காலாந்தர மீளாய்வுக்குழுவின்115 பரிந்துரைகளை இலங்கை ஏற்கவில்லை : மனித உரிமைகளுக்கான சர்வதேச பேரவை விசனம்

ஐக்கிய நாடுகள் உலகளாவிய காலாந்தர மீளாய்வுக்குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளில் மரண தண்டனையை ஒழித்தல், கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரம் ஆகியவற்றுடன் தொடர்புபட்ட 115 பரிந்துரைகளை இலங்கை ஏற்காமை குறித்துக் கரிசனையை வெளிப்படுத்தியிருக்கும் மனித உரிமைகளுக்கான சர்வதேச பேரவை, இம்மீளாய்வுக்குழுவின் அனைத்துப் பரிந்துரைகளையும் நடைமுறைப்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் உலகளாவிய காலாந்தர மதிப்பீடு தொடர்பான குழுவானது இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் குறித்த 4 ஆவது மீளாய்வினைக் கடந்த பெப்ரவரி மாதம் முதலாம் திகதி மேற்கொண்டிருந்தது.

இம்மீளாய்வின்போது கண்டறியப்பட்ட விடயங்களையும், மனித உரிமைகள் பாதுகாப்பை முன்னிறுத்தி இலங்கை மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் பற்றிய 294 பரிந்துரைகளையும் உள்ளடக்கிய 24 பக்க அறிக்கை கடந்த மாத நடுப்பகுதியில் வெளியாகியிருந்தது.

அதன்படி கடந்த மாதம் 19 ஆம் திகதி ஆரம்பமான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது கூட்டத்தொடரின் நேற்று முன்தினம் திங்கட்கிழமை நடைபெற்ற அமர்வில், இலங்கை தொடர்பான உலகளாவிய காலாந்தர மீளாய்வு அறிக்கை நிறைவேற்றப்பட்டது.

இதன்போது பேரவையில் உரையாற்றிய ஜெனிவாவுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி ஹிமாலி அருணதிலக, உலகளாவிய காலாந்தர மீளாய்வு அறிக்கையில் மொத்தமாக உள்ளடக்கப்பட்டுள்ள 294 பரிந்துரைகளில் 173 பரிந்துரைகளை ஏற்றுக்கொள்வதாகவும், 115 பரிந்துரைகள் தொடர்பில் அவதானம் செலுத்துவதாகவும் (ஏற்றுக்கொள்ளவில்லை), 6 பரிந்துரைகளை நிராகரிப்பதாகவும் அறிவித்தார்.

இவ்வாறானதொரு பின்னணியில் இதுகுறித்து மனித உரிமைகளுக்கான சர்வதேச பேரவையும், இலங்கையிலுள்ள அதன் பங்காளி அமைப்பான மனித உரிமைகள் மற்றும் அபிவிருத்திக்கான நிலையமும் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டிருப்பதாவது:

உலகளாவிய காலாந்தர மதிப்பீட்டு அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் தொடர்பில் இலங்கை வெளிக்காட்டியுள்ள துலங்கல் அதிருப்தியளிக்கின்றது.

குறிப்பாக இலங்கை ‘அவதானம் செலுத்துவதாகக்’ கூறியுள்ள அனைத்துப் பரிந்துரைகளும் பெரும்பாலும் மரண தண்டனையை முற்றாக இல்லாதொழித்தல், கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரம், அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களைப் பாதுகாத்தல் ஆகியவற்றுடன் தொடர்புபட்டவையாக உள்ளன.

அதுமாத்திரமன்றி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 30ஃ1, 46ஃ1 மற்றும் 51ஃ1 ஆகிய பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரையை இலங்கை நிராகரித்திருப்பது தீவிர கரிசனையைத் தோற்றுவித்துள்ளது.

இருப்பினும் பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முற்றாக நீக்குதல் மற்றும் திருத்தங்களை மேற்கொள்ளல் என்பன தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொண்டிருப்பது வரவேற்கத்தக்கதாகும்.

ஆனால் அண்மையில் பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்யும் நோக்கில் அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள புதிய சட்டமூலத்திலும் கரிசனைக்குரிய சரத்துக்கள் உள்ளடக்கப்பட்டிருப்பதுடன் அவை சர்வதேச சட்டங்களின் பிரகாரம் இலங்கை கொண்டிருக்கும் கடப்பாடுகளைப் பூர்த்திசெய்யும் வகையில் அமையவில்லை.

