13 வது திருத்தம் கடனுக்கான முன்நிபந்தனை அல்ல – அரசாங்கம்

அரசியலமைப்பின் 13 வது திருத்தம் இந்தியாவிலிருந்து கடன் பெறுவதற்கான முன்நிபந்தனை அல்ல என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் வாங்குவதற்காக கடன் பெற இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருப்பதாக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

இருப்பினும் இந்த விடயத்திற்கு அரசியலமைப்பின் 13 வது திருத்தம் ஒரு முன்நிபந்தனையாக வைக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

அரசியலமைப்பின் 13 வது திருத்தத்தை முழுமையாக செயற்படுத்த இலங்கை அரசாங்கத்திடம் இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்ற நிலையில் அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

கடுமையான அந்நிய செலாவணி நெருக்கடிக்கு மத்தியில் இலங்கை அரசாங்கம் எரிபொருள் கொள்வனவிற்காக 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை இந்தியாவிடம் கோரியுள்ளது.

நாட்டில் தற்போது உள்ள எரிபொருள் அடுத்த ஜனவரி வரை மட்டுமே போதுமானதாக உள்ளது என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்திருந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

ஆசிரியர், அதிபர்களுக்கு வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொள்ளுரே விடுத்துள்ள எச்சரிக்கை!

21 ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பமான பிறகு வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் நவம்பர் மாத சம்பளம் நிறுத்தப்படும் என்று வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொள்ளுரே தெரிவித்துள்ளார்.

அதேபோல், 25 ஆம் திகதியன்று யாராவது வந்தால், அவர்கள் பாடசாலைக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அவர் தெரிவித்தார்.

சம்பள முரண்பாடுகளுக்கு தீர்வு கோரி, இணைய கற்பித்தல் நடவடிக்கைகளில் இருந்து விலகி ஆசிரியர் அதிபர்கள் சங்கம் முன்னெடுத்துள்ள வேலைநிறுத்தத்தின் 100 வது நாள் இன்று.

இந்தப் பின்னணியில், ஆசிரியர் அதிபர் சம்பள முரண்பாடுக்கு எதிரான தேசியக் கூட்டமைப்பு கல்விச் செயலாளர் பேராசிரியர் கபில பெரேராவை நேற்று (18) சந்தித்து கடிதம் ஒன்றை கையளித்து இருந்தனர்.

சம்பளப் பிரச்சினை தீரும் வரை தமது தொழிற்சங்கங்களின் ஆசிரியர் அதிபர்கள் கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகளுக்கு செல்லமாட்டார்கள் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும், எதிர்வரும் நேற்று 25 ஆம் திகதி முதல் கற்பித்தல் நடவடிக்கைகளைத் தொடங்க ஆசிரியர் அதிபர்கள் தொழிற்சங்க கூட்டணி முடிவு செய்தமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

மடு கோயில் மோட்டை விவசாய காணியை ஒரு சிலரின் தூண்டுதலுடன் அபகரிக்க முயற்சி – மக்கள் போராட்டம்

மடு திருத்தலத்திற்கு உரிய  கோயில் மேட்டை விவசாய காணி அபகரிப்பு செய்யப்பட்டு வருகின்றமையை கண்டித்து மடு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள பெரிய பண்டிவிரிச்சான் மற்றும் சின்னப் பண்டிவிரிச்சான் கிராம மக்கள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்றைய தினம் (திங்கட்கிழமை) காலை 10 மணியளவில் மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

மன்னார் பஜார் பகுதியில் அமைதியான முறையில் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

நீண்ட காலமாக மடு திருத்தலத்திற்கு சொந்தமாக காணப்பட்ட குறித்த காணியை சிலரின் தூண்டுதலுக்கு அமைவாக அபகரிக்கப்பட்டு வருவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

மேலும் குறித்த பகுதியில் இந்து மற்றும் கிறிஸ்தவ மக்கள் ஒற்றுமையாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்ந்து வந்துள்ள நிலையில்,தற்போது ஒரு சில தீய சக்திகளால் மத பிரச்சினையை தோற்றுவிக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

மடு திருத்தலத்திற்கான கோயில் மோட்டை காணியானது பல வருடங்களை கொண்டுள்ள நிலையில்,மடு ஆலய நிர்வாகத்தினால் பராமரிக்கப்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையிலே குறித்த காணி தொடர்பாக சில விஷமிகளால் மத பிரச்சனைகளை தூண்டி, குறித்த காணியை அபகரிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனர்.

குறித்த கிராமங்களில் ஏழை விவசாயிகள் இருக்கின்ற நிலையில் ஒரு குழுவினர் தாங்கள் ஏழை விவசாயிகள் என கூறிக்கொண்டு குறித்த காணியை அபகரிக்க முயற்சி செய்து வருகின்றதாகவும், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பஜார் பகுதியில் இருந்து மாவட்டச் செயலகம் வரை ஊர்வலமாக சென்று மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்தனர்.

