண்டோ உள்ளிட்ட சிலரும் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.

புதிய அமைச்சர்கள் விபரம்

  1. நிமல் சிறிபால டி சில்வா – துறைமுகங்கள், விமான சேவைகள்2 சுசில்
  2. பிரேமஜயந்த – கல்வி
  3. கெஹலிய ரம்புக்வெல்ல – சுகாதாரம்
  4. விஜேதாச ராஜபக்‌ஷ – நீதி, சிறைச்சாலைகள் நடவடிக்கைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு
  5. ஹரீன் பெர்னாண்டோ – சுற்றுலாத்துறை மற்றும் காணி
  6. ரமேஷ் பத்திரண – பெருந்தோட்டக் கைத்தொழில்
  7. மனுஷ நாணயக்கார – தொழில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு
  8. நளின் பெர்னாண்டோ – வர்த்தகம், வணிகம் மற்றும் உணவு பாதுகாப்பு
  9. டிரான் அலஸ் – பொதுமக்கள் பாதுகாப்பு

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கும் இடையில் கருத்து வேறுபாடு – முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கும் இடையில் கருத்து வேறுபாடுகளும் மோதல்களும் தோன்ற ஆரம்பித்துள்ளன என்பது தெளிவாகின்றது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இடைக்கால அரசாங்கத்தையோ அல்லது சர்வகட்சி அரசாங்கத்தையோ அமைக்க முன்வந்தபோதிலும், அமைக்கப்படும் அரசாங்கத்தில் அவை எதுவும் இல்லை என்றும், முன்னர் ஆட்சியில் இருந்த அதே ஆட்சிதான் தற்போதும் உள்ளது என்று நாடாளுமன்றில் இன்று வெள்ளிக்கிழமை உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவிதித்துள்ளார்

புதிய அரசாங்கத்தின் மீதும் மக்கள் நம்பிக்கை இழக்க நேரிடும் எனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானத்திற்கு மாறாக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அமைச்சுப் பதவிகளை ஏற்காமல் அரசாங்கத்தின் ஆக்கபூர்வமான யோசனைகளுக்கு மாத்திரம் ஆதரவளிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

இலங்கைக்கு உதவுமாறு இந்திய நிதி அமைச்சரிடம் இதொகா கோரிக்கை!

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வுகாண உதவிகளை வழங்குமாறு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ்  இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளது.

இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் மற்றும் இ.தொ.காவின் சர்வதேச விவகாரங்களுக்கு பொறுப்பானவரான  பாரத் அருள்சாமி ஆகியோர் சந்தித்து இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு இந்திய அரசாங்கம் தொடர்ச்சியாக வழங்கிவரும் ஒத்துழைப்புகளுக்கு இந்த சந்திப்பின் போது இ.தொ.கா நன்றி தெரிவித்துள்ளதுடன், தற்போதைய இக்கட்டான சூழ்சிலையில் இருந்து இலங்கையை மீண்டெழ இந்திய அரசாங்கத்தின் ஒத்ழைப்பும் உதவியும் அதிகமாக தேவைப்படுகிறது.

அதேபோன்று இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மக்கள் அதிகமாக இந்த பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்டுள்ளனர்.எனவே இந்தியா அவர்களுக்கு பொருளாதார ரீதியான உதவிகளை வழங்க வேண்டும் என்பதுடன், இலங்கை நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு அனைத்து விதத்திலும் இந்திய அரசாங்கம் உதவிகளை வழங்க வேண்டுமெனவும் இந்த சந்திப்பில் இ.தொ.கா இந்திய நிதி அமைச்சரிடம் கோரிக்கைவிடுத்துள்ளது.

இக்கோரிக்கைக்கு சாதகமான நடவடிக்கைகளை எதிர்காலத்தில் இந்தியா முன்னெடுக்கும் என இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளுடனான யுத்தம் சரியான வழியில் வெல்லப்பட்டதாக நான் நினைக்கவில்லை

