வடக்கு கிழக்கில் இந்துக்களின் எண்ணிக்கை குறைவடைவது குறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கவலை

இலங்கையின் வடக்கு கிழக்கில் இந்துக்களின் எண்ணிக்கை குறைவடைவது குறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கவலை வெளியிட்டுள்ளார்.

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பிரபுக்கள் சபையில் ஆற்றிய உரையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவுகள் குறித்து அண்ணாமலை உரையாற்றியுள்ளார்.

பிரிட்டனின் தமிழ் சங்கம் ஏற்பாடு செய்திருந்தஇந்த நிகழ்வில் இலங்கையின் வடக்குகிழக்கில் இந்துக்களின் எண்ணிக்கை குறைவதுகுறித்து அண்ணாமலை கவலை வெளியிட்டுள்ளார்.

இலங்கையின் வடக்குகிழக்கில் இந்துக்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவிற்கு குறைவடைந்துள்ளமை  எனக்கு கரிசனை அளிக்கின்றது என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இந்த போக்கு கவலையளிக்கும் விடயம் ஏனென்றால் எதிர்வரும் காலங்களில்  இந்த பகுதிகளில் இந்துக்களின் கலாச்சாரத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வடக்குகிழக்கில் பௌத்த தொல்பொருள் கட்டிடங்கள் உருவாகிவருவது குறித்தும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

பலஆயிரங்களாக இலங்கையின்வடக்குகிழக்கு தனிப்பட்ட கலாச்சாரம் அடையாளம் ஆகியவற்றை பேணிவந்துள்ளன,என தெரிவித்துள்ள அண்ணாமலை புதிதாக பௌத்ததொல்பொருள் கட்டிடங்கள் இந்த பகுதியில் உருவாகிவருவது ஈழத்தமிழர்களிற்கும் பௌத்தர்களிற்கும் இடையில் முறுகலை உருவாக்கியுள்ளது எனவும் அவர்தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் தசாப்தங்களில் நிரந்தரதீர்வை காண்பதற்கும் அமைதியை ஏற்படுத்துவதற்கும் இந்த பிரச்சினைக்கு தீர்வை காண்பதுஅவசியம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளால் நிதி ஸ்திரதன்மைக்கு பாதிப்புக்கள் இல்லை – இலங்கை வங்கிகளின் சங்கம்

உள்நாட்டு கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகள் நாட்டின்நிதி ஸ்திரதன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்ற மத்திய வங்கி ஆளுநரின் அறிவிப்பை  இலங்கையின் வங்கிகள் வரவேற்றுள்ளன.

இலங்கை வங்கிகளின் சங்கம் அறிக்கையொன்றில் மத்திய வங்கி ஆளுநரின் அறிவிப்பை வரவேற்றுள்ளன.

மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்கவின் அறிவிப்பு உள்நாட்டு கடன்மறுசீரமைப்பு நடவடிக்கை நிதிஸ்திரதன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தாது வங்கி மற்றும் வங்கிசாராத நிதி நிறுவனங்களில் வைப்பிடப்பட்டுள்ள பணத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்ற உறுதியான உத்தரவாதத்தை வரவேற்பதாக வங்கிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு மறுசீரமைப்பு குறித்து அரசாங்கத்திற்குள் போதியளவு விவாதம் இடம்பெற அனுமதிப்பதற்காகவும் பொதுமக்கள் மற்றும் சந்தைகளின் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்காகவுமே  ஐந்து நாள் விடுமுறை வங்கிதுறைக்கு  வழங்கப்பட்டுள்ளது என மத்திய வங்கி ஆளுநர் தெளிவுபடுத்தியுள்ளார் என இலங்கை வங்கிகளின் சங்கம் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு கடன்மறுசீரமைப்பு திட்டத்தை அறிவிக்கவேண்டும் அதற்கு அமைச்சரவை பொதுநிதிக்குழு நாடாளுமன்றம் ஆகியவற்றின் அங்கீகாரம் பெறப்படவேண்டும் என மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளதையும் இலங்கை வங்கிகளின் சங்கம் வரவேற்றுள்ளது.

ஐந்துநாள் வங்கி விடுமுறையின் போது ஏடிஎம் ஒன்லைன் மற்றும் ஏனைய டிஜிட்டல் வழிமுறைகளை பயன்படுத்தி பொதுமக்கள் பணப்பரிமாற்றத்தை மேற்கொள்ளமுடியும் என மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளதையும் இலங்கை வங்கிகளின் சங்கம் வரவேற்றுள்ளது.