பின்னர் வட மாகாணத்தின் புதிய ஆளுநருக்கு எழுதப்பட்ட மகஜர் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெலிடம் கையளிக்கப்பட்டதோடு,துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

அரசாங்கம் மக்களை ஏமாற்றியுள்ளது – கொழும்பு பேராயர்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதாக தெரிவித்து அரசாங்கம் மக்களை ஏமாற்றியுள்ளது என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குற்றம் சாட்டியுள்ளார்.

குறித்த தாக்குதல்களுக்கு பின்னணியில் மிகவும் சந்திவாய்ந்த ஒருவர் இருக்கின்றார் என்பதே இந்த தாமதத்திற்கு காரணம் என தாம் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஈஸ்டர் தாக்குதலில் தொடர்புடையவர்களை தண்டிப்பதாக பொதுமக்களுக்கு ஜனாதிபதி, தனது தேர்தல் பிரச்சாரத்திம் உறுதியளித்தார் என்றும் கொழும்பு பேராயர் சுட்டிக்காட்டினார்.

மேலும் தேர்தல் வெற்றியின் பின்னரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுவதாக ஜனாதிபதி உறுதியளித்தார் என்றும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் குறிப்பிட்டார்.

அத்தோடு சந்தேகத்திற்குரிய விடயங்கள் குறித்து விசாரணையை மேற்கொள்ளுமாறு சட்டமா அதிபருக்கும் புலனாய்வுப் பிரிவினருக்கும் குறித்த ஆணைக்குழு அறிவுறுத்திய நிலையில் அதனை இதுவரை நிறைவேற்றவில்லை என்றும் கொழும்பு பேராயர் குற்றம் சாட்டினார்.

எனவே ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக என்ன நடந்தது என்ற உண்மையை அறியும் முயற்சியில் சர்வதேச சமூகம் எங்களுக்கு உதவ வேண்டும் என்றும் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அழைப்பு விடுத்தார்.

Posted in Uncategorized

பங்காளிக் கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்தார் ஜனாதிபதி கோட்டா!

கெரவலபிட்டிய மின் நிலையத்தை அமெரிக்க நிறுவனத்திடம் வழங்கும் ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்யுமாறு அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகள் விடுத்த கோரிக்கையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நிராகரித்துள்ளார்.

மின்நிலையத்தின் 40% பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்குவதற்கான முடிவு குறித்து எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளும் பங்காளி கட்சிகளினால் கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டது.

இந்த பிரச்சினையைப் பற்றி விவாதிக்க வேண்டும் என கோரி பங்காளி கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எழுத்துமூலமான கோரிக்கையை விடுத்திருந்தனர்.

எனவே அந்தக் கடிதத்திற்கு பதில் அனுப்பியுள்ள ஜனாதிபதி கோட்டாபய, அரசியல் முடிவுகள் தொடர்பாக ஏதேனும் பிரச்சினை இருந்தால், கட்சியின் தலைவர், பிரதமர் அல்லது கட்சியின் தேசிய அமைப்பாளருடன் கலந்துரையாடுமாறு குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே இந்த விடயம் தொடர்பாக ஆளும் பங்காளி கட்சிகள் கடந்த செப்டெம்பர் 23 ஆம் திகதி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்திருந்தது.

எனவே அந்த சந்திப்பில் திருப்தி இல்லை என குறிப்பிட்டு ஜனாதிபதியை சந்தித்துப் பேசுவதற்கு 11 அரசியல் கட்சிகளின் தலைவர்களும் தீர்மானித்திருந்த நிலையில் ஜனாதிபதிக்கு கடிதமும் அனுப்பப்பட்டது.

குறித்த கடிதத்திற்கு அனுப்பிய பதிலிலேயே ஜனாதிபதி இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ள நிலையில் எதிர்வரும் 23 ஆம் திகதி சனிக்கிழமை அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மீண்டும் சந்தித்து இந்த விடயம் தொடர்பாக விவாதிக்க உள்ளனர்.

Posted in Uncategorized

21- 22ம் திகதிகள் அதிபர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தை முன்னெடுக்க அழைப்பு

பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ள நிலையில், பாடசாலை திறக்கப்படும் அதே நாளில் போராட்டத்தை முன்னெடுக்க அதிபர், ஆசிரியர்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாடசாலை ஆரம்ப தினத்தில் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுவதா? இல்லையா? என்பது குறித்து ஆசிரியர் தொழில்சங்கங்களுக்கு இடையில் இன்று (18) விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

இதன்போதே எதிர்வரும் 21 மற்றும் 22ம் திகதிகள் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டமொன்றை முன்னெடுப்பதற்கான அழைப்பை விடுத்துள்ளனர். பாடசாலை ஆரம்ப தினத்தில் கற்பித்தல் நடவடிக்கைகளை புறக்கணிப்பதற்கும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தீர்மானித்துள்ளனர்.

