அர்ஜுன் மகேந்திரன் இன்றி வழக்கை முன்னெடுக்க அனுமதி கோரிய சட்டமா அதிபர் !

மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் மற்றும் கார்திய புஞ்சிஹோ இல்லாமல் 2015 பிணைமுறி மோசடி வழக்கை முன்னெடுத்துச் செல்ல அனுமதி வழங்குமாறு கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீதிமன்றிடம் சட்டமா அதிபர் கோரியுள்ளார்.

குறித்த வழக்கு இன்று (புதன்கிழமை) கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீதிமன்றின் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இந்த கோரிக்கையை சட்டமா அதிபர் முன்வைத்தார்.

இலங்கை அரசாங்கத்திற்கு 688 மில்லியன் இழப்பை ஏற்படுத்திய 2015 பெப்ரவரி மாதத்தில் 27 ஆம் திகதி இடம்பெற்ற மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான வழக்கின் சந்தேகநபர்களாக குறித்த இருவரும் பெயரிடப்பட்டுள்ளனர்.

சிங்கப்பூரில் வசிக்கும் முதலாவது குற்றவாளியான அர்ஜுன மகேந்திரனை ஒப்படைக்குமாறு இலங்கை அரசாங்கம் விடுத்த வேண்டுகோளுக்கு சிங்கப்பூர் அரசாங்கம் இன்னும் சாதகமாக பதிலளிக்கவில்லை என நீதிமன்றத்தில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார்.

அத்தோடு இந்த விவகாரத்தில் எதிர்காலத்தில் எடுக்கவேண்டிய தேவையான நடவடிக்கைகள் குறித்து ஒரு பிரேரணை மூலம் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்படும் என்றும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் அறிவித்தார்.

இதேவேளை சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல வேண்டும் என்ற இந்த வழக்கின் 8 வது சந்தேக நபரான பேர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் ரஞ்சன் ஹுலுகல்லேவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

அசாத் சாலி தொடர்பில் சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு உத்தரவு

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலியை இம்மாதம் 25 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு உத்தரவிட்டுள்ளது.

அசாத் சாலி சார்ப்பில் ஆஜராக ஜனாதிபதி சட்டத்தரணி தாக்கல் செய்த கோரிக்கையின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகளை 25 ஆம் திகதி வரையில் ஒத்திவைத்துள்ளதுடன் அன்றைய தினம் அசாத் சாலியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 9 ஆம் திகதி ஊடபவியாளர் சந்திப்பு ஒன்றில் இனங்களுக்கு இடையில் முரண்பாட்டை ஏற்படுத்தும் விதமாக கருத்து தெரிவித்ததாக அவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

’வேலையில்லா பிரச்சினையாலேயே வன்முறைகள் அதிகரிப்பு’

வடக்கில் வேலையில்லாப் பிரச்சினை காரணமாகவே வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுவதாக, பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார் என்று, யாழ். மறைமாவட்ட ஆயர் கூறினார்.

வடமாகாணத்துக்கு இன்று (13), விஜயம் மேற்கொண்ட பொலிஸ்மா அதிபர், யாழ். மறைமாவட்ட ஆயரை இன்று மாலை ஆயர் இல்லத்தில்  சந்தித்து கலந்துரையாடிபேர்.

குறித்த கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களிடம்  ஆயர் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர்,  பொலிஸ்மா அதிபர், யாழ்ப்பாணம் மாவட்டத்தின் மீது நல்ல விருப்பம் கொண்டவர் எனவும்  இங்கே உள்ள பிரச்சினை தொடர்பில் ஆராயவே, யாழ். மாவட்டத்துக்கு வருகை தந்துள்ளார் எனவும் கூறினார்.

“இளைஞர்களிடையே காணப்படும் வேலைவாய்ப்பில்லாத விரக்தி நிலை காரணமாகவே,  போதைப் பொருள் பாவனை அதிகரித்து காணப்படுகிறது. அதேபோல, பொலிஸார் மக்களுடன் கூடுதலாக பழகவேண்டும்.

