ஜனாதிபதி ரணிலின் கரங்களை தமிழ்க்கட்சிகள் பலப்படுத்த வேண்டும் – பிரதமர் தினேஷ் குணவர்த்தன

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து அவரின் கரங்களைப் பலப்படுத்தி அரசியல் தீர்வை விரைவாக வென்றெடுக்கத் தமிழ்க் கட்சிகள் முன்வர வேண்டும் என பிரதமர் தினேஷ் குணவர்த்தன அழைப்பு விடுத்துள்ளார்.

அதைவிடுத்து வெளியில் இருந்துகொண்டு ஜனாதிபதியையும், அரசையும் தமிழ்க் கட்சிகள் சாடுவதால் எந்தப் பயனும் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிங்கள ஊடகம் ஒன்றின் சிரேஷ்ட ஊடகவியலாளருக்கு வழங்கிய செவ்வியின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சம்பந்தனையும் அவரின் கட்சியையும் நாங்கள் மதிக்கின்றோம். கஜேந்திரகுமாரையும் அவரின் கட்சியையும் நாங்கள் மதிக்கின்றோம். விக்னேஸ்வரனையும் அவரின் கட்சியையும் நாங்கள் மதிக்கின்றோம்.

ஆனால், இந்த மூன்று தரப்பினரும் வெளியில் இருந்துகொண்டு அரசியல் தீர்வு வேண்டும் என்று கோருகின்றார்கள். அவர்கள் அனைவரும் ஜனாதிபதியுடன் இணைந்து ஜனாதிபதியின் கரங்களைப் பலப்படுத்தினால் தீர்வை விரைவில் வென்றெடுக்க முடியும்.

அவர்கள் வெளியில் தனித்தனியே நின்று கட்சி அரசியல் செய்வதால் மக்களுக்கு எந்தப் பயனும் கிடைக்காது. தீர்வை வென்றெடுக்கத் கிடைத்துள்ள அருமையான சந்தர்ப்பத்தைத் தமிழ்க் கட்சிகள் தவறவிடக்கூடாது எனவும் தெரிவித்தார்.

அமைச்சரவையில் பாதியை ஜனாதிபதி பதவி நீக்கம் செய்ய வேண்டும்

என்னைச் சந்திப்பதன் மூலம் அமைச்சரவை கட்டுப்பாடுகள் மீறப்படுகின்றது என்றால் தற்போதுள்ள அமைச்சரவையில் இருக்கின்ற அரைவாசி அமைச்சர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மோசடிகளை வெளிப்படுத்திய நபரை விளக்கிவிட்டு மோசடி குழுவினரை பாதுகாத்துக் கொண்டு இருக்கின்றார்கள்.

எதிர்கட்சி அலுவலகத்தில் இந்திய உயர்ஸ்தானிகர் என்னுடன் கலந்துரையாடி கொண்டிருந்தார்.

இதன் போது இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி விளையாட்டுத்துறை அமைச்சரை வரவழைத்து இந்திய உயர்ஸ்தானிகரின் தலையீடுகளுடன் கிரிக்கெட் நெருக்கடிக்கு தீர்வு காணும் நோக்கத்துடனேயே நான் அவரை அழைத்தேன்

நான் கிரிக்கெட் நெருக்கடியை தீர்ப்பதற்காகவே செயற்பட்டேன்.

அவ்வாறு இல்லாமல் ரொசான் ரணசிங்கவை இணைத்துக்கொண்டு அரசியல் சூழ்ச்சிகளை முன்னெடுப்பதற்காக நான் அவரை அழைக்கவில்லை.

இவ்வாறு அவர் என்னை சந்தித்ததன் மூலம் அமைச்சரவை கட்டுப்பாடுகள் மீறப்படுகின்றது என்றால் தற்போதுள்ள அமைச்சரவையில் இருக்கின்ற அரைவாசி அமைச்சர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

அவர்களும் என்னை வந்து சந்திக்கின்றார்கள்” என அவர் மேலும் தெரிவித்தார்.

பொது நிறுவனங்களாக மாற்றப்படவுள்ள அரச ஊடகங்கள்

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் ஆகியவை பொது நிறுவனங்களாக மாற்றப்படும் என வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அமைச்சுசார் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனமும் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனமும் தொடர்ந்தும் நட்டத்தை ஈட்டும் நிறுவனங்களாகக் காணப்படுவதாக வெகுசன ஊடகத்துறை அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் தெரியவந்துள்ளது.