எனினும், ஒக்டோபர் மாதம் 25ம் திகதி பாடசாலைகளுக்கு செல்ல அதிபர் − ஆசிரியர்கள் தீர்மானித்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலை பெரும் சிக்கலாக மாறியுள்ள நிலையில், தொழிற்சங்களின் செயல்பாடுகளால் அரசாங்கம் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியிருப்பதாக தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இதே வேளை,

இலங்கையில் பாடசாலைகளின் கற்பித்தல் செயற்பாடுகளை பாடசாலை திறக்கப்பட்ட பின்னரும் புறக்கணிக்க பெரும்பாலான ஆசிரியர் தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ள நிலையில், தாம் அதில் இருந்து விலகி கற்பித்தல் செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.

சம்பள உயர்விற்கு தாம் முரணானவர்கள் அல்லவெனக் குறிப்பிட்டுள்ள இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொது செயலாளர் சரா.புவனேஸ்வரன், யுத்த சூழ்நிலையில் கூட கற்பித்தல் செயற்பாடுகளை நிறுத்தாத நிலையில், பிள்ளைகளின் கல்வியை பணயம் வைக்க முடியாது என சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் நாடளாவிய ரீதியில் ஆசிரிய – அதிபர்கள் சம்பள உயர்வு கோரி போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், தமது சங்கம் போராட்டத்தில் கலந்துக்கொள்ளாமை தொடர்பில் யாழ்ப்பாணத்தில் வைத்து இன்று விளக்கமளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதன்போது, அனைத்து அதிபர்களும், ஆசிரியர்களும் வரும் 21ஆம் திகதி பணிக்குச் சென்று கடமையில் ஈடுபட வேண்டுமெனவும், இது யாருக்கும் எதிரான செயற்பாடு அல்லவெனவும் அவர் கூறியுள்ளார்.

வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வௌியிட்டுள்ள அறிக்கை!

கொவிட்-19 தடுப்பூசி வழங்கல் திட்டத்தின் கீழ் 18, 19 வயதுடைய பாடசாலை மாணவர்கள் அனைவருக்கும் பைஸர் கொவிட்-19 தடுப்பூசியானது நாடளாவிய ரீதியில் ஓக்டோபர் மாதம் 21ஆம் திகதி வியாழக்கிழமை முதல் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட மாகாண சுகாதா சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் வட மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் இத்தடுப்பூசியானது வழங்கப்பட உள்ளது.

கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சைக்கு இரண்டாவது தடவையாக தோற்ற இருக்கின்ற மாணவர்களுக்கும் அவர்களது பாடசாலைகளிலேயே இத்தடுப்பூசியினை பெற்றுக்கொள்ள முடியும்.

மேலும் பாடசாலையைவிட்டு விலகிய 18, 19 வயதுடையவர்களுக்கு அவர்களுடைய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளில் சனிக்கிழமைகளில் இத்தடுப்பூசியானது வழங்கப்படும்.

இத்தடுப்பூசியினை பெற்றுக்கொள்வதற்கு 18, 19 வயதுடைய அனைவரும் தமது தேசிய அடையாள அட்டையினை அன்றையதினத்தில் தமது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் சமர்ப்பித்து தமது வயதினை உறுதிப்படுத்திக்கொள்வது அவசியமாகும்.

தடுப்பூசி அல்லது வேறுமருந்துகளிற்கு ஒவ்வாமை உடையவர்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கு யாழ் போதனா வைத்தியசாலையிலும், தெல்லிப்பளை, பருத்தித்துறை, சாவகச்சேரி மற்றம் ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலைகளிலும் எதிர்வரும் ஓக்டோபர் மாதம் 23, 30ஆம் திகதி சனிக்கிழமைகளில் வழங்குவதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் அல்லது பாடசாலையில் அவ்வாறான நிலைமைகள் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டு தடுப்பூசி வழங்கப்படாது திருப்பி அனுப்பப்பட்டவர்கள் சுகாதார வைத்திய அதிகாரியின் பரிந்துரைக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டு மேற்குறிப்பிட்ட வைத்தியசாலைகள் ஏதாவது ஒன்றில் தமக்குரிய தடுப்பூசியினை பாதுகாப்பாக பெற்றுக்கொள்ள முடியும்.