“முன்னைய காலத்தில்,  வீதி போக்குவரத்து விதிமுறைகள் பாடசாலைகளில் கற்பிக்கப்பட்டது. அதனை மீண்டும் பாடசாலைகளில் ஆரம்பிக்குமாறு, அவரிடம் கூறி இருக்கின்றேன்” என்றார்.

இளைஞர் – யுவதிகளுக்கு வேலைவாய்ப்பின்மை காரணமாகவே, வடக்கில் வாள்வெட்டு சம்பவங்கள், திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன. வேலையில்லாது சும்மா இருப்போருக்கு காசு தேவைப்படும் போது தான், அவர்கள் திருடுவதற்கு தூண்டுகின்றார்கள் என பொலிஸ்மா எடுத்துரைத்திருந்தார் எனவும் ஆயர் தெரிவித்தார்.

‘அத்துடன், போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிப்பதை விடுத்து, அவர்களை ஒரு  மணிநேரம் தடுத்து நிறுத்தி, அவர்களுக்கு விளக்கம் அளிப்பதன் மூலம் தான் எமது மக்களுக்கு அதன் அர்த்தம் புரியும். அதனை செயற்படுத்துவதன் மூலம், பொதுமக்களுக்கு போக்குவரத்து விதிமுறைகள் தொடர்பில் விழிப்புணர்வினை ஏற்படுத்த முடியும் எனவும் பொலிஸ்மா அதிபர் கூறினார்.

“தமிழ் பொலிஸார் எமக்கு கடமைக்கு தேவையாக உள்ளது. ஏற்கெனவே 500 பேர் மாத்திரமே கடமையாற்றிவருகிறார்கள். மேலதிகமாக தமிழ் பொலிஸார் நமக்கு தேவையாக உள்ளார்கள். அவர்களுக்கு உரிய பயிற்சிகள் வடக்கு மாகாணத்தில் பயிற்றுவிக்கப்படும். ஏனெனில், வடக்கில் இருந்து வெளி மாவட்டங்களில் சென்று பயிற்சி பெறுவதற்கு பலர் விரும்பவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. வடக்கிலிருந்து பொலிஸ் தொழிற்றுறைக்கு விண்ணப்பிப்போருக்கு, இங்கேயே பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்களுக்கு மொழி பயிற்சியும் வழங்கப்படும் என பொலிஸ்மா அதிபர் கூறினார்” என ஆயர் மேலும் தெரிவித்தார்.

Posted in Uncategorized

ரவிகரன், சிவாஜிலிங்கம் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

கடந்த 2018 ஆம் ஆண்டு பெப்பிரவரி மாதம் முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் மக்களுக்கு சொந்தமான 617 ஏக்கர் காணியினை அபகரிக்கச் சென்ற நில அளவீட்டாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கோட்டாபாய கடற்படை முகாமிற்கு முன்பாக மக்கள் போராட்டத்தில் கலந்துகொண்டதற்காக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன் மற்றும் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட நால்வருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் விசாரணை இன்றைய நாளுக்கு (13) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றால் தவணையிடப்பட்டிருந்தது.

இந் நிலையில் கொவிட் -19 ஆசாதாரண சூழ்நிலை காரணமாக முல்லைத்தீவு நீதிமன்றால் குறித்த வழக்கு விசாரணைகள் எடுத்துக்கொள்ளப்படாத நிலையில், எதிர்வரும் 2022 பெப்ரவரி மாதம் 08 ஆம் திகதிக்கு குறித்த வழக்கின் விசாரணைகள் திகதியிடப்பட்டுள்ளன.

கடந்த 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி, முல்லைத்தீவு – வட்டுவாகல் பகுதியில், கோட்டாபய கடற்படை முகாமிற்கு முன்பாக இடம்பெற்ற காணி அபகரிப்பிற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டதற்காக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் 28.02.2018 அன்று முல்லைத்தீவு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில், பின்னர் பிணையில் விடுதலையாகியிருந்தார்.

இதேவேளை, வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் முன் பிணைகோரி, சட்டத்தரணி ஊடாக பிணையில் வெளிவந்தார்.