2015 ஆம் ஆண்டு முதலான புள்ளி விபரங்களை முன்வைத்து, இந்த அலைவரிசைகள் எவ்வாறு நட்டம் அடைந்துள்ளன என்பதை குழுவின் தலைவர் தௌிவுபடுத்தியுள்ளார்.

இந்த அலைவரிசைகளுக்கு திறைசேரியிலிருந்து மேலும் நிதியை வழங்குவது கடினம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் ஆகியவற்றை பொது நிறுவனங்களாக மாற்றுவதற்கு திட்டமிடப்பட்டிருப்பதாகவும் இதற்கமைய, இவ்விடயத்தில் மேலதிக நடவடிக்கைகளை எடுப்பதற்கு குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை தீர்மானித்திருப்பதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வடிவேல் சுரேஷ் அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்கம்

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ், கட்சியின் பசறை அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

2024 வரவு- செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின் போது அதற்கு ஆதரவாக வாக்களித்த குற்றச்சாட்டின் அடிப்படையி​லேயே வடிவேல் சுரேஷ் நீக்கப்பட்டுள்ளார். அக்கட்சியின் அமைப்பாளராக லெட்சுமணன் சஞ்சய் நியமிக்கப்பட்டுள்ளார்.

கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் இருந்து நியமனக் கடிதத்தை லெட்சுமணன் சஞ்சய் பெற்றுக்கொண்டார்.

“நான் பதவியை ஏற்றுக்கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன், மேலும் பசறையில் உள்ள இளைஞர்களுக்காக பணியாற்ற ஆவலுடன் இருக்கிறேன். விரைவில் அரசியலில் இளைஞர்கள் முக்கிய இடத்தைப் பெறுவார்கள்,” என்றார்.

இலங்கையின் பிரச்சினையை தமிழ்நாடு அரசுகள் புரிந்து கொள்ளத் தவறிவிட்டன – முத்தையா முரளிதரன்

இலங்கை உள்நாட்டுப் போரின் போது இந்தியா, குறிப்பாக தமிழ்நாட்டு அரசுகள் இனக் கலவரத்தைப் புரிந்து கொள்ளத் தவறிவிட்டன என்று புகழ்பெற்ற சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

கோவாவில் நடைபெற்ற இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) அவரது வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட ஸ்போர்ட்ஸ் பயோபிக் திரைப்படமான ‘A Legendary 800 – Against All Odds’ குறித்த மாஸ்டர் கிளாஸ் அமர்வின் போது அவர் இதை பேசினார்.

‘இலங்கையில் உள்ள பிரச்சனையை… இந்தியா ஒருபோதும் புரிந்து கொள்ளவில்லை. இது உண்மை. அதைச் சொல்ல எனக்குப் பயமில்லை… இந்தியா என்றால் மத்திய அரசை நான் சொல்லவில்லை,

தமிழக அரசுக்கு அங்குள்ள உண்மையான பிரச்சனை என்னவென்று புரியவில்லை. ஏனெனில் இலங்கையில் இது மிகவும் வித்தியாசமானது. இலங்கையில் தமிழ் சமூகத்தில், பல துணைக்குழுக்கள் உள்ளன. இது அனைத்தும் இணைக்கப்பட்டுள்ளது, ஆனால் அரசியல் ரீதியாக பிரிக்கப்பட்டுள்ளது.

எனது தாத்தா தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். 1920களில் தேயிலைத் தோட்டங்களுக்கு வேலைக்காக இலங்கை சென்றார். ஆங்கிலேயர்கள் எங்களை வலுக்கட்டாயமாக அங்கு அழைத்துச் சென்றனர். அதனால்தான் இலங்கையில் எங்கள் தலைமுறை உருவானது. நாங்கள் அனைவரும் மத்திய மலைநாட்டில் வளர்ந்தோம். நாங்கள் இந்திய வம்சாவளி தமிழர்கள் என்று அழைக்கப்படுகிறோம். அவர்கள் இலங்கைத் தமிழர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்… அவர்கள் பேசும் விதம், ஸ்லாங் வேறு, ஆனால் மொழி ஒன்றுதான்.