அதுமாத்திரமன்றி பெரும்பாலும் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் சரத்துக்களுக்கு அமைவாக நடைமுறைப்படுத்தப்படும் தன்னிச்சையான தடுத்துவைப்புக்களை முடிவுக்குக்கொண்டுவருமாறும், நியாயமான வழக்கு விசாரணைகளுக்கு உட்படுவதற்கான உரிமைக்கு மதிப்பளித்து, அதனை உறுதிப்படுத்துமாறும் இவ்வறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரையை இலங்கை ஏற்றுக்கொள்ளவில்லை.

இவ்வாறானதொரு பின்னணியில் உலகளாவிய காலாந்தர மீளாய்வைத் தொடர்ந்து முன்வைக்கப்பட்டிருக்கும் அனைத்துப் பரிந்துரைகளையும் நடைமுறைப்படுத்தும் அதேவேளை, சர்வதேச சட்டத்துக்கு அமைவாக இலங்கை கொண்டிருக்கும் கடப்பாடுகளைப் பூர்த்திசெய்யுமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்துகின்றோம் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் முக்கிய சந்திப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரித்தானிய கிளை உறுப்பினர்களுக்கும் அந்த கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தம் கருணாகரத்திற்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

ரெலோ, புளொட், ஈ. பி. ஆர். எல். எப் மற்றும் ஜனநாயக போராளிகள் உள்ளடக்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரித்தானிய கிளை உறுப்பினர்கள் பிரித்தானியாவின் ஹரோ பிரதேசத்தில் ஒன்று கூடியிருந்தனர்.

 

கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலில் இலங்கையில் இருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தம் கருணாகரம் (ஜனா) பங்கேற்றிருந்தார்.

இரண்டு மணி நேரமாக இடம்பெற்ற கலந்துரையாடலில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து இலங்கை தமிழரசு கட்சி வெளியேறிய பின் மீண்டும், புதிதாகவும் இணைந்த கட்சிகளுடன் உருவான புதிய கூட்டணியின் கள நிலவரங்கள்,யாப்பு, நிர்வாக கட்டமைப்பு, எதிர்கால வேலைத் திட்டங்கள், புலம்பெயர் நாடுகளில் ஆற்ற வேண்டிய வேலைத்திட்டங்கள், அடுத்த ஆண்டில் சந்திக்க போகும் தேர்தல்கள், தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன.

இந்த கூட்டத்தில் பங்கு பற்றிய உறுப்பினர்களே பிரித்தானியாவின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிர்வாக குழு உறுப்பினர்கள் எனவும் ஜனநாயக போராளிகள் கட்சியின் உறுப்பினர்கள் வருகை தராததால் அடுத்த கூட்டத்தில் அவர்களையும் உள் வாங்கி நிர்வாக கட்டமைப்பை தெரிவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் அலுவலகம் தொடர்பில் விசாரணை

வவுனியா தேக்கவத்தையில் திறந்து வைக்கப்பட்ட போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் அலுவலகம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு பொலிஸ் அதிகாரிகளுக்கு பொது பாதுகாப்பு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் விசாரணை செய்து தமக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு வவுனியா பிரிவுக்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளதாக கூறியுள்ளார்.

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளின் நலன் சார்ந்து உருவாக்கப்பட்ட போராளிகள் நலன்புரிச் சங்க அலுவலகம் நேற்று முன்தினம் திறக்கப்பட்டது.

அலுவலகம் திறக்கப்பட்ட போது, அன்டன் பாலசிங்கம், தமிழ்ச் செல்வன், அரசியல்துறைத் தலைவர் சிவகுமார், ஆகியோரின் திருவுருவப் படங்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

டெலோ கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்டோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

இலங்கையில் ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளராக மார்க்-ஆண்ட்ரே

இலங்கையில் ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளராக கனடாவைச் சேர்ந்த மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்சேவை ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டெரெஸ், நியமித்துள்ளார்.