அதனைத்தொடர்ந்து இலங்கை தமிழரசுக்கட்சியைச் சேர்ந்த அன்ரனி ஜெகநாதன் பீற்றர் இளஞ்செழியன், முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளன நிர்வாக உறுப்பினர் அன்னலிங்கம் சண்முகலிங்கம் ஆகியோரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

இவ்வாறாக நால்வர் மீதும் தொடரப்பட்ட வழக்கின் விசாரணைகள் கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக இடம்பெற்றுவருகின்றது.

இந்நிலையில், இன்றைய நாளுக்காக தவணையிடப்பட்டிருந்த குறித்த வழக்கின் விசாரணைகள் தற்போதய கொவிட் -19 அசாதாரண நிலையினைக் கருத்தில் கொண்டு இன்றைய தினம் எடுத்துக்கொள்ளப்படவில்லை என்பதுடன், எதிர்வரும் 2022 பெப்ரவரி மாதம் 08 ஆம் திகதிக்கு இந்த வழக்கின் விசாரணைகள் தவணை இடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அரசாங்கம் FAIL என்பதை மக்களும் ஏற்றுக்கொண்டு விட்டனர்!

அரசாங்கம் பெயில் (FAIL) என்பதை மக்களும் ஏற்றுக் கொண்டு விட்டனர். எனவே, மாகாண சபைத் தேர்தல் ஒன்று நடைபெற்றால் அரசாங்கத்துக்கு தக்க பதிலடி காத்திருக்கின்றது´ என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

நுவரெலியாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ´சீனா, இந்தியா மற்றும் அமெரிக்காவின் அழுத்தங்களால் நாட்டுக்கு எதிர்காலத்தில் பாரிய பிரச்சினைகள் வரக்கூடும். முறையற்ற அரச முகாமைத்துவம் காரணமாகவே இந்நிலைமை ஏற்படும். நாட்டின் நிர்வாகம் இன்று ஸ்தம்பிதமடைந்துள்ளது. இந்நிலைமையை நான் அன்றே சுட்டிக்காட்டினேன். பிரதேச சபையில்கூட அங்கம் வகிக்காத ஒருவரின் நாட்டை ஒப்படைக்க வேண்டாம் என வலியுறுத்தியே கட்சியில் இருந்து வெளியேறினேன்.

மாகாண சபைத் தேர்தல் தற்போது அவசியமில்லை. அரசாங்கம் அதனை நடத்தினால் தேர்தலில் போட்டியிடவேண்டிய நிலை எதிர்க்கட்சிகளுக்கு ஏற்படும். அவ்வாறு நடத்தினால் அரசாங்கத்துக்கு வீட்டுக்கு செல்லவேண்டிய நிலை தான் ஏற்படும். பொருட்களின் விலை உயர்வு உட்பட எல்லா துறைகளிலும் பிரச்சினை. இந்த அரசாங்கத்தால் முடியாது என்பதை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். ஆக அரசாங்கம் ´பெயில்´ என்பது உறுதியாகியுள்ளது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை எமது நாட்டுக்கு தேவையில்லை´ என்றார்.

Posted in Uncategorized

ஜனாதிபதியை சந்தித்தார் சுப்ரமணியன் சுவாமி

பாரதிய ஜனதா கட்சியின் சிரேஷ்ட அரசியல்வாதியும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்ரமணியன் சுவாமிக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பொன்று, ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (13) முற்பகல் இடம்பெற்றது.

பல அமைச்சுப் பொறுப்புக்களை வகித்திருக்கும் சுப்ரமணியன் சுவாமி , இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வலுவான நட்புறவுக்காக முன்னிலை வகித்திருப்பதோடு, இலங்கையில் நிலவிய பயங்கரவாத நடவடிக்கைகளைத் தோற்கடிப்பதற்கான இந்தியா ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்றும் வலியுறுத்தியவராவார்.

பொருளாதார நிபுணரும் புள்ளியியல் வல்லுநருமான சுப்ரமணியன் சுவாமி , பாதுகாப்புச் செயலாளராக ஜனாதிபதி பதவி வகித்த காலப்பகுதியில் நடத்தப்பட்ட மாநாடுகளின் போது, விரிவுரையாளராகவும் கலந்துகொண்டிருந்தார்.