விடுதலைப்புலிகள் ஒரு இயக்கமாக இருந்தாலும் விடுதலைப்புலிகள் என்ற விடயம் ஒரு சர்ச்சைக்குரிய விடயமாகும்.கடந்த காலத்தில் விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற யுத்தமானது  சரியான வழியில்  வெல்லப்பட்டதாக நான் நினைக்கவில்லை.அதாவது உள்நாட்டு யுத்தம் அல்லது பிரச்சினை என்றால் அது ஒரு பேச்சுவார்த்தை மேசையில் தான் முடிந்திருக்க வேண்டும்.இந்த போரின் முடிவு சமாதான முறையில்  நிறைவிற்கு கொண்டு வரவில்லை.பெரும் அழிவுகளுடன் தான்  நிறைவடைந்தது என ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் செயலாளர் நாயகம்  எம்.ரி.ஹசன் அலி தெரிவித்தார்.
சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பில் அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பகுதியில் உள்ள அவரது கட்சி  அலுவலகத்தில் வியாழக்கிழமை(19)   நடாத்திய விசேட செய்தியாளர்   சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும்  தெரிவித்ததாவது.
வட கிழக்கு மாகாண சபையில் முதலமைச்சராக இருந்த வரதராஜ பெருமாள் காலத்தில் ஒரு உறுப்பினராக இருந்துள்ளேன்.அதுமாத்திரமன்றி வரதராஜ பெருமாள் அவர்கள் தமிழீழ பிரகடனம் செய்த போது வெளிநடப்பு செய்த  குழுவிலும் நான் அங்கம் வகித்திருந்தேன்.அதாவது இந்த நாட்டை பிரிப்பதற்கு ஒருபோதும் நாங்கள் உடன்பட மாட்டோம் என அப்போது நாம் வெளியேறி இருந்தோம்.இந்நிலையில் பின்னர் அங்கு பல பிரச்சினைகள்  எழுந்தமையினால் நாங்கள் ஐ.பி.கேயின் உதவியுடன் விசேட விமானத்தில் இரத்மலான விமான நிலையத்திற்கு பாதுகாப்பாக அழைத்து செல்லப்பட்டோம்.
மேலும்  விடுதலைப்புலிகள் ஒரு இயக்கமாக இருந்தாலும் அந்த இயக்கத்தில் இருந்தவர்கள் விடுதலை புலிகள் என்ற  உயரிய சிந்தனைகளில் இருந்தார்களா? என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.அதாவது விடுதலை புலிகளின் உயர் மட்டத்தலைவர்கள் என கூறப்படுவோர் தற்போது கூட சிங்கள கட்சிகளின் உயர்பதவிகளில் வந்து இருக்கின்றார்கள்.இவ்வாறானவர்களும் விடுதலைப்புலிகளில் கடந்த காலங்களில் அங்கம் வகித்துள்ளார்கள் என்பதை நாங்கள் புரிந்து கொள்ள முடிகின்றது.ஆகவே விடுதலைப்புலிகள் என்ற விடயம் ஒரு சர்ச்சைக்குரிய விடயமாகும்.கடந்த காலத்தில் விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற யுத்தமானது வெல்லப்பட்டது என்பதற்காகவே ராஜபக்ஸக்களை மக்கள் ஆட்சிக்கு கொண்டு வருகின்றார்கள்.
இந்த யுத்தமானது வெளிநாடு ஒன்றுடன் செய்யப்படவில்லை.இலங்கை பிரஜைகளுடன் தான் இலங்கை அரசாங்கம் யுத்தம் செய்தது உண்மையாகும்.இந்த யுத்தமானது சரியான வழியில்  வெல்லப்பட்டதாக நான் நினைக்கவில்லை.அதாவது உள்நாட்டு யுத்தம் அல்லது பிரச்சினை என்றால் அது ஒரு பேச்சுவார்த்தை மேசையில் தான் முடிந்திருக்க வேண்டும்.ஒரு போர்க்களத்தில் நின்று கொண்டு பொதுமக்களை இராணுவம் சுட்டுத்தள்ளி அல்லது ஒரு விடுதலை இயக்கம் இராணுவத்தை சுட்டுத்தள்ளுவதை ஒரு காலமும் யுத்தமோ சமாதானமோ என்று கூற முடியாது.
இந்த போரின் முடிவு சமாதான முறையில்  நிறைவிற்கு கொண்டு வரவில்லை.பெரும் அழிவுகளுடன் தான் அவ்யுத்தம் நிறைவடைந்தது.உதாரணமாக தென்னாபிரிக்காவில் 243  இயக்கங்கள் போர் இட்டு  வந்திருந்தன.அதில் வெள்ளையர் கறுப்பர் குழு மோதலும் இடம்பெற்றிருந்தது.நெல்சன் மண்டேலா அந்த காலகட்டத்தில் வெஸ்மன் ரூட்டோ போன்றவரகள் இப்போராட்ட இயக்கங்களுடன் எத்தனையோ பேச்சுவார்த்தைகளை நடாத்தி 11 குழுக்களாக  மேற்குறித்த இயக்கங்களை ஒருங்கிணைத்தனர்.இவ்வாறு 11 குழுக்களுடனும் பின்னர் அவர்கள் பேச்சுவார்த்தை மேற்கொண்டு பிணக்குகளை தீர்த்து வைத்தனர்.இதனால் தான் அவருக்கு கூட நோபல் பரிசு கிடைக்கப்பெற்றிருந்தது.இந்த நாட்டிலும் ஒரு இணக்கப்பாட்டுடன் நடந்து முடிந்த  யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வந்திருந்தால் இவர்களுக்கும் நோபல் பரிசு கிடைக்க சந்தர்ப்பம் கிடைத்திருக்கும்.ஆனால் இந்த யுத்தமானது அரைகுறையாக நிறைவடைந்து விட்டது என்பதே உண்மையாகும்.சமாதான மேசையில் பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டு  இந்த யுத்தம் முடிவிற்கு கொண்டு வரப்படவில்லை.மாறாக பெரும் அழிவு யுத்த அவலத்துடன் தான் இந்த யுத்தம்  அரைகுறையாக நிறைவடைந்துள்ளது என்பதை  நான்  பார்க்கின்றேன் என்றார்.
Posted in Uncategorized

