விமானிகள் பற்றாக்குறை குறித்து கவனம் செலுத்துமாறு இலங்கை விமானிகள் சங்கம் கோரிக்கை

விமானிகள் பற்றாக்குறை மற்றும் சேவையிலுள்ள விமானிகளுக்கு போதியளவு சம்பளம் வழங்கப்படாமை குறித்து உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு இலங்கை விமானிகள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் குறித்த சங்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

விமானிகள் பற்றாக்குறையால் இலங்கை விமான சேவை பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது. விமான சேவை முகாமைத்துவத்தினால் முன்னெடுக்கப்படும் சில தீர்மானங்களினால் விமானிகளான நாம் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளோம்.

தற்போது இலங்கை விமான சேவைக்கு 330 விமானிகள் தேவைப்படுகின்றனர். எவ்வாறிருப்பினும் கடந்த ஆண்டு 70க்கும் மேற்பட்ட விமானிகள் சேவையிலிருந்து இடை விலகியமையால் தற்போது விமானிகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக உரிய நேரத்தில் சேவைகளை முன்னெடுப்பதில் எழுந்துள்ள சிக்கலால், விமான பயணிகளான மக்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்தோடு இலங்கை விமான சேவையானது துறைசார் நிபுணத்துவத்துக்கு பொருத்தமான சம்பளத்தை விட குறைவான சம்பளத்தையே வழங்குகின்றது.

கொவிட் நெருக்கடியின் பின்னர் சம்பளம் 50 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளது. எவ்வாறிருப்பினும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாட்டுக்காக நாம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டிருக்கின்றோம். இம்முறை இலங்கை விமான சேவை 50 மில்லியன் டொலர் இலாபமீட்டியுள்ளதாக அறியக்கிடைத்துள்ளது.

எனவே, தற்போது நிலவும் விமானிகள் பற்றாக்குறை மற்றும் சேவையிலுள்ள விமானிகளுக்கான சம்பளம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

Posted in Uncategorized

நெருக்கடியில் இருந்து இலங்கை மீண்டெழும்; பொருளாதாரப் பேரவையின் தலைவர் நம்பிக்கை

தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டெழக்கூடிய இலங்கையின் இயலுமை தொடர்பில் உலக பொருளாதாரப்பேரவையின் தலைவர் போர்ஜ் ப்ரென்டி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

சீன வெளிவிவகார அமைச்சர் சின் காங்கின் உத்தியோகபூர்வ அழைப்பின்பேரில் 7 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கடந்த சனிக்கிழமை சீனா சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, அங்கு பல்வேறு உயர்மட்ட அதிகாரிகளைச் சந்தித்துப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துவருகின்றார்.

அச்சந்திப்புக்களின் ஓரங்கமாக சர்வதேச பொருளாதாரக் கட்டமைப்புக்களில் ஒன்றான உலக பொருளாதாரப்பேரவையின் தலைவர் போர்ஜ் ப்ரென்டியை சந்தித்துள்ள அமைச்சர் அலி சப்ரி, இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைவரம் மற்றும் பொருளாதார மீட்சி செயன்முறை என்பன தொடர்பில் கலந்துரையாடல்களை முன்னெடுத்துள்ளார்.

இதன்போது இந்நெருக்கடியிலிருந்த மீண்டெழக்கூடிய இலங்கையின் இயலுமை தொடர்பில் உலக பொருளாதாரப்பேரவையின் தலைவர் போர்ஜ் ப்ரென்டி நம்பிக்கை வெளியிட்டதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதேபோன்று பெய்ஜிங்கில் வசிக்கும் இலங்கையர்களையும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ள அமைச்சர் அலி சப்ரி, அவர்களை வர்த்தகத்துறைசார் நடவடிக்கைகளில் ஈடுபடுமாறும், இலங்கையின் நல்லெண்ணத்தூதுவர்களாக செயற்படுமாறும் ஊக்குவித்துள்ளார்.