சுப்ரமணியன் சுவாமி இம்முறை இலங்கை விஜயத்தின் போதும் சந்திக்கக் கிடைத்தமையிட்டு, ஜனாதிபதி மகிழ்ச்சி தெரிவித்தார்.

Posted in Uncategorized

கரன்னாகொடவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் வாபஸ்

முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொடவுக்கு எதிராக, தாக்கல் செய்யப்பட்ட அதி குற்றச்சாட்டுப் பத்திரத்தை மீளப்பெற தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு இன்று (13) அறிவித்தார்.

2008ஆம் ஆண்டு தமிழ் இளைஞர்கள் உட்பட 11 பேர் கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீதிமன்றத்தின் முன்னிலையில் பிரதிவாதியாக அறிவிக்கப்பட்டு அவருக்கு எதிராக அதிகுற்றச் சாட்டுப் பத்திரம் பகிரப்பட்டது.

கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீதிமன்றத்தில் தனக்கு எதிராக வழக்குத் தொடர்வதற்கு சட்டமா அதிபர் எடுத்த தீர்மானத்துக்கு தடை உத்தரவு கோரி, கரன்னாகொடவினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த மனு, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான சோபித ராஜகருணா மற்றும் தம்மிக கணேபொல ஆகியோர் அடங்கிய குழாம் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதன்போது, இந்த வழக்கில் பிரதிவாதியாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள மனுதாரரான முன்னாள் கடற்படை தளபதிக்கு எதிரான அதி குற்றச்சாட்டுகளை சட்டமா அதிபர் வாபஸ்பெற தீர்மானித்துள்ளதாக. சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட அரச வழக்குரைஞர் அவந்தி பெரேரா மன்றுக்குத் தெரியப்படுத்தினார்.

இது தொடர்பாக மேல் நீதிமன்றத்துக்கு தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிரேஷ்ட அரச வழக்குரைஞர், நீதிமன்றத்தில் தெரிவித்தையடுத்து,
இந்த மனு மீதான மேலதிக பரிசீலனைக்கான தினமாக நவம்பர் 03 ஆம் திகதியை மேல்முறையீட்டு நீதிமன்றம் நிர்ணயித்தது.

Posted in Uncategorized

இந்திய இராணுவ தளபதி பிரதமருடன் சந்திப்பு

இந்திய இராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நராவனே அவர்கள் இன்று (13) முற்பகல் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் சந்தித்தார்.

இருநாட்டு இராணுவத்தினருக்கும் இடையே சிறந்த உறவு காணப்படுவதாக சந்திப்பின் ஆரம்பத்திலேயே ஜெனரல் நராவனே பிரதமரிடம் குறிப்பிட்டார்.

நேர்மறையான இந்த தொடர்பானது, இருநாட்டு மக்கள் மற்றும் அனைத்து மட்டத்திலுமான இருதரப்பு உறவை உறுதிபடுத்துவதற்கு உதவியுள்ளதாகவும் தெரிவித்தார்.

உயர் பயிற்சிகளை வழங்கல் உள்ளிட்ட இந்திய இராணுவம் மிக நீண்டகாலமாக இலங்கைக்கு வழங்கிவரும் பரஸ்பர ஒத்துழைப்பு தொடர்பில் இதன்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பாராட்டு தெரிவித்தார்.

இவ்விஜயத்தின் போது ஜெனரல் நராவனே அனுராதபுரம் திசாவௌவில் அமைந்துள்ள இலங்கை இராணுவ சேவை செயலணி பயிற்சி பாடசாலைக்கு ஓட்டுனர் மற்றும் துப்பாக்கிச் சுடல் பயிற்சிகளுக்காக பயன்படுத்தக்கூடிய மாதிரி தொழில்நுட்ப பயிற்சி உபகரணத் தொகுதியை நன்கொடையாக வழங்கியுள்ளார்.

இது தொடர்பில் கௌரவ பிரதமர் மத்தியில் கருத்து தெரிவித்த ஜெனரல் நராவனே, எதிர்காலத்தில் விசேடமாக பயிற்சி துறையில் தொழில்நுட்பம் என்பது பெரும் பங்குவகிக்கும் என நம்பிக்கை வெளியிட்டார்.

