ஊரடங்கு உத்தரவு அடுத்த வாரம் நீக்கப்படும் – ரமேஷ் பத்திரண

இலங்கையில் தற்போது அமுலிலுள்ள  தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு அடுத்த வாரம் நீக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சரவை இணைப் பேச்சாளரான அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று (14) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அண்மையில் அமுல்படுத்தப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவின் காரணமாக கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. எவ்வாறாயினும், ​கொரோனா ஜனாதிபதி ஆணைக்குழு பரிசீலனை செய்த பிறகு இந்த விஷயத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு சிறு வணிகங்களில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து இன்று நடைபெற்ற அமைச்சரவை செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே டாக்டர் ரமேஷ் பத்திரண பதிலளித்தார்.

இந்த மாத இறுதிக்குள் நிலைமையில் ஒரு பெரிய முன்னேற்றத்தை அதிகாரிகள் எதிர்பார்க்கிறார்கள். எவ்வாறாயினும் கொரோனா பணிக்குழு பரிசீலனை செய்த பின்னரே இந்த விடயத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 20ஆம் திகதி முதல் ஆமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு மூன்று தடைவைகள் நீடிக்கப்பட்டதன் அயப்படையில் எதிர்வரும் 21ஆம் திகதி வரை அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Posted in Uncategorized

ரஞ்சனுக்குப் பொது மன்னிப்பு -இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே மறுப்பு

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக வெளியாகியிருந்த தகவல்களை மறுத்துள்ள இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரணங்கள் சார்ந்த கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் மற்றும் சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வளிப்பு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே அவ்வாறான எந்தவொரு தீர்மானத்தையும் அரசாங்கம் எடுக்கவில்லை என்றார்.

சிறை தண்டனை அனுபவித்துவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க ஜனாதிபதி பொது மன்னிப்புக்கான ஆவணங்களில் கையெழுத்திட்டுள்ளதாக கையெழுத்திடப்பட்ட பொது மன்னிப்புக்கான ஆவணங்கள், சட்டத்தரணி அசான் பெர்ணான்டோவினால் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டிருந்த நிலையில் இந்தத் தகவலை இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே இதனைத் தெரிவித்துள்ளார்.

சிறைத்தண்டனை அனுபவித்துவரும் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

அவருடைய கடிதத்தில் கிட்டத்தட்ட 08 மாதங்களாக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்க வேண்டும் எனஇ நாட்டின் மூத்த பிரஜை மற்றும் முன்னாள் அரச தலைவர் என்ற ரீதியில் கேட்டுக்கொள்வதாக குறிப்பிட்டிருந்தார்.

ஒரு நடிகராக, ஒரு சமூக சேவையாளராக, ஒரு அரசியல்வாதியாக ரஞ்சன் ராமநாயக்க, பொது மக்களுக்கான சேவைகளை ஆற்றிவந்த ஒருவர் என முன்னாள் ஜனாதிபதி கூறியுள்ளார்.

பாரிய குற்றங்களுக்காக சிறைத்தண்டனை வழங்கப்பட்ட பலருக்குஇ தற்போதைய அரசாங்கத்தினால் பொது மன்னிப்பு வழங்கப்பட்ட காரணத்தினால் அத்தகைய பாரிய குற்றமல்லாத விடயத்திற்காக ரஞ்சன் ராமநாயக்க இவ்வாறு துன்பப்படுவது துரதிர்ஷ்டவசமான விடயம் என முன்னாள் ஜனாதிபதியின் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட ரஞ்சன் ராமநாயக்கவுக்கு 2021 ஜனவரி 12 ஆம் திகதி நான்கு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையை விதித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

காணிப்பதிவுகளை நிறுத்துங்கள் – வலி. வடக்கு மீள்குடியேற்ற குழுத் தலைவர்

வலிகாமம் வடக்கில், காணி பதிவுகள் மேற்கொள்வதை உடனடியாக நிறுத்துமாறு, வலிகாமம் வடக்கு மீள்குடியேற்ற குழுவின் தலைவர் அ. குணபாலசிங்கம் தெரிவித்தார்.

தற்பொழுது இராணுவத்தின் பிடியில் உள்ள காணிகள் தொடர்பில் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், கடந்த 31 வருடங்களாக வலிகாமம் வடக்கில் இராணுவத்தினரின் வசம் உள்ள காணிகள் விடுவிக்கப்படவில்லை என்றார்.