24 ஆண்டுகளுக்கும் மேலாக ஐக்கிய நாடுகள் சபையில் பணியாற்றியுள்ள மார்க்-ஆண்ட்ரே கடந்த 8 ஆம் திகதி அமுலாகும் வகையில் கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

இலங்கையில் ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளராக அவர் நியமிக்கப்படுவதற்கு முன்னர், லிபியாவில் ஐ.நா. அபிவிருத்தி திட்டத்தின் வதிவிடப் பிரதிநிதியாக பணியாற்றியிருந்தார்.

2016 மற்றும் 2021 க்கு இடையில், அரசியல் மற்றும் அமைதியை கட்டியெழுப்பும் விவகாரங்கள் திணைக்களத்தில் சமாதானத்தை கட்டியெழுப்பும் ஆதரவு அலுவலகத்திலும் அவர் பணியாற்றி இருந்தார்.

15 மில்லியன் ரூபா இழப்பீடாக செலுத்திய மைத்திரிபால சிறிசேன

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு 100 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதன் நிலையில் அவர் 15 மில்லியன் ரூபாவை நட்டஈடாக வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு செலுத்த வேண்டிய பணத்தை 10 தவணைகளில் வழங்க முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீதிமன்ற அனுமதியை கோரியுள்ளார்.

நீதிமன்ற உத்தரவின் பேரில், கடந்த 28 ஆம் திகதி 15 மில்லியனை இழப்பீடாக செலுத்திய அவர், மீதமுள்ள தொகையை 2024 ஜூன் 30 முதல் 2033 ஜூன் 20 வரை கட்டம்கட்டமாக 8.5 மில்லியனை செலுத்துவதாக கூறியுள்ளார்.

தாக்குதல் சம்பவத்திற்கு முன்னர் தங்களுக்கு கிடைத்த உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் அவர்கள் செயல்படத் தவறியதால் உயிரிழந்தவர்களுக்கு மைத்திரிபால சிறிசேன தனிப்பட்ட நிதியில் இருந்து 100 மில்லியன் ரூபாய் நட்டஈடு வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதேவேளை மைத்திரிபால சிறிசேன தனது சட்டத்தரணிகள் ஊடாக உச்ச நீதிமன்றில் சமர்ப்பித்த பிரேரணையில், முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில் 97,500/- ரூபாவை ஓய்வூதியமாகப் பெறுவதாகவும், பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் 54,285/ ரூபா பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் மூலம் குற்றவியல் வழக்குகள் இடம்பெறவேண்டும் – ஜஸ்மின் சூக்கா

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் மூலம் குற்றவியல் வழக்குகள் இடம்பெறவேண்டும் என்பது குறித்து இலங்கை அரசாங்கம் உறுதியாகயிருக்கவேண்டும் என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேசதிட்டம் என்ற அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

அதன் நிறைவேற்று பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

உண்மை ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் மூலம் குற்றவியல் வழக்குகள் இடம்பெறவேண்டும் என்பது குறித்து இலங்கை அரசாங்கம் உறுதியாகயிருக்கவேண்டும்.

குற்றவியல் வழக்குகளை தவிர்த்தல் சர்வதேச நியமங்கள் மற்றும் தராதரங்களின் அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சமூகத்தின் அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும்.

ஆவணங்களை அழிப்பதை தவிர்த்தல் தொடர்பில் பாதுகாப்பு படையினர் உரிய அமைப்புகள் திணைக்களங்களுக்கு உத்தரவொன்றை பிறப்பிக்கவேண்டும் – ஆவணங்களை அழிப்பதை குற்றமாக அறிவிக்கவேண்டும்.

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணைகளில் முன்வைக்கப்படும் ஆதாரங்களை எதிர்கால வழக்குகளை நோக்கமாக கொண்டு பிந்தைய கட்டத்தில் நீதிமன்றத்தில் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

கால்நடை வளர்ப்பு, பால் உற்பத்தித் துறையில் இந்தியாவுடன் ஒப்பந்தம்

இந்திய மற்றும் இலங்கை அரசாங்கங்களுக்கிடையிலான கால்நடை வளர்ப்பு மற்றும் பால் உற்பத்தித் துறையில் ஒத்துழைப்புக்கான ஒருங்கிணைந்த அக்கறை வெளிப்பாட்டு ஒப்பந்தத்தில கையொப்பமிடுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இலங்கையில் பால் உற்பத்திகளின் தரப்பண்பை அதிகரித்தல், பால் உற்பத்தியில் தன்னிறைவடைதல் மற்றும் சிறியளவிலான பால் உற்பத்தியாளர்களின் வருமானத்தை அதிகரித்தல் போன்ற இலக்குகளை அடைவதற்கு இணைந்து செயலாற்றுவதற்காக இந்திய அரசுக்கும், இலங்கை அரசுக்கும் இடையில் கால்நடை வளர்ப்பு மற்றும் பால் உற்பத்தித் துறையில் ஒத்துழைப்புக்கான ஒருங்கிணைந்த அக்கறை வெளிப்பாட்டு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