Posted in Uncategorized

விசேட வைத்தியர்களின் சேவைக்காலம் 63 வயது வரை நீடிப்பு

அரச சேவையில் உள்ள விசேட வைத்தியர்களின் சேவைக் காலத்தை 63 வயது வரை நீடிக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதாக மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு  நேற்று செவ்வாய்க்கிழமை (27) அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நெரின் புள்ளே  சார்பில் ஆஜரான சட்ட மா அதிபர், அமைச்சின் தீர்மானத்தை மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு அறிவித்தார்.

விசேட வைத்தியர்களின் ஓய்வுபெறும் வயதை 60 ஆக குறைக்கும் அமைச்சரவை தீர்மானத்துக்கு  எதிராக தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே  இவ்வாறு அறிவிக்கப்பட்டது.

176 வைத்தியர்களால் தாக்கல் செய்யப்பட்ட மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி நிஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் நீதிபதி எம்.ஏ.ஆர்.மரிக்கார் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

ஜூன் 30 ஆம் திகதிக்குள் பிரேரணையின் மூலம் நீதிமன்றத்தில் இந்த விடயம் தொடர்பில் விளக்கமளிக்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கை கடந்த இரண்டுதசாப்த காலமாக புவிசார்அரசியல் போட்டியினால் பாதிக்கப்பட்டுள்ளது – நாமல்ராஜபக்ச

இலங்கை கடந்த இரண்டுதசாப்த காலமாக புவிசார்அரசியல் போட்டியினால் பாதிக்கப்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சீனாவின் அரசதொலைக்காட்சியான சிஜிடிஎன்னிற்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

சீனாவுடன் நட்புறவை வலுப்படுத்துவது குறித்த இலங்கையின் ஆர்வம் குறித்து நாமல்ராஜபக்ச கருத்து வெளியிட்டுள்ளார்.

மக்கள் மத்தியிலான உறவுகளை மீள ஆரம்பிக்கவேண்டிய தருணம் இது என நாங்கள் கருதுகின்றோம் என தெரிவித்துள்ள நாமல் ராஜபக்ச அரசியல் கட்சிகள் அரசாங்கங்கள் மத்தியிலான இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவதுடன் மாத்திரமல்லாமல் பொதுமக்கள் மத்தியிலான உறவுகளையும் வலுப்படுத்தவேண்டும் என தெரிவித்துள்ளார்.

இலங்கையின் சீனாவும் நீண்டகால நண்பர்கள் இதன்காரணமாக இரு நாடுகளிற்கும் நன்மைகள் ஏற்பட்டுள்ளன மிகவும் நெருக்கடியான காலங்களில் சீனா இலங்கைக்கு ஆதரவாக விளங்கியுள்ளது அதேபோன்று சீனா எப்போதும் ஒரு சீன கொள்கையை கடைப்பிடித்து வருகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் சீனாவிற்கு தற்போது விஜயம் மேற்கொண்டுள்ளார்,என சுட்டிக்காட்டியுள்ள நாமல்ராஜபக்ச வருட இறுதியில் ஜனாதிபதியும் சீனாவிற்கு விஜயம் மேற்கொள்வார் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இலங்கை ஜனாதிபதியின் சீன விஜயம் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகள் ஏனைய மூலோபாய திட்டங்கள் மூலம் இருநாடுகளிற்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்த உதவும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச வல்லரசுகளின் போட்டியில் பல நாடுகள் பக்கம் சாய்வதை தவிர்க்கும் போக்கு அதிகரித்துள்ளமை குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள நாமல்ராஜபக்ச நாங்கள் வடக்கு கிழக்கு மேற்கு தெற்கு என்ற புவியியல் வேறுபாடுகள் குறித்து கவனம் செலுத்தக்கூடாது நாடுகளிற்கு இடையில் சர்வதேச அபிவிருத்தி சகாக்கள் மத்தியில் பரஸ்பர நலன்கள் அடிப்படையில் இந்த விடயத்தை அணுகவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சீனாவின் கடன்பொறி குறித்த கேள்விக்கு நாமல் ராஜபக்ச இது புவிசார்அரசியல் தொடர்பானது துரதிஸ்டவசமாக இலங்கை கடந்த இரண்டு தசாப்தங்களாக புவிசார் அரசியல் மோதலில் சிக்குண்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மறுசீரமைப்பது குறித்து கருத்துதெரிவித்துவரும் அனேகமான உட்கட்டமைப்புகள் சீனாவின் உதவியுடன் உருவாக்கப்பட்டவை இது பொறி என்றால் முன்வந்து முதலீடு செய்வார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசாங்கம் நெருக்கடியின் போது இலங்கைக்கு வழங்கிய ஆதரவு அளப்பரியது – விஜயதாச ராஜபக்ஷ

பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியின் போது இலங்கைக்கு உதவிய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசாங்கத்தை பாராட்டுவதாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அனைத்து சமூகங்களினதும் ஒருமித்த கருத்துடன் நீண்ட கால சமாதானத்தை நாட்டில் ஏற்படுத்துவதற்காக அரசாங்கம் விரைவில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைக்கும் என்றும் அவர் கூறினார்.