அரசாங்கத்தால் இராணுவம் வசமுள்ள பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளை விடுவிப்பதற்காக, அக்காணிகளின் காணிகளின் உரிமையாளர்கள், தம்மை பதிவு செய்யுமாறு பல தடவைகள் கோரப்பட்டு, பொதுமக்களும் அவ்வாறு பதிவுகளை மேற்கொண்டிருந்ததாகவும் ஆனால் இன்றுவரை தமது காணிகள் விடுவிக்கப்படவில்லை எனவும், குணபாலசிங்கம் தெரிவித்தார்.

ஏற்கெனவே இராணுவத்திடமிருந்து தமது காணியை மீட்பதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருந்ததாகத் தெரிவித்த அவர், ஆனால் தற்போது வரை அந்த முயற்சி பயனளிக்கவில்லை எனவும் கூறினார்.

இந்நிலையில், தற்போதைய அரசாங்கத்தாலும், இராணுவத்திடம் காணிகள் உள்ளோர் பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதற்கு இனியும் விவரங்களை சேகரித்து கொண்டிருக்காது, அந்த விவரம் சேகரிப்பதை தற்காலிகமாக இடைநிறுத்தி, இந்தப் பதிவு நடைமுறையை சற்று பிற்போடுமாறும், அரசாங்கத்தை கோரினார்.

ஏற்கெனவே சேகரிக்கப்பட்ட பொதுமக்களின் காணி விவரங்கள்இராணுவ தளபதி மற்றும் ஏனைய அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு மீண்டும் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கூறுவதன் காரணமாக, பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்குகிறார்கள் எனவும், அவர் தெரிவித்தார்.

அரசாங்கம்  மக்களுக்குரிய காணிகளை விரைவில் விடுவிக்க வேண்டும் எனத் தெரிவித்த அவர், பொதுமக்கள் கடந்த 30 வருடங்களாக பெரும் சிரமத்தை எதிர்நோக்கி உள்ளார்கள் எனவும் எனவே, பொதுமக்களின் நலன் சார்ந்து பொதுமக்களின் காணிகளை கையளிக்க வேண்டும் எனவும் கோரினார்.

அத்துடன், ‘ஒவ்வொரு வருடமும் ஐ.நா சபையில் அமர்வு ஆரம்பமாகும் போது, ஆட்சியில் உள்ள அரசாங்கமானது, காணி விடுவிப்பு தொடர்பில் சில முன்னெடுப்புகளை முன்னெடுக்கும். ஆனால் ஐக்கிய நாட்டு சபையின் கூட்டத்தொடர் முடிந்த பின்னர், அது புஷ்வானமாக போய்விடும். எனவே இம்முறை இந்த அரசாங்கமானது வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் விடுவிக்கப்படாதுள்ள காணிகளை பொதுமக்களிடம் கையளிக்க வேண்டும்’ எனவும், குணபாலசிங்கம் தெரிவித்தார்.

Posted in Uncategorized

யாழ். பிள்ளையார் குள சுற்று வேலியின் பௌத்த கொடியின் வர்ணங்களால் சர்ச்சை

யாழ். பொஸ்கோ பாடசாலைக்கு அருகாமையில் உள்ள மாநகர சபைக்கு சொந்தமான பிள்ளையார் குளத்தைச் சுற்றி, பௌத்த கொடிகளில் காணப்படும் வர்ணங்களை ஒத்தவகையில் நிறம் தீட்டும் செயற்பாடு இடம்பெற்று வருகிறது.

உலக வங்கியின் நிதி அனுசரணையுடன், மீளப் புனரமைக்கப்பட்டு வருகின்ற பிள்ளையார் குளத்தின் சுற்று கம்பங்களுக்கே, இவ்வாறு பௌத்த கொடிகளில் உள்ள நிறங்களை பொறிக்கும் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.

1996ஆம் ஆண்டு 1.51(0.6063) ஏக்கராக இருந்த இந்தக் குளத்தின் பரப்பளவு 2013ஆம் ஆண்டு மீள அளக்கப்பட்ட போது, 1.26(0.5078) ஏக்கராக குறைவடைந்துள்ளமை தெரியவந்தது.

இவ்வாறான நிலையில், குறித்த குளம் தற்போது புனரமைக்கப்பட்டு வரும் நிலையில், குளத்திலிருந்து தூர்வாரப்பட்டு மண்ணை மீண்டும் குளத்தின் சுற்றுப்புறங்களில் கொட்டியதாக குற்றச்சாட்டுகளும் எழுந்தன.