நிலையான இராணுவத்தை பேணுவதற்கான செலவை கருத்திற் கொள்ளும் போது மாதிரி தொழில்நுட்ப பயிற்சி உபகரணத் தொகுதிகளின் மூலம் பயனுள்ள செயற்பாட்டை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என ஜெனரல் நராவனே சுட்டிக்காட்டினார்.

தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதம் தொடர்பில் பிராந்திய மட்டத்தில் கவனம் செலுத்தப்பட வேண்டிய விடயங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. அத்துடன் நாட்டிற்காக சேவையாற்றிய பின்னர் படைவீரர்களை கண்காணித்து பராமரிப்பதன் முக்கியத்துவம் தொடர்பிலும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.

Posted in Uncategorized

முல்லைத்தீவு மீனவர்கள் எச்சரிக்கை

இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடருமானால், நிச்சயமாக எமது மீனவர்கள் அனைவரும் திரண்டு, இந்திய மீனவர்கள் மீது மிகவிரைவில் தாக்குதல் நடத்துவோம் என, முல்லைத்தீவு மீனவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர்கள், ஒக்டோபர் 10ஆம் திகதியன்று, ஏறக்குறைய 30 இந்தியன் இழுவைப்படகுகள் வருகைதந்து, அத்துமீறிய சட்டவிரோத தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டதுடன், கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த முல்லைத்தீவு மீனவர்களின் 15க்கும் மேற்பட்ட படகுகளின் வலைகள் சேதமாக்கியதாகவும் தெரிவித்தனர்.

‘கடந்த வருடம் இந்தியன் இழுவைப் படகுகளின் அத்துமீறல் செயற்பாடுகளைக் கண்டித்து முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்துக்குப் பின்னர் ஆறு மாத காலமளவில் முல்லைத்தீவு கடற்பரப்பிற்கு இந்தியன் இழுவைப்படகுகளின் வருகை இல்லாமல் இருந்தது. ஆனால், தற்போது முல்லைத்தீவு கடற்கரையிலிருந்து இரண்டு கடல்மைல் தூரமளவில், இந்திய இழுவைப் படகுகள் வருகை தருவதுடன், எமது மீனவர்களின் வலைகளும் இந்தியன் இழுவைப் படகுகளால் சேதமாக்கப்படுகின்றன’ எனவும், அவர்கள் சாடினர்.

‘கடந்த காலங்களில் கடற்றொழில் அமைச்சர்களாக இருந்த பெரும்பான்மை இனத்தவர்கள், மீனவர்களின் பிரச்சினைகள் சிலவற்றுக்கு தீர்வுகளை பெற்றுத்தந்திருக்கின்றனர். தற்போது கடற்றொழில் அமைச்சராக இருக்கும் டக்ளஸ் தேவானந்தா, தற்போது இடம்பெறுகின்ற இந்த இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல் குறித்து தம்மோடு கலந்துரையாடுவதுமில்லை, இங்கு வருவதுமில்லை’ எனவும், மீனவர்கள் குற்றஞ்சாட்டினர்.

டக்ளஸ் தேவாநந்தா கடற்றொழில் அமைச்சு பொறுப்பை ஏற்ற பின்னரே, இந்திய மீனவர்களின் வருகை  அதிகரித்துள்ளதுடன், கடற்படையினரும் எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்வதில்லை’ எனவும், மீனவர்கள் சாடினர்.

13ஆவது திருத்தத்தை முழுதாக நிறைவேற்றியே மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் – ரெலோ வலியுறுத்தல்

13ஆவது திருத்தத்தை முழுதாக நிறைவேற்றியே மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளில் ஒன்றான தமிழ் ஈழ விடுதலை இயக்கம் ( ரெலோ) வலியுறுத்தியுள்ளதுடன், தமிழ் தேசியக் கட்சிகள் ஒருமித்து கோருவது அவசியம் என்றும் தெரிவித்துள்ளது.