இந்திய விஜயத்தின் போது அங்குள்ள ஊடகங்களுத்து கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ மேற்கண்டவாறு கூறினார். புலம்பெயர் தமிழர்கள் மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் இலங்கை மக்கள் மற்றும் தலைவர்களுடன் அரசாங்கம் தொடர்ச்சியான தொடர்புகளை மேற்கொண்டு வருகிறது.

பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசாங்கத்திடமிருந்து எங்களுக்குக் கிடைத்த ஆதரவுடன் நாங்கள் எங்கள் பெரும்பாலான பிரச்சினைகளைத் தீர்த்தோம். இலங்கையில் இயல்பு நிலையை மீண்டும் கொண்டு வருவோம் என்று நாங்கள் நம்புகிறோம். 2022 இல் இலங்கை முன்னெப்போதும் இல்லாத நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்டது.

இது நாட்டில் அரசியல் கொந்தளிப்பைத் ஏற்படுத்தியது. இந்த நெருக்கடியானது ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தை உருவாக்குவதற்கும் வழிவகுத்தது. பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கும் பொருளாதாரத்தின் நிதி ஆரோக்கியத்தை மீட்டெடுப்பதற்கும் அரசாங்கம் போராடி வருகிறது.

போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ பல முயற்சிகளை எடுத்தோம். 2016 ஆம் ஆண்டு சகல செயற்பாடுகளையும் ஆரம்பித்து, காணாமல் போனவர்களுக்கான அலுவலகங்கள், சமாதானத்தை ஏற்படுத்துதல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த செயல்பட்டோம்.

இலங்கை அரசாங்கம் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை நிறுவவுள்ளதுடன், அனைத்து சமூகங்களுடனும் ஒருமித்த கருத்துடன் நீண்டகால சமாதானத்தை உறுதிப்படுத்த முயற்சிக்கிறோம்.

பல பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டுள்ளோம். பல வழக்குகள் இருந்தன, பல கைதிகள் இருந்தன. இருப்பினும், இப்போது இந்த பிரச்சினைகள் அனைத்தும் மாறியுள்ளன. இலங்கை அனைத்துப் பிரச்சினைகளையும் ஒவ்வொரு கோணத்தில் இருந்து தீர்த்து வருகிறது என்றார்.

சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டோருக்கான நீதியை இலங்கை அரசு வழங்க வேண்டும் – இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு

இலங்கை அரசு கொண்டிருக்கும் சர்வதேச கட்டுப்பாடுகளுக்கு அமைவாக சித்திரவதைகளால் பாதிக்கப்பட்ட தரப்பினர் நீதியைப் பெற்றுக்கொள்வதற்கும், அவர்கள் முகங்கொடுத்த அநீதியிலிருந்து முழுமையாக மீள்வதற்கு அவசியமான புனர்வாழ்வளித்தல் செயன்முறை உரியவாறு பூர்த்திசெய்யப்படுவதற்கும் அவசியமான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டோருக்கான ஆதரவு தொடர்பான சர்வதேச தினத்தை (26) முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மனித உரிமைகள் ஆணைக்குழு மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளது.

அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:

சித்திரவதைகளிலிருந்து விலக்கீடு பெறுதல் என்பது எந்தவொரு சூழ்நிலையிலும் மட்டுப்படுத்தப்படமுடியாத மனித உரிமையாகும்.

இருப்பினும் இலங்கையிலும் உலகளாவிய ரீதியிலும் உளவியல் மற்றும் உடலியல் ரீதியான சித்திரவதைகள் தொடர்ந்து இடம்பெற்றுவருகின்றன.

இந்த மிகமோசமான மனித உரிமை மீறலின் பாரதூரமான பின்விளைவுகளை சித்திரவதைக்கு உள்ளான தரப்பினர் மாத்திரமன்றி, அவர்களது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் நேரில் பார்த்த சாட்சியங்களும் அனுபவிக்கவேண்டியுள்ளது.