இந்நிலையில், யாழ். மாவட்டத்தில் இடம்பெறும் அபிவிருத்திகள் தொடர்பில் கள ஆய்வுகளை மேற்கொள்வதற்காக, கடந்த வாரம் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ குறித்த பகுதிக்கு விஜயம் செய்திருந்தார்.

இவ்வாறான நிலையில், அவர் பார்வையிட்டு சென்ற  நிலையில், இவ்வாறு இடம்பெறுவது பலருக்கும் சந்தேகங்களை ஏற்படுத்துகின்றது.

ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதிகோரி இத்தாலியில் ஆர்ப்பாட்டம்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இத்தாலிக்கு விஜயம் செய்திருந்த நிலையில் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு கோரியும்  ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதிகோரியும் இத்தாலி வாழ் இலங்கையர்களினால் நேற்று போலொக்னா நகரில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சரான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோர் போலோக்னா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பன்னாட்டுத் தலைவர்களின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக உத்தியோகபூர்வ விஜயமொன்றை அங்கு சென்றுள்ளனர்.

இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டு 8 மாதங்கள் கடந்துள்ளன.

எனினும் அவ்வறிக்கையின் பிரகாரம் பயங்கரவாதத் தாக்குதல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகள் மற்றும் பொறுப்புக்கூறவேண்டியவர்களாக அடையாளங்காணப்பட்டுள்ளவர்களுக்கு எதிராக இன்னமும் நடவடிக்கை என பல்வேறு தரப்பினராலும் தொடர்ச்சியாக அதிருப்தி வெளியிடப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் பிரதமரின் இத்தாலி விஜயத்தையடுத்து, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு கோரி, இத்தாலி வாழ் இலங்கையர்கள்  ஞாயிற்றுக்கிழமை போலொக்னா நகரில் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.

அதில் கலந்துகொண்ட கத்தோலிக்கப் பாதிரியொருவர் கருத்து வெளியிடுகையில்,

இலங்கையின் தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களில் கத்தோலிக்கர்கள் மாத்திரமன்றி சிங்கள, தமிழ், முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த பலரும் உயிரிழந்தார்கள்.

அந்தப் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடாத்தப்பட்டு சுமார் இரண்டரை வருடங்கள் பூர்த்தியடையவுள்ள நிலையில், அதற்கு நீதிவழங்கப்படுவதை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தியே நாங்கள் இங்கு ஒன்றுகூடியிருக்கின்றோம்.

நாம் வேறெந்தவொரு அரசியல் நோக்கங்களையும் முன்னிறுத்தி செயற்படவில்லை. மாறாக உயிரிழந்தவர்களுக்கான நீதி நிலை நாட்டப்பட வேண்டும் என்பதே எமது ஒரேயொரு கோரிக்கையாகும்.

இந்தச் சம்பவத்திற்கான பதிலைப் பெறாமல் நாடு என்றவகையில் முன்நோக்கிப் பயணிக்கும் பட்சத்தில், அது அனைத்துச் சமூகங்களுக்கும் பாதுகாப்பற்றதொரு நாடாகவே அமையும். எனவே இவ்விடயத்தில் உரிய தரப்பினர் தலையிட்டு, நீதிநிலைநாட்டப்படுவதை உறுதிசெய்யவேண்டும் என வலியுறுத்தினார்.

Posted in Uncategorized

இறக்குமதின் கட்டுப்பாடுகளை அரசும் மத்திய வங்கியும் பரிசீலிக்க வேண்டும் – ஆளும் தரப்பு பா.உ.

இலங்கைக்கு இறக்குமதியாகும் அத்தியாவசியமற்ற பொருட்களுக்கு விதிக்கப்பட்ட நூறுவீத உத்தரவாத தொகை குறித்து அரசாங்கமும் மத்திய வங்கியும் பரிசீலிக்க வேண்டும் என ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் கேட்டுக்கொண்டுள்ளார்.

பெரும்பாலான மக்கள் வீடுகளில் மின்விசிறிகள் மற்றும் குளிர்சாதன பெட்டிகளைப் பயன்படுத்துகின்றனர் என்பதை சுட்டிக்காட்டி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.

முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க காலத்தில் இடம்பெற்ற இறக்குமதி கட்டுப்பாடுகள் குறித்து சுட்டிக்காட்டிய அவர், நாட்டின் தற்போதைய நிலையில் இந்த நடவடிக்கை பாதகமாக அமையலாம் என்றும் கூறினார்.

