வடக்கு – கிழக்கு மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு இடமாற்றம்

வடக்கு – கிழக்கு மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 5ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும்வகையில் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கான வழமையான இடமாற்ற நடைமுறையின்கீழ் இந்த இடமாற்றம் தலைமை நீதியரசரினால் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், திருகோணமலை குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதி டெனிஸ்சாந்தன் சூசைதாஸன், திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இராமநாதன் கண்ணன், யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மலையக பிரச்சினைகளை சர்வதேச மட்டம்வரை உயர்த்த கூட்டு செயற்பாட்டிற்கு இறுதி பேச்சு – மனோ கணேசன்

இந்நாட்டில் வாழும் வடகிழக்கு, முஸ்லிம் தேசிய இனங்களுடன் கரங்கோர்த்து, சிங்கள சகோதர மக்களுக்கும் ஒரு செய்தியை சொல்லி, மலையக மக்களின் அபிலாஷைகளை தேசிய மற்றும் சர்வதேசிய மட்டங்களுக்கும் உயர்த்த வேண்டிய வரலாற்று கடமை தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் என்ற முறையில் எனக்கு இருக்கிறது.

சமீபத்து இந்திய வம்சாவளி மலையக தமிழ் இலங்கையர்களின் விவகாரங்களை தொடர்ந்தும் தோட்ட, பிரதேச, மாவட்ட பிரச்சினைகளாக மட்டும் முடக்காமல், ஏனைய சகோதர சமூகங்களது பிரச்சனைகளை போல் தேசிய மற்றும் சர்வதேசிய மட்டங்களுக்கு கொண்டு செல்வதே, இன்றைய தமிழ், முஸ்லிம் கட்சிகளின் கூட்டு செயற்பாட்டில் எங்கள் நோக்கங்களில் ஒன்றாக இருக்கிறது. இதை சரியாக புரிந்துக்கொண்டு மலையக இளைய தலைமுறையும், படித்த தலைமுறையும் எமது கரங்களை பலப்படுத்த வேண்டும்.

நாளை 31ம் கொழும்பில் ததேகூ தலைவர் சம்பந்தன் அவர்களது இல்லத்தில் நடைபெறும் இறுதி சுற்று பேச்சுகளில் இனிய இறுதி முடிவு எட்டப்படும் என நான் நம்புகிறேன் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

இது தொடர்பில், மனோ எம்பி தெளிவுப்படுத்தியதாவது,

இந்த கூட்டு செயற்பாட்டில் நாம் இடம்பெறாமல் இருந்திருந்தாலும்கூட நான் இதை வேறு அடிப்படைகளை செய்தே இருப்பேன். ஐநா அவைக்கு மலையக விவகாரங்களை கொண்டு செல்ல தீர்மானித்துள்ளேன் என நான் மூன்று மாதங்களுக்கு முன்பே சொன்னேன். இன்று இந்தியாவுக்கு ஞாபகப்படுத்தி, அமெரிக்கா, ஐரோப்பா, ஐநா என சகோதர மக்களுடன் கரங்கோர்த்து மலையக மக்களும் பயணிக்க வேண்டிய காலம் உதயமாகி உள்ளது.

இன்றைய நடவடிக்கை இலங்கையின் உற்ற நட்பு நாடான இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதுவதில் ஆரம்பிக்கிறது. இந்நாட்டின் சமீபத்து இந்திய வம்சாவளி மக்களையும் சேர்க்காமல் அல்லது இந்திய வம்சாவளி மக்களின் பிரதான அரசியல் இயக்கத்தின் பங்கு பற்றல் இல்லாமல், இந்திய பிரதமருக்கு கடிதம் எழுத முடியுமா?

ஆகவே, நாம் எங்கே இருக்க வேண்டுமோ, அங்கேயே இருக்கிறோம். அதுவும் நன்றாகவே இருக்கிறோம். நாம் எதை செய்ய வேண்டுமோ, அதையே செய்கிறோம். அதையும் நன்றாகவே செய்கிறோம். இந்நோக்கில் எம்முடன் கரங்கோர்க்கும் எவரையும் அரவணைக்க தயாராகவும் இருக்கிறோம்.

எழுபதுகளில் மறைந்த சௌமியமூர்த்தி தொண்டமான் தமிழ் கட்சிகளுடன் தமிழர் கூட்டணி கூட்டு தலைமையில் இடம் பெற்றார். வட்டுக்கோட்டை தீர்மானத்தை எடுக்கும் நிலைமைக்கு ஈழத்தமிழ் உடன்பிறப்புகள் தள்ளப்பட்ட பிறகு, தன்னிலை விளக்கம் அளித்து அந்த கூட்டில் இருந்து நாகரீகமாக பெரியவர் தொண்டமான் விலகினார். அதேபோல் பிற்காலத்தில் வடகிழக்கு சகோதரர்களின் தலைமையின் அழைப்பை ஏற்று மலையக மக்கள் முன்னணியின் தலைவர் நண்பர் சந்திரசேகரனும், நானும் வடகிழக்கு சகோதரத்துடனான எங்கள் உறவுகளை தொடர்ந்தும் கட்டி வளர்ந்து வந்தோம்.

கட்சி மாறுபாடுகளுக்கு அப்பால் பெரியவர் சௌமியமூர்த்தி தொண்டமானை நான் எப்போதும் மதிக்கிறேன். அவர் அன்று எடுத்த முடிவு சரியானதே. தனிநாடு என்ற இலக்கை மலையக தமிழ் மக்கள் ஏற்க முடியாது என அவர் முடிவெடுத்தார். அதேவேளை, பொது நோக்கங்களில் ஒன்று சேர்ந்து செயற்பட வேண்டுமெனவும் அவர் முடிவெடுத்து செயற்பட்டார்.

தனிநாடு” என்பதால் கூட்டு செயற்பாட்டில் இருந்து
தொண்டமான் விலகியதை கணக்கில் எடுப்பவர்கள், அவர் அதுவரை தமிழ் கட்சிகளுடன் ஒருங்கிணைந்து
செயற்பட்டதையும் கணக்கில் எடுக்க வேண்டும்.