ரெலோவின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் மாகாணசபைத் தேர்தல் எப்பொழுது நடத்தப்படுவதாக இருந்தாலும் அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டம் முற்றுமுழுதாக நிறைவேற்ற பட வேண்டும். அதன்பின்னரே மாகாண சபை தேர்தல்கள் நடத்துவது அர்த்தமுள்ளதாக அமையும்.

நடப்பிலிருக்கும் 13வது திருத்தச் சட்டம் உலக்கை தேய்ந்து உளிப்பிடி ஆன கதையாக இருக்கிறது. கடந்த காலங்களில் மாகாணசபையின் பல அதிகாரங்கள் பறிக்கப்பட்டு மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் காணப்படுகின்றது.

13வது திருத்தச் சட்டத்தின் அடிப்படையிலான மாகாணசபை எங்களுடைய அரசியல் தீர்வாக நாங்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் இருக்கக்கூடிய அரசியல் அதிகாரங்களை இழப்பது என்பது சாணக்கியமானதல்ல.

மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படலாம் என அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் அதிகாரங்கள் பறிக்கப்பட்ட ஒரு மாகாண சபை முறைமையை நாங்கள் ஏற்பதா அல்லது முற்றுமுழுதாக 13ஆவது திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட அதிகாரங்கள் வழங்கப்பட்ட மாகாணசபையை ஏற்பதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதற்கான சரியான நிலைப்பாட்டினை தமிழ்த் தேசிய கட்சிகள் அனைத்தும் எட்ட வேண்டியது மாத்திரமல்ல வலியுறுத்த வேண்டியதும் கட்டாயமானதாகும்.

அண்மையில் இலங்கைக்கு வருகை தந்த இந்திய வெளிவிவகாரச் செயலாளர் தமிழர் அரசியல் தீர்வில் இந்தியாவின் நிலைப்பாடு சம்பந்தமான தீர்மானமான கருத்துக்களை தெரிவித்துள்ளார். 13ஆவது திருத்தச்சட்டத்தை முற்றுமுழுதாக நடைமுறைப்படுத்துவது, அதன் அடிப்படையிலான மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவது, அந்தக் கோரிக்கையை தமிழ் தேசிய கட்சிகள் அனைத்தும் ஒருமித்த நின்று கோருவது என்பனவே அவை. இதனூடாக இதை தாண்டிய அரசியல் தீர்வை தமிழ் மக்கள் பெற்றுக் கொள்ள முடியும்.

இந்தியா தொடர்ந்தும் இதை வலியுறுத்தி வந்தாலும் தமிழர் தரப்பு ஒருமித்த நிலையில் கோரவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இந்தச் செய்தியை தமிழர் தரப்பு சரியாகப் புரிந்து கொண்டதோ இல்லையோ இலங்கை அரசு தந்திரமாக கையாள முற்பட்டுள்ளது.

இந்த நிலையில் 13-வது திருத்தத்தினை நடைமுறைப்படுத்தி மாகாண சபைகளின் சுயாதீனத்தை உறுதிப்படுத்த அரசியல் யாப்பில் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்கள் பற்றிய நீதி மன்ற தீர்ப்புகளும் தமிழ் தரப்பால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளும் உள்ளன.

தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து தேர்தல் வியூகங்களை வகுப்பதற்கு முன்னர், தற்போது அரசியல் அமைப்பில் இருக்கும் குறைந்தபட்ச அதிகாரப்பகிர்வை அர்த்தமுள்ளதாக ஆக்குவதற்கு தமிழர் தரப்பு ஒருமித்த கோரிக்கையை சம்பந்தப்பட்ட தரப்புகளான இந்திய அரசிடமும் இலங்கை அரசிடமும் முன்வைக்க வேண்டியது கட்டாயமாக உள்ளது.

இதை நாம் தொடர்ந்தும் பல காலமாக வலியுறுத்தி வந்துள்ளோம். இன்று வரலாறு அந்தப் புள்ளியில் தமிழினத்தை கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. விமர்சனங்களை கடந்து ஆக்கபூர்வமாக ஒருமித்த நிலைப்பாட்டில் செயலாற்ற தமிழ் தேசிய கட்சிகளை கோருகிறோம்.