எனவே சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டோருக்கான ஆதரவு தொடர்பான சர்வதேச தினத்தில் (நேற்று முன்தினம்) மேற்குறிப்பிட்டவாறு பாதிக்கப்பட்ட தரப்பினர், அவர்களது குடும்பத்தினர் மற்றும் சாட்சியங்களுக்கு அவசியமான ஆதரவு அனைத்து வழிகளிலும் வழங்கப்படுவதை உறுதிசெய்யவேண்டுமென மீளவலியுறுத்துகின்றோம்.

நாம் எமது விசாரணை செயன்முறையின் ஊடாக எமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்கீழ் சித்திரவதைகளால் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கான நியாயத்தையும், இழப்பீட்டையும் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றோம்.

இருப்பினும் பாதிக்கப்பட்ட தரப்பினர் மற்றும் அவர்களின் குடும்பத்தாருக்கு இழப்பீட்டுக்கு அப்பால், அவர்கள் முழுமையாக மீள்வதற்கு அவசியமான உளவியல் ஆலோசனை வழங்கல் மற்றும் புனர்வாழ்வளித்தல் என்பன அவசியமாகின்றன.

அதேவேளை ஒடுக்குமுறைகள் தொடர்பான அச்சம் மற்றும் கடந்தகாலங்களில் பதிவாகியுள்ள தண்டனைகளிலிருந்து விலக்கீடு பெறும் போக்கு என்பவற்றின் காரணமாக சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டவர்களும், சாட்சியங்களும் அநேக சந்தர்ப்பங்களில் நீதிக்கட்டமைப்பை அணுகுவதிலிருந்து விலகியிருக்கின்றனர்.

எனவே இலங்கை அரசு கொண்டிருக்கும் சர்வதேச கடப்பாடுகளுக்கு அமைவாக எவ்வித ஒடுக்குமுறைகளுமின்றி பாதிக்கப்பட்ட தரப்பினர் நீதியைப் பெற்றுக்கொள்வதற்கும், அவர்கள் முகங்கொடுத்த அநீதியிலிருந்து முழுமையாக மீள்வதற்கு அவசியமான புனர்வாழ்வளித்தல் செயன்முறை உரியவாறு பூர்த்திசெய்யப்படுவதற்கும் அவசியமான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்துகின்றோம்.

அதுமாத்திரமன்றி பாதிக்கப்பட்ட தரப்பினருக்குரிய மருத்துவ, சட்ட, சமூக மற்றும் உளவியல்சார் உதவிகளை வழங்குவதை முன்னிறுத்தி சமூக நலனோம்பு அமைப்புக்கள், விசேட நிபுணர்கள், தனிநபர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து செயலாற்ற முன்வரவேண்டும் என்றும் சுட்டிக்காட்டுகின்றோம் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரித் திருத்தச் சட்டமூலத்தை நாடாளுமன்றில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி

சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரித் திருத்தச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தின் அனுமதிக்கு சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

சமூகப் பாதுகாப்புப் பங்களிப்பு வரிச் சட்டத்திற்கான திருத்தப்பட்ட சட்டமூலத்தை தயாரிப்பதற்கு கடந்த ஜனவரி 30 ஆம் திகதி அமைச்சரவையின் அனுமதி பெறப்பட்டது.

இதேவேளை, மத சுதந்திரத்தை இழப்பதையும், மத விடயங்களை திரிபுபடுத்துவதை தடுப்பதற்கான சட்ட ஏற்பாடுகளை அறிமுகப்படுத்தவும் குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அதற்கமைய, சம்பந்தப்பட்ட குழுவில் அனைத்து மதங்களின் தலைவர்கள், சட்ட வல்லுநர்கள் மற்றும் ஊடகங்கள் மற்றும் சிவில் சமூக செயற்பட்டாளர்கள் உள்ளடக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நலன்புரி உதவித்திட்ட கொடுப்பனவு பட்டியலில் உள்வாங்கப்படாதவர்கள் மேன்முறையீடு செய்ய 10 ஆம் திகதி வரை கால அவகாசம்

யாழ் மாவட்டத்தில் சமுர்த்தி பதிவுகளில் ஏதாவது முறைகேடு இடம்பெற்றிருந்தால் அதற்கு மேன்முறையீடு செய்வதற்கு 10 ஆம் திகதி வரை காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் ஆ,சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார்.