இந்திய ஆதரவினால் மாத்திரமே நெருக்கடியில் இருந்து மீள முடிந்தது – மிலிந்த மொரகொட

இந்தியாவின் ஒத்துழைப்பினால் மாத்திரமே சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடனுதவியைப் பெற்றுக் கொள்ள முடிந்தது. இலங்கை கடும் நெருக்கடிகளை எதிர்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் இந்தியா உதவியளித்திருக்காவிட்டால் மிக மோசமான பொருளாதார சவால்களை எதிர்கொள்ள வேண்டியேற்பட்டிருக்கும் என்று இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டிருந்த போது , இந்தியா சுமார் 4 பில்லியன் டொலர் கடனுதவியையும் , மேலும் பல நிவாரணங்களையும் வழங்கியுள்ளது.

உண்மையில் அந்த சந்தர்ப்பத்தில் இந்தியா ஆதரவளித்திருக்காவிட்டால் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடனுதவியைப் பெற்றிருக்க முடியாது.

1948 ஆம் ஆண்டு பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்ற பின்னர் இலங்கை கடந்த ஆண்டு பாரதூரமான பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டது.

இதன் காரணமாக முதன் முறையாக கடன்களை மீள செலுத்துவதை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக அறிவிக்க வேண்டிய நிலைமை இலங்கைக்கு ஏற்பட்டது.

அந்நிய செலாவணி பற்றாக்குறையால் இலங்கையில் பணவீக்கம் உயர்வடைந்தமை , மின்சாரத்துக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டமை , மருந்து, எரிபொருள் உள்ளிட்ட பிற அத்தியாவசிய பொருட்கள் என்பவற்றின் இறக்குமதிகளும் பெருமளவில் பாதிக்கப்பட்டன.

எவ்வாறிருப்பினும் அந்த நிலைமைகளிலிருந்து இலங்கை படிப்படியாக மீட்சிக்கான பாதையில் பயணிக்கத் தொடங்கியுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஜூலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய விஜயம் குறித்து அவர் தெரிவித்துள்ள போதிலும் , அது தொடர்பில் விரிவான விபரங்களை வெளியிடவில்லை

2021 ஆம் ஆண்டில் லங்கா சதொச நிறுவனத்துக்கு 1500 கோடி ரூபா நட்டம்

லங்கா சதொச நிறுவனத்துக்கு, கடந்த 2021 ஆம் ஆண்டின் டிசம்பர் 31 ஆம் திகதி வரையில் 1500 கோடி ரூபா நட்டமும்,  2022 ஆம் ஆண்டில் மாத்திரம்  60 கோடி ரூபா நட்டமும் ஏற்பட்டுள்ளதாக பொது நிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்ற குழு (கோப் குழு)  கூட்டத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

அரிசி இறக்குமதியின்போது  மாத்திரம் லங்கா சதொச நிறுவனத்துக்கு 600 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் கோப் குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்பட்டு களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த அரிசி மூடைகள் மனித பாவனைக்கு ஏற்புடையதாக இருக்காதவாறு காலாவதியாகியுள்ளது. இவ்வாறு காலாவதியாதியான, அரிசி கால்நடை தீவனத்திற்காக விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது. இவ்வாறான விடயங்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்துவது தொடர்பில் கோப் குழுக் கூட்டத்தின்போது கலந்துரையாடப்பட்டது.

லங்கா சதொச நிறுவனத்துக்கு பொருத்தமான வர்த்தக மாதிரி ஒன்றை தயாரித்து அதனை இலாபகரமானதாக மாற்ற வேண்டியதன் அவசியத்தையும் கோப் குழு சுட்டிக்காட்டியுள்ளது.

லங்கா சதொச நிறுவனத்தின் செயற்பாடுகள் குறித்து ஆராய்வதற்காக, பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்றக் குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ரஞ்சித் பண்டார தலைமையில் இடம்பெற்ற சந்திப்பின்போதே இது தொடர்பில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான மஹிந்தானந்த அளுத்கமகே, தயாசிறி ஜயசேகர, நிமல் லான்சா, ஜயந்த சமரவீர,  எஸ்.எம்.மரிக்கார், எஸ். எம். எம்.முஷாரப், சஞ்சீவ எதிரிமான்ன, சாணக்கியன் ராசமாணிக்கம், மதுர விதானகே, பேராசிரியர் சரித்த ஹேரத் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Posted in Uncategorized

வடக்கு கிழக்கில் இந்துக்களின் எண்ணிக்கை குறைவடைவது குறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கவலை

இலங்கையின் வடக்கு கிழக்கில் இந்துக்களின் எண்ணிக்கை குறைவடைவது குறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கவலை வெளியிட்டுள்ளார்.