இது தொடர்பில் செளமியமூர்த்தி தொண்டமான் கடை பிடித்த கொள்கைகளையே நானும் கடை பிடிக்கிறேன். அதேபோல் நண்பர் சந்திரசேகரன் கடைபிடித்த கொள்கைகளையே நான் கடைபிடிக்கிறேன்.

நானும் நேற்று பொதுவாழ்வுக்கு வந்தவனல்ல. எனக்கும் இவை தொடர்பில் நீண்ட வரலாறு இந்நாட்டில் கடந்த இருபத்தி ஐந்து வருடங்களாக இருக்கிறது.

இன்று எமது பொது நோக்கு நிகழ்ச்சி நிரலில் தனிநாடு என்ற இலக்கு இல்லை. ஆயுத போராட்டம் என்பதும் இங்கில்லை. எங்கள் தந்தை நாடான இந்தியா, எங்கள் தாய் நாடான இலங்கையுடன், பிரிபடாத நாட்டுக்குள் எங்கள் பிரச்சினைகள் தொடர்பில் செய்துக்கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஏற்படுத்திகொண்ட கடப்பாடுகளை நிறைவேற்ற வேண்டும் என நாம் இன்று கோருகிறோம். இது எமது பிரச்சினைகளுக்கு முழுமையான அரசியல் தீர்வு அல்ல எனவும் கூறுகிறோம்.

இதை எப்படி சிங்கள மக்களுக்கு, சிங்கள மொழியில் எடுத்து கூற வேண்டும் என்பதும் எனக்கு தெரியும். இன்று மாகாணசபைகளை இடைநிறுத்தி ஆளுநர்கள் மூலம் இந்த அரசு அராஜகம் செய்வதும், ஒரு தேர்தல் மூலம் இந்த அரசுக்கு கடும் செய்தி ஒன்ற சொல்ல சிங்கள மக்கள் காத்திருப்பதும் எனக்கு தெரியும். ஆகவே இதையிட்டு எவரும் கலவரமடைய தேவையில்லை.

இந்தியாவை நோக்கி முன்வைக்கப்படவிருக்கும் கூட்டுக்கோரிக்கை எது? நிலாந்தன்

தமிழ்க் கட்சிகளை ஒருங்கிணைத்து இந்தியாவுக்கு ஒரு கூட்டுக் கோரிக்கையை முன்வைக்கும் நோக்கத்தோடு டெலோ இயக்கத்தால் முன்னெடுக்கப்பட்டுவரும் ஒருங்கிணைப்பு முயற்சிகள் கடந்த செவ்வாய்க்கிழமையோடு புதிய திருப்பத்தை அடைந்திருப்பதாக தெரிகிறது. டெலோ இயக்கம் அந்த நகர்வை முன்னெடுத்த பொழுது 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துவது என்பதே பிரதான கோரிக்கையாக காணப்பட்டது. அக்கோரிக்கையை தமிழரசுக் கட்சி ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் அந்த ஒருங்கிணைப்பு முயற்சிகளில் தமிழரசுக்கட்சி ஈடுபட மறுத்தமைக்கு அது மட்டும்தான் காரணமல்ல. அதைவிட ஆழமான காரணங்கள் உண்டு.

சிறிய பங்காளிக் கட்சியான டெலோ அவ்வாறான ஒருங்கிணைப்பு முயற்சியை ஏனைய கட்சிகளுடன் இணைந்து முன்னெடுக்கிறது என்றால் அதன் பொருள் அது ஏதோ ஒரு விகிதமளவிற்கு தலைமை தாங்க முற்படுகிறது என்பதுதான். தலைமை தாங்க வேண்டிய மூத்த கட்சியான தமிழரசுக் கட்சியை மேவி டெலோ முன்கை எடுக்கிறது என்றுதான் பொருள். கடந்த ஒரு தசாப்த காலத்துக்கும் மேலாக கூட்டமைப்புக்குள் ஒரு அப்பாவிப் பங்காளியாகக் காணப்பட்ட டெலோ இயக்கம்  இவ்வாறு திடீரென்று முன்கை எடுக்க காரணம் என்ன ?

முதலாவது காரணம், கடந்த பொதுத் தேர்தலில் கூட்டமைப்பு அதன் ஏகபோகத்தை இழந்தமை. இரண்டாவது காரணம்,டெலோ இயக்கத்துக்கு 3 ஆசனங்கள் கிடைத்தமை. மூன்றாவது காரணம், சுமந்திரனின் தொடர்ச்சியான அவமதிப்புக்களால் ஏற்பட்ட கோபமும் ரோஷமும். நான்காவது காரணம் டெலோ இயக்கத்தின்  பேச்சாளரும் கடந்த பொதுத் தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப்பட்டவருமான குருசாமி சுரேந்திரன்.

அப்பாவியாக காணப்பட்ட டெலோ இவ்வாறான ஒருங்கிணைப்பு முயற்சிகளுக்கு தலைமை தாங்க முடியும் என்பது சில மாதங்களுக்கு முன் நிகழ்ந்த ஜெனிவாக் கூட்டத்தொடரில் அனுப்பப்பட்ட ஒரு கூட்டுக் கடித்தில் நிரூபிக்கப்பட்டது.அதில் தமிழரசுக் கட்சி இணையவில்லை. எனினும் தமிழரசுக் கட்சியை தவிர்த்துவிட்டு ஏனைய கட்சிகள் ஒரு கூட்டுக் கடிதத்தை அனுப்ப முடியும் என்பது கடைசியாக நடந்த ஜெனிவா கூட்டத்தொடரில் நிரூபிக்கப்பட்டது.

அதன் அடுத்த கட்டமாக இவ்வாறு இந்தியாவுக்கு ஒரு கூட்டுக் கோரிக்கையைக் முன்வைக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. இவ்வாறு டெலோ இயக்கம் முன்கை எடுப்பதை தமிழரசுக்கட்சி ரசிக்கவில்லை.டெலோவின் பின்னணியில் இந்தியா இருக்கிறது என்று ஒரு பகுதியினர் குற்றம் சாட்டினார்கள். பசில் ராஜபக்ச இருக்கிறார் என்று மற்றொரு பகுதியினர் குற்றம் சாட்டினார்கள்.