எனவே கொரோனா தொற்று நிலைமைக்கு மத்தியில் இந்த முடிவை மறுபரிசீலனை செய்யவும் குறித்த பட்டியலில் உள்ள சில பொருட்களை விலக்கி மக்கள் மீதுள்ள சுமையை குறைக்க மத்திய வங்கியின் ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கீதா குமாரசிங்க கேட்டுக்கொண்டார்.

கடந்த 09ஆம் திகதிஇலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசியமற்ற மற்றும் அவசரமற்ற பொருட்களுக்கு 100 சதவீத காசு எல்லை வைப்புத் தேவைப்பாட்டினை விதிப்பதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்தது.

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையின் கூட்டத்தில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளுடனான மற்றும் தேசிய சேமிப்பு வங்கியுடனான நாணயக் கடிதங்களின் அத்துடன் ஏற்றுக்கொள்ளல் நியதிகளுக்கெதிரான ஆவணங்களின் கீழ் இறக்குமதி செய்யப்படும் 623 பொருட்களுக்கு இவ்வாறு 100 சதவீத உத்தரவாத தொகை விதிக்கப்பட்டுள்ளது.

மிதமிஞ்சிய இறக்குமதிகளை ஊக்கம் இழக்கச்செய்வதன் மூலம் செலாவணி வீத உறுதிப்பாட்டினையும் வெளிநாட்டு நாணயச் சந்தை திரவத் தன்மையினையும் பாதுகாப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

இலங்கை குறித்து மனித உரிமைகள் ஆணையாளரின் கரிசனைகளை ஏற்கிறோம் – பிரித்தானியா

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரினால் வெளிப்படுத்தப்பட்டிருக்கும் கரிசனைகளை ஏற்பதாகத் தெரிவித்திருக்கும் பிரிட்டன், இலங்கையில் மனித உரிமைகள் மற்றும் சிறுபான்மையின சமூகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான அழுத்தங்களைச் தொடர்ச்சியாக வழங்குவதற்குத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான சுற்றுலா ஆலோசனையைத் தளர்த்த பிரித்தானியா தீர்மானம் – Newsfirst

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது கூட்டத்தொடர் இன்று திங்கட்கிழமை ஜெனீவாவில் ஆரம்பமானது.

இன்றைய தொடக்கநாள் அமர்வில் இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்சேல் பல்லெட்டினால் வாய்மூல அறிக்கை வெளியிடப்பட்டது.

இதன்போது இலங்கை தற்போது முகங்கொடுத்திருக்கும் சமூக, பொருளாதார மற்றும் நிர்வாக ரீதியான சவால்கள் இராணுவமயமாக்கலின் மோசமான தாக்கத்தை வெளிக்காட்டுபவையாக அமைந்துள்ளன.

அதுமாத்திரமன்றி இலங்கையில் அடிப்படை உரிமைகள், சிவில் செயற்பாடுகளுக்கான இடைவெளி, ஜனநாயகக்கட்டமைப்புக்கள், நிலைபேறான அபிவிருத்தி ஆகிய விடயங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறல் வலுவிழந்துள்ளமையினையும் அவதானிக்கமுடிவதாக ஆணையாளர் மிச்சேல் பல்லேட் தெரிவித்துள்ளதுடன் மேலும் பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில் அதுகுறித்து இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அப்பதிவில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் விமர்சகர்கள் உள்ளடங்கலாக இலங்கை தொடர்பான பல்வேறு விடயங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது கூட்டத்தொடரில் ஆணையாளர் மிச்சேல் பச்லெட்டினால் வெளிப்படுத்தப்பட்ட கரிசனைகளை பிரிட்டன் ஏற்றுக்கொள்கின்றது.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் இலங்கையில் மனித உரிமைகள் மற்றும் சிறுபான்மையின சமூகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான அழுத்தங்களை பிரிட்டன் தொடர்ச்சியாக வழங்கும் என்று அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

இலங்கை குறித்து ஐ.நா. ஆணையாளர் மிச்செல் பச்லேட் கடுமையாக சாடியது என்ன ? – முழு அறிக்கை விபரம் !

இலங்கை தற்போது முகங்கொடுத்திருக்கும் சமூக, பொருளாதார மற்றும் நிர்வாக ரீதியான சவால்கள் இராணுவயமயமாக்கலின் மோசமான தாக்கத்தை வெளிக்காட்டுபவையாக அமைந்துள்ளன.