எனவே சிலர் ஒரு பகுதியை பிரித்து ஒரு தனி நாட்டை உருவாக்க விரும்பினர். மத்திய பிராந்தியத்தில் நாங்கள் தனி நாடு விரும்பவில்லை. நாங்கள் அனைவருடனும் இணக்கமாக வாழ விரும்பினோம்.

இந்தியாவில் உள்ள ஒரு சில அரசியல்வாதிகள் தனது நாட்டில் உள்ள பிரச்சினையை புரிந்து கொள்ளவில்லை.

போர் மற்றும் என்ன நடந்தது என்பது பற்றி நான் எதுவும் கூறாததாலும், நான் அரசாங்கத்திற்கு ஆதரவாக பார்க்கப்பட்டதாலும்… 5-10 சதவீத அரசியல்வாதிகள் நான் இனத்திற்கு துரோகி என்று நினைக்கிறார்கள்’. இவ்வாறு முத்தையா முரளிதரன் பேசினார்.

இப்படத்தில் விஜய் சேதுபதி முதலில் நடிக்க ஒப்புக்கொண்டதை அடுத்து நடந்த போராட்டங்கள் குறித்து படத்தின் இயக்குனர் எம்.எஸ்.ஸ்ரீபதி பேசுகையில், சேதுபதியை நடிக்க வைப்பது பிரச்சனையாகிவிடும் என்று தாங்கள் எதிர்பார்க்கவில்லை, என்றார்.‘ஒரு விளையாட்டு வீரரைப் பற்றிய ஒரு ஊக்கமளிக்கும் திரைப்படத்தை நாங்கள் எடுக்கிறோம் என்று நினைத்தோம். ஆனால் மக்கள் சினிமாவை சினிமாவாக பார்க்கவில்லை. அதை ஒரு வகையான பிரச்சாரம் என்று நினைக்கிறார்கள்… மேலும் பல அரசியலும் படங்களுக்குள் சிக்கிக் கொள்கிறது. அரசியல் மற்றும் திரைப்படங்களைப் பற்றி பேசுவதில் தவறில்லை, ஆனால் உங்களால் முடிந்ததைச் செய்ய முடியாமல் இருப்பது உங்களை மூச்சுத் திணறச் செய்வது போன்றது.

எனவே, நாங்கள் ஒரு முடிவை எடுக்க வேண்டியிருந்தது. விஜய் சேதுபதி ஒருபோதும் விலக விரும்பவில்லை, ஆனால் பிறகு அவர்தான் ஏன் இவ்வளவு வம்புகளை உருவாக்க வேண்டும் என்றார்? அதனால் வேறு நடிகரைத் தேடினோம்’, என்று ஸ்ரீபதி கூறினார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியின் போது நடுவரால் சக்கிங் என்று புகார் அளிக்கப்பட்ட சம்பவத்தை நினைவு கூர்ந்த முரளிதரன்,

1995 இல், நான் சிக்கலில் இருந்தபோது – நான் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவன், இலங்கைக்காக விளையாடினேன், அப்போது தமிழ்ப் போர் உச்சத்தில் இருந்தது. மதம் அல்லது எதையும் பார்க்காமல் இந்தியாவைப் போலவே இலங்கையும் எனக்கு ஆதரவளித்தது.2009 ஆம் ஆண்டு பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தின் போது லாகூரில் இலங்கை கிரிக்கெட் அணி பயணித்த பேருந்து மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலையும் முரளிதரன் நினைவு கூர்ந்தார்.

’அது பயங்கரமாக இருந்தது. நாங்கள் வாத்துகளைப் போல உட்கார்ந்து இருந்தோம். எங்கள் பேருந்தில் இருந்த பாதுகாப்புப் பணியாளர்களிடம் ஆயுதங்கள் எதுவும் இல்லை’… என்றார்.

இலங்கைக்கான தென்னாபிரிக்க தூதுவர் மட்டக்களப்பு விஜயம்

இலங்கைக்கான தென்னாபிரிக்க நாட்டு உயரஸ்தானிகர் சண்டிலி இ.ஸ்சோல்க் இன்று செவ்வாய்க்கிழமை (28) மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்தார்.

மட்டக்களப்புக்கு விஜயம் செய்த தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் கிழக்கின் பிரசித்தி பெற்ற பாடசாலையான ஆங்கிலேயரால் ஸ்தாபிக்கப்பட்ட மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரிக்கு விஜயம் செய்து கல்லூரி தேவைகள் குறித்தும் கல்லூரி அதிபருடனும் நலன் விரும்பிகளுடனும் கலந்துரையாடினார்.