குறிப்பாக டெலோவின் முன்னெடுப்புக்களில் சுமந்திரன் இணைக்கப்படவில்லை.ஏனெனில் அது கட்சித் தலைவர்களுக்கான கூட்டம் என்று காரணம் கூறப்பட்டது. ஆனால் சுமந்திரன் தொடர்ச்சியாக பங்காளிக் கட்சிகளை அவமதித்தமையும் ஒரு காரணம்தான். எனினும் சுமந்திரனை ஒதுக்கியது ஒரு தந்திரோபாயத தவறாக காணப்பட்டது. ஏனெனில் தமிழரசுக் கட்சிக்குள்ளும் கூட்டமைப்புக்குள்ளும் அடுத்தகட்டத் தலைவராக சுமந்திரனே காணப்படுகிறார். அவரை மீறி செல்லத்தக்க தகைமை தங்களுக்கு இருப்பதாக கட்சிக்குள் வேறு யாரும் இதுவரையிலும் நிரூபித்திருக்கவில்லை. எனவே கூட்டமைப்பினதும் தமிழரசுக்கட்சியினதும் செயற்படு தலைவராக காணப்படும் சுமந்திரனை ஒதுக்கிவிட்டு அப்படி ஒரு ஒருங்கிணைப்பை முன்னெடுத்தமை தந்திரோபாய ரீதியாக பலவீனமானது. அதன் விளைவுகளே கடந்த பல வாரங்களாக ஏற்பட்டுவரும் குழப்பங்கள் ஆகும்.

இதனால்தான் டெலோ இயக்கம் தமிழரசுக் கட்சியின் தலைவரான மாவைக்கு கொடுத்த அழைப்புகளை மாவை வெளியில் கூறாமல் மறைத்திருக்கிறார். ஏனெனில் கட்சியின் தலைவராக அவர் காணப்பட்டாலும் சுமந்திரனை பகைத்துக்கொண்டு முடிவெடுக்க முடியாதவராக அவர் காணப்படுகிறார். அதுபோலவே சம்பந்தரை தமது முன் முயற்சிகளுக்கு தலைமை தாங்குமாறு டெலோ இயக்கம் பல தடவை கேட்டும் அவர் அதை மறுத்து விட்டார். சுமந்திரனை ஒதுக்கும் அந்த முயற்சிகளை சம்பந்தரும் ஏற்றுக்கொள்ளவில்லை.

அதே சமயம் சுமந்திரன் தனது முதன்மையை நிரூபிக்கும் விதத்தில் ஒரு குழுவுக்குத் தலைமை தாங்கி அமெரிக்காவுக்கு போனார்.அதோடு கூட்டமைப்பை புதுடில்லிக்கு வருமாறு இந்தியா அழைத்தபோது சம்பந்தர் அதை ஒத்திவைத்தார். இவை அனைத்தினதும் தொகுக்கப்பட்ட சித்திரமானது சம்பந்தர் இந்தியாவை இனப்பிரச்சினைக்குள் முழு அளவுக்கு சம்பந்தப்படுத்த விரும்பவில்லை என்ற தோற்றத்தை வெளிக்கொண்டு வந்தது. எனவே அவ்வாறு இந்தியாவை முரண் நிலைக்குத் தள்ள விரும்பாத சம்பந்தர் முடிவில் டெலோவின் முன்னெடுப்புக்களுக்கு ஒத்துழைக்க முன்வந்தார். இதன் விளைவாக கடைசியாக நடந்த இரண்டு சந்திப்புகளில் தமிழரசுக் கட்சி பங்குபற்றியிருக்கிறது.

தமிழரசுக்கட்சியின் உள்நுழைவோடு கூட்டுக் கோரிக்கையின் வடிவம் மாற்றப்படும் நிலைமைகள் தெரிகின்றன.கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த இரண்டாவது சந்திப்பில் கூட்டுக் கோரிக்கையின் ஆரம்ப வடிவத்திலிருந்து அடுத்தடுத்த கட்ட வளர்ச்சிகள் ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது. அது இயல்பான ஒன்றுதான். ஏனென்றால் எந்த ஒரு கூட்டுக் கோரிக்கையும் தொடக்கத்தில் இருப்பதைப் போல முடிவில் அமைவதில்லை. பல கட்சிகள் சம்பந்தப்படும் ஒரு முன்னெடுப்பில் அப்படித்தான் மாற்றங்கள் ஏற்படும். அது இயல்பானது, இயற்கையானது, தவிர்க்க முடியாதது.

கடந்த ஜனவரி மாதம் ஜெனிவாவுக்கு அனுப்பப்பட்ட கடிதத்திலும் அது நடந்தது. அந்த ஒருங்கிணைப்பு முயற்சிகளின் முதலாவது சந்திப்பு கிளிநொச்சியில் இடம் பெற்றது. அதில் சுமந்திரனும் சிவாஜிலிங்கமும் ஏற்றுக்கொண்ட அடிப்படைகள் வேறு.  ஆனால்,வவுனியாவில் நடந்த இரண்டாவது சந்திப்பில் கஜேந்திரகுமார் இணைந்தபின் முடிவெடுக்கப்பட்ட கோரிக்கை வேறு. அக்கோரிக்கை பின்னர் கிளிநொச்சியில் நடந்த கடைசிச் சந்திப்பில் வேறு அம்சங்களை இணைத்து இறுதியாக்கப்பட்டது. எனவே பல கட்சிகள் சம்பந்தப்படும்போது கூட்டு கோரிக்கை மாற்றம் காணும்.