அதுமாத்திரமன்றி இலங்கையில் அடிப்படை உரிமைகள், சிவில் செயற்பாடுகளுக்கான இடைவெளி, ஜனநாயகக்கட்டமைப்புக்கள், நிலைபேறான அபிவிருத்தி ஆகிய விடயங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறல் வலுவிழந்துள்ளமையினையும் அவதானிக்கமுடிவதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லேட் தெரிவித்துள்ளார்.

அதுமாத்திரமன்றி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா மற்றும் அஹ்னாப் ஜசீஸ் ஆகியோரின் தொடர்ச்சியான தடுத்துவைப்பு, வசந்த கரன்னகொடவிற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் நீக்கப்பட்டமை தொடர்பில் கரிசனையை வெளிப்படுத்தியுள்ள ஆணையாளர் பச்லெட், துமிந்த சில்வாவின் விடுதலையானது சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதித்துறையின் செயற்பாடுகள் மீது காணப்படும் நம்பிக்கையைக் கேள்விக்குள்ளாக்கும் அச்சுறுத்தலைத் தோற்றுவித்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது கூட்டத்தொடர் இன்று திங்கட்கிழமை ஜெனீவாவில் ஆரம்பமானது.

இன்றைய தொடக்கநாள் அமர்வில் இலங்கை தொடர்பில் ஆணையாளர் மிச்சேல் பல்லெட்டினால் வெளியிடப்பட்ட வாய்மூல அறிக்கையிலேயே மேற்கண்ட விடயம் தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டது.

இதன்போது இலங்கை தொடர்பில் அவரால் மேலும் கூறப்பட்ட விடயங்கள் வருமாறு:

இலங்கையின் நிலைவரம் தொடர்பில் எனது கடந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டிருந்த விடயங்கள் தொடர்பான தற்போதைய அவதானிப்புக்களை இங்கு முன்வைக்கின்றேன்.

இதுகுறித்து இலங்கை அரசாங்கத்தினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளேன்.

அதேவேளை ‘பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்கு ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து செயற்படத்தயாராக இருக்கின்றோம்’ என்றும் ‘அதற்கேற்றவாறான கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்படும்’ என்றும் கடந்த ஜுன் மாதம் ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட கூற்றையும் கருத்திலெடுத்துள்ளேன்.

அந்தவகையில் எமது அறிக்கைகளில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் உள்ளடங்கலாக உறுதியளிக்கப்பட்டவாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று எதிர்பார்ப்பதுடன் அதற்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு எமது அலுவலகம் தயாராக இருக்கின்றது.

அதுமாத்திரமன்றி மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கென கடந்த ஜனவரி மாதம் ஸ்தாபிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பணிகள் இவ்வருட இறுதியில் முடிவிற்குக்கொண்டுவரப்படும் என்று அறிகின்றேன். எனவே அதனைத்தொடர்ந்து அதன் பணிகளையும் பரிந்துரைகளையும் பார்வையிடக்கூடியதாக இருக்கும்.

தற்போது இலங்கை எதிர்கொண்டிருக்கும் சமூக, பொருளாதார மற்றும் நிர்வாக ரீதியான சவால்கள் இராணுவயமயமாக்கலின் மோசமான தாக்கத்தை வெளிக்காட்டுபவையாக அமைந்துள்ளன.

அதுமாத்திரமன்றி அடிப்படை உரிமைகள், பொதுமக்களுக்கான இடைவெளி, ஜனநாயகக்கட்டமைப்புக்கள், நிலைபேறான அபிவிருத்தி ஆகிய விடயங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறல் வலுவிழந்துள்ளமையினையும் அவதானிக்கமுடிகின்றது.

மேலும் உணவுப்பொருட்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தல் மற்றும் விலைகளைக் கட்டுப்படுத்தல் ஆகிய நோக்கங்களுக்காக இலங்கையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி அவசரகாலச்சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

இந்த அவசரகாலச்சட்டத்தின் விதிகள் மிகவும் பரந்தவை என்பதுடன் இவை சிவில் செயற்பாடுகளில் இராணுவத்தின் பங்களிப்பை மென்மேலும் ஊக்குவிக்கும் வகையில் அமையலாம். எனவே அவசரகாலச்சட்டத்தின் பிரயோகம் தொடர்பில் எமது அலுவலகம் உன்னிப்பான கண்காணிப்பை மேற்கொள்ளும்.