இவ்வாறு 18, 19 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி வழங்கலானது முடிவுக்குவரும் நிலையில் அதனைத் தொடர்ந்து 17, 16, 15 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Posted in Uncategorized

பேராயர் மல்கம் ரஞ்சித் , எல்லே குணவன்ச தேரர் ஆகியோர் அடிப்படை உரிமை மீறல் மனு

கெரவலப்பிட்டிய யுகதனவி அனல் மின்னுற்பத்தி நிலையத்தின் பங்குகள் அமெரிக்காவின் நியூ ஃபோட்ரஸ் நிறுவனத்திற்கு வழங்குவதை ஆட்சேபித்தும் குறித்த நிறுவனத்திடம் திரவ வாயு விநியோக ஒப்பந்தம் வழங்கப்படுவதை தடுக்கும் வகையிலும் உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி, கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை மற்றும் எல்லே குணவங்ச தேரர் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்துள்ளனர்.

குறித்த மனுவில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட அமைச்சரவை, அமைச்சரவை செயலாளர், நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் சட்டமா அதிபர் உள்ளிட்ட 54 பேர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள பிரதிவாதிகள் வரிசையில் அமெரிக்காவின் நியூ ஃபோட்ரஸ் நிறுவனமும் அடங்குகின்றது.

வழக்கறிஞர் மஞ்சுள பாலசூரிய மூலம் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சரவை அமைச்சர்கள், அமைச்சரவை செயலாளர், நிதி அமைச்சின் செயலாளர், நியூ போட்ரஸ் நிறுவனம், சட்டமா அதிபர் உட்பட 54 பேர் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.

யுகதனவி மின்நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு மாற்றுவது தங்களது மற்றும் நாட்டு மக்களது அடிப்படை உரிமைகளை மீறுவதாக மனுதார்கள் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அந்த ஒப்பந்தம் தொடர்பாக செப்டம்பர் 6 ஆம் திகதி அமைச்சரவையில் எட்டப்பட்ட தீர்மானத்தை இரத்துச் செய்யுமாறும் மனுதாரர்கள் கோரியுள்ளனர்.

மேலும், இந்த மனு மீதான விசாரணை முடியும் வரை யுகதனவி மின்நிலையத்தில் உள்ள பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு மாற்றுவதைத் தடுத்து இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படுமாறும் கோரியுள்ளனர்.

சட்ட திருத்தத்தின் பின் விரைவில் மாகாண சபை தேர்தல் – தேர்தல்கள் ஆணைக்குழு

சட்டங்கள் திருத்தப்பட்டதன் பின்னர் பழைய முறைப்படி மாகாண சபை தேர்தலை விரைவில் நடத்த முடியுமென தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

புதிய முறைமையின் கீழ் மாகாண சபை தேர்தலை நடத்துவதாக இருந்தால், அதற்காக நீண்ட காலத்தை செலவழிக்க நேரிடுமென தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

எல்லை நிர்ணயத்தின் பின்னர், பாராளுமன்றத்தின் அனுமதியைப் பெற்று புதிய முறைமையை திட்டமிட வேண்டியேற்படுவதால் இந்த நிலைமை உருவாகுமென அவர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், நாட்டின் கொரோனா தொற்று நிலைமையை கருத்திற்கொண்டு முழுமையான சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி மாகாண சபை தேர்தலை நடத்துவது தொடர்பில் சுகாதார அதிகாரிகளுடன் திட்டமிடப்படவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, விகிதாசார முறைமையின் கீழ் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்காக கிட்டத்தட்ட 4,000 மில்லியன் ரூபா நிதி செலவாகுமென அவர் கூறியுள்ளார்.

கொரோனா பாதுகாப்பு முறைமையின் கீழ் தேர்தலை நடத்துவதற்காக செலவிடப்படும் நிதி அதிகரிக்கலாம் எனவும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தேர்தல் முறைமை தொடர்பில் கட்சித் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற செயற்குழுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் முன்னாள் இராஜாங்க செயலாளர் கொலின் பவெல் காலமானார்

அமெரிக்காவின் முன்னாள் இராஜாங்க செயலாளர் கொலின் பவெல்  இன்று (18) காலமானார்.

84 வயதான கொலின் பவெல், கொவிட் – 19 தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

அவர் முழுமையாக தடுப்பூசிகளை பெற்றிருந்ததாக கூறப்படுகின்றது.

இந்நிலையில், கொலின் பவெலுக்கு சிகிச்சையளித்த மருத்துவத்துறை ஊழியர்களுக்கு அவரது குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

அத்துடன், அமெரிக்காவின் முன்னிலை அரசியல்வாதிகள் பலருக்கு நம்பிக்கைக்குரிய இராணுவ ஆலோசகராக கொலின் பவெல் செயற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.