அதுதான் இப்பொழுது நடக்கிறது. தமிழரசுக்கட்சி உள்நுழைந்த பின் 13வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை விட இந்திய-இலங்கை உடன்படிக்கையின் அடிப்படையில் கோரிக்கையை முன் வைப்பது என்ற அம்சம் முதன்மை பெறுவதாக தெரிகிறது. எனினும் எல்லா தரப்புக்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட இறுதி வரைபு உத்தியோகபூர்வமாக வெளியிடப்படாதவரையிலும் அது தொடர்பில் கருத்து தெரிவிக்க முடியாது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி இதில் வெளியே நிற்கிறது. அக்கட்சியை உள்ளே கொண்டு வந்திருந்தால் கூட்டுமுயற்சி அதன் முழுமையான வடிவத்தை அடைந்திருக்கும். எனினும் அக்கட்சியை உள்ளே கொண்டு வரும் முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை என்று ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவிக்கிறார்கள். ஒருங்கிணைப்பு முயற்சிகளின் தொடக்கத்திலிருந்து கஜேந்திரகுமாருக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சல்களுக்கு அவர் பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் மனோ கணேசன்,ரவூப் ஹக்கீம்,செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் அவரை அணுகி நேரடியாக அழைப்பு விடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. அதோடு அவர் அண்மை வாரங்களாக ஊடகங்களுக்கு தெரிவித்துவரும் கருத்துக்கள் மேற்படி ஒருங்கிணைப்பு முயற்சிகளுக்கு எதிரானவைகளாகவும் காணப்படுகின்றன. எனவே அவரை இந்த ஒருங்கிணைப்பு முயற்சிகளுக்குள் கொண்டுவர முடியவில்லை என்று ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.

ஆனால் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை இந்த ஒருங்கிணைப்புக்குள் இணைத்திருந்தால் புவிசார் அரசியல் தொடர்பிலும் பூகோள அரசியல் தொடர்பிலும் அக்கட்சியானது துலக்கமான நிலைப்பாடுகளை வெளிப்படுத்தியிருக்கும். அதோடு இப்பொழுது தயாரிக்கப்பட்டுவரும் இறுதியாவணம் வேறொரு வடிவத்தை அடைந்திருக்கும்.

கிடைக்கும் தகவல்களின்படி அந்த இறுதிவரைபு பெரும்பாலும் வரும் புதன்கிழமை கையெழுத்திடப்படலாம் என்று தெரிகிறது. அந்த இறுதிவரைபு எப்படியும் அமையலாம். ஆனால் அது ஒப்பீட்டளவில் ஆகப்பெரிய ஒரு கூட்டு முயற்சியாக அமையும். மலையக மற்றும் முஸ்லிம் கட்சிகளை இணைத்து தமிழ்க் கட்சிகள் இவ்வாறாக ஓர் ஒருங்கிணைப்புக்குப்  போனமை என்பது ஒரு முக்கிய திருப்பம். இது ஒரு விதத்தில் 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் போது காணப்பட்ட நிலைமைக்கு நிகரானது.

மிகக் குறிப்பாக கூட்டமைப்புக்குள் கடந்த ஒரு தசாப்த காலத்துக்கும் மேலாக அப்பாவியாக காட்சியளித்த இரு கட்சிகள் கூட்டமைப்பில் இருந்து வெளியேறிய கட்சிகள் மற்றும் தலைவர்களோடு இணைந்து இவ்வாறான ஒர் ஒருங்கிணைப்பு முயற்சியில் குறிப்பிடத்தக்க அளவிற்கு முன்னேறியிருப்பது என்பது கூட்டமைப்பின் அக ஜனநாயகத்தை பலப்படுத்துவதில் ஒரு முக்கிய அடைவுதான்.அதேசமயம் கட்சிகளுக்கிடையிலான போட்டாபோட்டிகள் மற்றும் முரண்பாடுகளுக்கு ஊடாக ஒரு மக்கள் கூட்டத்தின் வெளியுறவுக் கொள்கையை அணுகக் கூடாது என்பதிலும் சம்பந்தப்பட்ட கட்சிகள் தெளிவாகவும் விழிப்பாகவும் உறுதியாகவும் இருக்க வேண்டும்.

சீன வௌிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம்

சீன வௌிவிவகார அமைச்சர் Wang Yi உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனவரி 8 ஆம் திகதி மற்றும் 9 ஆம் திகதிகளில் அவருடைய விஜயம் அமையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன வெளிவிவகார அமைச்சரின் இலங்கைக்கான விஜயத்தின் போது அவர், ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரச உயர் அதிகாரிகளுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொள்வார் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும், இலங்கை மற்றும் சீனாவுக்கு இடையிலான 65 வருட கால வரலாற்று உறவினை சிறப்பிக்கும் நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காகவுமே சீன வௌிவிவகார அமைச்சரின் வருகை அமைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Posted in Uncategorized

இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை? மாற்று வழியை நாடும் சீன நிறுவனத்தின் அதிரடி

இலங்கைக்கு பசளைகளை ஏற்றுமதி செய்யும் சர்ச்சைக்குரிய சீன நிறுவனம், இலங்கைக்கு எதிரான தனது போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளது.

அத்துடன் இலங்கைக்கு எதிராக கடுமையான பொருளாதார மற்றும் வர்த்தக தடைகளை விதிக்க முன்மொழிந்துள்ளதாக கொழும்பின் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

ஏற்கனவே, சீனாவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட பசளைகளில் மேற்கொள்ளப்பட்ட உள்ளூர் பரிசோதனைகள் மூலம் தீங்கு விளைவிக்கும் பக்டீரியாக்கள் இனங்காணப்பட்டதை அடுத்து இலங்கை அதனை நிராகரித்திருந்தது.

எனினும், நாணயக்கடிதம் திறக்கப்பட்ட நிலையில் தமது பொருட்களுக்கான பணப் பெறுமதியை வழங்கவேண்டும் என்று சீன நிறுவனம் வலியுறுத்தி வந்தது.

இதனையடுத்து இலங்கை அரசாங்கம், 6.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை Seawin Biotech Group Co,Ltd க்கு வழங்குவதற்கு தீர்மானித்தது.

இருப்பினும் நீண்ட தாமதத்துக்கு பின்னர் சீன நிறுவனத்திற்கு பணம் செலுத்தும் இலங்கையின் முடிவை ஏற்றுக்கொள்ளாத நிலையில் தமது நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்தமை தொடர்பிலேயே சீவின் பயோடெக் நிறுவனம், இலங்கை மீது தனது எதிர்ப்பு நடவடிக்கையை தொடர்வதாக கொழும்பின் ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

இதன் ஒரு கட்டமாக, சீவின் பயோடெக் நிறுவனத்தின் உயர்மட்ட அதிகாரிகள், இலங்கை மீது பொருளாதாரத் தடைகளை விதிக்குமாறு சீன அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதற்காக ஷான்டாங் மாகாண அரசாங்கத்தை அணுகியுள்ளனர்.