அண்மையில் சில சிவில் சமூக அமைப்புக்களின் தலைவர்களுடனான ஜனாதிபதியின் சந்திப்புத் தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளேன். அத்தோடு இலங்கையின் சிவில் சமூகப்பரப்பை விரிவாக்கும் கலந்துரையாடல்கள் மற்றும் நடவடிக்கைகள் என்பன முன்னெடுக்கப்படுவதை நான் பெரிதும் வரவேற்கின்றேன்.

ஆனால் வருந்தத்தக்க வகையில் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், காணாமல்போனோரின் குடும்பங்கள் ஆகியோர் மீதான கண்காணிப்புக்கள், அடக்குமுறைகள் என்பன தொடர்கின்றன.

ஆனால் அந்த அடக்குமுறைகள் தற்போது அரசாங்கத்தை விமர்சிக்கும் மாணவர்கள், தொழிற்துறை நிபுணர்கள், மருத்துவத்துறைசார் நிபுணர்கள், மதத்தலைவர்கள் என வியாபித்துள்ளன.

குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான அமைதிவழிப்போராட்டங்கள் மற்றும் நினைவுகூரல்கள் என்பன வலுவான பாதுகாப்புத்தரப்பினரைக்கொண்டு கட்டுப்படுத்தப்பட்டதுடன் கைது நடவடிக்கைகளும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்களை தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன.

மேலும் சிவில் சமூக அமைப்புக்கள் தொடர்பான புதிய வழிகாட்டல்கள் தயாரிக்கப்பட்டதுடன் அவை அவர்களின் அடிப்படைச் சுதந்திரத்தை மேலும் இறுக்கமாக்கும் வகையில் அமையலாம் என்ற அச்சத்தைத் தோற்றுவித்தன.

எனவே அவ்வாறு தயாரிக்கப்பட்ட வழிகாட்டல்கள் உரியவாறான கலந்துரையாடல்களுக்கு உட்படுத்தப்படக்கூடிய வகையில் பகிரங்கப்படுத்தப்படவேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்.

அதேவேளை மனித உரிமைகளுடன் தொடர்புடைய சில முக்கிய வழக்குகள் தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளேன். 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் 11 இளைஞர்கள் வலிந்து காணாமலாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்டிருந்ததாகக் கூறப்படும் முன்னாள் கடற்படைத்தளபதிக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் சட்டமா அதிபரினால் நீக்கிக்கொள்ளப்பட்டமையும் அதில் உள்ளடங்குகின்றது.

அதேபோன்று பல்வேறு விசாரணைகளுக்கு மத்தியில் 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுதினப்பயங்கரவாதத்தாக்குதல்களின் சூத்திரதாரிகள் தொடர்பான உண்மையைக் கண்டறிந்து, நீதியை நிலைநாட்டுமாறு பாதிக்கப்பட்டவர்களும் மதத்தலைவர்களும் தொடர்ச்சியாக வலியுறுத்திவருகின்றனர்.

மேலும் கடந்த 2011 ஆம் ஆண்டில் அரசியல்வாதியொருவரைப் படுகொலை செய்த வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான துமிந்த சில்வாவிற்கு ஜனாதிபதியினால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டமையானது, சட்டத்தின் ஆட்சி மீதும் நீதித்துறையின் செயற்பாடுகள் மீதும் காணப்படும் நம்பிக்கையைக் கேள்விக்குள்ளாக்கக்கூடிய அச்சுறுத்தலைத் தோற்றுவித்தன.

அத்தோடு பொலிஸ் காவலின் கீழ் இடம்பெறும் மரணங்கள், போதைப்பொருள் கடத்தல் குற்றவாளிகள் மீதான பொலிஸ் என்கௌன்டர்கள் மற்றும் சட்டத்தை நடைமுறைப்படுத்துவோரால் மேற்கொள்ளப்படும் சித்திவரைகள் மற்றும் முறையற்ற நடவடிக்கைகள் பற்றிய அறிக்கைகள் தொடர்பிலும் நான் தீவிரமாக அவதானம் செலுத்தியுள்ளேன்.

ஒருவரை வழக்கு விசாரணைகளின்றி இருவருடகாலம் வரையில் தடுத்துவைத்திருப்பதற்கு அதிகாரமளிக்கக்கூடியவகையிலான புனர்வாழ்வளித்தல் தொடர்பான வழிகாட்டலொன்று கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்டது.

எனினும் அதனை சவாலுக்குட்படுத்தும் வகையில் அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டமையைத் தொடர்ந்து, குறித்த வழிகாட்டலை நடைமுறைப்படுத்துவதற்கு உயர்நீதிமன்றத்தினால் இடைக்காலத்தடையுத்தரவு விதிக்கப்பட்டிருப்பதாக அறிகின்றேன்.