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் வழிகாட்டலில் கிழக்கு மாகாண சுற்றுலா அதிகார சபையின் தலைவர் ஏ பி மதன் நெறிப்படுத்தலில் குறித்த தென்னாபிரிக்க மிகஸ்தானிகள் மட்டக்களப்புக்கு விஜயம் செய்திருந்தார்.

புனித மிக்கேல் கல்லூரியின் அதிபர் அண்டன் பெனடிக் ஜோசப் தலைமையில் பாடசாலையின் அபிவிருத்தி குறித்தும் பாடசாலையினுடைய தேவைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட சாரண ஆணையாளர் விவேகானந்தன் பிரதீபன் உள்ளிட்ட பலர் இங்கு சமூகம் அளித்திருந்தனர்.

பாடசாலையின் தேவைகள் குறித்து உயரஸ்தானிகளிடம் முன்வைக்கப்பட்ட வேண்டுகோள்களை ஏற்றுக்கொண்ட வீர சாணிகள் எதிர்காலத்தில் இது தொடர்பாக பரிசீலனை செய்வதாக உறுதி அளித்துள்ளார்.

சேவைக்காலம் முடிவடைந்த நிலையில் வெளியேறவுள்ள இந்திய தூதுவருக்கு சபாநாயகர் நன்றி தெரிவிப்பு

இலங்கைக்கு வழங்கிய அனைத்து ஒத்துழைப்புக்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவிடம் குறிப்பிட்டார்.

சேவைக்காலத்தை முடித்துக்கொண்டு வெளியேறவுள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவுக்கும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.

இதன்போதே சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் கூறுகையில்,

பொருளாதார நெருக்கடியின் போது இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க இந்தியாவே முதலாவதாக முன்வந்தது.

தனது சேவைக்காலத்தில் இலங்கை – இந்திய தொடர்புகளை விருத்தி செய்வதற்கு வழங்கிய அனைத்து ஒத்துழைப்புக்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவிடம் குறிப்பிட்டார்.

இதேவேளை, இலங்கை தொடர்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி விசேட கவனம் செலுத்துவதாகவும், இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இந்தியா சாதகமான நிலையில் உள்ளது எனவும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே சபாநாயகரிடம் தெரிவித்தார்.

கொக்குதொடுவாய் – முல்லைத்தீவு வீதியின் மையப்புள்ளி வரை மனித புதைகுழி விஸ்தரிக்கப்பட்டுள்ளது – சட்டவைத்திய அதிகாரி வாசுதேவ

கொக்குதொடுவாய் மனித புதைகுழியானது கொக்குதொடுவாய் – முல்லைத்தீவு மையப்புள்ளி வரை விஸ்தரிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட விஷேட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவ தெரிவித்துள்ளார்.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியானது நேற்றையதினம் (27.11.2023) ஏழாவது நாளாக இடம்பெற்று நிறைவடைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலையே தெரிவித்தார்.

ஏழாவது நாளாக தொடர்ந்த கொக்குதொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வாய்வு நேற்றையதினம் நிறைவடையும் போது மூன்று மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டிருந்தது. நேற்றைய தினத்துடன் 37 எலும்புகூட்டு தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த வாரத்தில் இடம்பெற்ற விஷேட ராடர் பரிசோதனையின் போது குறித்த மனித புதைகுழியானது கொக்குதொடுவாய் – முல்லைத்தீவு நெடுஞ்சாலையின் மையப்புள்ளி வரை விஸ்தரிக்கப்பட்டு செல்வது அவதானிக்கபட்டுள்ளது. இது சம்பந்தமான முடிவுகள் எதிர்வரும் காலங்களில் நீதிமன்ற நடவடிக்கையின் போது தீர்மானிக்கப்படும்.