அத்துடன் சர்வதேச நிறுவனங்களிடம் முறையிடப்போவதாகவும் சீவின் பயோடெக் அதிகாரி ஒருவரை கோடிட்டு கொழும்பின் ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை தமது பசளையை இறக்குமதி செய்வதற்காக, சீவின் பயோடெக் நிறுவனத்தைத் தேர்ந்தெடுப்பதற்கு சில இலங்கை உள்ளூர் அதிகாரிகள், தரகுப்பணம் கோரியதாகவும் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

Posted in Uncategorized

சிறையில் உள்ளோர் அனைவரும் குற்றவாளிகள் அல்ல – அமெரிக்காவில் நீதி மறுக்கப்பட்ட தமிழர்!

அமெரிக்காவில் உட்சந்தை மோசடியில் ஈடுபட்டதாக கூறப்பட்டு தண்டனைக்கு உள்ளான இலங்கை தமிழரான ராஜ் ராஜரட்ணம், தமது கைது மற்றும் தண்டனை தொடா்பாக நூல் ஒன்றை இந்த மாத ஆரம்பத்தில் அமெரிக்காவில் வெளியிட்டாா்.

Uneven Justice ( சீரற்ற நீதி) என்ற இந்த ஆங்கில நுால் தொடர்பில் கனடாவின் International United Women federation ( சர்வதேச ஐக்கிய பெண்கள் சம்மேளனத்தின்) ராஜி பாற்றர்சன் தமிழில் நுால் விமா்சனம் செய்துள்ளாா்.

Uneven Justice – தலைப்பே வித்தியாசமாக இருக்கிறது அல்லவா? ஆமாம், அமெரிக்காவில் ஒரு தமிழன் நீதிக்காக போராடிய கதை புத்தக வடிவில் வெளிவந்துள்ளது. தன் மீது குற்றம் சுமத்திய அரசாங்கத்தை எதிர்த்து தான் ஒரு நிரபராதி என நிரூபிக்க கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் போராடி, பதினோரு வருடங்கள் சிறைத்தண்டனை பெற்று, ஏழரை வருடங்கள் தண்டனை அனுபவித்து விடுதலையான பின்னர் , இரண்டு வருட மௌனத்தை கலைத்திருக்கின்றது இந்த நூல். தன் மீது சுமத்தப்பட்ட வழக்கு எவ்வாறு பின்னப்பட்டது, எவ்வாறு நடத்தப்பட்டது, சாட்சியங்கள் எப்படி தனக்கெதிராக உருவாக்கப்பட்டது போன்ற விடயங்களுடன் தான் பெற்ற அனுபவத்தையும் அப்படியே எழுத்தில் கொண்டு வந்திருக்கிறார் எழுத்தாளர்.

சரி ஏன் இந்த புத்தகத்தை அவர் எழுதினார் என்கின்ற வினாவுக்கு, அனைவரும் குறிப்பாக அவரது சகாக்கள், பொருளாதார அல்லது நிதி துறையின் வல்லுநர்கள் இந்த புத்தகத்தை வாசித்து, நடந்த உண்மைகளை அறிந்து கொண்டு தன்னை நியாயம் தீர்க்க வேண்டும் என்பதுடன், சட்ட விரோதமாக தனது உரையாடல்கள் ஓட்டுக் கேட்கப்பட்டு, அந்த நாட்டின் பிரஜையான தான் கண்காணிக்கபட்டதன் ஊடாக தனது அடிப்படை மனித உரிமை மீறப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடுகின்றார்.

2008 -ல் அமெரிக்காவில் ஏற்பட்ட நிதி நெருக்கடிக்கு அல்லது பொருளாதார வீழ்ச்சிக்கு ஒரு பலிகடாவை தேடிய லட்சிய வழக்குரைஞர்களால் ஒரு பொறிக்குள் தன்னை சிக்க வைத்து, பொது ஊடகங்களினால் அநியாயமான முறையில் தனது கவுரவம் மற்றும் கண்ணியமான வாழ்வு சிதறடிக்கப்பட்டு, மன அழுத்தத்தை எதிர் நோக்கியதையும் அனைவரும் அறிய வேண்டும்.

இரண்டாவதாக, மேலும் முக்கியமாக, சில சீர்கேடான வழக்குரைஞர்கள் மற்றும் FBI முகவர்கள் குற்றவியல் நடத்தையிலிருந்து எப்படி தப்பிக்க அனுமதிக்கப்படுகிறார்கள் என்பது பற்றிய விழிப்புணர்வை பொது மக்களுக்குள் உருவாக்குவதன் மூலம் ஒரு பொது விவாதத்தைத் தொடங்க விரும்புவதாக குறிப்பிட்ட எழுத்தாளர் அமெரிக்காவின் நீதி அமைப்பில் சமநிலைகள் இல்லை என்பதை மிக ஆணித்தரமாக கூறுகின்றார் .

சரி யார் இந்த எழுத்தாளர்? அமெரிக்காவின் வரலாற்றில் தவிர்க்க முடியாத அளவிற்கு மிக சிறந்த நிதி மேலாளராக திகழ்ந்த ராஜ் ராஜரட்ணம் என அறியபடும் ராஜகுமாரன் ராஜரட்ணம் தான் இந்த எழுத்தாளர்.

இலங்கையை பிறப்பிடமாக கொண்ட இவர் பதினோரு வயதில் தாய் நாட்டை விட்டு வெளியேறி இங்கிலாந்தில் குடியேறினார்.

லண்டனில் அமைந்துள்ள Dulwich college- ல் தனது கல்வியை தொடர்ந்த அவர் பட்டப்படிப்பை பொறியியல் துறையில், University of Sussex- ல் நிறைவு செய்தார்.

1983-ல் தனது முதுகலைமானி பட்டப்படிப்பை அமெரிக்காவில் பென்சில்வேனியா Wharten school of the University யில் வணிக நிர்வாகத்தில் நிறைவு செய்து அங்கேயே ஒரு வங்கியில் கடன் வழங்கும் அதிகாரியாக தனது பணியை ஆரம்பித்தார்.