அதுமாத்திரமன்றி தீவிரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையதாகக் குறிப்பிடப்பட்டு 300 இற்கும் அதிகமான தமிழ், முஸ்லிம் அமைப்புக்களும் தனிநபர்களும் அரசாங்கத்தினால் தடைசெய்யப்பட்டது.

அடுத்ததாக பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, தண்டனைக்காலம் நிறைவடைவதை நெருங்கிக்கொண்டிருந்த 16 கைதிகள் அண்மையில் விடுதலைசெய்யப்பட்டார்கள்.

அத்தோடு மேற்படி சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகள் தொடர்பில் மீளாய்வு செய்வதற்கான விசேட ஆலோசனைக்குழுவொன்று நியமிக்கப்பட்டிருக்கும் நிலையில், நீண்டகாலமாக இழுபறி நிலையிலிருக்கும் இந்த வழக்குகளுக்கு விரைந்து தீர்வொன்றை வழங்குமாறு வலியுறுத்துகின்றேன்.

பயங்கரவாதத்தடைச்சட்டத்தை மீளாய்வு செய்வதற்கான உறுதிமொழியை அரசாங்கம் வழங்கியிருக்கின்றது. இருப்பினும் இச்சட்டம் தொடர்ச்சியாகப் பயன்படுத்தப்படுவது குறித்தும் அச்சட்டத்தின்கீழ் நபர்கள் தடுத்துவைக்கப்படுவது குறித்தும் நான் கவலையடைகின்றேன்.

இச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, நீதிமன்றத்தில் உரியவாறான ஆதாரங்கள் எவையும் சமர்ப்பிக்கப்படாத நிலையிலும் சுமார் 16 மாதகாலமாகத் தடுத்துவைக்கப்பட்டிருக்கின்றார்.

அதேபோன்று ஆசிரியரும் கவிஞருமான அஹ்னாப் ஜசீம் கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதத்திலிருந்து எவ்வித குற்றச்சாட்டுக்களுமின்த் தடுத்துவைக்கப்பட்டிருக்கிறார்.

எனவே இச்சட்டத்தை உடனடியாக மீளாய்விற்கு உட்படுத்தும் அதேவேளை, அதற்கென உரியவாறான காலஅவகாசமொன்றைத் நிர்ணயிக்குமாறும் வலியுறுத்துகின்றேன்.

மேலும் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இழப்பீடு தொடர்பான தேசிய கொள்கைக்கு அங்கீகாரமளிக்கப்ப்டதுடன் இழப்பீடு வழங்கல் மற்றும் நல்லிணக்க நடவடிக்கைகள் தொடர்கின்றன.

அத்தோடு கிளிநொச்சியில் ஆறாவது கிளை அலுவலகத்துடன் காணாமல்போனோர் பற்றிய அலுவலகமும் அதன் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.

இருப்பினும் அது பாதிக்கப்பட்டவர்களின் நம்பிக்கையை வென்றெடுப்பது அவசியமாகும். அதுமாத்திரமன்றி அலுவலகத்தின் செயற்பாடுகளில் வெளிப்படைத்தன்மை பேணப்படவேண்டியதன் அவசியம் தொடர்பிலும் பாதிக்கப்பட்டவர்களை முன்நிறுத்திய மனிதாபிமான அணுகுமுறைகளின் அவசியம் தொடர்பிலும் மீளவலியுறுத்த விரும்புகின்றேன்.

மேலும் விரிவான உண்மை மற்றும் நீதிப்பொறிமுறையுடன் ஒன்றிணைந்ததாக இழப்பீடு வழங்கல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் 46ஃ1 தீர்மானத்திற்கு அமைவாக பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்கு அவசியமான நடவடிக்கைகள் எமது அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எமது அலுவலகத்தினால் சுமார் 120,000 தனித்தனியான தகவல்கள் மற்றும் ஆதாரங்களை உள்ளடக்கிய தரவுத்தளம் தயாரிக்கப்பட்டிருப்பதுடன் இவ்வருடத்திற்குள் மேலும் தகவல்களையும் ஆதாரங்களையும் திரட்டுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

எனவே அதற்குரியவாறான நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதை உறுதிப்படுத்துமாறு உறுப்புநாடுகளைக் கேட்டுக்கொள்கின்றேன்.