இன்று செவ்வாய்க்கிழமை (28) அகழ்வு பணியானது எட்டாவது நாளாக தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் கடந்த செப்ரெம்பர் மாதம் 06 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு செப்ரெம்பர் (15) வரை அகழ்வாய்வுகள் இடம்பெற்றிருந்தது. இவ் அகழ்வு பணியில் 17 எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்ட நிலையிலும், துப்பாக்கி சன்னங்கள், விடுதலைப் புலிகள் அமைப்பினர் பயன்படுத்தும் இலக்க தகடு, உடைகள் உள்ளிட்ட சான்றுப்பொருட்களும் மீட்கப்பட்டிருந்த நிலையில் குறித்த அகழ்வு பணியானது இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் இம்மாதம் 20 ஆம் திகதி அன்று மீண்டும் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்திய உயர்ஸ்தானிகர் பாக்லே வடக்கிற்கு மூன்று நாள் விஜயம்

இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே புதன்கிழமை மூன்று நாள் விஜயமாக வடக்கு மகாணத்திற்குச் செல்லவுள்ளார்.

இந்த விஜயத்தின் முதன் நாளான நாளையதினம் மதவாச்சியில் பாடசாலைகளுக்கான உதவித்திட்டங்களை கையளிக்கவுள்ளதோடு, அதனையடுத்து மன்னார் பியர் பகுதிக்கும், பின்னர் திருக்கேதீச்வரர் ஆலயத்துக்கும் செல்லவுள்ளார்.

தொடர்ந்து முதன்நாளின் இறுதி நிகழ்வாக இரவு நேர விருந்துபசாரத்துடன் வடக்கு மாகாண அரசியல்தரப்பினரைச் சந்தித்து உரையாடவுள்ளார்.

இரண்டாவது மற்றும் மூன்றாம் நாளான 30ஆம் மற்றும் முதலாம் திகதிகளில் நயினாதீவுக்குக்கான விஜயமொன்றை அவர் மேற்கொள்ளவுள்ளதோடு நயினை நாகபூசனி அம்மன் ஆலயத்துக்கும், நாகவகாரைக்கும் விஜயம் செய்து வழிபாடுகளில் ஈடுபடவுள்ளார்.

தொடர்ந்து , யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் நூறு பேருக்கான புலமைப்பரிசில்களை கையளிக்கும் நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளதோடு, தெரிவு செய்யப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு உதவிப்பொருட்களையும் கையளிக்கவுள்ளார்.

இதனைவிடவும், மதத்தலைவர்கள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, டிசம்பர் மாதத்துடன் உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இலங்கைக்கான கடமைகளை பூர்த்தி செய்யவுள்ளதோடு அதனையடுத்து அவர் அவுஸ்ரேலியாவுக்கான உயர்ஸ்தானிகராக நியமனம் பெற்றுள்ளார்.இந்நிலையில், உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயின் வடக்கிற்கான இந்த விஜயமானது பரியாவிடையளிப்பதாகவும், தனது காலத்தில் கிடைக்கப்பெற்ற ஒத்துழைப்புக்களுக்கு நன்றிகளை செலுத்தும் முகமாகவும் இடம்பெறவுள்ளது.

முன்னதாக, இந்திய வெளிவிவகார அமைச்சானது, பெல்ஜியத்தில் தூதுவராக கடமையாற்றி வரும் சந்தோஷ் ஜாவை இலங்கைக்கான தனது நாட்டின் புதிய உயர்ஸ்தானிகராக பெயரிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆயுதப்போராட்டம் முடிவுக்கு வந்திருப்பினும் அரசியல்போராட்டம் இன்னமும் மரிக்கவில்லை – பிரபாகரனின் மகள் என அடையாளப்படுத்தி கொள்ளும் பெண் உரை

ஆயுதப்போராட்டம் முடிவுக்கு வந்திருந்தாலும், சுதந்திரத்துக்கான மற்றும் ஈழத்தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கான அரசியல் போராட்டம் முடிவுக்கு வரவில்லை எனவும், மாவீரர்களின் தியாகங்கள் மற்றும் மாண்டுபோன மக்களின் ஈகைகள் அதற்கு வழிகாட்டும் எனவும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புதல்வி துவாரகா என ‘தமிழ் ஒளி’ இணையப்பக்கத்தால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள பெண் தெரிவித்துள்ளார்.