1985-ல் நீதம் & கோ(Needham & CO) நிறுவனத்தில் இணைந்து அவரது கடின உழைப்பாலும் அசாதாரண திறமையாலும் படிப்படியாக உயர்ந்து தனது 34-வது வயதில் அதன் தலைவராக உயர்ந்தார்.

1992-ல் நீதம் & கோ கம்பெனியுடன் இணைந்து உருவாக்கப்பட்ட Hegde Fund திரு ராஜ் ராஜரத்தினம் அவர்களால் வாங்கப்பட்டு Galleon Group என பெயரிடப்பட்டு நிர்வகிக்கப்பட்டது.

ஒரு குறுகிய காலத்தில் மிக சிறப்பான வளர்ச்சியை அடைந்த அவரது நிறுவனம் உலகின் முதல் பத்து Hedge Fund நிறுவனங்களுக்குள் தனது பெயரையும் உள்வாங்கி கொண்டது.

மிக சிறந்த பகுப்பாய்வாளர்களை இணைத்து, அமெரிக்காவின் சட்ட திட்டங்களை மிக சரியான முறையில் பின்பற்றி மிகப் பெரியளவில் வளர்ச்சியடைந்து கொண்டிருந்த Galleon Group மற்றவர்களின் கண்களை உறுத்தியதில் ஆச்சரியம் இல்லை தானே?

Wall Street Super Star என அழைக்கப் பட்ட திரு ராஜ் ராஜரட்ணம் அவர்களை 2009-ம் ஆண்டு ஃபோர்ப்ஸ் “forbes” Magazines அமெரிக்காவின் 400 பணக்காரர்களில் ஒருவராகவும், உலகின் 559 வது பணக்காரராகவும் மதிப்பிட்டது.

அதே ஆண்டு அக்டோபர் 16-ம் திகதி Federal Bureau of Investication (FBI) லினால் சட்ட விரோதமான உள் வர்த்தக ( insider trading) நடவடிக்கையில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப் பட்டு கைது செய்யப்பட்டார்.

அவருக்கு முன்னால் மூன்று தெரிவுகள் இருந்தன. சுமத்தப்பட்ட குற்றத்தை ஏற்றுக்கொண்டு குறைந்த அளவு தண்டனை பெறுதல், அரசாங்கத்தின் சாட்சியாக மாறி தண்டனையில் இருந்து தப்புதல், நிரபராதி என நிரூபிக்க போராடுதல். செய்யாத குற்றத்தை ஏற்றுக் கொண்டு தண்டனை அனுபவிக்க திரு ராஜ் அவர்களுக்கு உடன்பாடில்லை.

நேர்மையான வழியில் தனது வாழ்வை அமைத்துக் கொண்ட அவருக்கு, அரசாங்கத்தின் கையாளாக மாறி இன்னுமொருவரை வஞ்சக வலைக்குள் சிக்க வைத்து விட்டு அவர் தப்பிக்கவும் மனமில்லை.

எனவே அவருக்கு முன்னால் இருந்த தெரிவு தன்னை நிரபராதி என நிரூபிக்க போராடுவது தான். ஆனால் அந்த பயணத்தில் பல மில்லியன் டொலர்கள் செலவு ஏற்பட வாய்ப்பு உள்ள அதேவேளை, மிக சவால்களுக்கு முகம் கொடுக்க நேரிடும் என்பதுவும் அவருக்கு தெரிந்திருந்தது.

அமெரிக்காவின் நீதித்துறையில் மிக நம்பிக்கை கொண்ட அவர் நீதிக்காக போராட துணிந்தார் .

அதற்காக என்ன விலை கொடுக்கவும் தயாரானார். அந்த நீதிக்கான பாதையில் அவர் கண்டறிந்த விடயங்கள் பற்றியும், அவர் சந்தித்த பல விதமான மனிதர்கள் பற்றியும் அமெரிக்க நீதி துறை எவ்வாறு செயற்படுகின்றது என்பது போன்ற பல விடயங்களை மிக தெளிவாக கூறியிருக்கின்றார்.

எந்த மிரட்டல்களுக்கும் அடி பணியாத அவர், அவரது சட்டத்தரணிகளுடன் இணைந்து தனக்கெதிராக புனையப்பட்ட ஒவ்வொரு குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஆராய்ந்து பல ஆதாரங்களை வழங்கிய போதும் அவற்றில் பல புறக்கணிக்கபட்டதையும் தமது பக்க சாட்சியங்களில் ஐந்து பேரை மட்டுமே உள்வாங்கி கொண்டதாக குறிப்பிட்ட அவர் நடுவர்கள் பன்னிரண்டு பேரில் (Jury) ஒருவருக்கும் அவரது துறை சார்ந்த அறிவு பெற்றிருக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

நிதி மேலாண்மை மற்றும் முதலீடு தொடர்பான அறிவு இல்லாதவர்களினால் எவ்வாறு அதன் சட்ட முறைகள் நுணுக்கங்கள் பற்றி தெரியும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அந்த நடுவர் குழுவினரினால் குற்றவாளி என தீர்க்கப்பட்டு பதினோரு வருடங்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டதுடன் 150 மில்லியன் டாலர்கள் அபராதமாக விதிக்கப்பட்டதாக குறிப்பிடும் எழுத்தாளர் இந்த முழு நூலையும் சிறையில் தனது கையாலேயே எழுதியாக குறிப்பிடுகின்றார்

அமேசான் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டிருக்கும் இந்நூல் அனைவராலும் வாசிக்கப்பட வேண்டிய ஒரு நூலாகும் என்பதில் ஐயமில்லை .

இந்நூல் விற்பனையில் பெறப்படும் நிதியானது நீதிக்காக போராடிக்கொண்டிருக்கும் உறவுகளுக்கு உதவ பயன்படும் என திரு ராஜ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

நீதித்துறையினால் வஞ்சிக்கப்பட்டு, செய்யாத குற்றத்துக்காக ஏழரை வருடங்கள் சிறையில் வாடிய வலிகள் அவரது வார்த்தைகளில் பிரதி பலிக்கின்றது.