அதற்காக வரைவாக்கம் செய்யப்பட்டுள்ள ஒருங்கிணைந்த அக்கறை வெளிப்பாட்டு ஒப்பந்தத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றுள்ளது.

அதற்கமைய, குறித்த அக்கறை வெளிப்பாட்டு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக ஜனாதிபதி மற்றும் விவசாய அமைச்சர் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நீதித்துறையின் சுயாதீன செயற்பாட்டுக்கு தடையேற்படுத்தாதே ! – சரத்வீரசேகரவின் கருத்துக்கு எதிராக அணிதிரண்ட சட்டத்தரணிகள்

பாராளுமன்றில் பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தமிழ் நீதிபதிகள் தொடர்பாக தெரிவித்த கருத்தினைக் கண்டித்து முல்லைத்தீவு நீதிமன்றம் முன்பாக வடமாகாண சட்டத்தரணிகள் இணைந்து கண்டண போராட்டம் ஒன்றை செவ்வாய்க்கிழமை (11) காலை முன்னெடுத்தனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை பிரதேசத்தில் கடந்த 04.07.2023 அன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி. சரவணராஜா களவிஜயத்தை முன்னெடுத்த போது அங்கு அங்கு வருகை தந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர கருத்து தெரிவிக்க முற்பட்ட வேளையில் பாராளுமன்ற உறுப்பினர்களுடைய கருத்துக்களை அந்த இடத்தில் தெரிவிப்பதற்கு நீதிபதி அனுமதி மறுத்திருந்தார்.

இந்நிலையில் அங்கிருந்து வெளியேறிச் சென்ற சரத் வீரசேகர கடந்த 07.07.2023 அன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது தமிழ் நீதிபதிகள் தொடர்பில் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்திருந்தார்.

இவ்வாறான பின்னணியில் தமிழ் நீதிபதிகள் தொடர்பாக வெளியிடப்பட்ட கருத்துக்களுக்கு வலுவான கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் செவ்வாய்க்கிழமை (11) முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தினர் பணி பகிஸ்கரிப்பை மேற்கொண்டதோடு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் முன்பாக மாபெரும் கவனயீர்பு போராட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

இதன் அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகளோடு இணைந்து வடக்கினுடைய ஏனைய மாவட்டங்கள் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மட்டக்களப்பு, அம்பாறை உள்ளிட்ட மாவட்டங்களின் சட்டத்தரணிகள் இணைந்து முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

இந்த போராட்டத்தில் ஈடுபட்ட சட்டத்தரணிகள் பாராளுமன்ற சிறப்புரிமையை துஸ்பிரயோகம் செய்யாதே!, நீதித்துறை சுதந்திரம் ஓங்குக!, கௌரவ நீதிபதிகளின் கடமைகளில் தலையிடாதே!, நீதித்துறையின் சுயாதீன செயற்பாட்டுக்கு தடையேற்படுத்தாதே !, தலையிடாதே! தலையிடாதே! நீதித்துறையின் சுதந்திரத்தில்!, நீதிக்கே சோதனையா? இது அரசியல் சார்பு வேதனையா?, சட்டத்தையும் ஒழுங்கையும் மதித்து நட ! போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியவாறு அமைதியான முறையிலே குறித்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதன்போது முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், கிளிநொச்சி, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 100 வரையிலான சட்டத்தரணிகள் குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சரத்வீரசேகரவின் கருத்தைக் கண்டித்து வடக்கு – கிழக்கு நீதித்துறையினர் பணிப்பகிஷ்கரிப்பு

யாழ்ப்பாணம் 

பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தமிழ் நீதிபதிகள் தொடர்பாக தெரிவித்த கருத்தினைக் கண்டித்து யாழ்ப்பாண மாவட்டத்தில் சட்டத்தரணிகள் செவ்வாய்க்கிழமை (11) பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டனர்.