அதுமாத்திரமன்றி இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் நிலைவரத்தை மேம்படுத்துவதற்கு அவசியமான அழுத்தத்தை வழங்குவதுடன் இலங்கையின் நிலைவரங்கள் தொடர்பில் உன்னிப்பாக அவதானம் செலுத்தவேண்டும் என்று உறுப்புநாடுகளுக்கு அழைப்புவிடுக்கின்றேன் என்று குறிப்பிட்டார்.

Posted in Uncategorized

திருச்சி சிறப்பு முகாமிலுள்ள இலங்கைத் தமிழர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் – செல்வம் எம்.பி.

தமிழகம் – திருச்சி சிறப்பு முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்கள் தம்மை விடுவிக்க கோரி நடத்தி வரும் போராட்டம் 32 ஆம் நாளைக் கடந்து செல்கின்றநிலையில், ‘திருச்சி சிறப்பு முகாமில் நடைபெறும் இலங்கை தமிழர்களின் போராட்டம் அவர்கள் அனைவரும் உயிர் விடும் நிலைக்கு சென்றுள்ளது’ என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

திருச்சி சிறப்பு முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்கள் தம்மை விடுவிக்க கோரி நடத்தி வரும் போராட்டம் தொடர்பாக இன்று திங்கட்கிழமை (திங்கட்கிழமை) ஊடகத்துக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், “அவர்களின் போராட்டம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில், அவர்கள் அனைவரும் துரிதமாக விடுதலை செய்யப்பட வேண்டும், நீதிமன்றத்தில் எந்தவித வழக்குகளும் இல்லாதவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.

வழக்கு உள்ளவர்களின் வழக்குகள் அனைத்திற்கும் அவர்கள் தீர்ப்பை பெறும் காலம் உடனடியாக துரிதப்படுத்தப்பட வேண்டும்.

அத்தோடு இலங்கையில் இருந்து எல்லை தெரியாமல் இந்தியக் கடல் எல்லைக்குள் சென்றவர்கள் சிலர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். அந்த வகையில் ஏனையவர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தில் அவர்களுடைய கோரிக்கைகளை மனதில் கொண்டு செயற்பட்டு, அவர்களை அவர்களது குடும்பங்களுடன் இணைக்க அரசு முன்வர வேண்டும்.

அதேவேளை சட்டத்துக்கு முரணான செயற்பாடுகளை யாரும் செய்யக்கூடாது. இனிவரும் காலங்களில் இந்திய சட்டங்களுக்கு புறம்பான செயல்களில் ஈடுபடுவதை அனைவரும் தவிர்க்க வேண்டும்.

மேலும் திருச்சி சிறப்பு முகாமில் இருப்பவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும் என்பது எமது கோரிக்கையாக உள்ளது. அதற்கான நடவடிக்கைகளை நாம் மேற்கொள்கிறோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.

“பதவி மாற்றத்தின் மூலம் பொருளாதாரத்தை காப்பாற்ற முடியாது” – மைத்திரிபால சாடல்

முக்கிய பதவியில் உள்ள ஒருவரை மாற்றுவதன் மூலம் பொருளாதாரத்தை காப்பாற்ற முடியாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு மத்திய வங்கி ஆளுநர் பதவியில் மாற்றத்தை கொண்டுவர அரசாங்கம் தயாராகிவரும் நிலையில், ஊடகங்களுக்கு உரையாற்றிய போதே முன்னாள் ஜனாதிபதி இதனை தெரிவித்தா்.
பொருளாதார வல்லுநர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் ஒன்றிணைந்து பொருளாதாரத்தை வலுப்படுத்த தேவையான வளர்ச்சிகளை விவாதிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
“ஒரு நபரை மாற்றுவதன் மூலம் அதை அடைய முடியாது. இறக்குமதி/ஏற்றுமதி மற்றும் நிறுவனப் பங்குகள் போன்ற பல அம்சங்கள் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதில் தாக்கம் செலுத்துகின்றன”என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த பிரச்சினைக்கான தீர்வு ஒரு பொதுவான வளர்ச்சி கட்டமைப்பில் உள்ளது எனவும் அவர் மேலும் கூறினார்.
நாட்டின் பொருளாதார பிரச்சினையை ஒரே நாளில் தீர்க்க முடியாது. இதற்கு ஆரோக்கியம் மற்றும் கல்வி போன்ற மேம்பாட்டு அம்சங்களை உள்ளடக்கிய நீண்ட காலத் திட்டம் அவசியம் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.