இந்த நூல் அவரது வலி நிறைந்த குரல் மட்டுமல்ல நீதி மறுக்கப்பட்டு செய்யாத குற்றத்திற்காக சிறையில் வாடும் அனைவரின் குரலாகும்.

சிறையில் இருப்போர் அனைவரும் குற்றவாளிகளுமல்ல .வெளியில் உலாவுவோர் அனைவரும் நீதிமான்களுமல்ல.

 

ராஜி பாற்றர்சன்

Raji Patterson Canada International United Women federation

மகிந்தவிற்கு விமானம் வழங்கியது யார்? வெளியான தகவல்

பிரதமர் மகிந்த ராஜபக்ச அண்மையில் திருப்பதிக்கு விஜயம் செய்திருந்த நிலையில், வேலுப்பிள்ளை கனநாதன் என்பவரே பிரத்தியேக ஜெட் விமானத்தை வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று இதனை தெரிவித்துள்ளது. பிரதமர் மகிந்த ராஜபக்ச தனிப்பட்ட விஜயமாக அண்மையில் திருப்பதி சென்றிருந்த நிலையில், அவர் பயணித்த விமானம் தொடர்பில் சமூக ஊடகங்கள் பெரும் சர்ச்சை ஏற்பட்டிருந்தது.

இந்த விமானம் பிரதமரின் நண்பர் ஒருவரால் இலவசமாக வழங்கப்பட்ட போதிலும் குறித்த வர்த்தகரின் பெயர் தனக்கு தெரியாது என பிரதமரின் தலைமை செயல் அதிகாரி யோஷித ராஜபக்ஷ ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.

இதனிடையே, குறித்த விமானம் தொடர்பிலும், விமானத்திற்கு அறவிடப்படும் கட்டணம் தொடர்பிலும் சோலிஷ முன்னிலை கட்சியின் தேசிய அமைப்பாளர் புபுது ஜாகொட பல்வேறு தகவல்களை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையிலேயே, பிரதமருக்கு பிரத்தியேக ஜெட் விமானத்தை வழங்கியவர் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் உகாண்டாவுக்கான தூதுவராக கடமையாற்றிய கனநாதன் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் கென்யாவிற்கான தூதுவராக கடமையாற்றி வருகின்றார்.

ராஜபக்ச குடும்பத்தின் நண்பராகக் கருதப்படும் கனநாதன், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலருடன் நெருங்கிய கூட்டாளியாகக் கருதப்படுகிறார் என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசுக்கு துணைபோகாமல், நீதியை நிலைநாட்டுங்கள்! – சர்வதேசத்திடம் காணாமல் போனவர்களின் உறவுகள் கோரிக்கை

சர்வதேச சமூகம் இலங்கை அரசுக்குத் துணைபோகாமல் எமக்கான நீதியினை வழங்க முன்வரவேண்டும் என்று காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்துள்ளனர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினால் வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்றையதினம் (30) காலை போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள்,

எமக்கான நீதி கிடைக்காத நிலையிலும் 12 வருடங்களாகத் தொடர்ச்சியாக நாம் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். பெறுமதிமிக்க எமது உயிர்களைத் தொலைத்துவிட்டு நாம் வீதி வீதியாகப் போராடிக்கொண்டு சொல்லொணா துன்பங்களையும், அவலங்களையும் அனுபவித்து வருகின்றோம்.

வருடங்கள் மாத்திரமே கடந்து செல்கின்றது, எமக்கான நீதி மட்டும் கிடைக்கப்பெறவில்லை. போரிற்குப் பின்னர் இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட பிள்ளைகளையே நாம் கோரி நிற்கின்றோம். இழப்பீட்டையோ வாழ்வாதாரத்தையோ கேட்டு நாம் போராடவில்லை.

சர்வதேச சமூகம் எமக்கான நீதியினை வழங்காமல் இலங்கை அரசுக்குத் துணைபோகின்றதா என்ற சந்தேகம் எமக்கு எழுகின்றது, எனவே நீங்கள் கண்மூடியிருக்காமல் எமது நிலை கருதி சாட்சிகளான நாங்கள் இருக்கும் போதே எமக்கான நீதி கிடைப்பதற்குரிய பொறி முறைகளை சர்வதேச சமூகம் ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எங்கே எங்கே உறவுகள் எங்கே, ஆணைக்குழுக்களும் வேண்டாம், விசாரணையும் வேண்டாம், பொய்யான அறிக்கையை வழங்கி சர்வதேசத்தையும் தமிழர்களையும் ஏமாற்றாதே, இனப்படு கொலையாளியைக் காப்பாற்ற நினைப்பவர்கள் தமிழின துரோகிகள் போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்ததுடன், கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.

Posted in Uncategorized

தமிழர்களின் இறைமையை அழிக்க இலங்கை அரசு பாரிய சதி: ரெலோவின் இளைஞர் அணித்தலைவர் சபா குகதாஸ்

இலங்கைத்தீவில் சட்டரீதியாக முதல் இறைமையைக் கொண்ட தமிழர்களின் மிகப் பெரும் ஆதாரமாக விளங்கும் தேசவழமைச் சட்டங்களைச் சட்ட அங்கிகாரம் இல்லாது அழிப்பதற்கு பாரிய சட்ட ரீதியான நடவடிக்கையை ஐனாதிபதி கோட்டாபய ‘ஒரு நாடு ஒரு சட்டம்’ என்ற செயலணி மூலம் மேற் கொள்ளச் சதித் திட்டம் போட்டுள்ளார் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் இளைஞர் அணித்தலைவரும் (ரெலோ) வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருமான சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

‘ஒரு நாடு ஒரு சட்டம்’ இலங்கைத் தீவில் சிறிய எண்ணிக்கையில் வாழும் இனங்களுக்குப் பாதகமாக அமையும் என்ற பொதுவான நிலைப்பாடு இருந்தாலும் இதன் பாரிய தாக்கம் வடக்கு கிழக்கைப் பூர்வீக வாழ்விடமாகக் கொண்ட தமிழர்களையே குறி வைத்துள்ளது.