அதுமாத்திரமன்றி தாம் ஒருபோதும் சிங்கள மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல எனவும், சிங்கள மக்களுக்கு எதிராக செயற்பட்டதில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ள அவர், தவறான கருத்துக்கள் விதைக்கப்பட்டு சிங்கள மக்கள் தமிழர்களுக்கு எதிராகத் தூண்டிவிடப்பட்டார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மாவீரர் நாளான நேற்று திங்கட்கிழமை (27) ‘தமிழ் ஒளி’ எனும் இணையத்தளப்பக்கமொன்று இயங்க ஆரம்பித்ததுடன், அதில் நேற்று மாலை 5.20 மணிக்கு மாவீரர்தின நிகழ்வு எனும் பெயரில் நேரடி ஒளிபரப்பொன்று இடம்பெற்றது. அதில் இலங்கை தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகள் துவாரகா உரையாற்றுவார் எனக்கூறப்பட்டு, அவரது உரையும் ஒளிபரப்பப்பட்டது. கணினித்தொழில்நுட்பத்தின் ஊடாக வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படம் மற்றும் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கொடி என்பன பின்னணியாக அமைக்கப்பட்டிருந்ததுடன், அதன்முன் தோன்றிய துவாரகா என்று ‘தமிழ் ஒளி’யினால் கூறப்படும் நபர் ஆற்றிய உரையின் முழுமையான வடிவம் வருமாறு:

அன்புக்குரிய தமிழீழ மக்களே, இன்று மாவீரர் நாள். ‘தமிழீழம்’ என்ற அதியுயர் இலட்சியத்துக்காகத் தமது இன்னுயிர்களைத் தியாகம் செய்த எமது காவல் தெய்வங்களை எமது இதயக்கோவில்களில் பூஜிக்கும் இத்திருநாளில் உங்கள்முன் உரையாற்றுவதற்குக் காலம் எனக்கு வாய்ப்பளித்திருப்பதைப் பெரும் பேறாகவே கருதுகிறேன். இப்படியொரு சந்தர்ப்பம் எனது வாழ்நாளில் ஏற்படும் என்று நான் நினைத்திருக்கவில்லை. எத்தனையோ ஆபத்துக்கள், நெருக்கடிகள், சவால்கள், துரோகங்களைக் கடந்தே நான் இன்று உங்கள்முன் உரையாற்றுகின்றேன். அதேபோன்று என்றோ ஒருநாள் தமிழீழத் தாயகம் திரும்பி எமது மக்களுடன் ஒன்றாக இருந்து அவர்களுக்கு சேவையாற்றுவதற்கு காலம் எனக்க வாய்ப்பளிக்கும் என்ற அசையாத நம்பிக்கை உண்டு.

ஒன்றுமொத்த உலகமுமே அதியமடையும் வகையில் சாதனை படைத்தவர்கள் எமது மாவீரர்கள். எதிர்த்துநின்று எம்மோடு போர்புரியத் திராணியற்ற நாடுகளை சிங்கள அரசு தன்பக்கம் வளைத்தது. தோல்வியின் விளிம்பில் நின்ற தருணங்களில் எல்லாம் அந்நிய சக்திகளிடமும், ஏனைய நாடுகளிடமும் மண்டியிட்டு யாசகம் கேட்டது. எமது தேச சுதந்திர இயக்கத்தின் மீது உலகின் பல நாடுகளால் தடைகள் விதிக்கப்பட்டு, எமது சொத்துக்கள் முடக்கப்பட்டன. தமிழீழத் தாயகத்துக்கான விநியோகப்பாதைகள் மூடப்பட்டன.

எமது தேசவிடுதலை இயக்கம் பலவீனப்படுத்தப்பட்ட ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அந்நிய நாடுகள் தலையிட்டு சிங்கள அரசுக்கு உயிர்ப்பூட்டின. உலகில் ஒரு மூலையில் தனித்துநின்று, எமது மக்களின் ஆதரவில் மாத்திரம் தங்கிநின்று போராடிய எமது தேசவிடுதலை இயக்கத்தின் ஆயுதப்போராட்டம் முள்ளிவாய்க்காலில் மௌனித்துப்போவதற்கு இதுவே காரணமாகும். ஆனாலும் அரசியல் சுதந்திரத்துக்கான எமது போராட்டம் முற்றுப்பெறவில்லை.

தமிழீழம் என்ற இலட்சியம் கருக்கொள்ளக் காரணமான புறநிலைச்சூழ்நிலைகள் இன்றும் அப்படியேதான் இருக்கின்றன. தமது தாயகபூமியில் தம்முடைய கலாசார, பண்பாட்டு விழுமியங்களையும் பாதுகாக்கமுடியாதவாறு சீரழிவுகளை மேற்கொள்வதுடன், சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை முன்னிறுத்தும் நடவடிக்கைகளை சிங்கள பௌத்த அரசு முழுமூச்சுடன் முன்னெடுத்துவருகின்றது. இதுபோதாதென்று ஈழத்தமிழ் தாயகம் சிங்களப்படைகளால் முற்றுமுழுதாக மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது.