சரத் வீரசேகரவின் கருத்தைக் கண்டித்து யாழ் மாவட்ட சட்டத்தரணிகள் நீதிமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்காது இருக்க தீர்மானித்ததாக யாழ்ப்பாண மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் பா.தவபாலன் தெரிவித்தார்.

சரத் வீரசேகரவின் கருத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து செவ்வாய்க்கிழமை (11) முல்லைத்தீவு நீதிமன்ற முன்றலில் அடையாள கண்டனப் பேரணியொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த கண்டனப் பேரணியில் எமது சங்கத்தின் உறுப்பினர்களும் கலந்து கொள்வார்கள் என யாழ்ப்பாண மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் மேலும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர நீதிபதிகளை எச்சரித்து வெளியிட்டுள்ள கருத்தைக் கண்டித்து மட்டக்களப்பு சட்டத்தரணிகள் சங்கம் செவ்வாய்க்கிழமை (11) பணிப்பஷ்கரிப்பில் ஈடுபட்டு மட்டக்களப்பு நீதிமன்ற கட்டிடத் தொகுதிக்கு முன்னால் கண்டன ஆப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த தில தினங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் நீதிபதிகளை எச்சரித்து தெரிவித்த கருத்தை கண்டித்து மட்டக்களப்பு சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி போ.பிறேமநாத் பணிப்பகிஷ்கரிப்புக்கு அழைப்பு விடுத்தார்.

இதனையடுத்து செவ்வாய்க்கிழமை (11) காலை 9 மணிக்கு மட்டக்களப்பு நீதிமன்ற கட்டிட தொகுதிக்கு முன்னால் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற சட்டத்தரணிகள், ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற சட்டத்தரணிகள், மற்றும் மட்டு நீதிமன்ற கட்டிடத் தொகுதி சட்டத்தரணிகள் ஒன்றிணைந்து பணிப்பஷ்கரிப்பில் ஈடுபட்டதுடன் நீதித்துறை சுதந்திரத்திற்காய் குரல்கொடுப்போம், நீதித்துறை சுதந்திரத்தை உறுதி செய், நீதித்துறைக்கு அரசியல் தலையீடு வேண்டாம்.

நீதித்துறையின் சுதந்திரமே ஜனநாயகத்தின் தூண் ஆகும், நீதித்துறையில் இனவாதத்தை கலக்காதே, போன்ற சுலோகங்கள் ஏந்தியவாறு சுமார் ஒரு மணித்தியாலம் கண்டன ஆர்பட்டத்தில் ஈடுபட்ட பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

முல்லைத்தீவு

முல்லைத்தீவு சட்டத்தரணிகள் செவ்வாய்க்கிழமை (11) பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்துள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர அண்மையில் நீதித்துறைக்கு அச்சுறுத்தலை விடும் வகையில் பாராளுமன்றத்தில் கருத்து வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில் நீதித்துறைக்கு அச்சுறுத்தல் விடுத்த பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவின் கருத்தை கண்டித்து வட மாகாண ரீதியில் சட்டத்தரணிகள் முன்னெடுக்கும் பணிப்பகிஷ்கரிப்புக்கு ஆதரவு தெரிவித்து, முல்லைத்தீவு  மாவட்ட சட்டத்தரணிகளும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

அம்பாறை

அம்பாறை மாவட்டம் கல்முனை சட்டத்தரணிகள் சங்க தலைவர் எம். ஐ.றைசுல் ஹாதி தலைமையில் செவ்வாய்க்கிழமை (11) ஒன்று கூடிய சட்டத்தரணிகள் பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவின் உரைக்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்து இவ்வாறு பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டதுடன் சுலோகங்களில் பல்வேறு வாசகங்களை எழுதி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முல்லைத்தீவு, குருந்தூர்மலையில் தமிழ் பௌத்த வழிபாட்டு எச்சங்களின் மீது, சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள சிங்கள பௌத்த கட்டுமானங்களை பார்வையிட முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா அண்மையில் சென்றிருந்தார்.

அப்போது தனது குழுவினருடன் அங்கு வந்திருந்த பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேக, தேவையில்லாமல் மூக்கை நுழைத்து வாங்கிக் கட்டினார்.