காரணம் ஐரோப்பியர் வருகைக்கு முன்னர் இலங்கையின் தலைநகர் வடக்கைத் தளமாகக் கொண்ட சிங்கை மன்னர்களான தமிழர்களாலே நிர்வகிக்கப்பட்டது. அவர்களின் கால சட்டங்களே தேசவழமை சட்டங்கள் என தற்போதும் வடக்கில் முதன்மையானவையாக விளங்குகின்றன.

ஆரம்பத்தில் இலங்கையில் கண்டியை மையமாகக் கொண்ட கண்டியச் சட்டங்களைச் சிங்களவரும் வடக்கு யாழ்ப்பாண ராசதானியை மையமாகக் கொண்ட தமிழர்கள் தேசவழமைச் சட்டங்களையும் கொண்டிருந்த இரு தேசங்கள் இருந்தன. இதன் அடிப்படையில் தான் தமிழர் தேசம் தங்களுக்குரிய நாட்டுச் சட்டங்களை தேசவழமைச் சட்டங்கள் என அழைத்தனர்.

இதுதான் தமிழர்கள் இந்த நாட்டின் இறைமை உள்ள இனம் என்பதற்கு மிகப் பெரும் ஆதாரம் ஆகும். தேசவழமைச் சட்டங்கள் ஒல்லாந்தர் காலத்தில் டச்சுச் சட்டங்களுடன் தனித்துவமாகத் தமிழ் முதலிமாரால் தொகுக்கப்பட்டு வடக்குத் தமிழர்கள் இலங்கையில் எப்பகுதியில் வாழ்ந்தாலும் அவர்களுக்கு தேசவழமைச் சட்டம் ஏற்புடையது என அங்கிகாரம் வழங்கினர்.

இதனை பிரித்தானியரும் தமது கோல்புறுக் அரசியலமைப்பின் ஊடாக அங்கிகாரம் வழங்கினர் . இலங்கைத் தமிழர்கள் இறைமை உள்ள இனம் என்பதை ஆதாரமாகக் கொண்ட தேசவழமைச் சட்டங்களை இல்லாது ஒழிப்பதே ஞானசார தேரர் தலைமையிலான செயலணியின் பிரதான இலக்கு.

ஞானசார தேரர் யாழ்ப்பாணம் வந்து ஒரு சிலரிடம் குறிப்பாகக் கோட்டா சார்பான கட்சியின் பிரதிநிதிகளுடன் ‘ஒரு நாடு ஒரு சட்டம்’ தொடர்பாகக் கருத்துக்களை முன்வைக்கும் போது தேசவழமைச் சட்டங்கள் உள்வாங்கப்படும் என்ற வெற்று அறிக்கை ஒன்றைத் தமிழர்களை ஏமாற்றுவதற்காகக் கூறினாரே தவிர உண்மையாக தேசவழமைச் சட்டங்களை நீக்குவதே அவர்களது எண்ணம்.

இவர்களைப் புரிந்த யாரும் மறுக்க மாட்டார்கள். ஜனாதிபதி கோட்டாபயவின் செயலணி ஒரு போதும் கண்டியச் சட்டத்தில் எந்த மாற்றங்களையும் செய்ய மாட்டார்கள். ஆகவே அவர்களது பிரதான நோக்கம் தமிழர்களை இறைமை அற்ற இனமாக மாற்றுகின்ற பாரிய தமிழின அழிப்பாகும்.

தொடர்ச்சியாக 1956 இல் இருந்து 2009 வரை பாரிய தமிழ் இனப் படுகொலைகளைச் செய்த இலங்கை ஆட்சியாளர்கள் தமிழர்களது கலாச்சாரத்தையும் இல்லாதொழித்து பௌத்த மயமாக்கலை இன்று வரை தமது நிகழ்ச்சி நிரலாகத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இறுதியாக எஞ்சிய சட்டரீதியான இறைமைக்குரிய ஆதாரமான தேசவழமைச் சட்டங்களையும் அழித்து இறைமை அற்ற இனமாகத் தமிழர்களை மாற்றி சிங்களவர்களுக்கு மட்டும் உரித்தான ஒரு நாடு ஒரு சட்டம் என்ற புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பாரிய சதியில் கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் தீவிரமாக இறங்கியுள்ளது என தெரிவித்துள்ளார்.

கட்சித் தலைவர்களின் இறுதிக்கட்ட பரிசீலனை சம்பந்தன் – ஹக்கீம் நாளை நேரில் பேச்சு மனோவும் பங்கேற்பார்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடையில் முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று நாளை கொழும்பில் நடைபெறவுள்ளது.

இரா. சம்பந்தன், த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கூட்டமைப்பின் சார்பிலும், ரவூப் ஹக்கீம் உள்ளிட்டவர்கள் மு.கா. சார்பிலும் பங்கேற்கவுள்ளனர்.

இந்தச் சந்திப்பில் மனோ கணேசனும் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இலங்கை – இந்திய ஒப்பந்தம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும், இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும், இதற்கான அழுத்தத்தை இலங்கை அரசுக்கு இந்தியா பிரயோகிக்க வேண்டும் எனக் கோரி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கூட்டு ஆவணமொன்றை அனுப்பிவைப்பதற்குத் கொழும்பில் செவ்வாய்கிழமை இடம்பெற்ற 11 கட்சிகளின் தலைவர்களுடைய சந்திப்பில் தமிழ் பேசும் கட்சிகள் முயற்சித்தன.

இதுவரை மூன்று சுற்றுப் பேச்சுகள் இடம்பெற்றுள்ளன. எனினும், சில அரசியல் காரணங்களால் கூட்டு ஆவணத்தில் கையொப்பமிட முஸ்லிம் கட்சிகள் இழுத்தடிப்பு செய்து வருகின்றன.

அக்கட்சிகளின் தலைவர்களுக்கு கடும் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையிலேயே நாளை ஹக்கீமை, சம்பந்தன் தரப்பு சந்திக்கவுள்ளது.

முஸ்லிம் தரப்புகள் தொடர்ந்தும் இழுத்தடிப்பு செய்யும் பட்சத்தில், தமிழ்க் கட்சிகள் மட்டும் இணைந்து கையொப்பமிடுவது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருகின்றது.

Posted in Uncategorized