சுதந்திரமும், அனைத்து உரிமைகளும் மறுக்கப்பட்ட தேசமாகத் தமிழீழம் திகழ்கிறது. சட்டவாட்சி மறுக்கப்பட்டு, பயங்கரவாதத்தடைச்சட்டம், அவசரகாலச்சட்டம் என எந்நேரமும் இராணுவத்தின் ஆட்சியை சிங்கள அரசு திணித்துள்ளது. குரல்வளை நசுக்கப்பட்டவர்களாகவே எமது மக்கள் ஈழத்தில் வாழ்கின்றனர்.

மறுபுறத்தில் போர்நிகழ்ந்த காலத்தில் ஆசைவார்த்தைகூறிய உலகின் சக்திவாய்ந்த நாடுகள், இன்றளவிலும் எமது மக்களுக்கு காத்திரமானதொரு அரசியல் தீர்வை வழங்கவில்லை. ஈழத்தீவில் தமிழ்மக்களுக்கு இழைக்கப்பட்டது போர்க்குற்றமென்றும், மனித உரிமை மீறலென்றும் கடந்த 14 ஆண்டுகளில் பல்வேறு அறிக்கைகளை வெளியிட்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் பல தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. இருப்பினும் எந்தவொரு தரப்பினரும் ஈழத்தமிழர்களுக்கான தீர்வைப் பெற்றுத்தரவில்லை. இவையே எமது அரசியல் போராட்டம் இன்னமும் உயிர்ப்புடன் இருப்பதற்கான காரணங்களாகும்.

1950 களில் சமஷ்டியைக்கோரி எழுச்சியடைந்த எமது போராட்டம் 1960 களில் ஆயுதபலத்தைப் பயன்படுத்தி சிங்கள அரசால் நசுக்கப்பட்டது. 1970 களில் போர்க்குணமுடைய இளைய தலைமுறை தோற்றம்பெற்றது. சிங்கள ஆயுதப்படைகளையும், அதன் அரச ஒடுக்குமுறை இயந்திரத்தையும் எதிர்த்து வீரம் செறிந்த ஆயுதப்போராட்டத்தை எமது இளைஞர்கள் நிகழ்த்தினார்கள். எமது தேசியத்தலைவரும், எனது தந்தையுமாகிய வேலுப்பிள்ளை பிரபாகரனின் வழிநடத்தலில் ஆயிரமாயிரமாய் இளைஞர்களும், யுவதிகளும் அணிதிரண்டனர். அவர்கள் தமிழீழத்துக்காய் தமது இன்னுயிரைத் தியாகம்செய்த மாவீரர்களே. அவர்கள் என்றும் காலத்தால் அழியாதவர்கள். அந்த மகத்தான, உன்னதமானவர்களை என்றுமே எமது மனக்கோவிலில் வைத்துப் பூஜிப்போம்.

ஆயுதப்போராட்டம் முடிவுக்கு வந்திருந்தாலும், சுதந்திரத்துக்கான மற்றும் எமது அரசியல் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கான அரசியல் போராட்டம் உயிர்ப்போடு இருப்பதற்கு புலம்பெயர் தேசங்களில் வாழ்வோரும், எமது மக்களும், அரசியல் தலைவர்களும், முன்னாள் போராளிகளும், செயற்பாட்டாளர்களுமே காரணம் என்பேன். சுதந்திரத்துக்கான போராட்டம் முனைப்புடன் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. இவ்வாறான யதார்த்த சூழமைவில் மக்களென்றும், புலிகளென்றும் ஈழத்தமிழர்களை வேறுபடுத்திப்பார்ப்பது அர்த்தமற்றது. மக்களே புலிகளாகவும், புலிகளே மக்களாகவும் விளங்கும் யதார்த்தம் எமது போராட்டத்தின் பரிணாமமாகும். ஆனாலும் எமது அரசியல் போராட்டத்தை மேலும் வினைத்திறனுடன் முன்னெடுத்து, எமது அரசியல் உரிமைகளை வென்றெடுக்கவேண்டியவர்களாக நாங்கள் இருக்கின்றோம். கட்சிபேதங்கள், அமைப்புக்களுக்கு இடையில் நிலவும் வேறுபாடுகளைக் கடந்து தமிழீழ அபிலாஷைகளை வென்றெடுப்பதற்காகவும், இனப்படுகொலை தொடர்பில் நீதியை நிலைநாட்டுவதற்காகவும் ஒற்றுமையோடும், வினைத்திறனோடும் ஒன்றிணைந்து பயணிக்கவேண்டிய கடப்பாடு ஈழத்தமிழ் மக்களுக்கும், புலம்பெயர் தேசங்களில் வாழும் ஒவ்வொரு ஈழத்தமிழனுக்கும் உண்டு. எமக்கிடையில் கருத்து வேறுபாடுகள் நிலவலாம். ஆனால் அரசியல் தீர்வு என்று வரும்போது நாமனைவரும் ஒரே கோட்டில் பயணிக்கவேண்டிய நிலையில் இருக்கின்றோம்.