இலங்கை உண்மை, நீதி, பொறுப்புக்கூறல் ஆகியவற்றை உறுதிப்படுத்துவது அவசியம் – பிரிட்டன் அமைச்சர் தாரிக் அஹமட்

போரில் கொல்லப்பட்டவர்கள் மற்றும் காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பில் உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றை உறுதிப்படுத்துவது அவசியம் என்றும், இதுகுறித்து தமது அரசாங்கம் விசேட அவதானம் செலுத்தியிருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ள பிரிட்டனின் பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் தாரிக் அஹமட், அனைத்து சமூகங்களையும் உள்ளடக்கிய அரசியல் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதையும் முன்னிறுத்தி முக்கிய தரப்புக்களுடன் கலந்துரையாடுவதற்குத் தாம் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

நாட்டில் சுமார் மூன்று தசாப்தகாலமாக இடம்பெற்றுவந்த யுத்தம் கடந்த 2009 ஆம் ஆண்டில் முடிவிற்குக்கொண்டுவரப்பட்டதன் பின்னர், மேமாதம் 11 – 18 ஆம் திகதி வரையான ஒருவாரகாலப்பகுதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரமாகவும், அவ்வாரத்தின் இறுதிநாளான 18 ஆம் திகதி போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்கான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளாகவும் தமிழ்மக்களால் அனுட்டிக்கப்பட்டுவருகின்றது. அந்தவகையில் நேற்றைய முன்தினம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு காணொளியொன்றின் ஊடாகக் கருத்து வெளியிட்டிருக்கும் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

இலங்கையில் தமிழர்கள் உள்ளடங்கலாக நாட்டுமக்கள் அனைவருக்கும் பாதிப்புக்களை ஏற்படுத்திய சிவில் யுத்தம் முடிவிற்குவந்து இன்றுடன் (நேற்று முன்தினத்துடன்) 13 வருடங்கள் பூர்த்தியடைகின்றது. இவ்வாறானதொரு சூழ்நிலையில் போரில் கொல்லப்பட்ட மற்றும் காணாமலாக்கப்பட்ட மக்களுக்குரிய நீதியையும் பொறப்புக்கூறலையும் நிலைநாட்டுமாறு வலியுறுத்துவதில் நானும் பிரிட்டன் அரசாங்கமும் கொண்டிருக்கின்ற ஸ்திரமான நிலைப்பாட்டை மீளுறுதிப்படுத்துகின்றேன்.

பாதிக்கப்பட்ட தரப்பினர்மீது, குறிப்பாக அவர்களின் அன்பிற்குரியவர்கள் மற்றும் குடும்பத்தினர்மீது நாம் கரிசனைகொண்டிருக்கின்றோம். இவ்விடயத்தில் எமது 46ஃ1 தீர்மானம் முன்வைக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை உள்ளடங்கலாக அனைத்துத் தரப்பினருடனும் இணைந்து பணியாற்றுவது குறித்த பிரிட்டனின் நிலைப்பாட்டையும் மீண்டும் சுட்டிக்காட்டுகின்றேன். இலங்கையில் மனித உரிமைகள் நிலைவரத்தை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தும் அதேவேளை, போரின்போது இடம்பெற்ற வன்முறைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முன்னேற்றகரமானதும் செயற்திறனானதுமான பொறுப்புக்கூறலை உறுதிசெய்யுமாறும் வலியுறுத்துவோம்.

தற்போது இலங்கை பாரிய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கின்றது. நாம் இலங்கையின் தற்போதைய நிலைவரங்களைத் தொடர்ச்சியாக அவதானித்துவரும் அதேவேளை, பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு அவசியமான உதவிகளை வழங்குவதையும் அனைத்து சமூகங்களையும் உள்ளடக்கிய அரசியல் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதையும் முன்னிறுத்தி முக்கிய தரப்புக்களுடன் கலந்துரையாடுவதற்கும், இலங்கை அரசாங்கத்துடன் நேரடியாகத் தொடர்புகொள்வதற்கும் பிரிட்டன் அரசாங்கம் தயாராக இருக்கின்றது.

இவ்வாறானதொரு பின்னணியில் தற்போதைய நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கு ஜனநாயக ரீதியிலான செயற்திறன்வாய்ந்த தீர்வுகள் குறித்து ஒன்றிணைந்து ஆராயுமாறு அனைத்துக் கட்சிகளிடமும் வலியுறுத்துகின்றோம். அதேவேளை உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றை உறுதிசெய்வதில் விசேட அவதானம் செலுத்தியிருப்பதுடன், இலங்கை மக்கள் அனைவரினதும் சுபீட்சமான எதிர்காலத்தை உறுதிசெய்வதற்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கும், அதனை முன்னிறுத்தி இணைந்து பணியாற்றுவதற்கும் தயாராக இருக்கின்றோம் என்று அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.