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பிரபுக்கள் சபையில் ஆற்றிய உரையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவுகள் குறித்து அண்ணாமலை உரையாற்றியுள்ளார்.

பிரிட்டனின் தமிழ் சங்கம் ஏற்பாடு செய்திருந்தஇந்த நிகழ்வில் இலங்கையின் வடக்குகிழக்கில் இந்துக்களின் எண்ணிக்கை குறைவதுகுறித்து அண்ணாமலை கவலை வெளியிட்டுள்ளார்.

இலங்கையின் வடக்குகிழக்கில் இந்துக்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவிற்கு குறைவடைந்துள்ளமை  எனக்கு கரிசனை அளிக்கின்றது என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இந்த போக்கு கவலையளிக்கும் விடயம் ஏனென்றால் எதிர்வரும் காலங்களில்  இந்த பகுதிகளில் இந்துக்களின் கலாச்சாரத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வடக்குகிழக்கில் பௌத்த தொல்பொருள் கட்டிடங்கள் உருவாகிவருவது குறித்தும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

பலஆயிரங்களாக இலங்கையின்வடக்குகிழக்கு தனிப்பட்ட கலாச்சாரம் அடையாளம் ஆகியவற்றை பேணிவந்துள்ளன,என தெரிவித்துள்ள அண்ணாமலை புதிதாக பௌத்ததொல்பொருள் கட்டிடங்கள் இந்த பகுதியில் உருவாகிவருவது ஈழத்தமிழர்களிற்கும் பௌத்தர்களிற்கும் இடையில் முறுகலை உருவாக்கியுள்ளது எனவும் அவர்தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் தசாப்தங்களில் நிரந்தரதீர்வை காண்பதற்கும் அமைதியை ஏற்படுத்துவதற்கும் இந்த பிரச்சினைக்கு தீர்வை காண்பதுஅவசியம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளால் நிதி ஸ்திரதன்மைக்கு பாதிப்புக்கள் இல்லை – இலங்கை வங்கிகளின் சங்கம்

உள்நாட்டு கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகள் நாட்டின்நிதி ஸ்திரதன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்ற மத்திய வங்கி ஆளுநரின் அறிவிப்பை  இலங்கையின் வங்கிகள் வரவேற்றுள்ளன.

இலங்கை வங்கிகளின் சங்கம் அறிக்கையொன்றில் மத்திய வங்கி ஆளுநரின் அறிவிப்பை வரவேற்றுள்ளன.

மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்கவின் அறிவிப்பு உள்நாட்டு கடன்மறுசீரமைப்பு நடவடிக்கை நிதிஸ்திரதன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தாது வங்கி மற்றும் வங்கிசாராத நிதி நிறுவனங்களில் வைப்பிடப்பட்டுள்ள பணத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்ற உறுதியான உத்தரவாதத்தை வரவேற்பதாக வங்கிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு மறுசீரமைப்பு குறித்து அரசாங்கத்திற்குள் போதியளவு விவாதம் இடம்பெற அனுமதிப்பதற்காகவும் பொதுமக்கள் மற்றும் சந்தைகளின் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்காகவுமே  ஐந்து நாள் விடுமுறை வங்கிதுறைக்கு  வழங்கப்பட்டுள்ளது என மத்திய வங்கி ஆளுநர் தெளிவுபடுத்தியுள்ளார் என இலங்கை வங்கிகளின் சங்கம் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு கடன்மறுசீரமைப்பு திட்டத்தை அறிவிக்கவேண்டும் அதற்கு அமைச்சரவை பொதுநிதிக்குழு நாடாளுமன்றம் ஆகியவற்றின் அங்கீகாரம் பெறப்படவேண்டும் என மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளதையும் இலங்கை வங்கிகளின் சங்கம் வரவேற்றுள்ளது.