அதேவேளை தாயகத்தில் வறுமைக்கோட்டின்கீழ் வாழும் எமது மக்களினதும், கடந்தகாலங்களில் தமது வாழ்வை அர்ப்பணித்துப்போராடிய முன்னாள் போராளிகளினதும் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்பி, வாழ்க்கையை மேம்படுத்தவேண்டிய கடப்பாட்டைக் கொண்டவர்களாக புலம்பெயர் தேசங்களில் வாழும் வளம்பொருந்திய எமது மக்கள் இருக்கின்றனர். ஈழத்தமிழர்கள் அனைவரையும் பொறுப்பேற்று, அவர்களுக்கு உதவி புரிந்தால் அந்நிய தேசத்திடம் கையேந்திநிற்கும் நிலை அவர்களுக்கு ஏற்படாது. இத்தனை ஆண்டுகளாக எமக்காகத் தொடர்ந்து குரலெழுப்பி பக்கபலமாகத் திகழும் தமிழக உறவுகளுக்கும், அரசியல் தலைவர்களுக்கும், உலகத்தமிழ் மக்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். அதுமாத்திரமன்றி இந்தியாவிலும், உலகநாடுகளிலும் எம்மோடு துணைநிற்கும் உறவுகளின் கரங்களையும் வாஞ்சையுடன் பற்றிக்கொள்கின்றேன். ஈழத்தமிழ் மக்களின் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்காக நீங்கள் தொடர்ந்து குரல்கொடுப்பீர்கள் என்ற அசையாத நம்பிக்கை எனக்கு உண்டு.

எனது அன்பார்ந்த மக்களே, நாம் வரித்துக்கொண்ட இலட்சியமும், அதற்காக மாவீரர்கள் கொடுத்த விலையும், எமது தேசம் சந்தித்த இழப்புக்களும் அளப்பரியவை. இவை ஒருநாளும் வீண்போகாது. மாற்றங்கண்டுள்ள உலக ஒழுங்குக்கு ஏற்றவாறு அறவழியில் நின்று நாம் தொடர்ந்தும் போராடுவோம். எல்லாவிதத்திலும் அரசியல் போராட்டம் மிகவும் கடினமானது. அவ்வகையான போராட்டத்துக்கு பொறுமையும், நம்பிக்கையும், இலட்சிய உறுதியும் இன்றியமையாதவை என்பதை நான் உணர்ந்துகொள்ளாமல் இல்லை.

இந்நேரத்தில் சிங்கள மக்களுக்கு ஒரு விடயத்தைக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். நாம் என்றுமே சிங்கள மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல. சிங்கள மக்களுக்கு எதிராக நாம் செயற்பட்டதுமில்லை. தவறான கருத்துக்கள் விதைக்கப்பட்டு சிங்கள மக்கள் தமிழர்களுக்கு எதிராகத் தூண்டிவிடப்பட்டார்கள் என்பதை நானறிவேன். எமது தேசியத்தலைவர் குறிப்பிட்டதுபோன்று, எமது பாதைகள் மாறலாம். ஆனால் எமது இலட்சியங்கள் ஒருபோதும் மாறப்போவதில்லை. மாவீரர்களின் தியாகங்களும், மாண்டுபோன மக்களின் ஈகங்களும் எமது மக்களுக்கு வழிகாட்டும். நாம் எமது இலட்சியத்தின் பாதையில் சென்று, அதனை ஒருநாள் அடைந்தே தீருவோம். புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்.