சமுர்த்தி பதிவுகளில் முறைகேடு இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து நேற்று திங்கட்கிழமை யாழ் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பொதுமக்களால் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் இந்த விடயம் தொடர்பாக வினவிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

சமுர்த்தி பதிவுகளில் முரணப்பாடுகள் இருந்தால் அனுப்பிவைக்கப்படும் மேல்முறையீடுகள் பரிசீலனை செய்யப்பட்டு அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இது தொடர்பில் பொதுமக்கள் குழப்பமடைய தேவையில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தினால் நலன்புரி உதவித்திட்ட கொடுப்பனவுகள் வழங்குவதற்கான பெயர்ப்பட்டியல் அண்மையில் வெளிவந்திருந்த நிலையில் முதியோர்கள், விதவைகள் என வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் பெயர்கள் உள்வாங்கப்படாததால் நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் இடமபெற்றமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பு துறைமுக நகரத்தில் சீனா 1.2 பில்லியன் டொலர்கள் முதலீடு

கொழும்பு துறைமுக நகரத்தில் 1.2 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்யவுள்ளதாக China Harbour Engineering ஒத்துழைப்பு தெரிவித்துள்ளது.

பெய்ஜிங்கில் இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி மற்றும் CHEC இன் தலைவர் Bai Yinzhan ஆகியோருக்கு இடையில் இன்று இடம்பெற்ற சந்திப்பைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சர்வதேச நிதி மையத்துடன் CHEC தனது முதலீடுகளை ஆரம்பிக்கும் என சீனாவில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, சீனாவின் Exim வங்கி தலைவர் ஆகியோருக்கிடையில் சந்திப்பில் கடன் மறுசீரமைப்பு செயல்முறை குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் வளர்ச்சிக்கு சீனாவின் Exim வங்கி ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அனைத்து மாகாண சபைகளுக்கும் மேலதிக அதிகாரப்பரவலாக்கம் வழங்க பேச்சுவார்த்தை முன்னெடுப்பு – ஜனாதிபதி

வடக்கு மாகாணசபைக்கு மாத்திரமல்லாது நாட்டிலுள்ள ஏனைய மாகாணசபைகளும் உள்ளடங்கலாக மேலதிக அதிகாரப் பரவலாக்கம் குறித்துப் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய விஜயத்தின் போது பிரான்ஸ் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் புதன்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும்.

வேறுபட்ட தரப்பினருடன் விவாதங்கள் நடந்து வருகின்றன. கடன் மறுசீரமைப்பு திட்டம் புதன்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும், வார இறுதியில் அவர்கள் அதை இறுதி செய்வார்கள். அது வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்திற்கு செல்லும்.

பின்னர் பொது நிதிக் குழுவிலும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அது நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு, அங்கீகரிக்கப்படும். அதன்பிறகு, கடனாளிகளுடன் எஞ்சிய பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க முடியும்.

கடனைத் திருப்பிச் செலுத்தும் காலத்தை நீடிப்பதற்கும், செலுத்த வேண்டிய தொகையை ஏதேனும் ஒரு வகையில் குறைப்பதற்கும் இலங்கை பரிசீலித்து வருகின்றது.

இதேநேரம் அரசியல் தீர்வு , அதிகார பரவலாக்கம் குறித்து தமிழ்த் தலைவர்களால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை சாதகமான முறையில் அணுகுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை இலங்கை அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளது. ஜெனிவா கூட்டத் தொடரிலும் இவ் ஆணைக்குழுவின் ஊடாக முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து இலங்கை தெளிவுபடுத்தியுள்ளது.

சர்வதேச கண்காணிப்பாளர்களின் பங்குபற்றலுடன் அந்நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். ஓகஸ்டில் இந்நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும்.

குறிப்பாக தமிழ் அரசியல் தலைவர்கள் அரசியல் தீர்வு குறித்தும் அதிகார பரவலாக்கம் குறித்தும் கோரிக்கைகளை முன்வைத்து அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றனர்.அந்த கோரிக்கைகளை சாதகமான முறையில் அணுகுவதற்கு எதிர்பார்த்துள்ளோம்.

எவ்வாறாயினும் ஏற்கனவே நடைமுறையிலுள்ள அரசியலமைப்பில் மாகாணசபைக்கு குறிப்பிட்டளவு அதிகார பகிர்வு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் வடக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசியல் தலைவர் மேலும் சில அதிகாரங்களைக் கோருகின்றனர்.

வடக்கு மாகாணசபைக்கு மாத்திரமல்லாது நாட்டிலுள்ள ஏனைய மாகாணசபைகளும் உள்ளடங்களாக மேலதிக அதிகார பரவலாக்கம் குறித்தும் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டு வருகிறது” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.