ஐந்துநாள் வங்கி விடுமுறையின் போது ஏடிஎம் ஒன்லைன் மற்றும் ஏனைய டிஜிட்டல் வழிமுறைகளை பயன்படுத்தி பொதுமக்கள் பணப்பரிமாற்றத்தை மேற்கொள்ளமுடியும் என மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளதையும் இலங்கை வங்கிகளின் சங்கம் வரவேற்றுள்ளது.

Posted in Uncategorized

விசேட வைத்தியர்களின் சேவைக்காலம் 63 வயது வரை நீடிப்பு

அரச சேவையில் உள்ள விசேட வைத்தியர்களின் சேவைக் காலத்தை 63 வயது வரை நீடிக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதாக மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு  நேற்று செவ்வாய்க்கிழமை (27) அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நெரின் புள்ளே  சார்பில் ஆஜரான சட்ட மா அதிபர், அமைச்சின் தீர்மானத்தை மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு அறிவித்தார்.

விசேட வைத்தியர்களின் ஓய்வுபெறும் வயதை 60 ஆக குறைக்கும் அமைச்சரவை தீர்மானத்துக்கு  எதிராக தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே  இவ்வாறு அறிவிக்கப்பட்டது.

176 வைத்தியர்களால் தாக்கல் செய்யப்பட்ட மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி நிஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் நீதிபதி எம்.ஏ.ஆர்.மரிக்கார் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

ஜூன் 30 ஆம் திகதிக்குள் பிரேரணையின் மூலம் நீதிமன்றத்தில் இந்த விடயம் தொடர்பில் விளக்கமளிக்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கை கடந்த இரண்டுதசாப்த காலமாக புவிசார்அரசியல் போட்டியினால் பாதிக்கப்பட்டுள்ளது – நாமல்ராஜபக்ச

இலங்கை கடந்த இரண்டுதசாப்த காலமாக புவிசார்அரசியல் போட்டியினால் பாதிக்கப்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சீனாவின் அரசதொலைக்காட்சியான சிஜிடிஎன்னிற்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

சீனாவுடன் நட்புறவை வலுப்படுத்துவது குறித்த இலங்கையின் ஆர்வம் குறித்து நாமல்ராஜபக்ச கருத்து வெளியிட்டுள்ளார்.

மக்கள் மத்தியிலான உறவுகளை மீள ஆரம்பிக்கவேண்டிய தருணம் இது என நாங்கள் கருதுகின்றோம் என தெரிவித்துள்ள நாமல் ராஜபக்ச அரசியல் கட்சிகள் அரசாங்கங்கள் மத்தியிலான இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவதுடன் மாத்திரமல்லாமல் பொதுமக்கள் மத்தியிலான உறவுகளையும் வலுப்படுத்தவேண்டும் என தெரிவித்துள்ளார்.

இலங்கையின் சீனாவும் நீண்டகால நண்பர்கள் இதன்காரணமாக இரு நாடுகளிற்கும் நன்மைகள் ஏற்பட்டுள்ளன மிகவும் நெருக்கடியான காலங்களில் சீனா இலங்கைக்கு ஆதரவாக விளங்கியுள்ளது அதேபோன்று சீனா எப்போதும் ஒரு சீன கொள்கையை கடைப்பிடித்து வருகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் சீனாவிற்கு தற்போது விஜயம் மேற்கொண்டுள்ளார்,என சுட்டிக்காட்டியுள்ள நாமல்ராஜபக்ச வருட இறுதியில் ஜனாதிபதியும் சீனாவிற்கு விஜயம் மேற்கொள்வார் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இலங்கை ஜனாதிபதியின் சீன விஜயம் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகள் ஏனைய மூலோபாய திட்டங்கள் மூலம் இருநாடுகளிற்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்த உதவும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச வல்லரசுகளின் போட்டியில் பல நாடுகள் பக்கம் சாய்வதை தவிர்க்கும் போக்கு அதிகரித்துள்ளமை குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள நாமல்ராஜபக்ச நாங்கள் வடக்கு கிழக்கு மேற்கு தெற்கு என்ற புவியியல் வேறுபாடுகள் குறித்து கவனம் செலுத்தக்கூடாது நாடுகளிற்கு இடையில் சர்வதேச அபிவிருத்தி சகாக்கள் மத்தியில் பரஸ்பர நலன்கள் அடிப்படையில் இந்த விடயத்தை அணுகவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சீனாவின் கடன்பொறி குறித்த கேள்விக்கு நாமல் ராஜபக்ச இது புவிசார்அரசியல் தொடர்பானது துரதிஸ்டவசமாக இலங்கை கடந்த இரண்டு தசாப்தங்களாக புவிசார் அரசியல் மோதலில் சிக்குண்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மறுசீரமைப்பது குறித்து கருத்துதெரிவித்துவரும் அனேகமான உட்கட்டமைப்புகள் சீனாவின் உதவியுடன் உருவாக்கப்பட்டவை இது பொறி என்றால் முன்வந்து முதலீடு செய்வார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசாங்கம் நெருக்கடியின் போது இலங்கைக்கு வழங்கிய ஆதரவு அளப்பரியது – விஜயதாச ராஜபக்ஷ

பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியின் போது இலங்கைக்கு உதவிய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசாங்கத்தை பாராட்டுவதாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அனைத்து சமூகங்களினதும் ஒருமித்த கருத்துடன் நீண்ட கால சமாதானத்தை நாட்டில் ஏற்படுத்துவதற்காக அரசாங்கம் விரைவில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைக்கும் என்றும் அவர் கூறினார்.

இந்திய விஜயத்தின் போது அங்குள்ள ஊடகங்களுத்து கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ மேற்கண்டவாறு கூறினார். புலம்பெயர் தமிழர்கள் மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் இலங்கை மக்கள் மற்றும் தலைவர்களுடன் அரசாங்கம் தொடர்ச்சியான தொடர்புகளை மேற்கொண்டு வருகிறது.

பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசாங்கத்திடமிருந்து எங்களுக்குக் கிடைத்த ஆதரவுடன் நாங்கள் எங்கள் பெரும்பாலான பிரச்சினைகளைத் தீர்த்தோம். இலங்கையில் இயல்பு நிலையை மீண்டும் கொண்டு வருவோம் என்று நாங்கள் நம்புகிறோம். 2022 இல் இலங்கை முன்னெப்போதும் இல்லாத நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்டது.

இது நாட்டில் அரசியல் கொந்தளிப்பைத் ஏற்படுத்தியது. இந்த நெருக்கடியானது ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தை உருவாக்குவதற்கும் வழிவகுத்தது. பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கும் பொருளாதாரத்தின் நிதி ஆரோக்கியத்தை மீட்டெடுப்பதற்கும் அரசாங்கம் போராடி வருகிறது.

போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ பல முயற்சிகளை எடுத்தோம். 2016 ஆம் ஆண்டு சகல செயற்பாடுகளையும் ஆரம்பித்து, காணாமல் போனவர்களுக்கான அலுவலகங்கள், சமாதானத்தை ஏற்படுத்துதல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த செயல்பட்டோம்.

இலங்கை அரசாங்கம் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை நிறுவவுள்ளதுடன், அனைத்து சமூகங்களுடனும் ஒருமித்த கருத்துடன் நீண்டகால சமாதானத்தை உறுதிப்படுத்த முயற்சிக்கிறோம்.

பல பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டுள்ளோம். பல வழக்குகள் இருந்தன, பல கைதிகள் இருந்தன. இருப்பினும், இப்போது இந்த பிரச்சினைகள் அனைத்தும் மாறியுள்ளன. இலங்கை அனைத்துப் பிரச்சினைகளையும் ஒவ்வொரு கோணத்தில் இருந்து தீர்த்து வருகிறது என்றார்.

சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டோருக்கான நீதியை இலங்கை அரசு வழங்க வேண்டும் – இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு

இலங்கை அரசு கொண்டிருக்கும் சர்வதேச கட்டுப்பாடுகளுக்கு அமைவாக சித்திரவதைகளால் பாதிக்கப்பட்ட தரப்பினர் நீதியைப் பெற்றுக்கொள்வதற்கும், அவர்கள் முகங்கொடுத்த அநீதியிலிருந்து முழுமையாக மீள்வதற்கு அவசியமான புனர்வாழ்வளித்தல் செயன்முறை உரியவாறு பூர்த்திசெய்யப்படுவதற்கும் அவசியமான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டோருக்கான ஆதரவு தொடர்பான சர்வதேச தினத்தை (26) முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மனித உரிமைகள் ஆணைக்குழு மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளது.

அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:

சித்திரவதைகளிலிருந்து விலக்கீடு பெறுதல் என்பது எந்தவொரு சூழ்நிலையிலும் மட்டுப்படுத்தப்படமுடியாத மனித உரிமையாகும்.

இருப்பினும் இலங்கையிலும் உலகளாவிய ரீதியிலும் உளவியல் மற்றும் உடலியல் ரீதியான சித்திரவதைகள் தொடர்ந்து இடம்பெற்றுவருகின்றன.

இந்த மிகமோசமான மனித உரிமை மீறலின் பாரதூரமான பின்விளைவுகளை சித்திரவதைக்கு உள்ளான தரப்பினர் மாத்திரமன்றி, அவர்களது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் நேரில் பார்த்த சாட்சியங்களும் அனுபவிக்கவேண்டியுள்ளது.

எனவே சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டோருக்கான ஆதரவு தொடர்பான சர்வதேச தினத்தில் (நேற்று முன்தினம்) மேற்குறிப்பிட்டவாறு பாதிக்கப்பட்ட தரப்பினர், அவர்களது குடும்பத்தினர் மற்றும் சாட்சியங்களுக்கு அவசியமான ஆதரவு அனைத்து வழிகளிலும் வழங்கப்படுவதை உறுதிசெய்யவேண்டுமென மீளவலியுறுத்துகின்றோம்.

நாம் எமது விசாரணை செயன்முறையின் ஊடாக எமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்கீழ் சித்திரவதைகளால் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கான நியாயத்தையும், இழப்பீட்டையும் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றோம்.

இருப்பினும் பாதிக்கப்பட்ட தரப்பினர் மற்றும் அவர்களின் குடும்பத்தாருக்கு இழப்பீட்டுக்கு அப்பால், அவர்கள் முழுமையாக மீள்வதற்கு அவசியமான உளவியல் ஆலோசனை வழங்கல் மற்றும் புனர்வாழ்வளித்தல் என்பன அவசியமாகின்றன.

அதேவேளை ஒடுக்குமுறைகள் தொடர்பான அச்சம் மற்றும் கடந்தகாலங்களில் பதிவாகியுள்ள தண்டனைகளிலிருந்து விலக்கீடு பெறும் போக்கு என்பவற்றின் காரணமாக சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டவர்களும், சாட்சியங்களும் அநேக சந்தர்ப்பங்களில் நீதிக்கட்டமைப்பை அணுகுவதிலிருந்து விலகியிருக்கின்றனர்.

எனவே இலங்கை அரசு கொண்டிருக்கும் சர்வதேச கடப்பாடுகளுக்கு அமைவாக எவ்வித ஒடுக்குமுறைகளுமின்றி பாதிக்கப்பட்ட தரப்பினர் நீதியைப் பெற்றுக்கொள்வதற்கும், அவர்கள் முகங்கொடுத்த அநீதியிலிருந்து முழுமையாக மீள்வதற்கு அவசியமான புனர்வாழ்வளித்தல் செயன்முறை உரியவாறு பூர்த்திசெய்யப்படுவதற்கும் அவசியமான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்துகின்றோம்.

அதுமாத்திரமன்றி பாதிக்கப்பட்ட தரப்பினருக்குரிய மருத்துவ, சட்ட, சமூக மற்றும் உளவியல்சார் உதவிகளை வழங்குவதை முன்னிறுத்தி சமூக நலனோம்பு அமைப்புக்கள், விசேட நிபுணர்கள், தனிநபர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து செயலாற்ற முன்வரவேண்டும் என்றும் சுட்டிக்காட்டுகின்றோம் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.