அரசியல்வாதிகள் நீதிமன்ற விசாரணையில் மூக்கை நுழைக்கக்கூடாது என எச்சரித்து வீரசேகரவை அங்கிருந்து அகற்றினார்.

இதனால் கொதிப்படைந்த வீரசேகர அண்மையில் நாடாளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்தி, நீதித்துறையிலுள்ள தமிழர்களிற்கு மிரட்டல் விடுக்கும் பாணியில் பேசியிருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக அனைத்து நீதிமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் விலகியிருக்க கல்முனை சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.

சாவகச்சேரி

யாழ். சாவகச்சேரி நீதிமன்ற நீதிபதிகள் நீதிமன்றத்தில் முன்னிலையாகாது செவ்வாய்க்கிழமை (11) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக செவ்வாய்க்கிழமை (11) வழக்கு விசாரணைகள் பிறிதொரு நாள் தவணையிடப்பட்டன.

தமிழ் நீதிபதிகள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர அண்மையில் நாடாளுமன்றில் தெரிவித்த கருத்தை கண்டித்து இந்த பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மன்னார்

மன்னார் சட்டத்தரணிகள் செவ்வாய்க்கிழமை (11) பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்துள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர அண்மையில் நீதித்துறைக்கு அச்சுறுத்தலை விடும் வகையில் பாராளுமன்றத்தில் கருத்து வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில் நீதித்துறைக்கு அச்சுறுத்தல் விடுத்த பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர வின் கருத்தை கண்டித்து வட மாகாண ரீதியில் சட்டத்தரணிகள் முன்னெடுக்கும் பணிப்பகிஷ்கரிப்புக்கு ஆதரவு தெரிவித்து, மன்னார் மாவட்ட சட்டத்தரணிகளும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

செவ்வாய்க்கிழமை (11) காலை மன்னார் நீதிமன்றத்திற்கு சமுகமளித்த சட்டத்தரணிகள் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்ததோடு, முல்லைத்தீவில் இடம் பெறும் போராட்டத்திலும் கலந்து கொள்ள முல்லைத்தீவிற்கு சென்றனர்.

இந்த நிலையில் இன்றைய தினத்துக்கான வழக்கு விசாரணைகள் பிரிதொரு தினத்திற்கு தவணையிடப்பட்டது.

 

மட்டக்களப்பு சென்ற பஸ் ஆற்றில் விழுந்து விபத்து 11 பேர் உயிரிழந்தனர்

70 பயணிகளுடன் மட்டக்களப்பு – காத்தான்குடி நோக்கி வந்த பேருந்து ஆற்றில் வீழ்ந்ததில் 11 பேர் உயிரிழந்தனர். 40பேர் மருத்துவமனைகளில் சேர்க் கப்பட்டுள்ளனர்.

நேநற்றிரவு 8 மணிக்கு சற்று முன்னதாக பொலநறுவை மன்னம்பிட்டி பாலத்தில் இந்த விபத்து இடம்பெற்றதாக அறிய வருகின்றது.

பொலநறுவை – கதுரவெல நகரத்தில் இருந்து மட்டக்களப்பின் காத்தான்குடி நகரத்துக்கு போக்குவரத்து சேவையில் ஈடுபட்ட பேருந்தே இவ்வாறு விபத்துக்கு உள்ளானது. சிறுவர்கள், குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என 70 பேர் இந்தப் பேருந்தில் பயணித்தனர்.

வேகக் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பாலத்தை விட்டு விலகி ஆற்றில் பாய்ந்தது. இதில் 11 பேர் உயிரிழந்தனர். 40 பேர் மீட்கப்பட்டனர்.

பொலிஸாரும் அப்பகுதி மக்களும் இணைந்து மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண் டிருந்தனர். நீண்ட நேர போராட்டத்தின் பின்னர் இரவு 11 மணியளவில் மீட்பு நடவடிக்கைகள் நிறைவுக்கு வந்தன. காணாமல் போன பலர் மீட்கப்பட்டதுடன், ஆற்றில் பாய்ந்த பேருந்தும் மீட்கப்பட்டது. இந்த விபத்துக் குறித்து மன்னம்பிட்டி பொலிஸார் விசாரணைகளை தொடர்ந்து வருகின்றனர்